ஞாபக சக்தி அதிகரிக்க ஏதாவது ஸ்லோகம் சொல்லுங்களேன்!



தெளிவு பெறு ஓம்

?விதி, மதி எதன் வலிமை பெரிது? 
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. அவ்வாறு மதியால் வெல்ல இயலும் என்பதற்கு கூட விதி சரியாக அமைந்திருக்க வேண்டும்! புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் விதி, மதி, கதி இவை மூன்றும் ஜோதிட சாஸ்திரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். விதி என்பது ஜென்ம லக்னத்தையும், மதி என்பது பிறக்கும்போது சந்திரனின் அமைவிடமான ஜென்ம ராசியையும், கதி என்பது கதிரவன் எனப்படுகின்ற சூரியன் அமர்ந்துள்ள ராசியையும் குறிக்கும்.

லக்ன பாவக ரீதியாக நேரம் சரியில்லை எனும்போது ஜென்ம ராசியினைக் கொண்டு நல்ல நேரம் உள்ளதா என்று ஆராய்வர். இதனை கோச்சாரம் என்றும் சொல்வார்கள். அதுவும் சரியில்லை என்றால் சூரியனின் இருப்பிடத்தைக் கொண்டு பலனுரைப்பர். மேற்கத்திய நாடுகளில் சூரியன் அமர்ந்துள்ள ராசியைத்தான் ஜென்ம ராசியாகக் கருதுவர். அதாவது மேற்கத்திய ஜோதிடத்தில் விதி, மதியை விட கதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர்.

இது தவிர, ஒரு மனிதனின் வாழ்க்கையில் முதல் 30 வருடங்களை விதியாகிய ஜென்ம லக்னமும், அடுத்த 30 வருடங்களை மதியாகிய ஜென்ம ராசியும், அதற்கு அடுத்த 30 வருடங்களை கதி என்று அழைக்கப்படும் சூரியன் அமர்ந்துள்ள ராசியும் தீர்மானிக்கின்றன என்று ஒரு சில ஜோதிட நூல்கள் பலன் உரைக்கின்றன.

முதல் 30 வருடங்கள் வாழ்க்கையில் சிரமப்படுபவன், அடுத்த 30 வருடங்களில் வளமாய் இருப்பான் என்ற பொருளில் இந்த பழமொழியானது தோன்றி இருக்கலாம். ஆனால், பெரும்பாலான ஜோதிடர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டது விதி என்ற லக்னமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதே ஆகும். ஆகவே மதியை விட விதியின் வலிமையே பெரியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

?கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?
அப்படியானால் ஆலயத்தினுள் இறைவனை தரிசிக்க வேண்டியதில்லையா?
- சத்தியநாராயணன், அயன்புரம்.

ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்தசொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள்.

ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில்படும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது. கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது. தினசரி செய்தித்தாளை படிக்க இயலாதவன் கடைகளில் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் விளம்பரத் தாள்களில் கொட்டை எழுத்தினில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தலைப்புச் செய்திகளைப் படித்து அறிந்து கொள்கிறான்.

ஆனால், முழுமையான விவரத்துடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளிதழை வாங்கிப் படித்தால்தான் அந்தச் செய்திக்கான முழுமையான அர்த்தம் புரியும். அவ்வாறே கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது.

 உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. அதே நேரத்தில் அனைத்து தரப்பு பக்தகோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

?சிவன் கோயில், பெருமாள் கோயில் ஒன்றாக உள்ள இடங்களில் எந்த
கோயிலுக்கு முதலில் செல்ல வேண்டும்?- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

ஹோட்டலுக்குள் சென்றவுடன் முதலில் தோசை சாப்பிடுவதா அல்லது பூரி சாப்பிடுவதா என்றா யோசிப்போம்..? நமக்கு பிடித்ததை சாப்பிடுவோம் அல்லவா, அதுபோல்தான் இதுவும்! இறைசக்திகள் அனைத்தும் ஒன்றுதான். இதில் இந்த ஆலயத்திற்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்பது போன்ற பேதம் எதுவும் இல்லை. எனினும் அருகருகே இரு ஆலயங்கள் அமைந்திருக்கும்போது இது போன்ற சந்தேகங்கள் எழுவது இயற்கை.

இடமிருந்து வலமாக வருவது நமது பாரம்பரிய சம்பிரதாயம் என்பதால் இடது புறம் அமைந்திருக்கும் சந்நதியை முதலிலும், அதனைத் தொடர்ந்து பிரதட்சிணமாக வலம் வந்து வலது புறம் அமைந்திருக்கும் சந்நதியை அடுத்தும் தரிசிப்பது நல்லது. இடது புறத்தில் எந்த கோயில் உள்ளதோ அந்த ஆலயத்திற்கு முதலில் செல்லுங்கள்.

?ஆரோகணம், அவரோகணம் என்று கூறுவதன் விளக்கம் யாது? தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
- இளங்கோவன், வாழைப்பந்தல்.
ஆரோகணம் என்றால் ஏறுவரிசை, அவரோகணம் என்றால் இறங்கு வரிசை. சங்கீதத்தில் ‘ஸரிகமபதநி’ என்று ஸப்த ஸ்வரங்களை வரிசைப்படுத்திப் பாடுவார்கள் அல்லவா, அது ஆரோகணம், அதையே தலைகீழாக மாற்றி ‘நிதபமகரிஸ’ என்று பாடுவது அவரோகணம். நீங்கள் கேட்பது திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமானதாகக் கருதப்படும் ரஜ்ஜுப் பொருத்தத்தில் ஜோதிடர்கள் குறிப்பிடும் ஆரோகண, அவரோகண ரஜ்ஜு என்பதைப் பற்றி என நினைக்கிறேன்.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் நட்சத்திரமும், ஆணின் நட்சத்திரமும் என்ன ரஜ்ஜுஎன்பதைக் கணக்கிடுவார்கள். பாதம், தொடை (ஊரூ), தொப்புள் (நாபி), கழுத்து (கண்டம்), தலை (சிரசு) என்று ஐந்து பகுதிகளாக வகுத்து 27 நட்சத்திரங்களையும் இவற்றிற்குள் அடக்குவார்கள். தலை என்று அழைக்கப்படும் சிரோ ரஜ்ஜுவைத் தவிர மற்ற நான்கு பகுதிகளும் ஆரோகணம், அவரோகணம் என்று இரண்டு பிரிவினைக் கொண்டிருக்கும்.

உதாரணமாக அஸ்வினி - மகம் - மூலம் ஆகிய மூன்றும் பாத ரஜ்ஜுவில் ஆரோகணப் பிரிவினைச் சேர்ந்தவை. அதே பாத ரஜ்ஜுவில் அவரோகணமாக வருவது ஆயில்யம் - கேட்டை - ரேவதி ஆகிய மூன்றும் ஆகும். இதே போன்று ஒவ்வொரு நட்சத்திரமும் எந்த ரஜ்ஜு பிரிவில் வருகிறது என்பதை பஞ்சாங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆண், பெண் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இருப்பது உத்தமம் என்று சொல்வார்கள். ஒரே ரஜ்ஜுவாக இருப்பினும் ஆரோகண, அவரோகண ரஜ்ஜுவாக இருந்தால் விவாஹம் செய்யலாம். தவறில்லை.

?பிரார்த்தனையினால் என்ன பயன்? எப்படி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும்?
- மீனாவாசன், சென்னாவரம்.
இறைவனிடம் மனமுருகி வேண்டிச் செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். பிரார்த்தனையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தனது சொந்த நலத்திற்காகவோ அல்லது தனது குடும்பத்தைச் சார்ந்தவரின் நலனுக்காகவோ வேண்டிக் கொள்வது.

மற்றொன்று பொதுமக்களின் நலனுக்காக இறைவனிடம் கோரிக்கை வைப்பது. அதாவது மழை வர வேண்டும், நீர்நிலைகள் நிரம்ப வேண்டும், தண்ணீர் பிரச்னை தீர வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பது போன்ற பொதுவான கோரிக்கைகளை முன் வைத்து வேண்டிக் கொள்வது. இவ்வாறு பொதுமக்களின் நலன் கருதி வேண்டும்போது கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் அதிகம். அதாவது அந்தந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில் ஆலயங்களிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ யாகங்கள்,

தெய்வத் திருமண வைபவங்கள், லட்சார்ச்சனை, லட்ச தீபம் ஏற்றுதல் முதலான நிகழ்வுகளின் மூலம் தங்களது பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம். நாம் குடியிருக்கும் தெருவில் தண்ணீர் வரவில்லை அல்லது சாலை சரியில்லை என்றால் ஒரு தனிப்பட்ட மனிதர் தருகின்ற மனுவை விட பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தரும் மனுவினை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வர்.

அரசு தரப்பு காரியங்களுக்கே இவ்வாறு ஒன்றிணைந்து மனு செய்யும் போது இறைவனின் அருளை நாடி நிற்கும்போது? யோசித்துப் பாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லவா? எல்லோரும் ஒன்றாக இணைந்து செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு தனி மகத்துவம் உண்டு.

அதனால்தான் ஆங்காங்கே குத்துவிளக்கு பூஜைகள், பஜனைகள் என்று எல்லோரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள். அதனுடைய மகத்துவம் அறியாதவர்கள்தான் ‘இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள் வீண்பெருமைக்காகச் செய்கிறார்கள்’ என்று தவறாகச் சொல்வார்கள். அதே போன்று தனிப்பட்ட முறையில் சொந்த நலத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் முதலில் மனதினை இறைவனிடம் ஒருமுகப்படுத்த வேண்டும்.

“எனக்கான தேவைகளை நீ அறிவாய். பிரச்னை ஏதுமின்றி என்னைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. உன்னையன்றி எனைக் காப்பவர் யார்? உன்னையே முழுவதுமாய் சரணடைந்தேன்,’’ என்று இறைவனிடம் மொத்தமாகச் சரணாகதி அடைபவர்களை அவன் என்றுமே கைவிடுவதில்லை. என்னால் இயன்றதைச் செய்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டால் போதும். நம்மிடம் இருந்து பிரதிபலனாக ஆண்டவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

நம்மை இயக்கி நமது மூலமாக அடுத்தவர்களுக்கு நன்மை செய்வதே இறைவனின் நோக்கம்.  ஏழை, எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண முடியும். ஆங்காங்கே நடக்கின்ற அன்னதானங்கள் கூட இவ்வகையான பிரார்த்தனையே. ஏழை மாணவனின் கல்விக்கு உதவி செய்யலாம். இயன்றதைச் செய்தால் போதும். இறைவன் நம் பிரார்த்தனைக்கு நிச்சயம் செவிமடுப்பார்.

?கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?
- வெங்கடேசன், திருவண்ணாமலை.
தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு சமம்.

 குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது. ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

?மனிதர்களாகப் பிறந்தவர்களை மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவது சரிதானா?
- மாலா மோகன், வில்லிவாக்கம்.முற்றிலும் சரியே. சாதாரண மனிதர்களை யாரும் மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவதில்லை. ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தம். அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதே இதன் பொருள். எந்த ஒரு மனிதனிடம் இந்த இறைசக்தி அதிகமாகக் காணப்படுகிறதோ, அவரை குருவாக எண்ணி அவரது வழிகாட்டுதலை நாடுகிறோம்.

அதாவது, எது ஒன்றையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் அடுத்தவர்களின் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழ்பவர்களையே மகான்கள் என்று போற்றுகிறோம். வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர், இயேசுபிரான், நபிகள் நாயகம், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா, ரமண மகரிஷி, ஞானானந்தர், காஞ்சிப் பெரியவர் என்று நம்மிடையே மனிதர்களுள் மாணிக்கமாக வாழ்ந்து காட்டியவர்களையே கடவுளாக வணங்குகிறோம்.

அனைத்தையும் கடந்தவனே கடவுள். திரேதாயுகத்தில் மனிதனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். துவாபர யுகத்தில் விளையாட்டுப் பிள்ளையாக வாழ்ந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.

இவர்களை நாம் தெய்வங்களாகப் போற்றும்போது இந்த கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்து மகாத்மாக்களாக வாழ்ந்தவர்களையும் தெய்வமாக எண்ணிப் போற்றுவதிலும், பூஜிப்பதிலும் தவறேதும் இல்லை.

?குழந்தைக்கு ஞாபக சக்தி அதிகரிக்க ஏதாவது ஸ்லோகம் சொல்லுங்கள்.
- கலைவாணி, கம்பரசம்பேட்டை.
தேர்வு நெருங்கி வரும் இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் விதமாக இந்தக் கேள்வியினைக் கேட்டிருக்கிறீர்கள்.

“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞ்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா..!”- என்ற மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் 11 முறை சொல்லி வர ஞாபக சக்தி கூடும். ப்ரக்ஞை என்றால் சுயநினைவு என்று பொருள். நினைவாற்றலோடு ஞானத்தையும் சேர்த்துத் தருபவர் இந்த ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்தி. குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த
மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

?எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?                   
 கல்யாணி ராகவன், வில்லியனூர்.
கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில் ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற உலோகமானது இரும்பின் கலவை. இறை வழிபாட்டிற்கு இரும்பு ஏற்ற உலோகமல்ல.
பித்தளை, வெண்கலம், வெள்ளி முதலான உலோகங்களே பாரம்பரியமாக நமது பூஜை முறைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் வெறும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கினை ஏற்றி வைத்துக் கூட வழிபடலாம். தற்காலத்தில் உற்பத்தியாளர்கள் கூட எவர்சில்வர் விளக்கு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கேள்வி.

திருக்கோவிலூர்
ரி.ஙி.ஹரிபிரசாத் சர்மா