முதலை வாயினின்று மீண்ட மதலை



திருமுறைக் கதை

பிழைப்பித்தே கூற்றான் முதலை வாய்ப்பிள்ளை
யழைப்பித்தார் பாதம் நினைப்பாம் - ஆறுமுக நாவலர் கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே
-   திருப்புக்கொளியூர் அவினாசி பாடல்

காலனையும், முதலையையும் பிள்ளைதரச் சொல் என்று இறைவனிடம் யார் வேண்டுகிறார்? என்ன நிகழ்ந்தது? திருப்புக்கொளியூர் என்று முற்காலத்தில் போற்றப்பட்ட ‘அவிநாசி’ என்னும் தலத்தில் கங்காதரன் எனும் பக்தர் வசித்து வந்தார். வெகுநாட்களாகப் பிள்ளையில்லாது வருந்திய கங்காதரனும் அவர் மனைவியும் அத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அவினாசிலிங்கேசுவரர், கருணாம்பிகையைத் துதித்து குழந்தைப்பேறு வேண்டி நின்றனர்.

இறைவன், இறைவி கருணையால் அவர்கள் வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தது. அவர்களுக்கு விரைவிலேயே ஒரு அழகான பிள்ளை பிறந்தது. மகிழ்ச்சியுற்ற இருவரும் அவனுக்கு இறைவன் நினைவாக ‘அவிநாசிலிங்கம்’ என்று பெயரிட்டனர். அவிநாசிலிங்கம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஐந்து வயதை எட்டிமனான்.



அவன் வயதை ஒத்த எதிர் வீட்டுச் சிறுவன் ஒருநாள் அவிநாசிலிங்கத்தை விளையாட அழைக்க இருவரும் ஆவலுடன் வெளியே சென்றன. விளையாடிக்கொண்டே, எங்கே போகிறோம் என்று அறியாமல் இருவரும் கோயிலுக்கு அருகிலிருந்த பெரிய தாமரைக் குளத்தை அடைந்தனர். நீரைக் கண்டால் சிறுவர்கள் சும்மா இருப்பார்களா?

இருவரும் குளத்தில் இறங்கி ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து ஆனந்தமாக விளையாடினர். அத்தருணத்தில், அந்தக்  குளத்தில் வசித்து வந்த ஒரு பெரிய முதலை அவிநாசிலிங்கத்தின் காலை இறுகப் பற்றிக்கொண்டது. காலை ஏதோ கவ்வுவது போல் உணர்ந்த அவிநாசிலிங்கம்   பயந்துவிட்டான். பிறகு அது முதலை என்று அறிந்து, திகைத்து அழுதான். இறைவன் இப்பொழுது இப்படிப்பட்ட  நிகழ்வு நேரும்படி ஏன் செய்தான்? இச்சம்பவம் சுந்தரருடைய தமிழ்ப் புலமையையும் அவர் சிவபெருமானிடம் கொண்ட தீராத பக்தியையும், நம்பிக்கையையும், உலகத்திற்கு எடுத்துரைக்கவே நிகழ்ந்ததாகும். 

அவிநாசிலிங்கத்தை முதலை கவ்வியதைக் கண்டு அருகில் விளையாடிக்கொண்டிருந்த நண்பன் அஞ்சி மிரண்டு விட்டான். அவனும் சிறுவன்தானே! என்ன செய்வது என்று புரியாமல் அழுதான். பிற்பாடு சமாளித்துக் கொண்டு தன் நண்பனைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால் ஊருக்குள் சென்று அவிநாசிலிங்கத்தின் பெற்றோரிடம் அழுகையினூடே நடந்த  நிகழ்ச்சியைத் தெரிவித்தான். இதைக் கேள்வியுற்ற பெற்றோர், அருகிலிருந்த மற்ற பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு, பதறித் துடித்தபடி தாமரைக் குளம் வந்தடைந்தனர்.

ஆனால் நீருக்கு வெளியே, சிறுவன் கூறியபடி முதலையும், பையனும் இருந்ததற்கான எந்தச் சுவடும் தெரியவில்லை. எக்கோணத்தில் தேடியும் முதலையையும், பிள்ளையையும் காணவில்லை. அதேசமயம் குளத்தில் இறங்கிப் பார்க்கும் தைரியமும் ஒருவருக்கும் இல்லை. யாவரும்  செய்வதறியாது பதைபதைத்து நின்றனர். அவினாசிலிங்கத்தின் பெற்றோர் தம் பிள்ளையை நினைத்து அழுது புலம்பினர். “முதலைதான் விழுங்கி இருக்கவேண்டும்! அந்த வேலை முடிந்ததும் அது தன் வழி சென்று விட்டது!”

 “பாவம் பெற்றோர்! என்ன பாவம் செய்தார்களோ! கறிவேப்பிலை போன்று இருந்த ஒரே பிள்ளையை முதலை வாய்க்குப் பறிகொடுத்து நிற்கிறார்களே!” -இதுபோன்று இன்னும் பல விமரிசனங்களைக் காது கொடுத்துக் கேட்க முடியாது மிகவும் வருந்தினர் பெற்றோர். கூடவே அவர்கள் கூறுவதிலும் உண்மை இருக்குமோ என்றும் அஞ்சினர். தாம் இறைவனிடம் இறைஞ்சிப் பெற்ற பிள்ளையை அருமையாக வளர்த்து அநியாயமாக முதலை வாய்க்குக் கொடுத்து விட்டோமே என்று சொல்லிச் சொல்லிப் புலம்பினர்.

ஒருவாறாக கூட வந்த நண்பர்களும் உறவினர்களும் அவர்களைத் தேற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். காலம் உருண்டோடியது. ஆனால், கவலை மட்டும் விலகவில்லை. அவிநாசிலிங்கத்தோடு விளையாடிய சிறுவனுக்கு அவனது பெற்றோர் உபநயனம் (பூணூல்) நடத்த வரும்பி, நல்லநாள் குறித்தனர். அந்த முகூர்த்த நாளில், ஒரே தெருவில் ஒரு வீட்டில் உபநயனம், மேள தாளம், மகிழ்ச்சி, ஆரவாரம்! ஆனால் எதிரே கங்காதரன் வீட்டில் சோகம், அழுகை! தன் மகன் இந்நேரம் இருந்திருந்தால் இந்த வயதில் அவனுக்கும் உபநயனம் நடந்திருக்குமே என்று எண்ணி எண்ணிப் பெற்றோர் புலம்பும் ஓலம்! ஒரே சமயத்தில் ஒரு வீட்டில் மங்கல ஓசை, எதிர் வீட்டில் அமங்கல ஓசை, ஈசன் செயல்தான் என்னே!

சுந்தர மூர்த்தி நாயனார் தலம் தலமாக இறைவனை தரிசித்து, பதிகங்கள் பாடி வந்தபொழுது, திருப்புக்கொளியூருக்கும் விஜயம் செய்தார். அங்குள்ள கோயிலில் குடி கொண்டிருக்கும் இறைவனை தரிசிப்பதற்காக கங்காதரன் வீடிருந்த தெருவழியே அவர் செல்ல நேர்ந்தது. அங்கே அழுகுரலும், ஆனந்தக் குரலும் ஒருசேர ஒலித்தது கேட்டு, ஒரே தெருவில் இரண்டு எதிர் மறையான நிகழ்ச்சிகள் உள்ளனவே! என்னே இறைவன் சித்தம்! இதை விசாரித்து அறிய வேண்டும் என்று எண்ணி அருகிலிருந்தோரை விசாரித்தார் .

ஊராரும், இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தனர். உடனே சுந்தரர், “சம்பவம் நிகழ்ந்த தாமரைக் குளம் எங்கே? அவ்விடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்!” என்று கூற, அவிநாசிலிங்கத்தின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு தாமரைக் குளத்திற்குச் சென்றனர். குளத்தருகே சுந்தர மூர்த்தி நாயனார் கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பி, சிவபிரானை தியானித்தார். பிறகு, “அவிநாசி அப்பனே! நீ எமனிடம், இக்குளத்தினுள் ஆழ்ந்துவிட்ட குழந்தையைத் தரச் சொல்!” என்ற பொருள்படப் பதிகம் பாட, எங்கோ பதுங்கியிருந்த முதலை தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தது!

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே

- புற்றின்கண் வாழ்கின்றதும், படமெடுத்து ஆடுகின்றதுமான பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன். உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன். உன்னை எக்காரணத்தால் நான் மறப்பேன்!

இந்த முதல் பாடல் தொடங்கி பத்து பாடல்கள் பாடினார். வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோசொல் லாய்அரு ளோங்கு சடையானே பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே
- இது இரண்டாவது பாடல்.

அருள்மிக்க தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காடுகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம்தான் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய். 

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர்அவினாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
- இது நான்காவது பாடல்.

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவர்களுடைய தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்!

இவ்வாறு பாடியவுடன் அடியவரின் பாடலுக்கு ஏற்ற வகையில் முதலையும் இரண்டு வருடங்களுக்கு முன் தான் விழுங்கித் தன் வயிற்றில் வைத்திருந்த பிள்ளையை கரைக்கு வந்து உமிழ்ந்தது. என்னே ஆச்சரியம்! அவிநாசிலிங்கம் வெளியுலகத்தில் இருந்தால் இந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு வளர்ச்சி கண்டிருப்பானோ, அதே வடிவில் வெளிவந்தான்!

இறைவன் மேல் எவ்வளவு நம்பிக்கை பூண்டிருந்தால், இறைவனிடம் ஆணைபோல் கூறியிருப்பார் சுந்தரர்! இறைவனும் அதற்கு செவி சாய்த்திருக்கிறானே! ஒரே பாடலிலேயே இறைவன், குழந்தையைத் திருப்பிக் கொடுத்திருப்பார். ஆனால் இறைவன் அடியவரின் பாடலைக் கேட்பதற்கு இச்சை கொள்பவரல்லவா!

அருணகிரிநாதர் ‘ஐங்கரனை’ என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில், “கொங்கில் உயர் பெற்று வளர் தென் கரையில் அப்பர் அருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே!’’ என்று  வேண்டுகிறார் (அப்பர்-இறைவன்). ‘சிவபெருமானின் அருள் கொண்டு, குழந்தையை முதலையின் வாயினின்றும் மீட்டுத் தந்ததின் ரகசியப் பொருளை, முருகா, எனக்கு நீ அருள வேண்டும்!’ என்கிறார்.

இங்ஙனம் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, இரண்டு வருடங்களுக்கு முன் முதலை விழுங்கிய குழந்தையை திரும்பப் பெற்றார் என்றால் அரன் அடியாரின் திறனைப் புகழுவதா, அன்றி  தம் அடியார்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி உடனே செவி சாய்க்கும் தலை
வனாகிய சிவபெருமானின் அருள் தன்மையைப் போற்றுவதா!

-உமா பாலசுப்பிரமணியன்