காலபைரவரின் அனுமதி இருக்கா?




புனித யாத்திரை - ராமேஸ்வரம்

நவகிரக வழிபாட்டை முடித்தபின் நேராக ராமேஸ்வரம் போய் இறங்கிவிடக் கூடாது. ராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் காவல் தெய்வமாக பாம்பனில் இருக்கும் பைரவரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறா விட்டாலும் நிகழும் என்ன நிகழும்? ராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபூஜை செய்ய ராமர் நினைத்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை கொண்டுவரச் சொல்லி அனுமனை காசிக்கு அனுப்பி வைத்தார். அனுமன் காசி எல்லைக்குள் நுழைந்தார்.

சிவபூஜைக்கு வேண்டிய சுயம்பு லிங்கத்தை தேடி வந்தவருக்கு காசி முழுவதுமே லிங்கங்களாய் இருப்பது தெரிந்தது. இதில் எது சுயம்பு லிங்கம் என அவரால் அடையாளம் காண முடியவில்லை. களவாடியோ, கவர்ந்தோ போகவந்த அனுமனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. ஒரு கருடன் வானத்தில் வட்டமிட்டபடி அதற்கு நேர் கீழே இருந்த ஒரு லிங்கத்தை அடையாளம் காட்டியது. ஒரு பல்லியும் அந்த லிங்கத்தின் மீது அமர்ந்து வாலாட்டிக் காட்டியது.

சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டு கொண்ட அனுமன் ஆனந்தமடைந்தார். தன் பலம் பொருந்திய கரங்களால் அந்த லிங்கத்தை தூக்க முயன்றார். அப்போது அதுவரை அமைதியாய் இருந்த காலபைரவர் அனுமன் முன் வந்து நின்றார். ‘யாரைக் கேட்டு என் பகுதிக்குள் நுழைந்தாய்? நுழைந்ததோடு இல்லாமல் இந்த லிங்கத்தை யாரைக் கேட்டு எடுக்க முயற்சித்தாய்? இத்தனை லிங்கங்கள் இருக்கும்போது இந்த சுயம்பு லிங்கத்தை உனக்கு அடையாளம் காட்டியது யார்?’ என அடுத்தடுத்து அனுமனிடம் கோபமாகவே கேட்டார்.

அனுமன் என்ன பதிலெல்லாமோ சொல்லிப் பார்த்தார். காலபைரவரிடம் எதுவும் பலிக்கவில்லை. ‘என் கேள்விகளுக்கு விடை சொல்லாமல் உன்னால் இங்கிருந்து செல்ல முடியாது’ என தடை உத்தரவு போட்டார். அனுமனும் விடுவதாய் இல்லை. வாய்ச் சண்டை கைச் சண்டையாகும் சூழலில் தேவர்கள் தலையிட்டு காலபைரவரிடம் விபரம் சொல்லி அனுமனை சுயம்பு லிங்கத்தோடு அனுப்பி வைத்தனர். தேவர்களுக்காக அனுமனை விடுவித்த காலபைரவர் சும்மா இருந்துவிடவில்லை.

‘என் அனுமதியின்றி நுழைந்தவனுக்கு உதவி செய்தவர்கள் யார்?’ என விசாரிக்க ஆரம்பித்தார். கருடனும், பல்லியும் என தெரியவர, தன் எல்லைக்குள் இனி கருடன் பறக்கக் கூடாது. பல்லி கத்தக் கூடாது என உத்தரவிட்டார். ஆளானப்பட்ட அனுமனுக்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? அதனால் தான் ராமேஸ்வரத்திற்குள் நுழையுமுன் அதன் காவல் தெய்வமான காலபைரவரிடம் அனுமதி பெறவேண்டும்.

இந்த இறை நியதியை மதித்து ராமரும், காலபைரவரை வணங்கி அனுமதியும், ஆசியும் பெற்ற பின்பே ராமேஸ்வரம் சென்றார். தேவிபட்டணத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக பாம்பனுக்கு வர இப்போது, கடல் மேல் ரயில் பாலம் மற்றும் சாலைப் பாலம் இருக்கின்றன. முன்பு இந்த வசதிகள் இல்லை. இப்போது இருக்கும் பாம்பன் கடற்கரை ஒரு ஓடையாக இருந்திருக்கிறது. முன்பு பாம்பன், ராமேஸ்வரத்தோடு இணைந்தே இருந்திருக்கிறது.

பாம்பனின் ஒரு கரையில் வந்து இறங்கி ஓடம் மூலமாக மறுகரைக்குச் சென்று ராமேஸ்வரம் சென்றிருக்கிறார்கள். ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் தினமும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமியை இப்படிச் சென்றே வழிபட்டு வந்ததற்கான குறிப்புகள் வரலாற்று நூல்களில் காணக்கிடைக்கின்றன. அக்காலத்தில் பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ‘மங்கம்மாள் சாலை’ இப்போது தேசிய நெடுஞ்சாலை என்றழைக்கப்படுகிறது.

பாம்பன் பேருந்து நிறுத்தத்திலிருந்து இக்கோவிலுக்கு நடந்தே செல்லலாம். அவ்வளவு அருகாமையில் இருக்கிறது. ஆரம்பத்தில் ‘பாம்படை’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் இப்போது ‘பாம்பன்’ ஆகிவிட்டது. இங்குள்ள பைரவர் கோயிலை ஒட்டி ஒருபுறம் பைரவ தீர்த்தமும், இன்னொரு புறம் கபி தீர்த்தமும் உள்ளன. வானரங்கள் ராம-ராவண யுத்தத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கபி தீர்த்தத்தில் நீராடி நீக்கிக் கொண்டதால் ‘ரண விமோசனம் தீர்த்தம்’ என இத்தீர்த்தம் அழைக்கப்படுகிறது.

64,000 வருடங்கள் ஒருவன் தவம் செய்தால் உண்டாகும் பலன் ஒருநாள் கங்கையில் நீராடுவதால் கிடைக்கும்; அப்படி ஆயிரம் தடவை கங்கையில் நீராடும்போது கிடைக்கும் பலன், அவன் சிம்ம ராசியில் குரு வரும்போது கோமதி நதியில் ஒரு முறை நீராடினால் கிடைக்கும். இத்தகைய கோமதி நதியில் பலமுறை நீராடுவதற்கு சமமான பலனை ஒருமுறை மட்டும் நீராடினாலே தந்து விடக்கூடியது ‘கபி தீர்த்தம்’. தங்கிச் செல்ல, இத்தீர்த்தத்திற்கு அருகிலேயே ஒரு சத்திரமும் உண்டு.

அக்காலத்தில் இந்த பைரவரை இலங்கையிலிருந்து வந்து வழிபட்டு சென்றுள்ளனர். அப்படி வழிபட வந்தவர்களால் கொண்டு வரப்பட்ட முருகன் சிலை, பைரவர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. முருகனுக்கு நடைபெறும் பல்வேறு விழாக்களால் இம்முருகன் ஆலயம் பிரபலமடைய, பைரவர் ஆலயம், முருகன் ஆலயம் என்ற பெயராலயே தற்போது அழைக்கப்படுகிறது.

முருகருக்கும், பைரவருக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. பைரவர் ஆலயம் பழைமை மாறாத வகையில் தனி சந்நதியில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தின் காவல் தெய்வம் என்பதைக் குறிக்கும் முகமாக காலபைரவர் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த இடத்தில் வீற்றிருக்கிறார். பைரவ, கபி தீர்த்தங்களில் நீராடி பைரவரை வணங்கி, அவர் அனுமதி பெற்றபின் செல்ல வேண்டிய தலம் ‘தனுஷ்கோடி.’

(யாத்திரை தொடரும்)

- கோபி சரபோஜி