அக்னியைப் போற்றுவோம், ஆனந்தமடைவோம்!



இந்து ஞான மரபில் நிறைய வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இது மனித மனத்தின் குணம், உள்ளார்ந்த பழக்க வழக்கங்கள், பழங்குடிகளின் வாழ்க்கை அமைப்பு இதனோடு கலந்த வைதீகச் சடங்குகள் என்று நிறைய வழிபாடுகள் உள்ளன. ஆனால், எல்லா வழிபாட்டையும் தொகுத்து காண்போமாயின் ஐம்பூதங்களையும் ஏதாவதொரு ரீதியில் அவரவருக்குத் தகுந்தவாறு வழிபட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒன்றே அக்னி வழிபாடு. அக்னி என்கிற நெருப்பு, நாம் நேரடியாகப் பார்ப்பதால், தொட்டுணர்வதால் மட்டும் அறியப்படுவதல்ல. அவ்வாறு அறிவதை அதனுடைய உருவம் என்று கொள்ளலாம்.

வேதங்கள் அக்னி குறித்து நிறைய பேசுகின்றன. இது நாம் வெளியே காணும் அக்னி மட்டுமல்ல. அது நம்மால் பார்க்க முடியாத அருவ அக்னியும் ஆகும். அதாவது நம் குடலில், அறிவில், கோபத்தில், எண்ணத்தில் என்று உள்ளீடாக இருக்கும் சூட்சுமமான அக்னி. ஒன்றை எரித்து வேறொன்றாக மாற்றும் சக்தியையும் அக்னியாக்கினார்கள். இந்த அக்னி, சிறு தீக்குச்சியின் நுனியிலிருந்து நமக்குத் தெரிந்து புறப்படுகின்றது. வைதீகச் சடங்குகளில் மந்திர ரூபத்தில் இடப்பட்ட உணவை அக்னியே தேவர்களுக்குண்டானதை அளிக்கிறது. அறிவின் ரூபமாக, அறிவின் இயக்கமாக எண்ணத்தில், புத்தியில் அக்னி மையங்கொண்டு இயங்கி அறிவையே தோற்றுவித்தும் அழித்தும் செய்கின்றது.

சிருஷ்டிப்பதில் காமாக்னியாக சகல ஜீவர்களுக்குள்ளும் உறைந்து படைப்பைப் பெருக்குகிறது. இப்படி ஸ்தூலமான பருவுடல் கொண்ட சகல விஷயங்களையும் அழிப்பதிலிருந்து சூட்சுமமான விஷயங்கள்வரை அக்னி செயல்படுகிறது. எனவேதான் அக்னியின் நீட்சியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை அவனது மனைவியாக உருவகித்து அக்னியின் பத்தினியை ‘ஸ்வாஹா’ என்று அழைத்தனர். யோகியினுள் மூலாக்னி எனப்படும் மூலாதாரத்திலுள்ள அக்னி யோகாக்னியாக செயல்பட்டு ஏழு சக்கரங்களுக்குள்ளும் சென்று ஸஹஸ்ராரத்தை அடைகிறது. அக்னி, தவத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அலையும் எண்ணங்கள் ஒரு முகப்போடு இருக்கும்போது முகமே சுடராக ஒளிர்கிறது. அதனாலேயே தீந்தவம் என்றனர். உண்மையில் அக்னிதான் எதனுடைய இருப்பையும் வெளிப்படுத்துகிறது.

இருப்பிற்கான அத்தாட்சியே அக்னி ஆகும். ஜடப் பொருட்கள் தமக்குள் இருக்கும் ஒளிரும் தன்மையால் மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இதற்குக் காரணம் அந்தப் பொருட்களுக்குள் தாது ரூபமாக இருக்கும் அக்னியே ஆகும். உபநிஷதங்களில் அக்னியை இவ்வாறாகவும் கூறியிருக்கிறது. ஈசனின் திருக்கண்ணே சூரியன் எனும் அக்னி ஆகும். சூரியன் எனும் அக்னி இருப்பதால்தான் உலகம் என்கிற பிரபஞ்சம் தெரிகிறது. அதுபோல பார்த்தல் எனும் விஷயம் நடைபெறுவதற்குக் நமக்குள் இருக்கும் சூரியனே காரணமாக இருக்கிறார். அதாவது, சூரியனை ஒளிர வைக்கும் அதே அக்னியே நம்மையும் வெளியுலகை காணச் செய்கிறார். அதற்கு கண்கள் ஒரு கருவி மாத்திரமே ஆகும். கண்களால் பார்த்தல் எனும் செயலால் மனம் இயங்குகிறது.

வெளியுலகில் பார்க்கப்படும் பொருட்கள் மனதில் பிம்பங்களாகவும், எண்ணங்களாகவும், இன்னும் பல்வேறு படிமங்களாகவும் தங்குகின்றன. எனவே, மனம், விஷயங்களை புசிப்பதற்குண்டான அடிப்படையை பார்வை தீர்மானிக்கிறது. எனவே, மனதை பாதிக்கும், வளர்க்கும், ஒடுக்கச் செய்யும் அவஸ்தைகளுக்கெல்லாம் முக்கிய பங்கை அக்னிதான் ஆற்றுகிறது. வாக்கின் சத்திய ரூபமே அக்னியாகும் உபநிஷதத்தில், சத்தியகாம ஜாபாலன் ஒவ்வொரு வித்யையையும் பயிலும்போது யாக குண்டத்திலிருந்த அக்னியும், அக்னிக்கு அருகேயிருந்து காளை, அன்னப் பறவை, நீர்ப்பறவை போன்றவையெல்லாம் உத்பவிக்கின்றன.

இவையெல்லாம் மிகவும் தத்துவ ரூபத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. அக்னியே பிரம்ம வித்தையை உபதேசிப்பதாக இருக்கும். அக்னியே வாக்கு. அக்னியே அனைத்தையும் அறியச் செய்வது. இந்த அக்னிக்கெல்லாம் மூலமே அருணாசல ஆத்ம மூலாக்னி. அதனாலேயே அக்னி இயங்குகிறது. இது சக்தியின் விளையாட்டாகும். அவள் ஐம்பூதங்களும் அதனின்று பிரிந்த பல்லாயிரம் ஸ்தூல, சூட்சும, காரண, காரிய வஸ்துகளைக் கொண்டு விளையாடுகிறாள். அது பிரபஞ்சத்தின் பிரமாண்டமான லீலை. இந்த சக்தியே, சிதம்பரத்தில்
பிரபஞ்சத்தையே தனது நடனமாகக் காட்டி நிற்கும் நடராஜரைக் கண்டு பிரமிக்கிறாள். ஆனால், பஞ்ச பூதங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் சிவம் அசலமாக இருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. சக்தியின் வடிவான அக்னியின் தலமாகவும், நினைத்தாலே முக்தியருளும் மோட்ச ஸ்தலமாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது. ஆனால், இங்கோ சக்தியே அசல உருவில் இருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள். எனவே, இது அக்னித் தலமாக இருந்தாலும் அக்னியானது இங்கு பஞ்ச பூதங்களின் ஒரு அம்சமாக தன்னை காட்டாது, ஞானாக்னியாகவே அருணாசல மலையில் ஒளிர்கிறது. ஐம்பூதங்களில் மற்ற தலங்களை விடவும் சிறப்பாக கூறப்பட்டதற்குக் காரணமே இங்கு சக்தி என்கிற அருணா, அசலமாகியிருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள் என்பதால்தான்.

புராண காலக் கதையூடாக உள்ள அக்னிக்குரிய கோயிலாக விளங்குவதே திருப்புகலூர் தலமாகும். அது என்ன விவரம்? அக்னி தேவனின் கர்வம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், தன் தகப்பனான வாயுவின் எதிரிலேயே  ‘‘நான் ஒருவனே எதிர்த்தோரை சுட்டுப் பொசுக்குகிறேன். நான் தாக்கத்தொடங்கினால் அது மலையானாலும் சுக்குநூறாகிவிடும். நான் சுட்டெரித்த தூய்மையான திருநீற்றையே பெருமான் நெற்றியில் அணிகிறார்’’ என்று கர்வத்தோடு பேசினான். ‘‘அக்னியே, என்னிடமிருந்துதானே நீ தோன்றினாய். ஆனால், என்னிடம் இல்லாத ஒரு தீயகுணம் உன்னிடம் வந்துவிட்டதே. உயர்வு, தாழ்வு இல்லாது எல்லாவற்றையும் உண்கிறாய். அதில் கர்வம் வேறு.

இப்போது தந்தை என்றும் பாராமல் என்னோடு வாதாடுகிறாய். உன் ஆற்றல் ஒழிந்து மங்கிப் போகட்டும். எல்லாவற்றையும் உண்டு ருசிக்கும் உனக்கு பெரும் பசி எடுக்கட்டும்’’ என்று சாபமிட்டார் வாயு. தன் பலம் குன்றி, தன் பசிஅதிகரித்துக்கொண்டே போவதை அக்னி தேவன் உணர்ந்தான்.அவசரமாக தன் ஆச்சார்யனான, குரு பகவானின் காலில் விழுந்தான். சாப நீக்கத்துக்கான வழிகேட்டு சோர்வாய் சரிந்தான். குரு கண் திறந்தார். பிரகாசம் மங்கிய அக்னியைப் பார்த்தவாறு பேசஆரம்பித்தார். ‘‘தகப்பன் சாபம் தகாதது. இப்படியே இருந்தால் அது முற்றிலும் உன்னை தகர்த்துவிடும். சாபம் தீர ஒரேவழிதான் உண்டு. சோழநாட்டிலே புன்னாகவனம் என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று நாற்புறமும் அகழியைத் தோண்டி சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் ஈசனை பூஜை செய்துவா.

எந்தச் சாபமும் உன்னை நெருங்காது’’ என்று ஆசிர்வதித்தார். அக்னி மெல்ல சுடர் விட்டு எரிய ஆரம்பித்தான். குருவின் குளுமையான வார்த்தைகளால் அவன் புத்தி பிரகாசமாய் ஒளிர்ந்தது. மெல்ல அங்கிருந்து நகர்ந்து புன்னாகவனம் எனும் புகலூரில் சுடராய் தவழ்ந்து தரையிறங்கினான். எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாய், பெருஞ்சுடராய் தகதகத்துக் கொண்டிருந்தார். அந்தத் தீஞ்சுடருக்கு முன் தன்னை ஒரு தீப்பொறியாய் அக்னி உணர்ந்தான். அகிலத்தையே ஆளும் ஆண்டவன் இவனே என்று அவன் திருவடியில் தன் சுடர் நிழலைப் பதித்தான். அத்தலத்திலேயே தங்கி தவம் செய்தான். தன் அகங்காரம் கரைந்து பெரும்பழமாய் கனிந்தான்.

சுயம்பு மூர்த்தியான சிவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். தன் காலடியில் கனன்று கிடந்தவனை கனிவோடு பார்த்தார். அக்னி அந்த பேரொளியைக் கண்டு பரிதவித்தான். தான் பெரும் பாவம் செய்து விட்டதாய் குரல் உடைந்து பேசினான். ‘‘ஆனால், என் தந்தையின் சாபம் தனயனான என்னை தாக்குமே என்று பயந்தேன். உங்களை தரிசித்த உடனேயே என் சித்தம் தெளிவானதை உணர்கிறேன். நான் எதைத் தீண்டினாலும் என் புனிதம் போகாது இனி காக்க வேண்டும். இங்கு வழிபடும் மக்களை தாங்கள் பதம் சேர்த்தருள வேண்டும். நான் என்றென்றும் தகப்பனுக்கு அடங்கிய பிள்ளையாய் இருத்தல் வேண்டும்’’ என வரம் கோரினான்.

ஈசன் அக்னியை அணைத்துக்கொண்டார். அவன் அகத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தார். ஒரு கணத்தில் அவன் முழு சக்தியையும் பிரபஞ்சம் முழுவதும் பொருத்தினார். அக்னி பகவானும் ஈசனின் எதிரே கைகூப்பி அமர்ந்தார். எந்நாளும் அந்த தலத்திலேயே தங்கும் பெரும் பேறு பெற்றார். இன்றுவரையிலும் வாயுவின் காலடித் தடம் பற்றியே அக்னியின் போக்கு இருக்கிறது. வாயு இல்லாத இடத்தில் அக்னி என்றுமே இருக்க முடியாது. அதற்கு மாபெரும் சாட்சியே திருப்புகலூர் தலம். அக்னி பகவானுக்கு அருள்புரிந்ததால் அக்னீஸ்வரர் எனப் பெயர் பெற்றார் இறைவன்.

இத்தலத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவர் அப்பர் சுவாமிகள். இத்தலத்தில்தான் ஆன்மிகத்தின் நிறைவு நிலையான அத்வைத அனுபவத்தை எய்தினார். ஈசனோடு ஈசனாய் தனக்கும் இறைவனுக்கும் எவ்வித பேதமுமில்லாத நிலையை அடைந்தார். தான் வேறு, இறைவன் வேறு என்ற பேதம் உடைந்து ஏகமாய் ஈசனோடு கலந்தார். அப்பர் சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்த தலம் இதுவேயாகும். எனவே, இது முக்தி க்ஷேத்திரமுமாகும். இங்கு அப்பர் தனிசந்நதியில் வீற்றிருக்கிறார். இக்கோயிலைச் சுற்றியுள்ள அகழி, பேரழகானது. வானுயர்ந்த கோபுரங்களும், நீண்ட பிராகாரங்களும் தொன்மையின் இனிமையை பறைசாற்றுகின்றன.

இத்தலத்து மூலவரின் திருநாமம் அக்னீஸ்வரர். இவருக்கு கோணபிரான், சரண்யபுரீஸ்வரர், புன்னாகவனநாதர் என்றும் பெயர்கள் உண்டு. அம்பாள் கருந்தாழ்குழலி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நதி, ராஜகோபுரம் கடந்து, தனியே உள்ளது. இவ்வூர் மக்கள் எப்போதும், ‘எல்லாம் கருந்தாள் அனுக்கிரகம்’ என அடிக்கடி சொல்வது வழக்கம். சுந்தரமூர்த்தி நாயனார் சிவப்பணிச் செலவுக்குப் பொன், பணம் நாடி திருப்புகலூரை அடைந்தார். அங்கேயே தங்கி வழிபட்டார். ஆலயத் திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைத் தலையணையாக்கிப் படுத்தார். விடியலில் விழித்தெழுந்து பார்த்தபோது செங்கல் அனைத்தும், பசும்பொன்கட்டிகளாக மாறியிருப்பது கண்டு வியந்தார். அப்போதே ஈசன் மீது பதிகங்கள் பாடினார். அதனால்தான் ஈசனை வாஸ்து பகவானாகவும் நினைத்து மக்கள் வழிபடுகிறார்கள்.

சொந்தவீடு  ஆசை கொண்டவர்கள் இந்த ஈசனை வேண்டிக்கொள்ள, விரைவிலேயே வீடு கட்டிவிடுகிறார்களாம். இத்தலம் நாகை மாவட்டம், நன்னிலத்திலிருந்து கிழக்கே 6 கி. மீ. தொலைவில் உள்ளது. அஷ்ட திக்பாலகர்களில் திருவண்ணாமலை மலைப் பாதையிலுள்ளது அக்னி லிங்கம் முக்கியமானது.. அக்னி க்ஷேத்ரத்தில் அக்னியே பூஜித்த லிங்கமாதலால் தனிச்சிறப்பு அதற்கு உண்டு. இந்த அக்னி லிங்கத்தை தரிசிக்கும்போது அக்னியால்  என்னென்ன அவஸ்தைகள் இந்த மனதிற்கு உண்டோ அவை அனைத்தையும் இந்த அக்னி லிங்கம் சுட்டுப் பொசுக்கும். பார்த்தல் மற்றும் பார்க்கப்படுதலால் தோற்றுவிக்கப்பட்ட கர்மங்கள் யாவும் அழியும்.

ஈசனுக்கு திரிபுராந்தகன் என்கிற திருப்பெயர் உண்டு. என்ன காரணம்? சூரியனின் முன்பு பஞ்சுபோல முப்புரமும் மிதந்து கொண்டிருந்தன. ஆனாலும் அசுரர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். கமலாட்சனும், தாருகாட்சனும் கண்சிவந்து நெற்றிக்கண்ணனான ஈசனை நெருங்கினார்கள். முப்புரத்தையும் கோபத்தோடு பார்த்தார் ஈசன். அந்தப் பறக்கும் கோட்டைகள் பற்றியெரிந்தன. ஈசன் திரிபுர சம்ஹாரமூர்த்தியானார். ஈசன் எரி அகலை ஏந்தியதாக ஒரு புராணக் கதை கூறுகிறது. தாருகாவனத்து முனிவர்கள் ஈசனின் மீது கோபம்கொண்டு யாகத் தீயினின்று அதிபயங்கரமான நெருப்புக் கோளத்தை உருவாக்கி அதை ஈசனின் மீது ஏவினர்.

அந்த நெருப்பையே பந்தாக்கி ஏந்திக் கொண்டார் பரமன். இதுவே அக்னி தாரண பராக்கிரமம் என்று போற்றப்படுகின்றது. இதேபோன்று அனலன் எனும் அசுரன் தேவர்கள் முதற்கொண்டு எல்லோரையும் துன்புறுத்தினான். ஒருமுறை கயிலையை அடைந்தபோது ஈசன் தனது நெற்றிக் கண்ணாலேயே அவனை எரித்து சாம்பலாக்கினார். எனவே, ஈசனுக்கு அனாலாசுர தகனர் எனும் பெயர் வந்தது. காசி மாநகரில் அக்னி பூசித்த லிங்கம் அக்னீஸ்வரர் என்றே
அழைக்கப்படுகின்றது.

- கிருஷ்ணா

மேலும் சில அக்னீஸ்வர தலங்கள்

மதுரை மாவட்டம் தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி எனும் தலத்தில் அக்னீஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கஞ்சனூர் எனும் பிரசித்தி பெற்ற சுக்கிரன் தலத்தில் அக்னீஸ்வரரே மூலவராக அருளாட்சி நடத்துகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள நல்லாடை எனும் தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அருள்கிறார்; அம்பாள் சுந்தரநாயகி எனும் திருநாமத்தோடு அபயம் அளிக்கிறாள். இங்கு அக்னி சொரூபமாக இருப்பதால் அதை தணிக்கும் வகையில் அருகேயே தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மூலவராகவே அக்னீஸ்வரர் அருள்கிறார்.
 
கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம்தான். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள எட்டரை கிராமத்தில் அக்னீஸ்வரர் அருள்கிறார். திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அக்னித்தலமாக கருதப்படுகிறது. அதேபோல ராஜவல்லிபுரம் எனும் தலத்தில் அக்னீஸ்வரர் மூலவராக ஆருள்பாலிக்கிறார். அக்னி பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலங்கள் ஏழு ஆகும். அவை திருப்புகலூர், கஞ்சனூர், அன்னியூர், திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு, கோட்டூர், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணத்திற்கு அருகேயுள்ள முழையூர் ஆகும். முழையூர் ஈசனுக்கு வன்னீஸ்வரர் என்பது பெயராகும். ‘வன்னிக்குடி முழையூர்’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டிருந்திருக்கிறது.

கரூருக்கு அருகேயுள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயே அக்னீஸ்வரர் எனும் திருப்பெயரில் கோயில் அமைந்துள்ளது. ஈசனின் நெற்றிக் கண்ணை உலைக்கண் என்பார்கள். உலை என்பது கனன்று நெருப்புப் பொறியோடு காணப்படுவதாகும். மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பிரம்மா-விஷ்ணுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் ஈசனே நெருப்பு ஸ்தம்பமாய் நின்ற நிகழ்வையே விளக்குகிறது.

அந்த பெருந்தீயையே நாம் புறத்திலே எரியவிட்டு அகத்திலும் எரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம். இதுதவிர அக்னியை கரத்தில் ஏந்தி (அக்னி சட்டி) வருதல், நெருப்பு மிதித்தல், அக்னிக் காவடி என்று பல்வேறு சடங்குகளினூடாகவும் அக்னி வழிபாட்டை நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்தணர்கள் மூன்று சந்நதிகளிலும் ‘செந்தீ வேட்டல்’ எனப்படும் ஆஹிதாக்னியை வழிபட்டு அக்னி ஹோத்ரம் செய்வர். ஈசன் இவர்களின் வேள்விக் குண்டத்தில் முத்தீயின் வடிவமாக விளங்குகிறார். அக்னி காலையில் பாலகனாகவும், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் வேளையில் யௌவனாக்னியாகவும், இரவு தொடங்கும் அந்திப் பொழுதில் விருத்தாக்னியாகவும் வழிபடப்படுகிறார். வேதங்கள் அந்தணர்கள் வேட்பித்து வணங்கும் தீயை தட்சிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்று வகைப்படுத்தி வேள்வி செய்து வணங்குகின்றார்கள். அக்னீஸ்வரராக இருந்து இறைவன் அருள்பாலிப்பதுபோல அக்னி தீர்த்தமாகவும் பல்வேறு தலங்களில் அமைந்திருக்கின்றன. திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது திருவெண்காடு, ராமேஸ்வரம், கீழ்வேளூர், கூவம் ஆகிய தலங்களிலும் அருள்பாலிக்கின்றார்.