பூஜையின் நோக்கம்தான் என்ன?
அர்த்தமுள்ள இந்துமதம் - 45
சந்நியாசிகளும், சாதுக்களும் செய்வது போன்ற ஒரு பூஜையை இங்கே சொல்லி, உங்களை நான் பயமுறுத்தப் போவதில்லை. காஞ்சிப் பெரியவர்கள் சொல்வதுபோல, சில எளிமையான வழிகளையே சொல்லப்போகிறேன். ஆத்மாவையும், உடலையும் அமைதியடையச் செய்வதே பூஜையின் நோக்கம். இரண்டும் அமைதியுற்ற நிலையே நிம்மதிக்கு மூலாதாரம். பகவத்கீதை படித்திருப்பீர்கள். அதிலுள்ள தியான யோகம் உங்களுக்கு விளங்கியிருக்கும். அது சற்றுக் கடுமையானது. எளிமையான முறையில் ஒரு சிறிய அறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அறையில் விநாயகர், சூரியன், ஈஸ்வரன், விஷ்ணு, அம்பாள் இந்த ஐந்து தெய்வங்களையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
அன்பும், பக்தியும் மீறிப்போய், கிடைக்கின்ற சுவாமி படங்கள், சிலைகள் அனைத்தையும் வைத்துக்கொள்வது தவறில்லை என்றாலும், பெரியவர்கள் சொல்வது போல மேற்கண்ட ஐந்து மூல மூர்த்திகளையும் ஒருங்கு வைத்துப் பூஜை செய்வதே சிறந்தது. இதற்கு ‘பஞ்சாயதன பூஜை’ என்று பெயர். இந்த மூர்த்திகளைக் கூட ஓவிய ரூபமாகவோ, சிலை வடிவமாகவோ வைக்காமல் வேறொன்றில் ஆவாகனம் செய்து வைப்பது நல்லது என்கிறார் பெரியவர். அவை இயற்கையாகக் கிடைக்கும் ஐந்து பொருட்களில் அமைந்திருக்கவேண்டும். இவற்றில் ஈஸ்வரனுக்குரிய ‘பாணலிங்கம்’ நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.
‘‘அம்பிகைக்குரியது ‘ஸ்வர்ணமுகி சிலா’ என்ற கல். தங்க ரேகை ஓடிய அந்தக் கல் ஆந்திர தேசத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. விஷ்ணுவின் வடிவமான ‘சாளக்ராமம்’ நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கிறது. சூரியனுக்குரிய ’ஸ்படிகம்’ தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்குரிய ‘சோணபத்ரக்கல்’ கங்கையோடு கலக்கும் சோனே ஆற்றில் அகப்படுகிறது. இந்த ஐந்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்தால், தேசத்தையே ஒரு இடத்தில் வைத்துப் பார்த்தது போல் இருக்கும்’’ என்கிறார் பெரியவர்.
எல்லாக் கற்களுமே வழுவழுப்பாக இருக்குமாம். இடுக்குகள், இடைவெளிகள் இருக்காதாம். கழுவுவதும், துடைப்பதும் சுலபமாம். அபிஷேகம் செய்து துடைக்க அதிக நேரம் ஆகாதாம். இதற்கு பூஜை மண்டபம் கூடத் தேவையில்லையாம். ஒரு சின்ன சொம்பிலோ, சம்புடத்திலோ கூடப் போட்டு வைத்து விடலாமாம். வெளியூருக்கு அதை எடுத்துக்கொண்டு போகலாமாம். அங்கே புஷ்பம் கிடைக்கவில்லையே என்று அலையாமல் வில்வ இலையையும், துளசி தளத்தையும் காயவைத்து எடுத்துக்கொண்டு போனால், ஈஸ்வரனையும், விஷ்ணுவையும் அவற்றால் அர்ச்சிக்கலாமாம். மற்ற தெய்வங்களையும் அட்சதையால் அர்ச்சனை செய்யலாமாம்.
நைவேத்தியத்திற்கு காய்ந்த திராட்சைப் பழங்களைக் கொண்டு செல்லலாமாம். எல்லாவற்றையும் ஒரு சின்னப்பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு போய்விடலாமாம். இந்த பஞ்சாயதன பூஜைக்கு, பின்னாளில் புத்துயிர் கொடுத்தவர் ஆதிசங்கரர். அவர் இந்த ஐந்து தெய்வங்களோடு முருகப்பெருமானையும் சேர்த்துப் பார்த்தார். நாமும், மேற்கண்ட ஆவாகனக் கற்களோடு சிறு வேல் ஒன்றையும் வைத்துக் கொள்ளலாம். கண் ஒன்றைப் பாராமல், காது ஒன்றைக் கேளாமல், மனம் ஒன்றை நாடாமல், வாய் ஒன்றைப் பேசாமல், கை ஒன்றைத் தேடாமல், சிந்தனை ஈஸ்வரன்; ஜெபிப்பது அவனையே; பூஜை தீபாராதனை கைகளால் என்றிருக்க வேண்டும்.
அறைக் கதவை நன்றாகச் சாத்திக்கொள்ளவேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம். இது ஒரு வகை ரிலாக்ஸேஷன். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சுவாமிகளிடம் விட்டுவிடுங்கள். துன்பங்களை அவன் மீது இறக்கி வைத்து விடுங்கள். ‘மரணத்திற்கு எப்போதும் தயார்; அதுவரை அமைதியைக் கொடு’ என்று வேண்டுங்கள். ‘வடிவேலறிய வஞ்சகம் இல்லை’ என்று சத்தியம் செய்யுங்கள். உடம்புக்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்துக்கு அமைதியையும் பிரார்த்தியுங்கள். விநாயகரைப் பிரார்த்தியுங்கள். கீழ்க்காணும் ஒளவையாரின் அகவலைப் பாராயணம் செய்யுங்கள்.
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வண்ணமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடிவாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! சூரியனை வணங்குகிறவர்கள் கீழ்க்காணும் எனது பாடலைப் பாடுங்கள்: ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி! அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி! தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி! தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி! தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி! தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி! ஞாயிறே! நலமே போற்றி! நாயகன் வடிவே போற்றி! நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி! போற்றி! ஈஸ்வரனை வணங்குகிறவர்கள் கீழ்க்காணும் ராமலிங்க சுவாமிகளின் மகாதேவ மாலைப் பாடலைப் பாடுஙகள். உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே. உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் கலகமுறா உபசாந்த நிலைய தாகிக் களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி விலகலுறா நிபிடஆ னந்த மாகி மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர் இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே. வித்தாகி முளையாகி விளைவ தாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக் கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே. வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின் மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி நாதாந்த வெளியாகி முத்தாந்தத்தின் நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற முதலாகி மனாதீத முத்தி யாகி வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும் மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே வாயாகி வாயிறந்த மவுன மாகி மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக் காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக் கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித் தானாகி நானாகிச் சகல மாகி ஓயாத சத்தியெலாம் உடைய தாகி ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள் கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம் நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல் எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே. அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத் துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர் துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம் இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே. அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம் தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம் மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில் இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
திருமாலை வணங்குகிறவர்கள் பிரபந்தத்திலுள்ள திருமங்கையாழ்வாரின் பின்வரும் பாடலைப் பாடுங்கள்:
கொங்க லர்ந்த மலர்க் குருந்த மொசித்த கோவல னென்பிரான் சங்கு தங்கு தடங்கல் துயில் கொண்ட தாமரைக் கண்ணனின் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்குநீர் செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங் கடமடை நெஞ்சமே! பள்ளி யாவது பாற்க டலரங் கம்இ ரங்கவன் பேய்முைல, பிள்ளை யாயுயி ருண்ட வெந்தை பிரான வன்பெருகும் இடம் வெள்ளி யான்கரி யான்மணி நிற வண்ண னென்றெண்ணி, நாடோறும் தெள்ளி யார்வணங் கும்ம லைத்திரு வேங் கடமடை நெஞ்சமே! நின்ற மாமரு திற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கைதொ ழும்இணைத் தாம ரையடி யெம்பிரான் கன்றி மாரி பொழிந் திடக்கடி தாநி ரைக்கிடர் நீக்குவான் சென்று குன்ற மெடுத்த வன்திரு வேங் கடமடை நெஞ்சமே! பார்த்தற் காயன்று பார தங்கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் கோர்த்தங் காயர் தம்பாடி யில்குர வைபிணைந்த எம் கோவலன் ஏத்து வார்தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய யெம்பிரான் தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ்த்திரு வேங்க டமடை நெஞ்சமே! வண்கை யானவு ணர்க்கு நாயகன் வேள்வி யில்சென்று மாணியாய் மண்கை யாலிரந் தான்ம ராமர மேழு மெய்த லத்தினான் எண்கை யானிம யத்துள் ளானிருஞ் சோலை மேவிய எம்பிரான் திண்கைம் மாதுயர் தீர்த்த வன்திரு வேங்க டமடை நெஞ்சமே! எண்டி சைகளு மேழு லகமும் வாங்கிப் பொன்வயிற் றில்பெய்து பண்டோ ராலிலைப் பள்ளி கொண்டவன் பான்ம திக்கிடர் தீர்த்தவன் ஒண்டி றல்அவு ணன்உ ரத்துகிர் வைத்தவன் ஒள்ளெ யிற்றோடு திண்டி றல்அரி யாய வன்திரு வேங்க டமடை நெஞ்சமே! பாரு நீரெரி காற்றி னோடா காச மும்இவை யாயினான் பேரு மாயிரம் பேச நின்ற பிறப்பி லிபெரு கும்இடம் காரும் வார்பனி நீள்வி சும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர சேரும் வார்பொழில் சூழெ ழில்திரு வேங்க டமடை நெஞ்சமே! அம்ப ரம்அனல் கால்நி லம்சல மாகி நின்ற அமரர்கோன் வம்பு லாமல மேல்ம லிமட மங்கை தான்கொழு நன் அவன் கொம்பி னன்னவி டைம டக்குற மாதர் நீளித ணந்தொறும் செம்பு னம்அவை காவல் கொள்திரு வேங்க டமடை நெஞ்சமே! பேசும் நின்திரு நாம மெட்டெழுத் தும்சொல் லிநின்று பின்னரும் பேசு வார்தமை யுய்ய வாங்கிப் பிறப்ப றுக்கும் பிரானிடம் வாச மாமலர் நாறு வார்பொழில் சூழ்த ரும்உல குக்கெல்லாம் தேச மாய்த்திக ழும்ம லைத்திரு வேங்க டமடை நெஞ்சமே! செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங்க டத்துறை செல்வனை மங்கை யர்தலை வன்க லிகன்றி வண்ட மிழ்ச்செஞ்ெசால் மாலைகள் சங்கை யின்றித் தரித்து ரைக்கவல் லார்கள் தஞ்சம தாகவே வங்க மாகடல் வையங் காவலர் ஆகி வானுல காள்வரோ!
வறுமையில் வாடுபவர்கள் அம்பாளை வணங்குங்கள். அம்பாளை வணங்குகிறவர்கள் கீழ்க்காணும் ராமலிங்க சுவாமிகளின் பாடல்களைப் பாடுங்கள்:
கடலமுதே! செங்கரும்பே! யருட் கற்பகக் கனியே! உடலுயிரே! யுயிர்க்குள் ளுணர்வே! யுணர் வுள்ளொளியே! அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே! மடலவிழ் ஞான மலரோ! வடிவுடயை மாணிக்கமே! கண்ணே! யக் கண்ணின் கருமணி! மணியில் கலந்தொளிசெய் விண்ணே! வியனொற்றி யூரண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே! மலைபெறும் பெண்மணியே! தெய்வப் பெண்ணமுதே! மண்ணேய நீத்தவர் வாழ்வேமணி வடிவுடை மாணிக்கமே! முப்போது மன்பர்கள் வாழ்த்தொற்றி யூரெம் முதல்வர் மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமுதே! யென் றுவந்துநினை எப்போதுஞ் சிந்தித்திடர் நீங்கிடு வார்தனக் கருள்வாயே! மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே! தாயே! மிகவும் தயவுடை யானெனச் சாற்றுவரிச் சேயேன் படுந்துயிர் நீக்கவென்னே உளஞ் செய்திலையே நாயேன் பிழையினி நாடாது நல்லருள் நல்கவரு வாயே! வெம்ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே! பூவாய்! மலர்குழற பூவாய்! மெய் யன்பர் புனைந்த தமிழ்ப் பாவாய்! நிறைந்தபொற் பாவாய்! செந் தேனிற் பகர் மொழியாய்! காவா யெனவயன் காவா பவனுங் கருதுமலர் வாவா யெழி லொற்றி வாழ்வே! வடிவுடை மாணிக்கமே! ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல் ஈயா விடுனுமோ ரெள்ளளவேனு இரங்கு கண்டாய் சாயா அருள்தரும் தாயே! எழிலொற்றித் தற்பரையே! மாயா நலமருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே! வாழி! நின் சேவடி போற்றி, நின் பூம்பத வாரிசங்கள் வாழி! நின் றாள்மலர் போற்றி, நின் கண்ணொளி வாழி; நின்சீர் வாழி! யென் னுள்ளத்தில் நீயுநின் னொற்றி மகிழ்நருநீ வாழி! யென் னாருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
கந்தனை வழிபடுகிறவர்கள் கந்தர் சஷ்டி கவசத்தின் 270 வரிகளையும் பாடுங்கள். அதற்காக நீங்கள் தனியாக ஒரு புத்தகம் வாங்க வேண்டாம் என்று அதையும் இங்கே பிரசுரிக்கிறேன். இந்தக் கவசம் கந்தர் வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிராமம் கிராமமாகப் பாடப்படுகிறது. இதைப் பாடுகிறவர்கள், தங்களுக்கு ஒரு நிம்மதி இருப்பதாக உண்மையிலே நம்புகிறார்கள். எங்கே பாடுங்கள்:
காப்பு - அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. நூல் - சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... ... 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக ... ... 10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக ... ... 15 சரவணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விபவ சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க ... ... 25 விரைந்தெனைக் காக்க வேலோன்வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும் ... 30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் ... 35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... 40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும் ... 45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ... ... 50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து ... ... 55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று ... 60 உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க ... 65 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க ... 70 முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க ... ... 75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க ... ... 80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க ... ... 85 வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க ... 90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க ... 95 எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க ... 100 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க ... 105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் ... 110 கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் ... 115 கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் ... 120 பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் ... 125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட ... 130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய ... ... 135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்குச் செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் ... ... 140 பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட ... ... 145 தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் ... ... 150 சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும்... ... 155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் ... ... 160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் ... ... 165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா ... ... 170 கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே ... ... 175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை ... ... 180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொர்ணமும் மெத்த மெத் தாக வேலா யுதனார் ... ... 185 சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் ... ... 190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் ... ... 195 பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய ... ... 200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் ... ... 205 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் ... ... 210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை ... ... 215 வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி ... ... 220 அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் ... ... 225 சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி ... ... 230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே ... ... 235 மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரஹண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
‘வெறும் வயிறோடுதான் பூஜை செய்ய வேண்டும்’ என்று சொல்வார்கள். ‘குளித்து விட்டுத்தான் பூஜை செய்ய வேண்டும்’ என்பார்கள். எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா வேளைகளுக்கும் அது பொருந்தாது. துன்பம் நெருங்கும்போதெல்லாம் பூஜையில் உட்காருங்கள். சோதனை நேரும்போதெல்லாம் உட்காருங்கள். அடுத்தவர் மீது கோபம் வரும்போது உட்காருங்கள். சந்தோஷம் வரும்போது நன்றி செலுத்துவதற்காக உட்காருங்கள். நோயுற்றபோது நோய் தீரப் பிரார்த்தியுங்கள். புறத்தூய்மை வெறும் தண்ணீரால் அமைகிறது; அகத்தூய்மைதான் உங்கள் வாய்மையில் காணப்பட வேண்டும்.
பக்தித் தத்துவம் பயன் மிக்கது. பாவிகளையும் துரோகிகளையும் விட்டு விலகி நிற்கப் பரமேஸ்வரனைச் சரணடையுங்கள். பிறப்பிற்கு முன்னால் அவனிடம் தான் இருந்தோம். இறப்புக்குப் பின்னால் அவனிடம்தான் போகப் போகிறோம்.
(தொடரும்)
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 600 017.
கவிஞர் கண்ணதாசன்
|