என்ன சொல்கிறது, என் ஜாதகம்?



உங்கள் உடல்நலத்துக்கும், மகளின் ஜாதகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

* என் மகள் எம்.சி.ஏ., படித்துவிட்டு வங்கியில் பணி செய்கிறார். அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும், நல்ல வரன் அமையுமா? - தனலட்சுமி, தூத்துக்குடி.

முப்பத்தியொரு வயது முடிந்த பின்னரும் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. நல்ல படிப்பு, உயர்ந்த உத்யோகம் என்று தேவையானவை அனைத்தும் இருந்தும், தன் மகளைவிட கூடுதல் தகுதி உடைய மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் களத்ர ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழாம் இடத்தில் புதன், சுக்கிரன் இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் நல்ல கணவராக கிடைப்பார் என்பதைச் சொல்கிறது.

இவரது ஜாதகத்தின்படி 24வது வயதில் ஒரு முறையும், 27வது வயதில் ஒரு முறையும் திருமண யோகம் கூடிவந்திருக்கிறது. என்ன காரணத்தினால் நீங்கள் அந்த வாய்ப்புகளைத் தவிர்த்தீர்கள் என்பது புரியவில்லை.

 தற்போது அவரது ஜாதகக் கணக்கின்படி குரு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. தற்போது குரு பலமும் இணைந்துள்ளதால் இந்த வருடத்திலாவது அதிக எதிர்பார்ப்பின்றி அவரது திருமணத்தை நடத்தி வையுங்கள்.

அவரது ஜாதகத்தில் களத்ர தோஷமோ, செவ்வாய் தோஷமோ கிடையாது. அவர் பிறந்த ஊரில் இருந்து மேற்கு திசையில் இருந்து மணமகன் அமைவார். இவரைப் போலவே வங்கி சார்ந்த பணியில் உள்ள, உங்கள் மகளின் மனதிற்குப் பிடித்தமான நபர் ஒருவர் அவருக்கு கணவராக வாய்ப்பார். தற்போது நடக்கின்ற நேரமே நல்ல நேரம் என்பதால் திருமணத்தை நடத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. தாமதிக்காமல் அவரது திருமணத்தை நடத்தி வையுங்கள். உங்கள் மகளின் மணவாழ்வு நல்லபடியாக மலர மனப்பூர்வமான வாழ்த்துகள்.

* என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா, எந்த வயதில் திருமணம் செய்யலாம்? அவள் தகப்பனார் எங்களைப் பிரிந்துள்ளார். அவர் எப்பொழுது எங்களுடன் வந்து சேருவார்? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அது இவள் ராசியால்தானா? ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வனஜா, வேலூர் மாவட்டம்.

20 வயது ஆகும் உங்கள் மகளின் ஜாதகப்படி ஜென்ம லக்னத்தில் செவ்வாய், குரு, கேது ஆகிய கிரஹங்கள் இணைந்துள்ளது, பலமான அம்சம் ஆகும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள அவர் வேகமாகச் செயல்படக்கூடியவர். வேலை பார்க்கும் தகுதி அவருக்கு உள்ளதால் நிரந்தர உத்யோகத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உத்யோக ஸ்தான அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளதால் அரசாங்க உத்யோகம் கிடைத்துவிடும்.

அவருடைய ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிக் குறிப்பிடும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் 12ம் வீட்டில் மறைவு பெற்றுள்ளதாலும், திருமணத்திற்கு அவசரப்படாதீர்கள். 25வது வயதில் திருமணத்திற்கான வாய்ப்பு தேடி வரும். உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளையாக அமைவார். தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன், பிதுர்காரகனான சூரியனுடன் இணைந்து 12ல் மறைவதால் உங்கள் கணவர் உங்களோடு வந்து சேர்வதைவிட தனித்து வாழ்வதே நல்லது.

உங்களுடைய உடல்நிலைக்கும், உங்கள் மகளின் ஜாதகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அத்துடன் ஏழரைச் சனியும் இணைந்திருப்பதால் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காக்கைக்கு எள்ளுப்பொடி கலந்த தயிர் சாதம் வைத்து வருவது நல்லது. திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் துவங்கும்போது, காளஹஸ்தி திருத்தலத்திற்குச் சென்று ராகுவிற்கு பரிகாரம் செய்தால் போதும். அவரது எதிர்கால வாழ்வு பிரகாசமாய் உள்ளது.

* என் பூர்வீக சொத்து பங்கிற்கு என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்று பணம் தராமல் ஏமாற்றும் என் உடன்பிறந்த சகோதரருக்கு தண்டனை கிடைக்குமா? பணம் எனக்கு எப்போது கிடைக்கும்?
- ஒரு வாசகர், சிதம்பரம்.

உங்கள் ஜாதகத்தில் ஜனன காலத்தில் சனி உச்சம், குரு உச்சம், சந்திரன் உச்சம் என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தனை கிரஹங்கள் உச்சம் பெற்ற அம்சத்தினைக் கொண்டிருக்கும் உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதக அமைப்பு பூர்வீக சொத்துகள் விஷயத்தில் ஆதாயம் தருவதாகவே அமைந்துள்ளது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தொகை கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. தற்போது ரிஷப ராசிக்கு அஷ்டமத்துச் சனி நடந்து வருவதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.

தற்போது நடைபெற்று வரும் தசாபுக்தியும் சாதகமாக இல்லாத நிலையில் மேற்கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் வந்து சேரும் என்று சொல்ல இயலாது. உடன் பிறந்த சகோதரருக்கு தண்டனை கிடைக்குமா என்று கேட்டுள்ளீர்கள். 63 வயதில் இருக்கும் நீங்கள் இதுபோன்ற எண்ணத்தைக் கொண்டிருக்கலாமா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஜென்ம லக்னத்தில் சுக்கிரனின் அமர்வினையும், மூன்று கிரஹங்களின் உச்ச பலத்தினையும் பெற்றிருக்கும் நீங்கள் இதுநாள்வரை சுகமாக வாழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ள திருவெண்காடு திருத்தலத்திற்கு ஏதேனும் ஒரு புதன்கிழமை சென்று எம்பெருமானின் சந்நதிக்கு எதிரே
அரைமணி நேரம் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.

“காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்ற உண்மை புரிய வரும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற கவிஞரின் வரிகளை அனுபவித்து உணர்வீர்கள். தற்போதைய கோச்சார நிலையின் படியும், தசாபுக்தியின் படியும் நீங்கள் எதிர்பார்க்கும் பூர்வீக சொத்திற்கான பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ முயற்சியுங்கள்.


* மிகக் கடுமையான கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறேன். கடன் கொடுத்தவர்கள் மிகவும் நெருக்குகிறார்கள். எனது கடன் எப்போது தீரும்? எப்படி தீரும்?
- பாபு, கன்னியாகுமரி.

ஜென்ம லக்னத்தில் குரு மற்றும் கேதுவின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் நீதி, நேர்மை, நாணயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக கணக்கின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி கடனில் மூழ்கிவிடுவதற்கான வாய்ப்பு இல்லை. தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு உங்கள் உழைப்பின் வலிமையை நன்றாக உணர்த்துகிறது.

 கடன் பிரச்னையைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். 06.04.2018 முதல் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணத்துவங்குவீர்கள். உங்களுடைய 48வது வயதுவரை கடன் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 48 முதல் 50 வயதிற்குள்ளாக கடன் சுமையில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிடுவீர்கள். உழைப்பை மட்டும் நம்புங்கள்.

உங்கள் உழைப்பிற்கு உரிய ஊதியம் நிச்சயமாகக் கிடைக்கும். சுயமாக சம்பாதித்து மட்டுமே கடன் பிரச்னையைத் தீர்க்க இயலும். தற்போதைய சூழலில் ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. சோதனைகள் அதிகமாக இருந்தாலும் அதனைத் தாண்டி வெற்றி பெறுவதற்கான அம்சம் உங்களிடம் நிறைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று சந்நதியை ஆறுமுறை வலம்வந்து வழிபடுங்கள். ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஏழைப் பெண்மணி ஒருவருக்கு உங்களால் இயன்ற சிற்றுண்டி வாங்கித் தந்து உதவுங்கள்.

நீங்கள் அளிக்கும் உணவால் வயிறு நிறைந்து, அதனால் மனமும் நிறைந்து அவர்கள் உளமாற வழங்கும்  ஆசிர்வாதம் உங்களை நல்லபடியாக வாழவைக்கும். உங்களுக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிகமான சோதனையே, நிரந்தரமானது அல்ல என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். வளமான எதிர்காலம் உங்கள் கையில்.

* என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இவர்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் அமையவில்லை. இவர்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்?
- கல்யாணி, திருச்சி.

 திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தையும், அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் குழந்தை பாக்கியம் நிச்சயமாக இருப்பது தெரிகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் பிள்ளைச் செல்வத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகிய ஐந்து கிரஹங்கள் இணைவு பெற்றுள்ளதால் நிச்சயமாக வம்சவிருத்தி என்பது உண்டு.

உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியான சூரியன் ஆறில் அமர்ந்திருப்பதால் சற்று தாமதமாகிக் கொண்டிருக்கிறது. உஷ்ணமான உடலமைப்பினைக் கொண்டிருக்கும் அவர் மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை தரும்.

34வது வயதில் அவர் இருப்பதால், காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டியது அவசியம். இருவரின் ஜாதகப்படியும் வருகின்ற 24.09.2018ற்குப் பிறகு குழந்தை பாக்கியம் கூடிவரும். உங்கள் மருமகளிடம் முறையாக சஷ்டிவிரதம் இருந்து வரச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் சுப்ரமணியரின் ஆலயத்திற்குச் சென்று வருவதும் நல்லது.

சஷ்டியும், செவ்வாயும் இணையும் நாளில் விராலிமலை முருகன் கோவிலுக்கு தம்பதியராகச் சென்று பிரார்த்தனை செய்து வணங்கச் சொல்லுங்கள். முருகப்பெருமானின் அருளால் மழலைச்செல்வம் கிடைத்துவிடும். கவலை வேண்டாம்.

* என் மகன் 2014ல் பி.இ., முடித்துள்ளான். தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கும் சென்று வருகிறான். அவனுக்கு எப்போது உத்யோகம் அமையும்? அரசு வேலை எப்போது கிடைக்கும்?
- வெங்கடசுப்ரமணியன், கரூர்.

சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் நீசம் பெற்றிருந்தாலும், செவ்வாய், புதன், குரு மற்றும் ராகுவின் அமர்வு நிலை அவருக்கு சாதகமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் அவர் சாதிப்பதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் வந்து சேரும். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி என்று அமைந்துள்ள அவருடைய ஜாதகத்தின்படி
தற்போது சூரிய தசை துவங்கியுள்ளது.

அவருடைய ஜாதகக் கணக்கின்படி அவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான அம்சம் நிறைந்துள்ளது. இங்கு உள்நாட்டில் இருந்துகொண்டு அரசு வேலைக்காகக் காத்திருப்பதைவிட அந்நிய தேசப் பணிக்கு முயற்சிப்பது வெற்றியைத் தரும். மேலை நாடுகளில் முயற்சிக்காமல் மலேசியா, சிங்கப்பூர், கொரியா முதலான கீழ்திசை நாடுகளில் முயற்சிக்கச் சொல்லுங்கள். வருகின்ற ஏப்ரல் மாத இறுதிக்குள் அதற்கான நுழைவுவாயில் திறக்கும். நான்கில் இணைந்திருக்கும் சுக்கிரனும், ராகுவும் இவருக்கு சுகமான வாழ்வினை அளிப்பார்கள்.

 மூன்றில் இணைந்திருக்கும் சூரியனும், புதனும் இவரது திறமையை வளர்ப்பார்கள். தற்போது துவங்கியுள்ள சூரிய தசையும், தொடர்ந்து வரவுள்ள தசைகளும் அவரை வாழ்வில் உச்சநிலைக்கு அழைத்துச் செல்லும். அரசுப்பணி என்பதை மட்டும் கவனத்தில் வைத்திருப்பதை விட, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக கீழ்திசை நாடுகளில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணிக்கு முயற்சிக்கச் சொல்லுங்கள்.

தொடர்ந்து 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகுகாலத்தில் அருகிலுள்ள சிவாலயத்தில் இருக்கும் சரபேஸ்வரர் சந்நதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடியிலும் நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து வழிபட்டு வரச்சொல்லுங்கள். வெகுவிரைவில் உயர்ந்த உத்யோகம் அமைந்து விடும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004