கிருஷ்ண தரிசனம்



* திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.

* வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருளும் கோயில், திருவண்ணாமலையில் உள்ள செங்கம் எனும் ஊரில் உள்ளது.  தன் பரம பக்தனான ஏழை ஒருவனுக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

* ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட காணிக்கைகளை இத்தலத்தில் சேர்க்கலாம் என்பது மரபு.

* மூலவர் கோபிநாதராகவும் உற்சவர் கிருஷ்ணராகவும் தாயார் கோபம்மாளாகவும் அருளும் ஆலயம், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் உள்ளது. மரங்கள் மற்றும் கால்நடைகளைக் காப்பதில் இந்த கண்ணன் நிகரற்றவன்.

* கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான் உன்னி கிருஷ்ணன். கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர். இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்.

* வேணுகோபாலசுவாமி எனும் திருநாமத்துடன் கண்ணன் பாமாருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராயூர்கள்ளிக்குடியில் உள்ளது. இங்கே நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை எனும் சிறப்பைப் பெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி
வழிபடுகிறார்கள்.

* வெண்ணெயுண்ட மாயவன் ராதாகிருஷ்ணனாக அருளும் கோயில் மதுரை, திருப்பாலை எனும் ஊரில் உள்ளது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தன் கிரணங்களால் கண்ணனை வணங்கும் தலம் இது. கண்ணனின் பிராணநாடியாக விளங்கும் ராதைக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தருகிறான் இந்தக் கண்ணன்.

- ந.பரணிகுமார்