நியூஸ் வே



விக்கிலீக்ஸ் அம்பலங்களுக்குக் காரணமான ஜூலியன் அசாஞ்சே கடந்த நான்கு ஆண்டுகளாக லண்டனில் இருக்கும் ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அரசியல் தஞ்சம் கிடைத்தாலும், தனிமை அவரைக் கொல்கிறது. அவரது குழந்தைகள் இப்போது ஒரு பூனைக்குட்டியை அவருக்கு நட்பாக இருக்கக் கொடுத்திருக்கிறார்கள். இந்த 2 மாதக் குட்டிதான் இப்போது அவரின் பேச்சுத்துணை!

நெருங்கிய உறவுகள் முன்னிலையில் அமெரிக்கத் தொழிலதிபர் ஜீன் குட்எனஃப்பை திருமணம் செய்துகொண்டு இரண்டரை மாதங்கள் கழித்து, பாலிவுட் பிரபலங்களை அழைத்து ரிசப்ஷன் வைத்தார் ப்ரீத்தி ஜிந்தா. ‘‘இரவு முழுக்க டான்ஸ் ஆட வசதியாக உடை இருக்க வேண்டும்’’ எனச் சொல்லி, பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த சிவப்பு நிற கவுனில் அசத்தலாக வலம் வந்தார் ப்ரீத்தி.

அரவிந்த்சாமியை பெரிய ஹீரோக்கள் நடிக்கக் கேட்டும், அவர் மறுபடியும் ஜெயம் ரவி படத்தில் நடிக்கப் போனது அந்த ஹீரோக்களைக் கடுப்பாக்கி இருக்கிறது. அவர்களின் வருத்தத்தைக் கேட்ட பிறகு, ‘‘ஸாரி, எனக்கு ‘போகன்’ படக் கதைதான் பிடித்திருக்கிறது, வேறு காரணமில்லை!’’ என்றாராம்.

தன் புதுக் காதலிக்காக ஒரு ஃப்ளாட் வாங்கியிருக்கிறார் நடிகர் ஜெய். அதுவும் காதலி விருப்பத்துக்கு ஏற்ப கிழக்குக் கடற்கரைச் சாலையில். அதில் தனது விருப்பத்திற்கேற்ப பல மாற்றங்களும் செய்து வருகிறார்.

பிரபுதேவா, தமன்னாவை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கி வரும் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடியிருக்கிறார் எமிஜாக்சன். ‘‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுடன் நான் டான்ஸ் ஆடியிருக்கேன்’’ என மகிழ்ந்து ட்வீட்டியிருக்கிறார் எமி.

அதர்வா தயாரித்து நடிக்கும் ‘செம போத ஆகாத’ படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். ‘காவியத்தலைவன்’ அனைகா நம்பர் ஒன். நம்பர் டூவாக மேற்கு வங்க நடிகை மிஸ்தி சக்கரவர்த்தி கமிட் ஆகியிருக்கிறார்.

தெலுங்கு ‘கத்தி’யில் சிரஞ்சீவி நடிக்கிறார். சமந்தா வேடத்தில் அனுஷ்காவைக் கேட்டு இருக்கிறார்கள். ‘பாகுபலி 2’, ‘சிங்கம் 3’ இருப்பதால் கால்ஷீட் முறையாகத் தரமுடியுமா என யோசிக்கிறார் அனு.

நரேந்திர மோடி பிரதமராகி, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அவரது அம்மா ஹீரா பென், மோடியைப் பார்க்க டெல்லி வந்திருந்தார். ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தையும் தோட்டத்தையும், தன் அம்மாவை வீல்சேரில் அமரவைத்து சுற்றிக்
காட்டினார் மோடி. ஒரே நாளில் மோடியின் அம்மா திரும்பவும் குஜராத்தில் இருக்கும் பூர்வீக வீட்டுக்கே சென்றுவிட்டார். அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மோடி வெளியிட, அதில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என பலரையும் ஒட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் உருவாக்கிய புகைப்படங்கள் செம வைரல்!

‘சந்திரமுகி 2’வை லாரன்ஸ், வடிவேலு காம்பினேஷனில் தயாரிக்க முடிவு செய்துவிட்டார்கள்.

நடிகர் பிரபுவுக்காக ஒரு படம் செய்து கொடுக்க சம்மதம் சொல்லி விட்டார் விஜய். பிரபு குஷியில் இருக்கிறார்.

வடபழனி ஃபோரம் மாலில் இரவோடு இரவாக ‘2.0’ பட ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்  ஷங்கர். இரவு 2 மணிக்கு மேல் என்பதால் அக்‌ஷய்குமார், ரஜினி முதற்கொண்டு எல்லோரும் கலந்துகொண்டும் பிரச்னையே எழவில்ைலயாம். ‘‘இது நல்ல ஐடியாவாக இருக்கிறது’’ எனச் சொல்லி
யிருக்கிறார் ரஜினி.

லாரன்ஸ் தன் அம்மா கண்மணிக்கு கோயில் கட்டி, சிலையும் வடித்திருக்கிறார். கோயிலைத் திறந்து வைக்க ரஜினியிடம் தேதி கேட்க, ‘‘நீ எல்லா வேலையையும் முடிச்சிட்டு வா... நானே வந்திருந்து திறந்து வைத்து, அரை நாள் அங்கேயே இருக்கிறேன்!’’ என்றாராம்.

‘‘மத்தவங்ககிட்ட இருந்து நல்ல விஷயங்களைக் கத்துக்கறதுல நானும் ஸ்ருதியும் ஒண்ணு. ஸ்ருதிகிட்ட இருந்து நானே நிறைய கத்துக்கிட்டேன். அவ வயசில் இவ்வளவு பணிவா நான் இருந்ததில்லை!’’ என பூரிக்கிறார் அப்பா கமல். முதல்முறையாக வாக்களித் திருக்கும் தங்கை அக்‌ஷராவை லண்டனில் இருந்து வாழ்த்தியிருக்கிறார் ஸ்ருதி.

‘‘உங்களைக் கவர்ந்த செக்ஸியஸ்ட் வுமன் யார்?’’ என தனுஷிடம் கேட்டால், சட்டென்று பதில் வருகிறது, ‘‘அமெரிக்க நடிகை ஸ்கேர்லட் ஜோகன்சன்...’’ கூடவே, ‘‘செக்ஸியஸ்ட் மேன், ஜானி டெப்’’ என இன்னொரு பதிலும் வருகிறது!

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு 15வது ஆண்டாக ஐஸ்வர்யா ராய் போகிறார். சோனம் கபூருக்கு இது இரண்டாவது ஆண்டு. ஆனாலும் இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராயைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஃபேஷனில் அசத்திவிட்டார். ‘சோனம் கபூர் போல யாரும் அழகாகலாம்’ என அவரது பர்சனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நம்ரதா சோனி வெளியிட்டிருக்கும் 8 ஸ்டெப் மேக்கப் சீக்ரெட், இணையதளங்களில் படுவேகமாக ஷேர் ஆகிறது.

ஷங்கர், கமல்ஹாசன் இருவரும் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதனால் ‘இந்தியன் 2’ உருவாகலாம் என்கிறார்கள்.

நடிகர் திலகத்தின் நேசத்துக்குரிய சொந்தத் தியேட்டரான ‘சாந்தி’ தனது நீண்ட வரலாற்றை முடித்துக்கொண்டது. அதை வணிக நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதில் மால் மற்றும் சிறு திரைப்பட அரங்குகள் வருகின்றன. நிறைய ரசிகர்கள், கடைசிக் காட்சியின்போது கண்ணீர் சிந்தினார்களாம்.

அப்பாவின் உடல்நலம், ‘கபாலி’ ஹிட் உள்பட பல வேண்டுதல்களோடு திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்திருக்கிறார்கள் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்.

தமிழில் செம அடக்கமாக நடித்து வந்த காஜல், இந்தியில் ரன்தீப் ஹூடாவுடன் ‘தோ லஃப்ஸான் கி கஹானி’ படத்தில் செம நெருக்கம் காட்டி நடித்து வருகிறார். அதிலிருந்து சாம்பிளுக்கு ஒரு லிப் டூ லிப் காட்சி கசிய, பரபரப்பாகிவிட்டது பாலிவுட். ‘‘முதலில் காஜல் லிப் கிஸ்ஸை மறுத்தாங்க. ஆனா, ரெண்டு லவ்வர்ஸ் சந்திக்கும் உணர்ச்சிபூர்வமான சீன் என்பதால் அவரால் இதை மறுக்க முடியவில்லை!’’ என இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் பட இயக்குநர்.

‘‘முகமது அலி போல திறமையான உலக சாம்பியன் ஆகும் தகுதி விஜேந்தர் சிங்குக்கு உள்ளது’’ என சான்றிதழ் தந்திருக்கிறார், அவரின் பயிற்சியாளர் லீ பியர்ட். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜேந்தர், அதன்பின் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறி ஒரு ஆண்டு ஆகிறது. அதற்குள் ஆறு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி அடைந்திருக்கிறார் அவர்.

ஒரு போட்டியில்கூட அவரின் எதிராளியால் முழு நேரமும் இவரது தாக்குதலைச் சமாளிக்க முடிந்ததில்லை. ஏற்கனவே உலக சாம்பியன் ஃபிளாய்ட் மேவெதருக்கு பயிற்சியாளராக இருந்தவர் லீ பியர்ட். ‘‘ஆனால் இவரது திறமை மற்றவர்களைப் போலன்றி தனித்துவமானது. கவனம் சிதறாமல் இருந்தால், அடுத்த உலக சாம்பியன் இவர்தான்’’ என்கிறார் லீ. இந்தியக் கொடியை விஜேந்தர் உலகெங்கும் உயர்த்திப் பிடிக்கட்டும்.