சில்லறை
நெல்லையிலிருந்து சென்னை செல்லும் சிறப்பு ரயிலான அந்த சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. வியாபாரிகளின் கூச்சல் காதுகளைத் துளைத்தது. ‘முறுக்கு... அதிரசம்... வடை...’ என்று ஒருவன் சத்தம் போட்டுக்கொண்டே பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தான். பலர் ரயிலுக்குள் இருந்தே அவனிடம் தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பார்வதியும் உள்ளே இருந்து 500 ரூபாயை நீட்டி, ‘‘சில்லறை இருக்கா?’’ எனக் கேட்டாள். ‘‘இருக்கு மேடம்!’’ என்றவன், சட்டென்று அதை வாங்கி சட்டைப் பைக்குள் போட்டான். அடுத்தடுத்து வந்தவர்களுக்கு பார்சல் விற்றுக்கொண்டே இருந்தவன், ‘‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா!’’ என்றான் பார்வதியிடம். ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அவசரமாக பாக்கெட்டுக்குள் சில்லறையைத் தேடுவது போல நடித்தான் அவன். ‘‘சில்லறை சில்லறை’’ என்று கையை அசைத்தவாறு கத்தினாள் பார்வதி. அதற்குள் ரயில் வேகமெடுத்து எங்கோ போய்விட்டது.
‘‘அப்பாடா, இன்னிக்கு ஒரு 500 ரூபாயை ஆட்டையப் போட்டாச்சு!’’ என்று சந்தோஷப்பட்ட போதுதான் அவனுக்கு அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. ‘‘பக்கத்து பெட்டியில் இன்னொருத்தருக்கு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கொடுத்தேனே... அந்த ஆள் ஆயிரம் ரூபாயைத் தரலையே’’ - தலையில் கை வைத்து சோகமாய் அமர்ந்தான் அந்த வியாபாரி.
-தாழை.மு.ஷேக்தாசன்
|