இனிய வாழ்வுக்கு அவசியம் இதய வால்வுகள்!



-டாக்டர் கு.கணேசன்

வீட்டின் பாதுகாப்புக்கு அறைக் கதவுகள் எப்படி முக்கியமோ, அப்படி இதயத்துக்கு வால்வுகள் முக்கியம். ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் இதயத்தின் பணியில், வால்வுகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ரத்தம் ஒரே திசையில் செல்லவும், வந்த திசையில் திரும்பிவிடாமல் தடுக்கவும் இந்த வால்வுகள் அவசியம். இவை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு மாறாமல் இருக்கும். இதயத்தின் இடது மேலறைக்கும் கீழறைக்கும் நடுவில் மைட்ரல் வால்வு உள்ளது. வலது மேலறைக்கும் கீழறைக்கும் நடுவில் ட்ரைகஸ்பிட் வால்வு உள்ளது.

கீழறைகள் இரண்டும் விரிவடையும்போது இவை திறக்கின்றன. சுருங்கும்போது மூடிக்கொள்கின்றன. அசுத்த ரத்தத்தை நுரையீரலுக்குள் செலுத்த, வலது கீழறையிலிருந்து நுரையீரல் தமனிக் குழாய் கிளம்பும். சுத்த ரத்தத்தை உடலுக்குள் செலுத்த இடது கீழறையிலிருந்து மகா தமனி கிளம்பும். இவற்றின் முகத்துவாரத்தில் முறையே நுரையீரல் வால்வும், அயோடிக் வால்வும் உள்ளன. கீழறைகள் இரண்டும் சுருங்கும்போது இவை திறக்கின்றன. விரிவடையும்போது மூடிக்கொள்கின்றன.

இதயத்தின் சீரான இயக்கத்துக்கு ஏற்ப இவை செயல்படுவதால், அசுத்த ரத்தம் முறையாக சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுவதும் சீராக நடக்கிறது. இந்த அமைப்பை சீர்குலைப்பதற்கென்றே ஒரு பாக்டீரியா பிறந்திருக்கிறது. அதன் நீண்ட பெயர்,  ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’. இது அசுத்தத் தண்ணீர், உணவு, காற்று மூலம் குழந்தைகளின் தொண்டையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. அங்கு புண்ணை ஏற்படுத்துகிறது. காய்ச்சல் வருகிறது. மூட்டுவலி ஆரம்பிக்கிறது. பலருக்கு இது தரும் தொல்லைகள் இத்துடன் முடிந்துவிடும். ஆனால், 100ல் 3 பேருக்கு மட்டும் அடுத்த கட்ட காய்ச்சலுக்கு அடிபோடும். அதன் பெயர்  ‘ருமாட்டிக் காய்ச்சல்’! இதைக் கவனிக்காமல் விட்டால், இதயநோய் என்ற ஆபத்தைக் கொண்டுவருகிறது.

முதலில், காய்ச்சலோடு பெரிய மூட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் போன்றவற்றில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு இதய உறைகளைத் தாக்குகிறது. இந்தச் சமயத்தில் இதய பாதிப்பு எதுவும் வெளியில் தெரிவதில்லை என்பதால் பலரும் இதை அலட்சியம் செய்கின்றனர். ஆனால், இந்தக் கொடூர பாக்டீரியா நோயாளியை விடுவதாக இல்லை. இதன் அடுத்த கட்ட டார்கெட், இதய வால்வுகள்தான்.

முதலில் மைட்ரல் வால்வு, பிறகு அயோடிக் வால்வு, இதைத் தொடர்ந்து ட்ரைகஸ்பிட் வால்வு, நுரையீரல் வால்வு என்று பழுதடைய வைக்கிறது. சிலருக்கு ஒரு வால்வு மட்டும் பழுதடையலாம். இன்னும் சிலருக்கு இரண்டு வால்வுகளும், மிக அரிதாக மூன்று வால்வுகளும் பழுதடையலாம். நான்குமே பழுதானதற்குப் புள்ளிவிவரம் இல்லை.

இந்த நோய் 3 வயதிலிருந்து 15 வயது வரை எவரையும் தாக்கலாம். சிகிச்சை எடுக்காதபட்சத்தில் 10 வயதுக்குமேல் இதய வால்வுகள் பழுதாக ஆரம்பிக்கும். 15 வயதில் அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கும். பழுதடைந்த வால்வுகளால் சரியாக மூட முடியாமலும் திறக்க முடியாமலும் போகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து உடலியக்கம் தடுமாறுகிறது. அப்போதுதான் பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இவர்கள் முதலில், ‘விளையாட முடியவில்லை’,  ‘கொஞ்ச தூரம்கூட நடக்க முடியவில்லை’, ‘நடந்தால், ஓடினால் மூச்சு வாங்குகிறது’ என்பார்கள். ஒரு சிலர் இருமலில் ரத்தம் வருகிறது என்பார்கள். இன்னும் சிலர் இவற்றையெல்லாம் தாண்டி வயிறும் கால்களும் வீங்கிவிட்டன என்பார்கள். பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பமடையும்போதுதான் இப்படி ஒரு நோய் அவர்களுக்கு இருப்பதே தெரியவருகிறது. காரணம், அப்போது அதிக அளவு ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டிய அவசியத்தில் இதயம் இருக்கிறது. ஆனால், அது இயலாமல் போகிறது.

இந்த இயலாமையின் வெளிப்பாடுதான் மூச்சு வாங்குவது. ருமாட்டிக் காய்ச்சலால் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பாதிக்கப்படுவது மைட்ரல் வால்வுதான். இது சுருங்கிப் போவதுதான் (Mitral Stenosis) பலருக்கும் ஏற்படுகிற பிரச்னை. இந்த நோயின்போது ரத்தம் தொடர்ந்து பயணிக்க முடியாமல், இடது மேலறை, நுரையீரல் போன்ற இடங்களில் தேங்கி விடுகிறது. இதன் விளைவாக அங்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது; மூச்சுத் திணறுகிறது. எகிறும் அழுத்தம் காரணமாக நுரையீரலின் சிறு ரத்தக்குழாய்கள் வெடித்து, சளியுடன் ரத்தம் வெளியேறுகிறது.

வால்வுகள் பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. நவீன மருத்துவத்தில் சதி செய்யும் வால்வுகளையும் சரிப்படுத்த முடியும். பழுதான மைட்ரல் வால்வை எப்படிச் சரிப்படுத்துவது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். எக்கோ டெஸ்டில் மைட்ரல் வால்வின் சுருங்கி விரியும் தன்மை தெரியும். அதற்கேற்ப சிகிச்சை நிர்ணயிக்கப்படும். வெறும் மருந்துகளால் இதை சரிப்படுத்த முடியாது. முன்பு ‘கமிஷராட்டமி’ எனும் சர்ஜரியால் இதைச் சரிப்படுத்தினார்கள். இதயத்தைத் திறக்காமலும் இதைச் செய்யலாம் (Closed Commissurotomy); திறந்தும் செய்யலாம் (Open Commissurotomy).

சுருங்கிக் கிடக்கும் மைட்ரல் வால்வைத் தேவையான அளவுக்கு விரித்துவிடுவதுதான் இதன் செயல் முறை. சிலருக்கு ‘பலூன் வால்வுலோபிளாஸ்டி’ (Balloon valvuloplasty) செய்து இதைச் சரிப்படுத்தலாம். சர்ஜரி செய்யாமல், தொடை ரத்தக்குழாய் வழியாக வளைகம்பியுடன் பலூனை அனுப்பி, அது மைட்ரல் வால்வைக் கடக்கும்போது, விரிவடையச் செய்வதன் மூலம் சுருங்கிய வால்வு விரிவடையும். மைட்ரல் வால்வு ஓரளவுக்குப் பழுதானவர்களுக்குத்தான் இந்தச் சிகிச்சைகள் பலன் தரும். முற்றிலும் பழுதானவர்களுக்கு வால்வை மாற்றுவதுதான் ஒரே வழி. ‘வால்வு மாற்று சிகிச்சை’ என்று அதற்குப் பெயர்.

இதை எப்படிச் செய்கிறார்கள்?
நோயாளிக்கு முழு மயக்கம் தந்து நெஞ்சை விரிக்கிறார்கள். ‘இதயம் நுரையீரல் இயந்திரத்தை’ (Heart-lung machine) இதயத்தில் பொருத்தி உடலின் ரத்த ஓட்டப்பாதையை மாற்றுகிறார்கள். உடலில் இதயம் செய்யும் வேலையை இது தற்காலிகமாகச் செய்யும். குளிர்ந்த பொட்டாசியம் குளோரைடு கலந்த திரவத்தால் இதயத் துடிப்பை நிறுத்தி, இதயத்தை சில மணி நேரங்களுக்கு ஓய்வெடுக்க வைக்கிறார்கள். இப்போது இடது இதயத்தைச் சின்னதாகப் பிளந்து, பழுதடைந்த மைட்ரல் வால்வை அகற்றிவிட்டு, புதிய செயற்கை வால்வைப் பொருத்திவிடுகிறார்கள்.

சர்ஜரி முடிந்த பிறகு உடலின் ரத்த ஓட்டத்தை இதயத்துடன் இணைத்து மீண்டும் துடிக்க வைக்கிறார்கள். நெஞ்சை உலோக வயரால் தைத்து மூடுகிறார்கள். நோயாளிக்கு மயக்கம் தெளிய வைக்கிறார்கள். செலவு லட்சங்களில். செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்கள், ரத்தம் உறையாமல் இருக்க சில மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். மேலும், இந்த மாத்திரைகள் சரியாக வேலை செய்கிறதா, உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அதற்கு ஐஎன்ஆர் டெஸ்ட்  செய்ய வேண்டும். அது என்ன ஐஎன்ஆர் டெஸ்ட்?

ரத்தம் உறைந்துவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற  நோய்கள் தாக்கலாம். ரத்தம் உறைவதைத் தடுக்க ‘அசிட்ரோம்’ மாத்திரை தரப்படுவது வழக்கம். இவை உடலின் இயல்பான ரத்த உறைவுப்  பணிக்கு இடையூறு செய்யும் என்பதால், ரத்த உறைவுப் பணி சரியாக நடக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஐஎன்ஆர் டெஸ்ட்டை (International  Normalized Ratio) சிபாரிசு செய்வார்கள். இது 2லிருந்து 3 வரை இருக்க வேண்டும். இந்த அளவு கூடுவதையும் குறைவதையும் பொறுத்து அசிட்ரோம்  மாத்திரையின் அளவைக் கூட்டியோ குறைத்தோ பயன்படுத்த வேண்டும்.
 
இந்த டெஸ்ட்டை  ஆரம்பத்தில் வாரம் ஒருமுறையும், பிறகு 2 வாரத்துக்கு ஒருமுறையும், தொடர்ச்சியாக, மாதம் ஒரு முறையும் வாழ்நாள் முழுவதும் கட்டாயம் செய்துகொள்ள  வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் வரை இதற்கு ஒதுக்க வேண்டும். இத்தனை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமா? வால்வுப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வழி இல்லையா? வழி இருக்கிறது. பார்க்க: பெட்டிச் செய்தி.

வால்வுகள் பழுதாகாமல் இருக்க...

* ருமாட்டிக் காய்ச்சலை முறையாகப் பரிசோதித்து உறுதிசெய்ய வேண்டும்.
* சரியான அளவில் பெனிசிலின் ஊசி போட்டு காய்ச்சலைக் குணப்படுத்த வேண்டும்.
* அதைத் தொடர்ந்து  ‘எல்ஏ பெனிசிலின்’ ஊசி மருந்தை 3 வார இடைவெளியில் 30 வயது முடியும் வரை போட வேண்டும். ஒருமுறைகூட தவறாமல் போட வேண்டியது முக்கியம்.
* அல்லது பெனிசிலின் மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும்.
* ‘பெனிசிலின் அலர்ஜி’ உள்ளவர்கள் எரித்ரோமைசின் சாப்பிடலாம்.
* சிலருக்கு ஸ்டீராய்ட் மாத்திரைகள் தேவைப்படும்.

அப்டேட்

மைட்ரல் வால்வு பாதிப்பு நடுத்தர வயதினருக்கு என்றால், 50 வயதைக் கடந்தவர்களை அதிகம் பாதிப்பது அயோடிக் வால்வுப் பிரச்னை. ருமாட்டிக் காய்ச்சல் மட்டுமல்லாமல், மூப்பின் காரணமாகவும் வால்வு சுருங்குவதால் இது ஏற்படுகிறது. இதற்கும் ‘வால்வு மாற்று சிகிச்சை’தான் நல்லதொரு தீர்வு. முன்பு நெஞ்சைப் பிளந்து இதைச் செய்தார்கள். இப்போது சர்ஜரியே தேவையில்லை. இந்த நவீன சிகிச்சைக்கு TAVR (Transcatheter Aortic Valve Replacement) என்று பெயர்.

ஸ்டென்ட் பொருத்துவது மாதிரியான சிகிச்சை இது. தொடை ரத்தக்குழாய் வழியாக மேல் தொடையில் சிறிய துளை போட்டு வளைகுழாய், வளைகம்பி, பலூன், செயற்கை வால்வு இணைந்த ஓர் அமைப்பை அங்குள்ள தமனி ரத்தக் குழாய்க்குள் நுழைத்து, மகா தமனிக்குக் கொண்டு செல்கிறார்கள். அது அயோடிக் வால்வைக் கடக்கும்போது, பலூனை விரித்து, பழுதான வால்வை நசுக்குகிறார்கள். இப்போது கிடைக்கிற இடத்தில் பலூனோடு இணைந்த செயற்கை வால்வைப் பொருத்துகிறார்கள். பிறகு பலூனையும் கம்பியையும் வெளியில்  எடுத்து விடுகிறார்கள். 10லிருந்து 20 ஆண்டுகளுக்கு இந்த வால்வு மீண்டும் சுருங்காமல் வேலை செய்யும். ஒரே நிபந்தனை, இதை யாருக்கு மேற்கொள்வது என்பதை சர்ஜன்தான் முடிவு செய்ய வேண்டும்.

வாசகர் கேள்விகள்

பிபி உள்ளவர்களுக்கு சோடியம் (சமையல் உப்பு) எதிரி என்றும் பொட்டாசியம் நண்பன் என்றும் சொல்கிறார்கள். எப்படி? பொட்டாசியம் உள்ள உணவுகள் என்னென்ன?
- ம.மகேந்திரன், சென்னை-28.

சமையல் உப்பில் சோடியம்  குளோரைடு உள்ளது. தினமும் இது 5 கிராமுக்கு மேல் உடலுக்குள் போகக்கூடாது. அப்படிப் போனால் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். காரணம், சிறுநீரகங்கள் இந்த அளவுக்குக் கீழ் உள்ள சோடியத்தை மட்டுமே சிறுநீரில் வெளியேற்றும். மீதியை ரத்தத்தில் விட்டுவிடும். உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்பவர்கள் ரத்தத்தில் சோடியம் அளவுக்கு மீறி இருக்கும். இது ரத்தக் குழாய்களுக்கு ஓர் அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

உப்பை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உடனடிப் பிரச்னை இது. அடுத்தகட்ட பாதிப்பு சிறுநீரகங்களில் ஆரம்பிக்கும். எப்படியெனில், அதீத சோடியம் சிறுநீரகத்தின் ரத்தக்குழாய்களுக்கும் அழுத்தம் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் சிறிது சிறிதாகப் பழுதாகத் தொடங்கும். ஒரு கட்டத்தில் செயலிழந்துவிடும். இப்படி சோடியம் நமக்கு எதிரி ஆகிறது.
 
பொட்டாசியம் அப்படியே சோடியத்துக்கு நேர் எதிர். ரத்தத்தில் உள்ள சோடியத்தையும் மற்றுமுள்ள தாது உப்புக்களையும் திசுக்களுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்திவிடும். இதனால் ரத்தக்குழாய்க்கும் சிறுநீரகத்துக்கும் சுமை குறைகிறது. ஆக, பொட்டாசியம் நமக்கு நண்பன் ஆகிறது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், மாம்பழம், உலர் பழங்கள், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி, கேரட், காளான், பீட்ரூட், முருங்கைக் கீரை, இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உண்டு. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர, ரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஓரளவுக்குத் தடுக்கலாம்.

‘டைப் ஏ பர்சனாலிட்டி’ (Type A personality) உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அபாயம் அதிகம் என்று படித்தேன். உண்மையா?
- ஏ.சந்துரு, திண்டிவனம்.

இது உண்மை என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இவ்வகை மனிதர்கள் பொதுவாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும், வலுவான போட்டி மனப்பான்மையிலும் இருப்பார்கள். டைம் மேனேஜ்மென்ட்டில் கறாராக இருப்பார்கள். இதில் கொஞ்சம் இடறினால்கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு கத்துவார்கள்.

பரபரப்பாக இருப்பார்கள். எந்நேரமும் ஒரு வகையான ஸ்ட்ரெஸ் இவர்களுக்குள் இருக்கும். இதுதான் இவர்களுக்கு மாரடைப்பை சீக்கிரத்தில் கொண்டுவந்து விடுகிறது. இதற்காக இவர்கள் தங்கள் சொந்த குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தினமும் முக்கால் மணி நேரம் தியானம், யோகாவுக்கு ஒதுக்கினால் போதும், ஹார்ட் அட்டாக் ஓரமாக ஒதுங்கிக்கொள்ளும்.

 (இன்னும் பேசுவோம்...)