டெங்குவுக்கு இருக்கு ஸ்பெஷல் இன்சூரன்ஸ்!



வரும்முன் காப்பதே சிறந்தது! ஆனால் நாம் எவ்வளவுதான்  முன் எச்சரிக்கையாக இருந்தாலும், சில நோய்களிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. நோய் ஒரு பக்கம் பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் பெரும் பிரச்னையாக நடுத்தர, அடித்தட்டுக் குடும்பங்களை அழுத்திக்கொண்டிருக்கிறது. நோயைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, செலவையாவது இன்சூரன்ஸ் எடுப்பதன் மூலம் கட்டுப்படுத்துவோம்.

இப்போது  தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல், பீதியைக் கிளப்பியுள்ளது. வெவ்வேறு பெயர் வைத்து டெங்குவை மறைக்க அரசு ஒரு பக்கம் முயற்சிக்க, இன்னொரு பக்கம் பாதிப்புகள் நின்றபாடில்லை. இந்த மாதிரியான கிரிட்டிக்கல் நோய்களுக்கென ஏதாவது பிரத்யேக இன்சூரன்ஸ் பாலிசிகள் இருக்கிறதா? நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம்.

‘‘டெங்கு காய்ச்சல் குறிப்பிட்ட காலத்தில்தான் வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில்தான் இந்த நோய் அதிகமாகப் பரவுகிறது. பொதுவாக ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி வைத்திருப்பவர்களுக்கு, அதே இன்சூரன்ஸ் திட்டத்தில் டெங்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது சாத்தியம். இருந்தபோதிலும் டெங்கு காய்ச்சலுக்கென்று தனிப்பட்ட சிறப்பு பாலிசி ஒன்று  இருக்கிறது. இப்போது அப்போலோ மூனிச் நிறுவனம் மட்டும்தான்  இந்தப் பாலிசியை வழங்குகிறது.

இந்தப் பாலிசியின் சிறப்பு என்னவென்று பார்த்தால், பிரீமியம் மிகவும் குறைவு. ஒரு லட்ச ரூபாய்க்கு கவரேஜ் எடுத்திருந்தால்கூட  ஆண்டுக்கு 600 ரூபாய்தான் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். மூன்று மாதக் குழந்தையிலிருந்து 65 வயது முதியவர் வரை எல்லோருக்கும் ஒரே பிரீமியத் தொகைதான். டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனை உட்பட அனைத்து வகையான டெஸ்ட்களுக்கும் ஆகிற செலவுகள், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்றபோது ஆன செலவுகள், இடையில் இந்த நோய் சம்பந்தமாக மருத்துவமனை சார்ந்த வேறு செலவுகள் ஆனாலும் கூட, அனைத்தையும் இந்த பாலிசி மூலம் கிளெய்ம் செய்துகொள்ள முடியும்.

கிளெய்ம் பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஒருநாளாவது மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம். குழந்தைகளுக்குத்தான் டெங்கு காய்ச்சல் எளிதில் தொற்றுகிறது. எனவே ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி இல்லாதவர்கள், பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமாவது இந்தப் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது’’ என்கிறார் அவர்.

3 மாதக் குழந்தையிலிருந்து 65 வயது முதியவர் வரைஒரே பிரீமியத் தொகை!

- த.சக்திவேல்