அனுபவம்



இரவு 11 மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கியது அந்த இளம் ஜோடி. தயக்கத்தோடு வாசலைத் தாண்டி ஹோட்டல் ரிசப்ஷனுக்குள் நுழைந்தார்கள். ‘‘சார்! ஒரு டபுள் ரூம் வேணும். கொஞ்சம் லேட்டானதில் ஊருக்குப் போற டிரெயினை மிஸ் பண்ணிட்டோம். காலையில கிளம்பிடுவோம்’’ என்றவர்களை சந்தேகத்துடன் பார்த்தான் ரிசப்ஷனிஸ்ட்.

‘இவங்களைப் பார்த்தால் புருஷன்-பொண்டாட்டி மாதிரி தெரியலை. தள்ளிக்கிட்டு வந்த கேஸ் மாதிரி இருக்கு. நகரில் கண்ணியமான ஹோட்டல் என பெயர் வாங்கிய இடம். இவர்களுக்கு ரூம் கொடுத்தால் ஏதும் பிரச்னையாகி விடுமோ’ என்று குழம்பினான். வந்தவன் அதற்குள், ‘‘ப்ரியா, உன் ஹேண்ட்பேக்கை கொடு’’ என வாங்கி, அதிலிருந்து பணத்தை எடுத்தபடி ‘‘எவ்வளவு சார் அட்வான்ஸ் தரணும்?’’ என்றான்.

ரிசப்ஷனிஸ்ட் தயக்கத்தோடு உள்ளே பார்க்க, தூரத்தில் அமர்ந்திருந்த ஹோட்டல் மேனேஜர் எழுந்து வந்து, ‘‘அந்த 307ம் நம்பர் ரூமை இவங்களுக்குக் கொடுங்க’’ என்றார். ரூம் பாய் வந்து அவர்கள் லக்கேஜை எடுத்துப் போனதும் மேனேஜர் சிரித்துக்கொண்டு மெதுவாக சொன்னார், ‘‘பயப்படாதே! இவங்க நிஜமான புருஷன் பொண்டாட்டிதான். கவனிச்சியா! மனைவியோட கைப்பையிலிருந்து உரிமையா பணத்தை எடுத்தான். தள்ளிக்கிட்டு வந்த கேஸ்னா பையில கை வைக்க முடியுமா?’’ மேனேஜரை ‘அனுபவசாலி’ என்று மனதில் பாராட்டினான் ரிசப்ஷனிஸ்ட்.

- உஷா மாத்ரு