நியூஸ் வே



* கள்ள நோட்டு அடிப்பவர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! கள்ள நாணயம்? டெல்லி போலீஸ் சமீபத்தில் இரண்டு பேரைக் கைது செய்த விவகாரம், நம்மில் எத்தனை பேரிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயமெல்லாம் கள்ள நாணயம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இந்த இருவரிடமும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களை போலீஸ் கைப்பற்றி இருக்கிறது. ஸ்பெஷலாக மெஷின் உருவாக்கி, இவர்கள் இதற்காக ஒரு தொழிற்சாலையே நடத்தி வந்துள்ளனர். ‘இதில் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்திருக்கும்’ என்பதுதான் போலீஸுக்கே விடை தெரியாத கேள்வி!

* ஒரு காந்தி சிலையால் ஆப்ரிக்க நாடான கானாவில் சர்ச்சை  எழுந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் அங்கு சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கானா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு காந்தி சிலையைத் திறந்து வைத்தார். ஆனால் ‘தென் ஆப்ரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி கறுப்பினத்தவருக்கு எதிராக செயல்பட்டார்’ என்று கூறி பேராசிரியர்களும் மாணவர்களும் காந்தி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அஞ்சும் அரசு, சிலையை அங்கிருந்து அகற்றி வேறு எங்காவது வைக்க உத்தேசிக்கிறது.