பிரிவும் பிரிவின் நிமித்தமும்



கவிதைக்காரர்கள் வீதி

நிறுத்தங்கள் கடந்த பின்னும்
நீளும் பயணம்.
கோர்த்திருந்த விரல்களை
நனைத்தபடி
விடாமல் துரத்தும் மழை.
கடைசிப் பயணத்தின்
கனமான மௌனம்.

ரயில் பெட்டிகளென
நீண்டுவிரியும் நினைவுகள்.
நினைவுகள் உடைத்து
விரல்கள் பிரித்து நீ
இறங்கும் வேளையில்,
கன்னம் இறங்கும்
கண்ணீர் மறைத்து
தொடர்கிறது மழை.

நிழல் தின்னும் இருளாய்
பிரிவின் நிமித்தம்
நினைவுகள் தின்று
செரிக்கிறது
என் வெறுமையின் பகல்.
ஒளிர்ந்து அணைகிறது
கைப்பேசி
நிரம்பிக் கிடக்கிறது
உள்பெட்டி
கணினியின்
கனம் கூட்டி
குவிந்து கிடக்கிறது
மின்னஞ்சல்
அத்துடன்
நினைவில் வழிகிறது
பிரிவின் வலி.

பிரிவொன்றும
பெரும் கொடுமையில்லை
ஆனால்,
மெல்ல மெல்ல
உயிரினை இறுக்குகிறது
உன்
மௌனத்தின் சரடு.

- ஸ்ரீதேவி மோகன்