வேகமாக உலகைச் சுற்றும் முதல் பெண்



27 வயதுப் பெண் தனியாக உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று வருவது சாத்தியமா? கடந்த ஜூலையில் தன் பயணத்தைத் துவக்கிய கஸன்ட்ரா டி பிகல், ‘வேகமாக உலகைச் சுற்றிய முதல் நபர்’ என்ற கின்னஸ் சாதனையை இன்னும் சில நாட்களில் படைத்து விடுவார். ‘மூன்று வருடங்கள், மூன்று மாதங்களுக்குள் இந்த உலகில் உள்ள அனைத்து இறையாண்மை நாடுகளுக்கும் போக வேண்டும்’ என்பதே இந்த அமெரிக்கப் பெண்ணின் லட்சியம். கடந்த 16 மாதங்களில் 180 நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

ஒவ்வொரு நாட்டிலும் 2 முதல் 5 நாட்கள் பயணம் செய்திருக்கிறார். ரயில்வே பிளாட்பார்ம் போல கிடைத்த இடங்களில் தங்கிப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலமாக கிடைத்த நண்பர்கள், சுற்றுலா நிறுவனங்கள் என உதவிகள் கிடைத்தன. 250 ஃபிளைட் டிக்கெட், 4 பாஸ்போர்ட், விசா நடைமுறைகள், உணவு, தங்குமிடம் என சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.  இன்னும் சில நாட்களில் மீதியிருக்கும் நாடுகளையும் சுற்றி விடுவார்.

‘‘வகை வகையான மனிதர்களைச் சந்தித்து விட்டேன். வகை வகையான உணவுகளை ருசித்துவிட்டேன். வகை வகையான இடங்களைப் பார்த்துவிட்டேன். யாருமே என்னை அந்நியமாகப் பார்க்கவில்லை. எல்லோருமே அமைதியாக வாழவே விரும்புகின்றனர். பிரச்னை எங்கிருந்து உருவாகிறது என்றுதான் தெரியவில்லை’’ என்று குழந்தையைப் போல சொல்கிறார் பிகல்.

- த.சக்திவேல்