ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 2

சுவரெழுத்து சுப்பையா பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர். ஆனாலும், அறிவாயுதத்தின் வீரியம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. மயிலாடுதுறையில் வசித்து வந்தாலும் அவருக்கென்று வீடோ, குடும்பமோ இருக்கவில்லை. கழகத் தொண்டர் ரெங்கசாமியின் டீக்கடையில் தங்கிக்கொண்டு அங்கே கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார். சதா சர்வ காலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார். உடனிருந்த தோழர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.

யார் சொல்லுக்கும் கட்டுப்படாத சுப்பையா, எம்.ஆர்.ராதா மீது நன்மதிப்பு கொண்டவர். எனவே, அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்பதால் அவர் மூலமும், ‘பேட்டை தாதா’ என்றழைக்கப்பட்ட முத்துப்பேட்டை தருமலிங்கத்தின் மூலமும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ‘பேட்டை தாதா’தான் ஒருகாலத்தில் மணலி கந்தசாமி போன்ற கம்யூனிஸ்ட் தோழர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி புரிந்தவர். அரசின் கெடுபிடிகளுக்கு இரையாகாமல் அவர்களின் புரட்சிகர வாழ்வுக்குத் துணை புரிந்தவர்.

அவருடைய பேச்சுக்கும் எம். ஆர்.ராதாவின் பேச்சுக்கும் இசைவார் என தோழர்கள் கருதியது போலவே சுப்பையாவும் ஒருகட்டத்தில் திருமணத்திற்கு ஒப்புதல் தந்திருந்தார். தோழர்களும் அவருக்காக நிதி திரட்டியிருக்கிறார்கள். கூரை வீடு, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் வாங்க அந்நிதியைப் பயன்படுத்தச் சொல்லி தந்திருக்கிறார்கள். ஆனால், சுப்பையாவோ அந்தத் தொகை முழுவதையும் பிரசாரத்துக்கு செலவழித்துவிட்டு கல்யாணத்திற்கு கல்தா கொடுத்திருக்கிறார்.

அவர் சுவரில் எழுதிக்கொண்டிருக்கையில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டாராம். அவரை அடிக்க வந்தால்கூட அடியை வாங்கிக்கொண்டே, எழுத நினைத்ததை எழுதி முடிப்பாராம். ஒருமுறை ஒரு பிராமணர் வீட்டுச் சுவரில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த வீட்டுக்காரர் குச்சியால் தட்டி ‘‘யாரைக் கேட்டு என் வீட்டு சுவரில் எழுதுகிறாய்’’ எனக் கேட்க, ‘‘யாரைக் கேட்டு ராமானுஜர் பிரசாரம் செய்தார்?’’ என்றிருக்கிறார்.

பிறிதொருமுறை நாகை புராட்டஸ்டன்ட் தேவாலய சுவரில் ‘தேவனின் ஆலயத்தை வியாபார ஸ்தலமாக்காதே’ என்ற பைபிள் வாசகத்தை ஒருபக்கமும், ‘கோயில் திருடர்களின் குகை’ என்ற காந்தியின் வாசகத்தை இன்னொரு பக்கமும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். விஷயமறிந்த வைதீகர்கள் கொதித்தெழ, பிரச்னை பெரிதாகிவிட்டதாம். ‘பைபிளில் சொல்லியிருப்பதுதானே... காந்தியால் எழுதப்பட்ட வாசகம்தானே’ என்று விவாதப் புரட்சி செய்து கழகத் தோழர்கள் அவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் முற்றாக வெளியேற பெரியார் நடத்திவந்த கருத்துப் புரட்சிக்கு சுப்பையா போன்றோர் உதவியிருக்கிறார்கள். குப்பைத் தொட்டியைக் காட்டி, ‘‘இதிலே எதையாவது எழுதுங்கள்’’ என்றால், ‘புராணங்களை இதிலே போடு’ என்று எழுதும் நெஞ்சுரத்தோடு சுப்பையா செயல்பட்டிருக்கிறார். எது பக்தி? எது பித்து? என்பதை உணர்ந்தவராக அவர் இருந்ததால்தான், ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்ற ராமலிங்க வள்ளலாரை ஆதரித்திருக்கிறார்.

அன்றைய காங்கிரஸ் பேச்சாளர்களில் சிலர் பெரியாரைத் தரக்குறைவாகப் பேசியபொழுது அவரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விவாதிக்கக் கூப்பிட்டிருக்கிறார். ‘முடியாது’ என்று முரண்டு பிடித்தவர்களோடு மோதவும் துணிந்திருக்கிறார். இன்றைக்குக்கூட நாம் தலைவர்கள் கொள்கையோடும், தொண்டர்கள் கொள்கைக்காகவும் வாழவேண்டும் என விரும்புகிறோம்.

அவ்வகையில், வரித்துக்கொண்ட கொள்கைக்காக வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்று எத்தனையோ சுப்பையாக்கள் தங்களை இழந்திருக்கிறார்கள். தியாக வாழ்வை மேற்கொண்ட அவர்களுக்கு மணிமண்டபங்களோ மகுடாபிஷேகங்களோ தேவையில்லை. குறைந்தபட்ச நினைவுகூரல். அதுகூட கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.

பெருமுயற்சி எடுத்து பெரியார் திராவிடக் கழகத் தோழர் வெ.ஆறுச்சாமி அவரைப் பற்றிய நூல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார். சுப்பையாவுடன் பழகிய தோழர்களின் நினைவுகளுடன் அவர் கைப்பட டைரிக் குறிப்புகளாக எழுதி வைத்திருந்த சிந்தனைகளும் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது. சுப்பையா தன் வாழ்வையே சுவர் எழுத்துக்காக அர்ப்பணித்தவர். புகைப்படம் எடுக்கக்கூட விரும்பாதவர். ‘‘எதற்கு புகைப்படம்? பின்னால் மாலை போடவா!’’ எனக் கேட்டு முகங்காட்ட மறுத்திருக்கிறார்.

உயரமான சுவர்களில் ஒற்றையாளாக ஏறி ஏணியிலிருந்து எத்தனையோ முறை கவிழ்ந்திருக்கிறார். ‘‘யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடாதா?’’ என்று தோழர்கள் கேட்டதற்கு, ‘‘ஆளுக்கொரு வேலை செய்தால்தான் அதிக வேலை செய்ய முடியும்’’ என்றிருக்கிறார். அப்படித்தான் சென்னையில் ஒருமுறை சுவர் விளம்பரம் செய்துகொண்டிருக்கையில் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைக் கைது செய்தவர்கள், விசாரிக்காமல் தார்ச்சட்டியைத் தலையில் கவிழ்த்திருக்கிறார்கள்.

யாரிடமும் எந்த உதவியும் கோர விரும்பாத சுப்பையா அமைதியாக இருந்திருக்கிறார். அதன் விளைவாக அவர் கண்பார்வை மங்கி இறுதியில் பார்வையே போய்விட்டது. அப்போதும்கூட ஒற்றைக் கண்ணால் தன்னுடைய சுவர் விளம்பரத்தைத் தொடர்ந்திருக்கிறார். பெரியார் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் மக்களை அறியாமை அழுக்கிலிருந்து மீட்டெடுக்க அவர் கொண்டிருந்த ஆவேசமும் அளப்பரியன.

ஏன் இத்தனைப் பாடுகளையும் ஒருவர் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்? எல்லோரையும் போல வாழ எண்ணாமல் எதையாவது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என எண்ணுகிறார்? பெரியாரின் தத்துவார்த்த கொள்கைகளை பிரசாரம் செய்வதே வாழ்நாள் கடமையாகக் கருத அவரை எது உந்தித் தள்ளியது? ‘இருக்கும் வரை பிறருக்கு உதவியாகவும், இறந்தபிறகு காக்கை குருவிக்கு இரையாகவும் இருங்கள்’ என்றார் பெரியார். அதை அட்சரம் பிசகாமல் செய்ய நினைத்தவர் சுப்பையா.

அதனால்தான், மயிலாடுதுறை ரயில் பாதையில் மரித்துக் கிடந்த அவர் உடலை காக்கை, குருவிகள் கொத்தித் தின்றன. கழகத் தோழர்களுக்குக்கூட செய்தி தாமதமாகவே தெரிந்திருக்கிறது. தோழர்கள் தகவலறிந்து போவதற்குள் ரயில்வே நிர்வாகமே அவரை அடக்கம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு கொள்கையைப் பற்றிக்கொண்டு உழைப்பவர், அந்தக் கொள்கை வெற்றி அடைகிறபோது அதற்கான பலனை எதிர்பார்ப்பது இயல்பு. பதவியாகவோ, பட்டமாகவோ அந்தப் பலனைப் பெறுவதில் தவறில்லை.

ஆனால் ‘பலனே தேவையில்லை’ என்று சொல்வதற்கு சிலரால்தான் முடியும். அவர்களே புரட்சியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தமிழகத்தின் உட்கிராமங்களில் இன்னமும் சுவரெழுத்து சுப்பையாக்கள் இருக்கிறார்கள். ‘கட்சி மாநாடு’ என்று அறிவித்ததும் வண்ணக் கரைசலை தூக்கு வாளியில் எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக தலைவர்களின் படங்களை வரைந்து வருகிறார்கள்.

எட்டாம் வகுப்பிற்கு போக இருந்த எனக்குள், சுப்பையாவைப் பற்றி சொன்னவர்கள் அண்ணன்கள்தான். வண்ண வண்ண வில்லைகளைப் பயன்படுத்தி ஓவியனாகும் வெறியோடு இருந்த எனக்கு, கருப்பு நிறத்தின் தேவையை உணர்த்தியவர்கள் அவர்களே. அவர்கள் இடைவிடாமல் சொல்வதைக் கேட்டு நானும் சுப்பையா ஆவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. ஆயுதம் தாங்கிப் போராடுவது மட்டுமல்ல புரட்சி. அறிவாயுத நெருப்பை ஏந்திப் பிரசாரம் செய்வதும் புரட்சிதான்.

‘சைக்கிள் ஓட்டும் பெண்கள், செந்தமிழ் நாட்டின் கண்கள்’ என்று 1960ல் சுப்பையா, பெண்கள் பள்ளிக்கூட வாசல்களில் எழுதினார். ‘பெண்களை தீய வழிகளில் செல்லத் தூண்டும் இத்தகைய வரிகளை எழுதக்கூடாது’ என அன்றைக்கு அவருக்கு எதிராக எழுந்தவர்கள் கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்களா, கல்பனா சாவ்லாக்களை!

தோழர்கள் தரும் பழைய டைரிகளில் தனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் குறித்து வைத்த சுப்பையா, அதை வாகான சுவர் கிடைக்கும்போதெல்லாம் தீட்டத் துணிந்திருக்கிறார். இறுதிவரை அவர் ஒரே வண்ணத்தையும் ஒரே எண்ணத்தையும் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார். எங்கேயும் எழுதப்பட்ட சிந்தனைக்குக் கீழே தன் பெயரை அவர் எழுதவில்லை.

அவருடையதாக அவர் எதையுமே உரிமை கொண்டாடவில்லை. அவரைக்கூட அவர் பொதுச்சொத்து போலவே கருதியிருக்கிறார். சமூகத்திற்கான நம்பிக்கைகளை விதைப்பதொன்றே வேலை என்றிருந்த அவர் பெயரை வரலாறு தவற விட்டிருக்கலாம்; தவிர்க்க வாய்ப்பில்லை. நம்புவோம். நாளையோ, நாளை மறுநாளோ புரட்சி வருவதற்காக மேலும் சில சுப்பையாக்கள் சுவர்களிலும் காகிதங்களிலும் எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்