மகர லக்னம் - சனி - புதன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 96

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கர்ம வினைகளுக்கு காரணமான சனியும், நுட்பமான அறிவிற்குரிய புதனும் சேர்ந்தால் பெரும் யோகங்கள் உண்டாகும். இவரைப் பார்த்த கணத்திலேயே எல்லோரும் இவரிடம் ஈர்ப்பு கொள்வார்கள். கவித்துவமான பேச்சால் எல்லோரையும் கவர்வார்கள்.

ஆறாம் அதிபதி மற்றும் பாக்யாதிபதியான புதன் நல்லவற்றையே செய்வார். சனி இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம். அதனால் மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவார்கள். உங்களைப் பார்த்தவுடனேயே மற்றவர்கள் உங்களிடம் எல்லா குறைகளையும் சொல்ல வேண்டுமென்று விரும்புவார்கள். எத்தனை நெருங்கிய நண்பர்களானாலும் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்பார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் சனியும், புதனும் நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மகர லக்னத்திலேயே-அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும், புதனும் சேர்க்கை பெற்றிருந்தால் இவர்களைச் சுற்றிலும் எப்போதும் நண்பர்கள் பட்டாளம் இருந்து கொண்டேயிருக்கும்.

தலைமைப் பொறுப்பை வகிக்கும் பக்குவத்தை சிறுவயதிலிருந்தே பழகிக் கொள்வார்கள். புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும் குடும்பத் தொழில், கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பார்கள். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மன்சாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே பிடிக்காது.

இரண்டாம் இடமான கும்பத்தில் சனியும், புதனும் சேர்ந்திருந்தால் ஆரம்பக் கல்வியில் சுமாராகப் படித்தாலும் உயர்கல்வியில் நல்ல தேர்ச்சியைப் பெறுவார்கள். செஸ், கேரம்போர்டு, ஷட்டில்காக் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துவார்கள். ஏதேனும் குறுகிய கால ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பார்கள்.

அதுதான் அவர்களுக்கு உதவும்படியாக அமையும். 24 வயதுக்குள் மற்ற எல்லோரையும் விட முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். உலகத்தின் 360 டிகிரியைப் பார்த்து விடுவார்கள். வாக்கு ஸ்தானாதிபதியாக சனி வருவதால் நறுக்குத் தெறித்தாற்போல பேசுவார்கள். மூன்றாம் இடமான மீனத்தில் சனியும், புதனும் சேர்க்கை பெற்றிருந்தால் காது மந்தத்தன்மை இருந்துவரும்.

போகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை தொட்டால் கடைசிவரை முயன்று சாதித்து விட்டுத்தான் வெளியே வருவார்கள். எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை கவனித்து கண்டுபிடிப்பார்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும், ஆறாமிடத்திற்கு அதிபதியாகவும் புதன் அமைவதால் தொடர்ந்து போராடுங்கள்.

மிகப்பெரிய மனிதர்களை கைக்குள் வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமலும் இருப்பார்கள். நான்காம் இடமான மேஷ ராசியில் சனியும், புதனும் சேர்க்கை பெற்றிருப்பதால் எந்த விஷயமானாலும் தாயாரிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுப்பார்கள். உங்களின் கட்டிட ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். இவர் உங்கள் ராசிநாதனான சனிக்கு பகைவராகவும் வருகிறார்.

அதனால், சொந்த வீட்டு ஆசை தாமதித்து நிறைவேறும் வாய்ப்பு அதிகம். வீட்டின் தலைவாசல் கிழக்கு, தென் கிழக்கு திசையைப் பார்த்தும், நீங்கள் வசிக்கும் பகுதி ஊரின் கிழக்குத் திசை நோக்கியும் இருந்தால் வளம் பெருகும். பூமிகாரனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே பூமியாக வாங்கிப் போடுவதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

ஐந்தாமிடமான ரிஷபத்தில் சனியும், புதனும் சேர்ந்திருப்பதால் உங்களின் வாரிசுகள் பெரியஅளவில் புகழ் பெற்று விளங்குவார்கள். குலதெய்வத்திற்கு கோயில் கட்டுவார்கள். மூதாதையர்கள் மீது பிரியத்தோடு இருந்து அவர்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே பழமை மாறாமல் வைத்துக் கொள்வார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக ரிஷபச் சுக்கிரன் வருகிறார்.

எல்லாமே பிள்ளைகளுக்காக என்று வாழ்வீர்கள். நம்பர் ஒன் கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். சுருண்ட முடி, அரிசிப் பல்லுடன் குழந்தை பாக்யம் அமையும். சிலருக்கு உங்களை விட அதிக உயரமான பிள்ளை பிறக்கும். உங்களது நிறுவனத்தை அல்லது தொழிற்சாலையை தங்கள் வாரிசு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள்.

உங்களின் குழந்தை ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் படிப்பு மட்டுமில்லாமல் உலக அறிவையும் சொல்லி வளர்ப்பீர்கள். ஆறாம் இடமான மிதுனத்தில் சனியும், சந்தினும் சேர்க்கை பெற்றால் தேவையற்ற ஆடம்பரத்தால் கடன் தொல்லையும் மிகும். மேலும் ஏதேனும் ஒரு நோய்வந்து படுத்தியபடி இருக்கும். எதிரிக்குரிய புதன் ஒன்பதாம் இடமான பாக்யாதிபதியாகவும் வருகிறார்.

அதனால், எதிரி உருவான உடனேதான் வாழ்க்கையே சீரியஸாகும். வித்தைக்காரனான புதன் ஆறாம் அதிபதியாக வருவதால் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்காமல் போகும். தாய்மாமன் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவார். அவர் நண்பனா, எதிரியா, உதவுபவரா என்றே தெரியாது. ஆனாலும், தாய்மாமனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்கள். தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும்.

ஏழாம் இடமான கடகத்தில் சனியும், புதனும் இருந்தால் நன்கு வசதியுள்ள, படித்த வாழ்க்கைத்துணை அமையும். இவர்களை விட அந்தஸ்தில் மேலேயுள்ளவர்களே வாழ்க்கைத் துணையாக வருவார்கள். எல்லாவற்றிலும் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். புகுந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள், நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்கள்.

மாமனார், மாமியாருக்குள் எப்போதும் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் அதை அதிகம் கவனிக்காமல் இருவரிடமும் பேசிக்கொண்டு ஒட்டியும், ஒட்டாமலும் இருந்து விடுவது நல்லது. திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய, வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கௌரவமான உத்யோகம் கிடைக்கும்.

எட்டாமிடமான சிம்மத்தில் சனியும், புதனும் இணைந்திருந்தால் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிறுசிறு தோல்விகளுக்கெல்லாம் முயற்சியை கைவிட்டு விடுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகமாக இருக்கும். எதையும் திட்டமிட்டால் உங்களுக்கு சரியாக வராது. புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். பிறமொழிகளை கற்று வைத்திருப்பார்கள். உயர் கல்விக்காகவோ, உத்யோகத்திற்காகவோ வெளிநாட்டிற்குச் செல்வார்கள்.

ஒன்பதாம் இடமான கன்னியில் சனியும், புதனும் சேர்க்கை பெற்றிருந்தால் தந்தை வழியில் சிறிய அளவாவது சொத்து இருப்பதை விரும்புவார்கள். ஊரில் இல்லாதபோதோ அல்லது தந்தையைப் பார்க்காத வரையிலும் நிறைய கேட்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். பார்த்த வுடன் சில விஷயங்கள் பேசிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். சமுதாயத்தில் மதிக்கத் தகுந்த இடத்தில் அமர்வார்கள்.

தர்ம ஸ்தாபனங்களைத் தொடங்கி அதன் மூலம் நிறைய சமுதாயப் பணியை செய்வார்கள். பத்தாம் இடமான துலா ராசியில் சனியும், புதனும் சேர்வதால் வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பார்கள்.

உத்யோக ஸ்தானத்திற்கு துலா சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தை தாங்கியிருப்பதாலுமே எப்போதும் வியாபார சிந்தனையோடு இருப்பார்கள். சுரங்கத்துறை, மருந்துக் கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பலதுறைகளில் கால் பதிப்பீர்கள்.

வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வார்கள். பதினோராம் இடமான விருச்சிக ராசியில் சனியும், புதனும் இணைவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

எப்போதுமே கொஞ்சம் விலகித்தான் இருப்பார்கள். மேலும், அவருக்கு நிறைய உதவுவார்கள். உங்களால்தான் அவர் அதிக பயனை அடைவார். வாசனைத் திரவியங்கள் மீது மோகமே உண்டு. நகரத்திலுள்ள முக்கிய கிளப் எல்லாவற்றிலும் உறுப்பினராக இருப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் சனியும், புதனும் இணைவதால் என்ன நல்லது செய்தாலும் எதுவும் வெளியில் தெரியாது.

இதனாலேயே இவர்கள் புலம்பியபடி இருப்பார்கள். முப்பது வயதுக்குள் பல பேரால் ஏமாற்றப்பட்டும், வீண்பழி சுமத்தப்பட்டும் இருப்பார்கள். தன்னுடைய ஜாதி, இனம். என்றெல்லாம் இல்லாமல் உறவினர்களிடையே வித்தியாசப்பட்டு நிற்பார்கள். சமூக எதிர் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்ந்து மோதல் வரும். சனியும் புதனும் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து எதிர்மறை பலன்களை அதிகமாகக் கொடுத்தால் மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் மாயூரநாதரையும், அபயாம்பிகையையும் தரிசியுங்கள். திருக்கோவிலானது அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்பக் கிரகம், அந்தராண மண்டபம், வசந்த மண்டபம், சுற்றுச்சுவருடன், நான்கு புறமும் வளாகங்களும், மாடவீதிகளும் கொண்டு அழகுற காட்சியளிக்கிறது.

வசந்த மண்டபத்தைக் கடந்து நந்தீஸ்வரரை வணங்கி உள்ளே சென்றால், கருவறையில் மாயூரநாதர், சிவலிங்கத் திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மயூரநாதரின் சந்நதிக்கு வடக்குப் புறத்தில் தனிச் சந்நதியில் நான்கு திருக்கரங்களுடன், அபயாம்பிகை அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி யளிக்கிறாள்.

கையில் கிளியும், அபய ஹஸ்தமும் கொண்டு கருணை ததும்பும் முகத்துடன் அன்னை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகுடன் காணப்படுகிறாள். அபயபிரதாம்பிகை, ஆங்சல் நாயகி, ஆங்சலை, மயிலம்மை போன்றவை அம்பாளின் வேறு பெயர்களாகும். நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது விதமான அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிப்பதும் சிறப்பான ஒன்றாகும்.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்