மகர லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கை



கிரகங்கள் தரும் யோகங்கள் - 101

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஒற்றுமையே வலிமை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்றவை அனைத்தும் கிரகங்களுக்கும் பொருந்தும். தனித்த கிரகம் பலன் தருவதைவிட இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் வாழ்க்கையின் அனைத்து கோணங்களையும் ஒருவரை தரிசிக்க வைக்கும். சாதாரண வாழ்க்கையை வாழ்பவரை சாதனையாளராக மாற்றும். அசுரத்தனமாக காரியங்களை ஆற்ற வைக்கும்.

மகரமும், கும்பமும் சனியை அதிபதியாகக் கொண்ட ராசிகள். இதில் மகர ராசியை சர ராசி எனவும், கும்ப ராசியை ஸ்திர ராசி எனவும் அழைப்பர். மகர ராசியைச் சேர்ந்தவர்கள் சர வெடியைப் போல வெடிப்பார்கள். இது மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்தும். சனி எப்போதும் நீதிமான். முடிந்த வரையில் பேசிப் பார்ப்பார்கள். அதற்கும் பணியவில்லையெனில் அதிரடியாக இறங்குவார்கள். வாழ்க்கையில் அதலபாதாளத்திற்குச் சென்றாலும் மீண்டும் எழுந்து விடுவார்கள்.

சனி இரக்க சுபாவத்தை கொடுக்கும் கிரகம். இவர்களில் பெரும்பான்மையோர் மனித நேயத்தோடு செயல்படவே விரும்புவார்கள். ஆயிரம் யாகத்தைவிட ஒரு தியாகம் பெரிது என்பதில் திடநம்பிக்கை உள்ளவர்கள். செயற்கைத்தனமாக பேசுவது எப்போதுமே பிடிக்காது. ரகசியங்களை தேக்கி வைக்கத் தெரியாது. எங்கேனும் ஓரிடத்தில் கொட்டிவிடுவார்கள்.

கம்பீரமும், கருணையும் ஒருசேர இவர்களிடத்தில் சேர்ந்திருக்கும். எந்த விஷயத்தையுமே ஒப்புக்கொள்ளாத சந்தேகப் பார்வை இருந்து கொண்டேயிருக்கும். முதுக்குக்குப் பின்னால் பேசுவதும், முணுமுணுப்பதும் சுத்தமாக பிடிக்காது. நல்லதோ, கெட்டதோ நேரடியாக சொல்ல வேண்டும். வளங்கள் இருப்பதை வைத்து மகிழ்வதா, இழந்ததை நினைத்து வருந்துவதா என்று உள்ளுக்குள் போராடுவார்கள். இந்த மகர லக்னத்தில் பிறந்த சில பிரபலங்களின் ஜாதகத்தைப் பார்ப்போமா!

சுவாமி விவேகானந்தர் மகர லக்னத்தில் பிறந்தவர். பிரபல யோகாதிபதிபதிகளான புதனும், சுக்கிரனும் லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் உலகளவில் புகழ்பெற முடிந்தது. ‘மாலுடன் வள்ளி சேரின் மதிமிகப் பெருகும்’ என்பது ஜோதிட மொழி. பிரபல யோகாதிபதிகள் இருவரும் சேர்ந்து லக்ன கேந்திரம் பெற்றது விசேஷம். ஞானகாரகனான கேது ஐந்தில் அமைந்திருப்பது இன்னும் விசேஷமான அம்சம்.



பெரும் ஞானநிதியாகவே அவர் விளங்கினார். ஐந்துக்குரிய சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்திருப்பது ஆன்மிக தேடலில் சகலரையும் ஈடுபடுத்த முடிந்தது. லக்னாதிபதி சனியானது சப்தமாதிபதியான சந்திரனோடு சேர்ந்து ஒன்பதில் அமர்ந்ததால் மனைவி, மக்கள் என்று குடும்பத்தில் இல்லாது, தன்னை அறிதல், வேதாந்த ஞானம் என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. குடும்பமே வாழ்வின் லட்சியமல்ல, பற்றற்று, பிறவி யற்ற நிலையை அடைவதே வாழ்வின் குறிக்கோள் என்று இருக்க முடிந்திருக்கிறது.

பத்தாமிடத்தில் குருவும், நான்காமிடத்து செவ்வாயும் இணைவது என்பது குரு மங்கள யோகம். குரு தனக்கு எட்டில் மறைந்ததுடன் பாதகாதிபதி செவ்வாயின் பார்வை பெற்றதால்தான் இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போயிற்று. மூன்றாமிடம் படைப்பு ஸ்தானம். இந்த படைப்பு ஸ்தானாதி பதியான குரு பத்தில் இருப்பதாலேயே போதிப்பவராக இருக்க முடிந்தது. பல லட்சம் பேருக்கு குருவாக இருக்க முடிந்தது. சகல ஆன்மிக விஷயங்களையும் அநாயாசமாக வெளிப்படுத்த முடிந்தது.

எட்டாமிடத்திற்கு ஆத்மகாரகனாகிய சூரியன் பன்னிரெண்டில் இருப்பதாலேயே மிகுந்த சூட்சும சக்தியோடு திகழ முடிந்தது. இறைவனையும் இயற்கையையும் அறியும் ஆற்றல் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்தார். இரண்டாவதாக டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவின் ஜாதகத்தை பார்ப்போம். இவரின் ஜாதகத்தில் லக்னத்திலேயே செவ்வாய் உச்சம். இதனாலேயே விளையாட்டு வீராங்கனையாகத் திகழ முடிந்தது. சனி பதினொன்றில் இருந்து பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறது. டென்னிசுக்குரிய சனியானது, செவ்வாய் இடத்தில் அமர்ந்து பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லது.

இப்படி அமைந்ததால் எதையுமே குறி வைத்து அடிக்க முடிந்தது. முதல் நான்கு வீடுகளில் கிரகங்கள் அமைந்திருப்பது ராஜபோக வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பத்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் அமைந்திருப்பதால் நிறைய பதக்கங்களையும், அரசு விருதுகளையும் அள்ளித்தரும் அமைப்பாகும். இரண்டாயிரத்து பதினெட்டிலிருந்து இன்னும் நிறைய சாதிப்பார். களத்திரகாரகன் சுக்கிரன், அஷ்டமாதிபதி சூரியன் சேர்ந்திருப்பதால்தான் வேறு நாட்டவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாவதாக அனில் திருபாய் அம்பானியின் ஜாதகம். லக்னாதிபதியான சனி, 12ல் மறைந்து வக்கிரம் பெற்றிருக்கிறது. லக்னத்திற்கு முன்னும் பின்னும் கிரகங்கள் சூழ்ந்துள்ளன. அதனால்தான் பெரிய குடும்பத்தில் பிறந்திருக்கிறார். தந்தையின் ஸ்தானமான ஒன்பதில் ராகு இருப்பதாலும், ஒன்பதிற்கு உரியவர் அஷ்டமாதிபதியோடு சேர்ந்திருப்பதாலும் தந்தையின் சொத்துக்களைக் காப்பற்றத் தெரிந்தும் அவரைப் போல் இவரால் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தை அமைக்க முடியவில்லை.



தந்தையின் தொடர்ச்சியாக இருந்தாரே தவிர பெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்த முடியவில்லை. பிரபல யோகாதிபதியான சுக்கிரனுடன் சகோதரக்காரகன் செவ்வாய் கேந்திர பலம் பெற்றிருப்பதால் இவரைவிட இவரின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியால் பெரிய அளவில் வளர முடிந்திருக்கிறது. இவரைவிட யோகக்காரகனாக இருக்க முடிகிறது. குரு வக்ரம் பெற்று சூரியன், சந்திரன், புதனைப் பார்ப்பதால் கமர்ஷியலாக யோசிப்பார்கள். மிகுந்த மனசாட்சியுள்ளவர்களாக இருப்பார்கள்.  

நான்காவதாக நடிகர் சசி கபூர் ஜாதகம். இதில் குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறது. இதனாலேயே இந்த ஜாதகரை பிரபலமான வராகக் கொண்டு சென்றிருக்கிறது. முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் நான்கு கிரகங்கள் சேர்க்கை பெற்றிருப்பதால் பல்வேறு விதமான முயற்சிகளில், தான் சார்ந்த துறையில் ஈடுபட முடிந்தது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியான செவ்வாய், மேஷத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். குரு வீட்டில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருப்பதால் எப்போதும் ஏதேனும் வித்தியாசமாகவும், சோதனை முயற்சிகளையும் செய்து கொண்டேயிருந்தார். சமூக விழிப்புணர்வு சார்ந்தும் இவர் திரைத்துறையில் இயங்கியபடி இருந்தார். அடுத்ததாக இரண்டாம் ஹென்றி போர்டின் ஜாதகத்தை பார்ப்போம். இவர் ஆட்டோ மொபைல் துறையில் சிறப்பான பங்காற்றியுள்ளார்.

லக்னாதிபதி சனி ஏழாம் இடத்தில் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தன்னுடைய கடின உழைப்பால் பெரிய சாதனையைச் செய்ய முடிந்தது. நான்காம் இடமென்பது வாகன ஸ்தானம். வாகன ஸ்தானாதிபதி செவ்வாய் நீசமடைந்திருக்கிறார். பொதுவாக சனி - செவ்வாய் கடுமையான போராட்டங்களைத் தரும். இங்கு பாதகாதிபதியாக இருக்கும் செவ்வாய் நீசமாகி பரிவர்த்தனை யோகம் பெற்றதால் சாதனையாளராக முடிந்தது. சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.

நான்காம் இடத்தில் சந்திரன் அமர்ந்ததால் அந்தத் துறையில் நுணுக்கங்களைப் புகுத்தினார். குறைந்த எரிபொருளில் அதிக தூர பயணம், வாகனப் பாதுகாப்பு அம்சங்களையும், உறுதித் தன்மையையும் அதிகரிக்கச் செய்தார். பொதுவாகவே வாகனக்காரகன் சுக்கிரன், பாக்யாதி பதியான புதனுடன் சேர்ந்து தர்ம கர்மாதிபதியோகம் பெற்ற தனாலும், நீசபங்க ராஜயோகம் அடைந்ததாலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளை உலகம் முழுதும் நிர்மாணிக்க முடிந்தது.

லட்சக் கணக்கானவருக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் முடிந்தது. ஐந்தில் குரு இருப்பதால் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவராகவும் இருந்தார். மகர லக்னத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். இந்த மூன்று கிரகங்களும் உங்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் நன்மையையே செய்வார்கள். உங்களின் பிரபல யோகாதி பதியாக சுக்கிரன் வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார்.

எப்படியேனும் கலைத்துறை அங்கீகாரத்தை பெற முயற்சிப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலோ அல்லது பலவீனமாக இல்லாமல் இருந்தாலே போதும். மகர லக்னத்தின் ஆறாம் அதிபதி மற்றும் பாக்யாதிபதியான புதன் நல்லவற்றையே செய்வார். தாய்மாமன் மற்றும் தாய்வழிச் சொந்தங்கள் ஏதேனும் தொந்தரவு கொடுத்துவிட்டு விலகுவார்கள்.

புதன் செவ்வாயோடு சேர்ந்திருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலும் கொஞ்சம் அவஸ்தைகள் இருக்கும். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தாலோ, ஏழு அல்லது பத்தில் அமர்ந்திருந்தாலோ திருமண வாழ்வு நிம்மதியில்லாமல் இருக்கும். ஆனாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி புதன் உதவ முயற்சிப்பார்.

புதன் 4, 7ம் இடத்தில் அமர்ந்திருந்தால் சிரமப்படுவார்கள். குருவின் பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது. இது எதுவுமே வாய்ப்பில்லை எனில் குருவை சனி பார்த்துவிட்டால் போதுமானது. சொந்த ஜாதகத்தில் புதன் நன்றாக இருப்பின்
தந்தையாருடனான நட்பு நன்றாக இருக்கும். சனி பகவான் உங்களின் லக்னாதிபதியாகவும் இரண்டாம் இடமான தனாதிபதியாகவும் வருகிறார்.

இதனால் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், திடீரென்று கையில் காசே இல்லாதது போன்றிருக்கும். பணத்தைப் பொறுத்த வரைக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். தான் சார்ந்திருக்கும் சமூகமோ, மதமோ, இனமோ, பாரம்பரியத்தையோ கட்டிக்காக்கும்படியான விதத்தில் பிள்ளைகளை வளர்ப்பார்கள். உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான், அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார்.

உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். விபத்தில் காலை இழந்தவர்களுக்கு உதவுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். இவ்வாறு கூட்டு கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்டது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கக் கூடியது. எனவே, கூட்டு கிரகங்களின் எதிர்மறை தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, மகர லக்னக்காரர்கள் கடலுக்கு அருகேயுள்ள சிவாலயத்திற்குச் சென்று வருவது நல்லது.

சமுத்திரத்தையே தனது தீர்த்தமாகக் கொண்டிருக்கும் சிவாலயமெனில் அது இன்னும் உசிதம். அப்படிப்பட்ட தலமே வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயம். தமிழில் மறைக்காடர் என்று அழைப்பார்கள். வேதங்களே இங்குள்ள சிவனை பூஜித்து பேறு பெற்றவை. அம்மையின் திருப்பெயர் யாழைப்பழித்த மொழியம்மை என்பதாகும். யாழைப்பழித்த மொழியாளின் விழிகள் கருணையை மழையாகப் பொழிகின்றன. ‘மறைக்காடனே... யாழைப்பழித்த மொழியம்மையே’ என்று அப்பரும், சம்பந்தரும் அரற்றிக் கொண்டு உள்ளே நுழைந்த தலமிது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அமைந்திருக்கிறது.  

(கிரகங்கள் சுழலும்)  

ஓவியம்: மணியம் செல்வன்