குப்பை எல்லாம் போயாச்சு… சுத்தமான ஊராச்சு!



இந்தூரில் ஓர் அமைதிப் புரட்சி!

- ச.அன்பரசு


நகரங்கள் பொதுவாக எப்படி இருக்கும்? எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமும் நிறைந்து மாசும் தூசுமாக அசுத்தமாக இருக்கும் என்றுதான் இந்திய நகரங்களைப் பார்த்த யாரும் சொல்வார்கள். மக்கள்தொகைப் பெருக்கம், நாள்தோறும் நகரங்கள் நோக்கி சாரி சாரியாக மக்கள் படையெடுப்பது போன்றவை இதற்கு அடிப்படைக் காரணம் என்று நாம் சமாதானம் சொன்னாலும் இது எல்லாம் எப்போது மாறும் என்பதே நம் ஏக்கமாக இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று வழிகாட்டுகிறார் இந்தூரின் முனிசிபாலிடி கமிஷனர்.

இன்றைய தேதிக்கு இந்தூர் இந்தியாவின் க்ளீன் சிட்டிகளில் முதன்மையானது. எப்படி இது சாத்தியம் ஆனது? தனது புல்லட் வேக அதிரடி நடவடிக்கைகளால் இந்திய அளவில் சுகாதாரத்தில் 86வது இடத்தில் இருந்த இந்தூரை இரண்டே ஆண்டுகளில் முதலிடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் இதன் முனிசிபாலிட்டி கமிஷனர் மனிஷ் சிங். 2009ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த மனிஷ்சிங், மத்தியப் பிரதேசத்தின் போபால், இந்தூர் நகரங்களுக்கு முனிசிபல் கமிஷனர் ஆனதில் இருந்து தொடங்கியது இந்த அதிரடி.

இவர் பொறுப்பேற்ற காலத்தில் குப்பைகளை அகற்றும் தனியார் நிறுவனம் ஒன்று வேலை செய்ய சுணங்கியதால், நகரமெங்கும் குப்பைகள் பெருகின; புகார்கள் குவிந்தன. உடனே ஆக்‌ஷனில் இறங்கினார் கமிஷனர். நகரின் அசுத்தமான 1800 இடங்களுக்கு ஸ்கெட்ச் போட்டவர், 400 அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி கொடுத்து நேரடியாக அந்த ஸ்பாட்டுகளை சுத்தம் செய்ய அனுப்பினார். தொடர்ந்து மனிஷ் நிகழ்த்தியது சுத்தத்துக்கான ஒரு போர் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் வேலையாக, நகரில் இருந்த 1,400 குப்பைத்தொட்டிகளை தயவு தாட்சண்யமின்றி அகற்றினார்.

தினசரி உருவாகும் 1,100 மெட்ரிக் டன் குப்பைகளை எங்கே கொட்டுவது? பலரும் திகைத்தபோது, இரு நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்களே வீட்டுக்கு வந்து குப்பைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என மக்கள் வயிற்றில் அமுதம் வார்த்தார் மனிஷ்சிங். இந்த சேவைக்கு மாதக் கட்டணம் ரூ.60. பிற நகரங்களின் சாலைகளில் தினசரி இருமுறை குப்பைகளை அகற்றுகிறார்கள். ஆனால், இந்தூரில் தினசரி மூன்று முறை தூய்மைப் பணி நடைபெறுகிறது. ‘‘குப்பைத் தொட்டியில் போடப்படும் குப்பைகள் நிரம்பி கீழே சிதறுவதால் நிறைய நோய்கள் உருவாகின்றன. மக்கள் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால், கழிவுகள் வெளியே சிதறி, ஈக்கள் உருவாகின்றன.

பின் நாய்கள், பசுக்கள் போன்றவை அந்தக் குப்பைகளை கிளறிச் சிதறடிக்கின்றன. இதனால், தொற்றுக்கள் பரவுவது எளிதாகிறது. எனவே வீட்டுக்கே வந்து குப்பைகளைப் பெறும் பிளானை அமலாக்கினோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு...’’ என்று உற்சாகமாகப் பேசும் மனிஷ்சிங், பிளாட்ஃபார்மில் பாதசாரிகளின் நலனுக்காக சிறிய குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். தன்னார்வ நிறுவனமான BASIX உட்பட 175 சிறு குழுக்கள் மூலமாக 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் இணைந்துள்ளார்கள்.

சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ரேடியோ, டி.வி, நாளிதழ் போன்ற ஊடகங்களில் உருவாக்குகிறார்கள். மேலும், நகரில் உள்ள 1.5 ச.மீ. சுவரில் சுகாதார ஸ்லோகன்கள் எழுதுவது, ஓவியம் வரைவது என நகரம் ‘பளிச்’ ஆனதற்கு நகர மேயர் மாலினி லக்ஷ்மண்சிங் கவுர் கொடுத்த ஆதரவும் முக்கியக் காரணம். பொது இடத்தில் குப்பை கொட்டினால் ஆன் தி ஸ்பாட் வரி என்பது இந்தூர் பாலிசி. அரசியல் கட்சி மாநாடுகளுக்கும் முனிசிபாலிட்டி வரி உண்டு. கட்டாவிட்டால், அடுத்தநாள் தினசரியில் இந்தத் தகவல் கொட்டை எழுத்தில் வெளிவரும். இப்படிக் கடந்த 18 மாதங்களில் கிடைத்த அபாரதத் தொகை மட்டுமே ரூ.80 லட்சம்.

அரசின் புறம்போக்கில் உள்ள 8 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதோடு, திறந்தவெளி குப்பைக்கூடங்களாக இருந்த 850 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகளை எல்லாம் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு பஸ்ஸர் அழுத்தி ஆர்டர் போட்டு மனிஷ் சிங் சாதிக்கவில்லை. அதிகாலை 5.30க்கே சுறுசுறுப்பாக எழுபவர், அதிகாரிகள் குழு சூழ தினமும் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை ஸ்பாட் விசிட் செய்கிறார். பிறகுதான், அலுவலகம் சென்று சீட்டில் அமர்கிறார் இந்த டெடிகேட்டட் ஆபீஸர்.

சேகரிக்கப்படும் அனைத்துக் குப்பைகளும் மட்குபவை, மட்காதவை எனப் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள், என்ஜிஓ அமைப்பின் ரீசைக்கிள் மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு, சாலைப்பணி ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு விற்கப்படுகின்றன. ‘‘60 கோடி செலவில் உருவாக்கப்பட்ட திட்டம் இது. சாலையில் குப்பை போடுவது தவறு என்று மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருப்பது எங்கள் குழுவினரின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி!’’ எனப் பூரிப்பாகச் சொல்கிறார் மனிஷ்சிங். பிக் சல்யூட் சார்!

குவியும் கழிவுகள்!

உலகளவில் கழிவுகள் (தினசரி)  4.7 மில்லியன் டன்கள்.
2025ல் அதிகரிக்கும் கழிவுகள்  6 மில்லியன் டன்கள்.
இந்தியாவில் கழிவுகள் (தினசரி பெறப்படும் கழிவுகள்)  1,17,645 மெ.டன்கள்  83%, (மறுசுழற்சி  33,665 மெ.டன்கள் 29%)
உலகெங்கும் பிளாஸ்டிக் உற்பத்தி  300 மில்லியன் டன்கள் (ஓராண்டுக்கு).
பிளாஸ்டிக் கழிவுகள் (தினசரி)  15,342 டன்கள்.
(Central Pollution Board of India 20152016, Center for Science and Environment, Council of Scientific and Industrial Research (CSIR))

சூப்பர் சுத்தம்!
சுகாதார நகரங்களில் முதலிடம் (434 நகரங்களில்)  இந்தூர் (மத்தியப்பிரதேசம்).
அசுத்த நகரங்கள்  கோண்டா (உ.பி), பூசாவல் (மகாராஷ்டிரா).
பிளாஸ்டிக் மறுசுழற்சி  ஜப்பான் (72.1%), ஐரோப்பா (48.3%), இந்தியா (65%), அமெரிக்கா (31%).
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்  13 மெட்ரிக் டன்கள் (ஓராண்டுக்கு இழப்பு 13 பில்லியன் டாலர்).
(Swachh Survekshan 2017, United Nations Environment Programme)