மீன லக்னம் - குரு - சூரியன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் - 113

சிவாம்சமாக விளங்கும் சூரியனும், ராஜ கிரகம் என்று குறிக்கப்படும் குருவும் ஒன்றாக சேரும் அமைப்பை சிவராஜ யோகம் என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அதிகாரப் பதவியும், ராஜதந்திரமும் உடையவர்களாக விளங்குவார்கள். கொஞ்சம் பக்குவமாக, முன்னுக்குப் பின்னாக என்ன நடக்கும் என்று யோசித்துத்தான் காரியத்தில் இறங்குவார்கள். ‘எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்’ என்பார்கள். எதிர்மறையான விஷயங்களைக் கூட வரட்டும் என்றிருப்பார்கள். வாழ்க்கைச் சூழ்நிலையால் தவறு செய்தாலும், ‘நியாயம்னு ஒண்ணு இருக்கு
இல்ல’ என்றெல்லாம் லக்னாதிபதியான குரு உள்ளுக்குள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்.

வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியத்திற்கு செலவிடுவார்கள். மீன லக்னக்காரர்களை எந்த பலவீனத்தைக் காட்டியும் சிக்க வைக்க முடியாது. மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குருவும் சூரியனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் எதற்கும் அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்கமாட்டார்கள். சரி என்று பட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துப் பேசுவார்கள்.

சூரியனும், குருவும் இணைந்திருப்பதால் ஆக்கும் குணமும் இருக்கும், அழிக்கும் குணமும் இருக்கும். ஆளுபவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான வழி வகைகளை வகுத்துக் கொடுப்பார்கள். தகுதியிருப்பவர்களை மட்டுமே தான் மதிப்பதாக காட்டிக் கொள்வார்கள். இரண்டாம் இடமான மேஷத்தில் குருவும் சூரியனும் நின்றால் படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு முக்கியமான பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதுமே நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். பள்ளிக் காலத்திலேயே டியூஷன் எடுத்து சம்பாதிப்பவர்களும் உண்டு.

இவர்களில் பெரும்பாலோர் சி.ஏ., ஐ.சி.டபுள்யு., ஏ.சி.எஸ் போன்ற படிப்பை படித்து பிரகாசமடைவார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல், எக்கனாமிக்ஸ் படிப்பில் நிபுணத்துவம் பெற்று சிறப்படைவார்கள். மெரைன் இன்ஜினியரிங், கேட்டரிங் டெக்னாலஜி படிப்பிற்கு முயற்சிக்கலாம். தனகாரகனான குரு இரண்டில் இருப்பதால் எப்போதும் பணப் பற்றாக்குறை இருக்காது. மூன்றாம் இடமான ரிஷபத்தில் குருவும் சூரியனும் இருந்தால் கருமமே கண்ணாயினார் என்பதுபோல எடுத்த காரியத்தை முடிக்கும் வரை வேறு விஷயத்தில் கவனம் திருப்ப மாட்டார்கள். எப்போதும், எங்கு சென்றாலும் உங்களுக்கு எதிரிகள் உண்டு.

இவர்களின் நெஞ்சுரம் பார்த்து பல சமயங்களில் மற்றவர்கள் மிரளுவார்கள். இளைய சகோதரர்கள் ஆதரவோடு இருப்பார்கள். சளைக்காது சகல காரியத்திலும் முயற்சித்தபடியே இருப்பார்கள். நான்காம் இடமான மிதுனத்தில் குருவும் சூரியனும் இருந்தால் திருமணத்திற்கு முன்பு இவர்கள் பெயரில் வீடோ, வீட்டுமனையோ வாங்காமல் இருப்பது நல்லது. கட்டிட ஸ்தானாதிபதியாக வரும் புதனே மனைவிக்குரிய கிரகமாகவும் வருவதால், நல்ல வீடு அமைந்தால் நல்ல மனைவி அமைய வாய்ப்பில்லாமல் போகும். அதனால் வாழ்க்கைத்துணை வந்த பிறகு வீட்டைப் பற்றி யோசியுங்கள். இவர்களுக்குத் தடையே சுற்றுப்புறச் சூழ்நிலைதான். ‘‘ரெண்டு வீடு தள்ளி குப்பைக்கூளமா இருக்கு. அங்க போய் எப்படி வாங்குறது’’ என்று தவிர்ப்பார்கள்.

நகரத்திற்கு அப்பால் மரங்கள் சூழ வீடு வாங்குவார்கள். மருத்துவமனை, காவல் நிலையம் போன்றவற்றுக்குப் பக்கத்தில் வீடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அமைந்தால் உடல்நலக் குறைவு, சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். வழிபாட்டு மன்றம், பஜனைக்கூடம், மடம், வங்கி, பிள்ளையார் கோயில் போன்றவற்றுக்கு அருகே இருந்தால் வீட்டில் வளம் கொழிக்கும். ஐந்தாமிடமான கடகத்தில் குருவும் சூரியனும் நின்றிருந்தால், இவர்களின் பிள்ளைகள் பாலைக் கொட்டினாலும், பாத்திரத்தை உடைத்தாலும் செயற்கையாக ஒரு அதட்டல் போட்டுவிட்டு ரசிப்பார்கள். இவர்களின் பூர்வ புண்ணியாதிபதியாக சந்திரன் வருவதால் பிள்ளைகள் இவர்களை விட சமயோசித புத்தி உள்ளவர்களாகவும், சிரித்தால் கன்னத்தில் குழி விழுமளவிற்கு அழகாகவும், புகழ்மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

காந்த புத்தியுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள். குரு பார்வை, குரு சேர்க்கை பெற்ற வளர்பிறைச் சந்திரன் என்றால் கேட்கவே வேண்டாம். பிள்ளைகள் உலகப் புகழடைவார்கள். ஆறாம் இடமான சிம்மத்தில் குருவும் சூரியனும் இருந்தால் கடன் அடைக்கும் வரையிலும் தூக்கமே வராது. ஆனால், கடன் வாங்குவது உங்களுக்கு நல்லது. தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இன்னும் உசிதமாகும். உடம்பு கதகதப்பாக இருந்தாலே மலேரியாவா... டைபாய்டா... என்ற அளவிற்கு சற்று மிகையாகவே பயப்படுவார்கள். வயிறு, தொண்டை, தலை போன்றவற்றில் ஏதேனும் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் உடனே காண்பிக்க வேண்டும்.

உங்கள் லக்னாதிபதியான குருவிற்கு சத்ரு ஸ்தானாதிபதியாக வரும் சூரியன் நட்பு கிரகம் ஆகும். எனவே, பிரச்னைகள் இல்லை என்றாலும், அமிர்தம் மிஞ்சினால் நஞ்சாகும் என்பதை நினைவில் வையுங்கள். பெரிய அளவில் அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டவர்களோடு வியாபாரங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. ஏழாம் இடமான கன்னியில் குருவும் சூரியனும் இருந்தால் திருமணம் தடைபட்டு முடியும். விரைந்து திருமணம் முடிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகக் கிடைக்கும். அதனால், பூரண குருபலன் உள்ள வரனாக தேர்ந்தெடுப்பது நல்லது. நாத்தனார், ஓரகத்தி, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி என்று எந்த நெருங்கிய உறவினர்களாலும் கூட தம்பதியரைப் பிரிக்க முடியாது. அடுத்தவர்கள் மத்தியில் கணவரை விட்டுக் கொடுக்காது பேசுவார்கள்.

உறவினர்கள் அல்லது நண்பர்களின் மத்தியில் ரகசியமான விஷயங்களை எவருக்கும் புரியாது பார்வை பரிபாஷையில் பரிமாறும் சாமர்த்தியம் இருக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டுவார்கள். எட்டாமிடமான துலா ராசியில் குருவும் சூரியனும் இடம் பெற்றிருந்தால் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டேயிருப்பார்கள். இவர்களிடம் நெருங்கிப் பழகவே பலரும் பயப்படுவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் காசு கையில் தங்காது. பூர்வீகத்தில் தாங்கள் வசித்த இடத்திற்கு மீண்டும் சென்று குடியேறக் கூடாது. தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருப்பது நல்லதாகும். ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குருவும் சூரியனும் இருந்தால் புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள்.

ஏதேனும், பெரிய பதவியில் இருந்து கொண்டேயிருப்பார்கள். அமைச்சராக சிறிது காலம் இருந்துவிட்டு நற்பெயர் எடுப்பார்கள். மாபெரும் செல்வந்தர்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வார்கள். அதை நோக்கியே திட்டமிட்டு உழைத்து முன்னேறியும் விடுவார்கள். பத்தாம் இடமான தனுசில் குருவும் சூரியனும் இடம் பெற்றிருந்தால் பேசிப்பேசி காரியத்தில் ஜெயிப்பவர்கள் இவர்கள்தான். அதனால், மார்க்கெட்டிங் துறையில் சாதிப்பார்கள். கான்ட்ராக்ட், வழக்கறிஞர், பொருளாதார நிபுணர், பெட்ரோல் பங்க், விளம்பர நிறுவனத்திற்கு ஆலோசகராகவும் இருப்பார்கள். எந்தத் துறையில் வேலைக்குச் சேர்ந்தாலும் உங்களை ‘டெரர்’ என்பார்கள். அனுமானிக்க இயலாத விஷயங்களைக் கூட சாதாரணமாக இவர்கள் வெளிப்படுத்துவார்கள். புத்தியின் வீர்யம் எவரும் பார்க்காத கோணத்தில் இருக்கும்.

வெகு சுலபத்தில் இதனால் அதிகாரப்பதவியில் அமர்ந்து விடுவார்கள். சட்டம், ஆடிட்டிங், வங்கி, பத்திரிகைத் துறை, சிட் பண்ட், கோயில் பூஜை செய்பவர், குடிநீர் வாரியம், பால் பண்ணை என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பார்கள். அதுவே வியாபாரமெனில், ஐஸ்க்ரீம் கடை, ஜூஸ் கடை, ஒப்பனை பொருட்கள் விற்பனை, தண்ணீர் ஊற்று கண்டுபிடித்தல், குறி சொல்பவர், தந்தையார், பாட்டனார் என்று பரம்பரையாக நடத்தி வந்த நெல், அரிசி மண்டி என்று சில வியாபாரங்களில் ஈடுபடும்போது நல்ல லாபம் கிட்டும். பதினோராம் இடமான மகர ராசியில் குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள்.

சம்பாதித்த பணத்தை சரியானபடி சேமிக்கவும் செய்வார்கள். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டுவார்கள். தனியாக கல்வி நிறுவனங்கள் வைத்தும் சம்பாதிப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான கும்ப ராசியில் குருவும் சூரியனும் அமர்ந்தால் வேலையை மாற்றிக் கொண்டும், வேலைக்கே போகாமலும் பொறுப்பற்று இருப்பார்கள். என் தகுதிக்கு யாரால் வேலை கொடுக்க முடியும் என்ற அளவிற்கு பேசுவார்கள். பலர் சூட்சும சக்தியோடு தொடர்பு வைத்திருப்பார்கள். பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவார்கள். பழைய கோயில்களைத் தேடித்தேடி ஓடுவார்கள். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்த அமைப்பு நற்பலன்களையே தரும்.

ஏனெனில், இரண்டு ராஜ கிரகங்கள் ஒன்று சேரும்போது அடிப்படை வாழ்வியலில் எந்த தொந்தரவும் இருக்காது. சில இடங்களில் நீசமானாலோ, பகைபெற்றாலோ மட்டுமே எதிர்மறை பலன்களைத் தரும். அப்போதெல்லாம் ஞானியரின் ஜீவசமாதியை வணங்கி வருதல் நன்று. அப்படிப்பட்ட ஞானியான திருவண்ணாமலை  சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதியை எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் வணங்கி வாருங்கள். அங்கேயே அமர்ந்து தியானித்தும் வாருங்கள். திருவண்ணாமலை-செங்கம் பாதையில் ரமணாஸ்ரமத்திற்கு அருகேயே இவருடைய ஜீவ சமாதியும் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்