வருகிறதா மூன்றாம் உலகப் போர்..?



தொடை தட்டும் அமெரிக்கா... மீசையை முறுக்கும் வடகொரியா... பின்னணியில் புன்னகைக்கும் ரஷ்யா...

அது சோவியத் ரஷ்யா சிதையாத காலம்… அமெரிக்காவும் ரஷ்யாவும் தொடை தட்டி பனிப்போரில் ஈடுபட்டிருந்தன. நெவாடாவில் தன்னுடைய விஞ்ஞானிகளைக் கொண்டு தீவிரமான அணு ஆயுத சோதனைகளை நடத்திக்கொண்டிருந்தது அமெரிக்கா. பிற்பாடு சோவியத் கூட்டமைப்பு சிதறியதால் உலக அரசியல் மாறியது.  அதன் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு 1992ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜூனியர் ஜார்ஜ் புஷ், நெவாடா அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்தினார். அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் வெளியேறினார்கள். அதன் பிறகு கைவிடப்பட்ட நிலமாக, ஆளரவமற்றுக் கிடந்தது நெவாடா.

ஆனால், இப்போது சூழல் அப்படி இல்லை. நிலவின் குழிகளாக நிறைந்து பாலைவனமாக நீளும் தெற்கு நெவாடா, இனியும் ஆளரவமற்று இருக்காது. காரணம், இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆக்ரோஷ உத்தரவு! கடந்த ஆண்டே ட்ரம்ப் அரசு, அணு ஆற்றல் துறையைத் தயார்படுத்த பச்சைக்கொடி காட்டிவிட்டது. அதோடு அதற்கான பட்ஜெட்டும் தயார் என்ற செய்தி மீடியாக்களில் கசிய, இன்னொரு அணு ஆயுதப் போரா? உலகப் போராக அது உருவெடுக்குமா... என அச்ச ஆரூடங்கள் தொடங்கிவிட்டன.

அமெரிக்காவும் அதிரடி எதிரிகளும்!
அமெரிக்கா ஜரூராக மிஸைல்களைத் தயாரித்தால்... அதன் ஆயுள் எதிரியான ரஷ்யாவின் புதின், வடகொரியாவின் கிம் ஜாங் உன், ஈரானின் அயதுல்லா அலி கமினேனி ஆகியோர் தேமேயென வேடிக்கை பார்ப்பார்களா என்ன? இப்போது, ரஷ்யாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை இடக்கையால் ஓரம் தள்ளிய ட்ரம்ப் சிறிய ரக ஏவுகணைகள் தயாரிக்க 1.2 ட்ரில்லியன் டாலர்களை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளார். ‘‘நமது அணு ஆயுதங்களை புதிதாக உருவாக்கி நவீனப்படுத்துவது அவசியம். எதிர்கால சவால்களைச் சமாளிக்க இந்த ஆயுதங்கள் தேவை.

பின்னாளில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அணு ஆயுதங்களை அழிக்கும் சூழல் வரலாம். ஆனால், இன்று அணு ஆயுதங்கள் தேவை!’’ என்று கடந்த ஜனவரி 30ம் தேதி ட்ரம்ப் பேசினார். கூடவே, 2010ம் ஆண்டு ஒபாமா ஆட்சியில் ரஷ்ய - அமெரிக்க நாடுகளுக்கு இடையே கையெழுத்தான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் ஒரு ராங் டீல் என்றவர், இந்தப் பேச்சுவார்த்தையை நடத்திய அமெரிக்க மாகாண செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனையும் தன் உரையில் வறுத்தெடுத்தார்.

‘‘அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம் உலக அளவில் டாப்பாக இருந்த அமெரிக்காவின் இடத்தைப் பறித்ததோடு ஆயுத வளர்ச்சியிலும் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இனி அந்த ஐடியா அமுலில் இருக்காது...’’ என்கிறார் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண்ட்ரூ வெபர். அமெரிக்காவின் இந்த நகர்வை சீன பாதுகாப்புத்துறை ‘பகுத்தறிவற்ற முடிவு’ என்று விமர்சிக்கிறது. ரஷ்ய அதிபர் புடினோ ‘இது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும் ஆபத்து’ என கூக்குரல் எழுப்புகிறார். இதை எல்லாம் பார்க்கும்போது, உலக நாடுகளிடையே சமாதானப் புறா பறக்கும் சூழல் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது.

ஆயுதங்கள் செய்வோம்!
உலக நாடுகள் நிர்ப்பந்தத்தினால் இதுவரை அணு ஆயுதங்களைக் கைவிட்டிருந்த அமெரிக்கா இந்த ஆண்டிலிருந்து நவீன ஏவுகணைகளை அப்டேட்டாகத் தயாரிக்கும் லட்சியத்தில் உள்ளது என Nuclear Posture Review (NPR) என்னும் பாதுகாப்புத்துறை அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. இதில் கடலிலிருந்து நகரங்களைத் தாக்கும், ராடாருக்குத் தண்ணி காட்டும் ஏவுகணைகள் தயாரிப்பும் அடக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் நாள் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த 29 நாடுகள் பங்கேற்ற ரகசியக் கூட்டத்தில் ஏவுகணை ஆராய்ச்சிக்கான அனுமதியைப் பாதுகாப்புத்துறைக்கு வழங்கினார் அதிபர் ட்ரம்ப். அதேவேளையில் 1987ம் ஆண்டு அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் மற்றும் ரஷ்யாவின் மிகைல் கோர்பசேவ் கூட்டாகச் செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை (INF) ரஷ்யா மீறிவிட்டது என்று குற்றஞ்சாட்டிய பென்டகன், அதற்கு ஆதாரமாக மேற்கு ரஷ்யாவில் உள்ள கபுஸ்தின் ராக்கெட் ஏவுதளத்தில் தயாரிக்கப்பட்ட SSC-8 ஏவுகணைகளைச் சுட்டிக்காட்டியது.

மேற்சொன்ன அக்ரிமென்ட் கையெழுத்தான காலத்தில் 5,503 கி.மீ பாயும் 2,600 அணு ஆயுதங்களை அமெரிக்காவும், ரஷ்யாவும் வைத்திருந்தன. இவை பாய்ந்து சென்று ஐரோப்பாவை பப்படமாக்க விரல்விட்டு பத்து வரை எண்ணினால் போதும். நியூ ஸ்டார்ட் ஆயுத ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளில் காலாவதியாக இருப்பதால், ட்ரம்ப்பின் தலைமையில் அமெரிக்கா, அணு ஆயுதங்களைச் செறிவூட்டத் தொடங்குவது விரைவிலேயே நடக்கும். ஐஎன்எஃப் அக்ரிமென்ட்டை ரஷ்யா பின்பற்றாதபோது, அமெரிக்கா எதிர்காலத்திலும் புதிய ஒப்பந்தத்தை ரஷ்யாவோடு செய்துகொள்ளாது.

ரெடி டூ அட்டாக்!
ரஷ்யா, RS-28 Sarmat எனும் கண்டம் தாண்டும் ஏவுகணையை நிலம், நீர், ஆகாய வழிகளில் ஏவுவதற்கான டிரில்லைத் தொடங்கிவிட்டது. உலகில் 93 சதவிகித அணு ஆயுதங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்தும்; மீதியை ஒன்பது நாடுகளும் வைத்திருக்கின்றன. 1986ம் ஆண்டில் 70 ஆயிரத்து 300 ஆக இருந்த அணு ஆயுதங்கள் அதன் பின்னர் பல்வேறு அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தங்களால் 14 ஆயிரத்து 550 ஆக சுருங்கின என்கிறது அமெரிக்க அறிவியலாளர்கள் சங்க (FAS) அறிக்கை. ‘‘இன்று அமெரிக்கா - ரஷ்யா கடந்து பல்வேறு நாடுகளும் நியூக்ளியர் ரேஸில் உள்ளன.

விதிகளை முறைப்படுத்தாதபோது அதன் விளைவுகளை உலகமே சந்திக்கும்...’’ என்கிறார் அறிவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஹன்ஸ் கிறிஸ்டென்சன்.  ட்ரம்ப் ஈரானை முறைத்தால் டெஹ்ரான் தனது நியூக்ளியர் ஆராய்ச்சியில் முழு முனைப்பாகும். ஈரானின் எதிரியான சவுதி அரேபியா, தனது அணு ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கினால் அது இந்தியாவுக்கு ஆபத்து. இதோடு ஆசியாவின் அராஜக ராஜாவான சீனா, ஜின் கிளாஸ் என்ற அணு ஆயுதக் கப்பலோடு ரெடி டூ அட்டாக் என முன்பே தயாராகி நிற்கிறது. அமெரிக்காவுக்கு சூப்பர் சவாலாக மல்லுக்கு நிற்கும் வடகொரியா இருபத்து மூன்று ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் பதினாறு டெஸ்ட்கள் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பின் நிகழ்ந்தவை.

வடகொரியாவின் வீராப்பு!
2006ம் ஆண்டில் முதன்முதலாக அணுகுண்டு தயாரித்த வடகொரியா கடந்தாண்டு நவம்பர் 28ம் தேதி சோதித்த Hwasong-15 ஏவுகணையின் தாக்குதல் தூரம் 13 ஆயிரம் கி.மீ. அதாவது வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்காவின் நியூயார்க் அல்லது வாஷிங்டனை ஒரு பட்டனைத் தட்டி பஸ்பமாக்க முடியும்.  அமெரிக்கா மற்றும் ஆதரவு நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தாங்கியும் வடகொரியா அட்வான்ஸ் ஏவுகணையை எப்படி உருவாக்குகிறது? இரவுகளில் மின்சாரம் இல்லாமல் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கே தடுமாறியபடி பிற நாடுகளை நம்பியுள்ள வடகொரியாவின் தைரியம் பலருக்கும் புதிர்தான்.

சிரியாவுக்கு தன் நியூக்ளியர் அறிவை விற்க ரெடியாகிவிட்ட கிம்முக்கு முழு ஆதரவு தருவது, ரஷ்யாதான் என்கிறார்கள். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும்படியாக, ‘‘தன்னை எதிரி நாட்டிடமிருந்து காத்துக் கொள்ள வடகொரியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஆயுதங்களைத் தயாரிப்பதுதான்...’’ என்று ரஷ்ய அதிபர் புடின் பேசி வருகிறார். பியோங்யாங் ஏரியாவில் ஏராளமாக யுரேனியம் உள்ளதால் ஆயுதங்களைத் தயாரிக்க பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் விஞ்ஞானிகளையும் வடகொரியா பயன்படுத்திக்கொள்கிறது.

தூண்டிவிடும் ரஷ்யா!
சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, அங்கும் உக்ரைனிலும் வேலையிழந்த இருபதாயிரத்துக்கும் மேலான விஞ்ஞானிகளை வடகொரியா அழைத்துக்கொண்டது.
‘‘சோவியத்தின் அணு ஆயுத ஞானம் கொண்ட விஞ்ஞானிகளுக்கு எங்கும் மதிப்புண்டு. அவர்கள் தங்கள் அறிவுக்கான நல்ல விலையைப் பெற்றிருப்பார்கள்...’’ என்கிறார் உக்ரைனுக்கான முன்னாள் அமெரிக்க தூதரான கார்லோஸ் பாஸ்கல். வடகொரியாவின் புதிய ஏவுகணைகள் பற்றிய போட்டோக்களைப் பார்க்கும்போது ரஷ்யாவின் 1960 கால RD-250 எஞ்சின் அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக் காட்டுவது கிழக்கு உக்ரைனிலுள்ள யூமாஸ் என்ற இடத்தில் 200 ஏவுகணை எஞ்சின்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை. பனிப்போருக்குப் பிறகு இங்கு ராக்கெட், ஏவுகணைகள் தயாரிக்கும் பணி நின்று போனதால் பல ஆட்கள் வெளியேறி விட்டனர். இதைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்டு வரும் ஏவுகணை எஞ்சின்கள் வடகொரியாவுக்கு கடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

‘‘வடகொரியா மட்டுமல்ல, பல நாடுகளிலும் ராக்கெட் செய்வதற்காக நாங்கள் உதவி வருகிறோம். இப்பணியில் எக்கச்சக்கமான பணம் கிடைக்கிறது...’’ என தொழிலாளர்களின் தலைவரான யூரி சிம்வோலோகோவ் கூறியதையும் -சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதும் இயற்பியல் விஞ்ஞானி அனடோலி ரூப்ட்சோவ் என்பவரை வடகொரியா பெய்ஜிங் மாநாட்டுக்கு அழைத்து பின்னர் தன் நாட்டில் பணியமர்த்திக் கொண்டதையும் - நினைவில் கொண்டால் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும்.

பாசத்தின் சீக்ரெட்!
யூரி இர்ஸ்னோவிச் கிம் என்ற பெயரில் வடகொரியா அதிபர் பிறந்து வளர்ந்ததே ரஷ்யாவிலுள்ள யாட்ஸ்கோ எனும் கிராமத்தில்தான்! கிம், புடினுடன் தன் நியூக்ளியர் கனவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். ஐ.நா. சபை வடகொரியாவை தடைகளால் தாக்கும்போது, மறைமுகமாக ஆதரித்து காப்பாற்றுவது ரஷ்யா மட்டுமே. 2000 ஆண்டில் புடின் ரஷ்ய அதிபரானதிலிருந்து வடகொரியாவுடன் அதிக நெருக்கம் காட்டிவருகிறார். கடந்த அக்டோபரில் ரஷ்யா, வடகொரியாவுக்கு இன்டர்நெட் வசதியையும் அளித்து சீன சார்பை புத்திசாலித்தனமாகக் குறைத்துள்ளது. மேலும் வடகொரியா கப்பல்களுக்கான எரிபொருளையும் ரஷ்யா வழங்கி வருகிறது.

‘‘இப்படியாக வடகொரியாவை தனது எதிரியின் எதிரியாக மாற்றி அமெரிக்காவை அலைக்கழிக்கிறது ரஷ்யா...’’ என்கிறார் முன்னாள் ரஷ்ய தூதரான ஜார்ஜி குனாட்ஸ். உலக நாடுகள் வடகொரிய பிரச்னையைப் பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் ரஷ்யா உக்ரைனை கைகாட்டு வதும்; உக்ரைன் ரஷ்யாவை கைகாட்டுவதும் வாடிக்கை. இதெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ‘மூன்றாம் உலகப் போர் உறுதி... முடிவாக வேண்டியது கூட்டணி மட்டுமே’ என்று அச்சப்படுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.           

- ச.அன்பரசு