புதிய தலைமுறை துறவிகள்!



அண்மையில் மும்பையில் சமண மதத்தைச் சேர்ந்த பதினாறு நபர்கள் புத்தம் புது துறவியாக தீக்‌ஷை பெற்றுள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 30தான். துறவியான அனைவருமே தொழிலில், கல்வியில், பணியில் என  அத்தனையிலும் சிறந்து விளங்குபவர்கள். டாப் பொசிஷனில் இருப்பவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஏன் தங்கள் பணியை, சொத்துக்களை விட்டு பிச்சைப்பாத்திரம் ஏந்த விரும்பினர்?மும்பையின்  புறநகரான போரிவலியில் அமைந்துள்ளது சிம்பொலி  கிரிக்கெட் மைதானம். விஐபி வீட்டுக் கல்யாணம் போல் சொகுசு  கார்களில் ஜிகுஜிகு சேலைகளில் முகம் மலர்ந்த சிரிப்புடன் பெண்கள் இறங்க ஆரம்பித்தார்கள்.

குளுமையான நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த ஷாமியானா பந்தலில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிப்பிடித்து  விளையாடத் தொடங்கினர். மெல்லியதாக ஒலிக்கும் இசை இதயத்தை வருடுகிறது.இந்த இடத்தில்தான் பதினாறு  துறவிகளின் வாழ்க்கை, புத்தம் புதிதாகத் தொடங்கியது. ஆண்களும், பெண்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு  அமர்ந்திருக்க... பண்டிட் மகராஜின் தலைமையில் தீக்‌ஷை பூஜை நடக்க ஆரம்பித்தது.

கேமரா ட்ரோன் ஒன்று நடக்கும் நிகழ்வுகளை இடைவெளியின்றி படம்பிடித்துக் கொண்டிருக்க... கூடியிருந்த பதினாறு  பேரின் உறவினர்களிடம் சோகமோ துக்கமோ மருந்துக்கும் இல்லை. இனம் புரியாத மகிழ்ச்சி மட்டுமே அவர்களது  முகங்களை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

ஒருமணிநேரம் நடந்த தீக் ஷைக்குப் பிறகு, பதினாறு பேரின் தலைகள் மழுங்க சிரைக்கப்பட்டன. அதன் பிறகு குளிக்க  அனுப்பப்பட்டார்கள்.இதுதான் அவர்களது கடைசி குளியல்.இதன் பிறகு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க நீரில்  நனைத்த ஸ்பாஞ்ஜுகளால் உடலை துடைத்துக் கொள்ள மட்டுமே முடியும்.
இப்போது அவர்கள் இளைஞர்கள் அல்ல; துறவிகள்!

துறவும் கடமையும்!

சமணத் துறவிகளில் திகம்பரர், ஸ்வேதாம்பரர் என இரு பிரிவுகள் உண்டு. திகம்பரர் பிரிவில் நிர்வாண சாமியார்களும்,  ஸ்வேதாம்பரர் பிரிவில் வெள்ளுடை சாமியார்களும் உண்டு. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? ஆண்களாகப் பிறந்தால்  மட்டுமே பெண்களுக்கு மோட்சம் என்பது திகம்பர மார்க்க கொள்கை. ஸ்வேதாம்பரர் மார்க்கம், பெண்களும் ஆண்களைப்  போல் லட்சியத்தில் உறுதியாக இருந்தால் அவர்களுக்கும் மோட்சம் உண்டு என துறவு வாழ்க்கைக்கு வாய்ப்பளிக்கிறது.

அகிம்சை, உண்மை, திருடாமை, பிரம்மச்சரியம், பற்றின்மை ஆகியவை இரு பிரிவுகளுக்குமான பொதுவானவை.  சமணத்தில் துறவு என்பது நினைத்ததுமே உடுத்திய ஆடையுடன் உறவுகளைப் பிரிந்து மரத்தடியில் அமர்வதல்ல.  பலரும் குடும்பத்திற்கான கடமைகளைச் செய்த பின்பே துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சாத்விகளுக்கு கவுரவம்!

கணவரின் அனுமதி பெற்று கிரித்திகா தனது ட்வின்ஸ் மகள்களோடு துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க இதிலுள்ள  பெண்களுக்கான சுதந்திரம், மரியாதை முக்கிய காரணம். தீக்‌ஷை கொடுக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சூழ்ந்திருக்கும்  பாதையில் நடந்து வர... உறவுகள் பரவசத்துடன் போட்டோ எடுத்து மகிழ்ச்சியுடன் கூச்சலிட... மெல்லிய  புன்முறுவலுடன் துறவிகள் தங்களுக்கான பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு கிண்ணம். சிறிய வெள்ளைநிற துணி. நடக்க கோல் ஒன்று. உடலை சுத்தப்படுத்தும் டஸ்டர் ஒன்று. இவையே  ஆயுள் முழுக்க துறவிகள் பயன்படுத்தப்போகும் பொருட்கள். ‘‘ஜெயின் சமூகத்தில் துறவியானவர்களில் பெர்க்கிலி,  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர்களும் உண்டு...’’ என்கிறார் மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  பிபின் ஜோஸி.

மோட்ச விதிகள் என்பதைத் தாண்டி பெண்களுக்கு ஸ்வேதாம்பரர் பிரிவில் சுதந்திரம் அதிகம். அதாவது, தொழில்  போன்றவற்றில் அல்ல; துறவு வாழ்வை ஏற்பதில். ஆண்டுதோறும் விரல் விட்டு எண்ணும்படி நடந்துவந்த ஜெயின்  சமூகத்தினரின் தீக்‌ஷை விழாக்களின் எண்ணிக்கை இப்போது கூடியுள்ளது. அதிலும் ஆண்களுக்கு இணையாக  பனிரெண்டாயிரம் பெண்கள் சாத்விகளாக - துறவிகளாக மாறியுள்ளது நவீனகாலத்தில் நிச்சயம் புதுமைதான்.

பெண்களுக்கு முன்னுரிமை!


‘‘இப்போதுவரை பதினாறாயிரம் துறவிகள் தீக்‌ஷை பெற்றுள்ளனர். இதில் இரண்டு சதவிகிதத்தினருக்கும்  குறைவானவர்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக துறவு வாழ்க்கையை ஏற்கும்  பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...’’ என்கிறார் ஜோஷி. சரி, துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து  விட்டோம். திடீரென ஜுரம், டைபாய்டு என்றால் துறவிகளை யார் கவனிப்பது?

இதற்காகவே ஜீடோ (Jain International Trade Organization) என்னும் தனி அமைப்பை நடத்தி  வருகிறது ஜெயின் சமூகம். நோய்களின் தன்மைக்கேற்ப ஆயிரங்களிலிருந்து கோடிகள் வரை செலவு செய்து  துறவிகளுக்கு பயபக்தியுடன் பணிவிடை செய்கிறது இவ்வமைப்பு.

‘‘மாயா என பெண்களை ஜெயின் சமூகம் குறிப்பிடுவதில்லை. மாறாக தனித்துவமாக அவர்களை அணுகுகிறது...’’  என்கிறார் பெண் துறவிகளைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவரும், ‘Escaping the world:  Women Renouncers’ என்ற நூலை எழுதியிருப்பவருமான மனிஷா சேதி.

பெண்களின் துறவு பருவத்திற்கு கோமல் என்று பெயர். பிற மதங்களைப் போலில்லாமல் ஜெயின் சமூகத்தில் பெண்கள்  கன்னியாஸ்திரீயாக, தானாக முன்வந்து மாறுவது பெரிய கவுரவம். இதன் மூலம் உயர்கல்வியும், இந்தியா முழுக்க  பயணிக்கும் வாய்ப்பும் பெண்களுக்கு கிடைக்கிறது என்பது மனிஷா சேதியின் கருத்து.

எட்டு வயதிலிருந்து சமணத்தில் தீக்‌ஷை வழங்கப்படுகிறது. ‘பற்றின்மையோடு வரும் அனைத்து சமூகத்தினருக்கும்  ஒரே வாசல்தான். இதில் இணைபவர்களுக்கு நாங்கள் தீக்‌ஷை தவிர வேறு எதுவும் வழங்குவதில்லை...’ என்கிறார்கள். இணையத்தில் தம் கொள்கைகளை விளக்கவும், செய்திகளைப் பகிரவும் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியே  விவாதக் குழுக்களையும் ஏற்படுத்தி உள்ளனர்.

சரி, நல்லவேலையிலிருந்து, சொகுசு வாழ்க்கையிலிருந்து திடீரென துறவியானால் எப்படியிருக்கும் என ஐஐடி  எஞ்சினியராக இருந்து, துறவியான முனிராஜிடம் கேட்டோம். ‘‘சிறிய வீட்டிலிருந்து மிக பிரமாண்ட பங்களாவில்  நுழைந்ததுபோல...’’ என தனது தீக்‌ஷை நாளை நினைவுகூர்கிறார்.

நவீன வாழ்க்கையில் என்னதான் பிரச்னை? ஏன் திடீரென துறவு முடிவு? ‘‘இன்றைய சமூகம் பல்வேறு ஆசைகள்,  தேவைகள் என மனிதனை இடையறாது ஏமாற்றுகிறது. உதாரணத்திற்கு, முன்பு நான் பிஸினசுக்காக விமானங்களில்  பதட்டத்தோடு அலைந்து திரிந்தேன். இப்போது வெறும்கால்களில் நடந்து சென்றாலும் மனதளவில் இறகுபோல  மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதுதான் பதில்...’’ என்கிறார்.

நியூஜென் துறவிகள்!

வர்ஷில் ஷா (17)
பனிரெண்டாம் வகுப்பில் 99% மார்க் எடுத்து சாதித்தவர். இன்று சுவிர்ய ரத்னா விஜய்ஜி மகராஜ் என்ற பெயரில்  துறவியாகிவிட்டார்.

மனாலி ரத்தோட் (24)
கோவை வர்த்தகரின் புதல்வி. இன்டீரியர் டிசைனர். 2013ம் ஆண்டு ஹைதராபாத்தில் தீக்‌ஷை எடுத்து துறவியானவர்.

நிஷா கபாஷி (29)
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஃபேஷன் வணிகர். பல முன்னணி ஃபேஷன் நிறுவனங்களில் பணியாற்றியவர்,  இந்தியா வந்து ஜெயின் தத்துவத்தில்ஆர்வமாகி, கன்னியாஸ்திரீயாகி இருக்கிறார்.

ஸ்மித் - அனாமிகா ரத்தோர்
நூறு கோடி சொத்துக்கள், மூன்று வயது குழந்தையைக் கைவிட்டு துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த தம்பதி.  முன்னாள் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள்.

இந்திய மக்கள்தொகை - 134,90,98,166
(தோராயமாக)


மதங்கள் - இந்து (80%), இஸ்லாம் (13%), கிறிஸ்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தம் (0.8%), சமணம் (0.4%).
கல்வியறிவு - தேசிய சராசரி - 73%. இதில் சமணம் - 94.9%, கிறிஸ்தவர்கள் - 84.5%, பௌத்தர்கள் - 81.3%,  சீக்கியர்கள் - 75.4%, இந்துகள் - 73.3%, இஸ்லாமியர்கள் - 68.5%(worldpopulationreview.com/2011  Census data)

- ச.அன்பரசு