இயற்கையோடு வாழ முற்பட்ட பலர் ஏன் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்?



‘ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ்’ (Anti-Oxidants) என்பதை ‘ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்’ என்பார்கள். அதாவது, உறுப்புகளும், திசுக்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடியவை என்று பொருள். வைட்டமின் ஏ, சி, இ போன்றவை சில சிறந்த ‘ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ்’ ஆக வேலை செய்கின்றன.  இந்த வைட்டமின்கள் தவிர பசலி, கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முலாம் பழம் போன்றவற்றில் அதிகமாக உள்ள ‘beta caroten’; கொய்யா, தக்காளி, தர்ப்பூசணி, பப்பாளி, மாங்காய் போன்றவற்றில் அதிகமாக உள்ள ‘Lycopene’;

பச்சை / மஞ்சள் நிறத்திலுள்ள காய்கறிகள், எல்லாவிதமான கீரைகள், முட்டை மஞ்சள் கரு இவைகளில் அதிகமாக உள்ள ‘Lutein’; காளான், நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, வெங்காயம், முழுக்கோதுமை, தீட்டாத அரிசி இவைகளில் அதிகமாக உள்ள ‘selenium’...இவை எல்லாமே சிறந்த ‘ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ்’தான். இவைகளை நாம் உண்ணும் போது, அவை ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ஸை சமன் செய்கின்றன.

ஒரு எலெக்ட்ரான் கூட கிடைக்காமல் உடலெங்கும் அலைந்து திரிந்து எல்லா திசுக்களிடமும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ‘ஃப்ரீ ரேடிகல்ஸு’க்கு ‘ஆண்டி ஆக்ஸிடென்ட்’ ஒரு எலெக்ட்ரானைக் கொடுத்து அதை நிலை நிறுத்துகிறது. இதைத்தான் மருத்துவர்களும், உடல்நல ஆலோசகர்களும் குறிப்பிடுகிறார்கள். நாமும் அவர்கள் பேச்சைக் கேட்டு நிறைய காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்கிறோம். சிலர் காய்கறிகளை பச்சையாகவும் உண்கிறார்கள்.

ஆனால், வேலியே பயிரை மேய்வதைப் போல நாம் மருந்தாக, ஆரோக்கியத்துக்காக மாற்றும் உணவு முறையே ஆபத்தாக முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் இல்லாத காய்கறிகளையும், பழங்களையும் சந்தையில் வாங்க முடியாது. எந்த பூச்சி மருந்துகளை அடிக்கலாம், எவ்வளவு அடிக்க வேண்டும், எப்படி அடிக்க வேண்டும், அடித்து எத்தனை நாள் கழித்து அறுவடை செய்ய வேண்டும்...

என்பதையெல்லாம் விவசாயிகள் அறிவதில்லை. இத்தகவல்கள் அவர்களுக்கு போய்ச் சேரும்படியான முயற்சி களையும் மருந்து தயாரிப்பாளரோ, அரசாங்கமோ, விவசாய சங்கங்களோ, விவசாயக் கல்லூரிகளோ எடுப்பதில்லை. ஆக, எல்லா காய்கறிகளுமே ஆபத்தான அளவுடன் கூடிய பூச்சி மருந்துக் கழிவுகளுடன் வருகின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. இப்படி வரும் கழிவுகளை நீக்க முடியுமா, பாதிப்பு குறைவாக இருக்கும்படி எப்படி சமைக்கலாம் என்பதற்கான தகவல்களோ, ஆராய்ச்சி முடிவுகளோ எதுவும் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை.

ஒருபக்கம் காய்கறிகளிலுள்ள ‘ஆண்டி ஆக்ஸிடென்ட்’ சத்துகள் ‘ஃப்ரீ ரேடிகல்ஸை’ சமாதானம் செய்து கொண்டிருக்க, அதே காய்கறி, பழங்களிலுள்ள பூச்சி மருந்துக் கழிவுகள், புதுப்புது ‘ஃப்ரீ ரேடிகல்ஸை’ உற்பத்தி செய்து சேம்சைட் கோல் போடுகின்றன! அதனால்தான் வெறும் காய்கறி, பழங்கள் மற்றும் சமைக்காத உணவு... என இயற்கையோடு இயைந்து வாழ முற்பட்ட பலரும் புற்றுநோய் போன்ற கடினமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்று மிக அதிகமாக நாம் காணும் மனச்சோர்வு, மன அழுத்தம், நிலைகொள்ளாதன்மை, குழந்தைகளின் ADHD (Attention deficit hyperactivity disorder), பொறுமை காக்க இயலாமை, எதிர்மறை சிந்தனைகள், பொதுச் சிந்தனை இல்லாமை, வெறித்தனம், குரூர சிந்தனைகள் போன்ற பல மனம் சம்பந்தப்பட்ட நிலைகள் சுற்றுச்சூழலி லுள்ள மாசு, உணவுகளில் உள்ள கழிவுகளால் தூண்டப்படுதலாலோ, தீவிரப்படுதலாலோ
ஏற்படுபவைதான்.

இதற்கான தீர்வாகத்தான் நாமே நம் உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறோம். இந்தப் புரிதலுடன் கீரை வளர்ப்பில் உள்ள சில நுணுக்கங்களை இப்போது தெரிந்துகொள்வோம். குறுகிய கால கீரைகளுக்கு ஆழமான மேல் மண் தேவையில்லை. முக்கால் அடி ஆழமான வடிகால் வசதியுள்ள மண் போதுமானது. ஆனால், நிறைய மக்கிய குப்பை போன்ற இயற்கை உரங்கள் நிறைந்த மண்ணாக இருக்க வேண்டும். கீரை விதையை 10 மடங்கு மணலுடன் கலந்து தெளித்து விதைக்க வேண்டும்.

இதனால் விதைகள் நெருக்கமாக முளைக்காமல் இருக்கும். முளைத்த பின் மிக நெருக்கமாக இருக்கும் செடிகளை அகற்றி விட வேண்டும். மண்ணிலுள்ள கிருமிகள் எளிதில் கீரையைத் தாக்கும். வணிக ரீதியில் வளர்ப்பவர்கள் விதைக்கு முன் குருணை மருந்தை மண்ணில் கலந்திருப்பார்கள். மற்றும் விதைகளை எறும்புகளிடமிருந்தும், எலி மற்றும் பறவைகளிடமிருந்தும் காப்பாற்ற லிண்டேன் போன்ற பவுடர்களை கரைகளில் இடுவார்கள்.

இயற்கை முறையில் நாம் வீட்டில் வளர்க்கும்போது தாராளமாக சுத்தமான வேப்பம் புண்ணாக்கை சேர்த்தால் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம் வீடுகளில் தொட்டிகளிலோ, தரையில் வெளிப்பக்கமோ வளர்க்கும் போது பாத்தி (Bed) முறையைத்தான் கடைப்பிடிப்போம். இந்த முறையில், விதையிட்டு அவை முளைத்து பின் இளம் செடியாக இருக்கும் வரை நீரைத் தெளித்து வளர்க்க வேண்டும். குழாயில் rain gun அல்லது shower head உபயோகப்படுத்துவது நல்லது.

வாளி / குவளை கொண்டு நீரை ஊற்றினால், விதைகள் இடம் மாறும், முளைவிட்ட விதைகளும், இளம் வேர்களும் சேதாரம் அடையும். விதைகள் முளைத்த பின் 15 நாட்கள் கழித்து உரமிடுதல் நல்லது. நன்கு கரைத்து ஓரிரு நாள் புளிக்க வைத்த கடலை அல்லது ஆமணக்கு புண்ணாக்கு சிறந்த உரம். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், கடைகளில் இப்போது எளிதாகக் கிடைக்கும் மண்புழு உரத்தை இடலாம் செடி பூப்பதற்கு முன் கீரையைப் பறித்துவிட வேண்டும். பூத்துவிட்டால் முற்ற விட்டு விதைகளை சேகரம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

(வளரும்)

தரமான பெரிய சிவப்பு கொய்யா கன்று எங்கே கிடைக்கும்?
- ராம், மயிலாடுதுறை.

மருங்குளம், தஞ்சாவூர் தோட்டத்தில் கேட்டுப்பார்க்கவும். மதுரை வாடிப்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதிகளிலுள்ள தனியார் நர்சரிகளிலும் கிடைக்கும்.

உலகின் சிறந்த மாம்பழம் பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் விளைகிறதா?
- எஸ்.வேதவள்ளி, திருச்சி.

உலக மாம்பழ உற்பத்தியில் 42% இந்தியாவில்தான் நடக்கிறது. பிலிப்பைன்ஸ் 3% மட்டுமே உற்பத்தி செய்கிறது. முதல் 10 இடங்களில் இந்தியா முதலிடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் இருக்கின்றன. உலகத்தில் மிகச் சிறந்த மாம்பழமாக இன்றும் இந்தியாவின் ‘அல்போன்ஸா’தான் திகழ்கிறது. பிலிப்பைன்ஸில் காராபாவ், பிகோ, கச்சாமிட்டா என்று மூன்று ரகங்கள் விளைகின்றன.

இந்த மூன்று ரகங்களுமே இந்தியாவிலிருந்து சோழர் காலத்தில் சென்றவை. மாம்பழம் அந்த நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. இதில் காராபாவ் உலகின் சிறந்த பழம் என்று அவர்களே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நத்தம், மதுரை, ராஜபாளையம் பகுதிகளில் விளையும் காசா லட்டு போன்றதுதான் இந்த மாம்பழம்.

வீட்டுத் தோட்டத்திலுள்ள ஒருசில தொட்டிகளில் என்ன செடி வைத்தாலும் அழுகி விடுகிறது. இதற்கு என்ன காரணம்?
- புள்ளிராஜா, மாமண்டூர்.

தொட்டிகளில் வடிகால் வசதி இருக்க வேண்டும். சில சமயங்களில், கீழேயுள்ள துளைகள் அடைத்துக் கொண்டிருக்கும். இதைத் தவிர்க்க துளைகளின் மேல் சிறிய கற்களை வைக்கலாம். அல்லது உடைந்த சில்லுகளைப் பரப்பி அதன் மேல் மண் கலவையை இடலாம். வருடத்துக்கு ஒருமுறை மண்ணை எடுத்துவிட்டு, மீண்டும் கிளறி விட்டு நிரப்ப வேண்டும்.

- மன்னர் மன்னன்