துபாய் ரிட்டர்ன்



அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு  எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில்  7 மிஸ்டு கால்கள்.

பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு  மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு  முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம். என்றைக்கும் போல  அன்றைக்கும் முட்டை பப்ஸுக்கான ராசியில்லை. நான் எந்த நேரத்தில் வந்தாலும் அது காலியாகிப் போவதின் மாயமென்னவோ தெரியவில்லை.

டீ சொல்லி நாலு ஸ்டேட்டஸ் ஏழு கமெண்ட் போட்ட பிறகுதான் ஷூட்டிங் வரும் சிம்புவைப் போல பொறுமையாக டீ வந்து சேரும். அப்படியான  இன்றைய தேநீருக்கு பின் வீட்டிற்குக் கிளம்பும் போது அலுவலகத்திலிருந்து போன். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றும் கூட  அலுவலகங்கள் பாவம் பார்ப்பதில்லை. சொன்னதெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் கதையாக வேலை செய்து  கொண்டிருக்கையில் நடுவில் வந்தது போன்கால். ‘துபாய் ஃப்ளைட்டுக்கு இன்னும் நேரமிருக்கே. அதுக்குள்ள எப்படி வந்திருப்பான்.

ஒருவேளை ஃப்ளைட் எந்த ஸ்டாப்பிலும் நிக்காம சீக்கிரம் வந்திருப்பானோ’ என்றெல்லாம் கற்பனை விரிய, எடுத்துப்பார்க்கையில் இன்னொரு வானரம்.  அவன்: பாம்பே ரயில் 8:30க்கு மச்சி. பேண்ட் ஆல்டர் கொடுத்தேன். வண்டியில்ல. வா மச்சி போய் வாங்கிட்டு வருவோம். நான்: இல்ல மச்சி  கொஞ்சம் வேலை இருக்கு. நடுவுல விட்டுட்டு வரமுடியாது. முடிச்சிட்டு வர முப்பது நிமிஷங்களாகும். முடிச்சுட்டு கால் பண்றேன். அவன்: உடனே  போகணும் மச்சி. நீ மட்டுந்தான் இருக்க...நான்: நான் வர்றது கஷ்டம். நீ வேணா ஓலா புக் பண்ணிக்க.

இதென்னடா திரைக்கதை வடிவத்திலிருக்கேன்னு பாக்கிறீங்களா. கிட்டத்தட்ட படத்தில் வரும் ஒரு சீன் மாதிரித்தான் இருந்தது அது. அப்படியே  ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மியூசிக்கை யாரேனும் பின்னணியில் இசைத்திருந்தாலோ ஆரோல் கோரலி என் பின்னால் பியானோ வாசித்திருந்தாலோ  இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். ஆனால், அப்படி வாசிப்பது போலத்தான் பட்டது. அதில் இளையராஜா வேறு ஆலாபனை பாடிக் கொண்டிருந்தார்.  ‘ஓலா புக் பண்ணிக்க’ என்று சொன்ன சில நிமிட நிசப்தத்துக்குப் பின், “சரி, நான் பாத்துக்குறேன், தேங்க்யூ...” என்ற பதில் வந்தது.

ஏன் மெனக்கெடவில்லை என்றால், மற்ற நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போது என் நினைவு அவனுக்கு எழவில்லை. அட்லீஸ்ட் கிளம்பும்  நாளின் காலையிலாவது ஒரு பேச்சுக்கு அழைத்திருக்க வேண்டும்! கேட்கும் உதவிகளுக்கு மறுக்காமல் சேவகம் செய்ய வேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்கள். நேரமில்லாமலோ, முடியாமலோ மறுத்த உதவிகளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து பின்னால் சுட்டிக் காட்டுகிறார்கள்.  மொத்த வேலையும் முடித்துவிட்டு, “மச்சி இப்பதான் வேலை முடிஞ்சுது. வண்டி கிடச்சுதா? வரவா?” என்ற கேள்விகளுக்கு ‘‘நான் ஆட்டோல  போயிட்டு இருக்கேன்.

THAAAAAANKS...” என பதில் வந்தது. கொஞ்சம் டர்ர்ர் என்றுதான் இருந்தது. திரும்பி வந்ததும் என்ன ஆட்டம் ஆடப் போகிறானோ. வேலைகள்  எல்லாம் முடித்தாயிற்று. விமான நிலையம் நோக்கி பயணம். கிளம்பும் போதே மணி 7:45. தோழிக்கு போன் செய்து நிலவரம் கேட்க, “பொறுமையா  வா. ஃப்ளைட்டு முப்பது நிமிசம் லேட்டு...” என்றாள். மனம் ஆனந்தக் கும்மி கொட்டி யது. டிராபிக்கை நம்பி கணக்கு போட்டுக்கொண்டு 8:15க்கு  வந்தடைந்தேன். இந்த முறை பதுங்கியோ, ஒளித்து வைத்தோ வண்டியை பார்க்கிங் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நன்றி மெட்ரோ ரயில் சேவைக்கு. இரண்டு மணி நேரத்திற்கு பதினைந்து ரூபாய் மட்டுமே. நிறுத்திவிட்டு ARRIVAL நோக்கி நடந்து கொண்டே  தோழிக்கு போனைத் தட்டினேன். ‘ARRIVAL போர்டு பக்கத்துல உக்காந்திருக்கோம்’ என கை காட்ட... அங்கு சென்று முகநூல் சண்டைகளில் எல்லாம்  என் பங்குக்கு வம்பிழுக்கத் தொடங்கியாயிற்று. பெண்கள் செய்யும் பகடிக்கா பஞ்சம்! பேச்சில் கழுவேற்றி புதைத்து விட்டு பார்க்கையில் மணி 8:30.  ஆகா, மணியாச்சே என்று ARRIVAL போர்டுக்கு போய் பார்த்தால் DELAYED 8:38 என்று மாறியது.

ரோட்டில்தான் டிராபிக் என சாவடிக்கிறார்கள் என்றால் விமானத்துக்குமா! உண்மையில் விமானங்களுக்கும் டிராபிக் உண்டு. பலமுறை விமானம்  தேவையில்லாமல் கத்திப்பாரா பாலத்தின் மேல் கார்ட்டூனில் வரும் ‘ஸ்வாட் கேட்ஸ்’ ஜெட் போல நின்று கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். அதே  போல் ஏர்போர்ட் வந்த விமானங்கள் சிலமுறை வேண்டுமென்றே திரும்பி மெரினா வரை போய்விட்டு மீண்டும் வரும். எல்லாம் தரை இறங்கும்  சிக்னலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நடக்கும் கூத்துகள். இந்த சிக்னல்கள் தொலைபேசி அலைவரிசையை தொந்தரவு செய்யக்கூடாது  என்பதற்காகத்தான் எல்லார் போனிலும் ‘FLIGHT MODE’ என்ற ஒன்று இருக்கிறது.

ஆனால் விமானத்தைத் தவிர எல்லா இடத்திலும் பயன்படுத்துகிறோம். சிலர் விமானத்தில் கூட FLIGHT MODE மாற்றுவதில்லை. விமானப்  பணிப்பெண்களின் வடிவழகை ரசிப்பதோடு சரி. INSTRUCTIONS எல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்துவிடும். மணி 8:38 லிருந்து 8:42 ஆனது.  ‘என்னடா இது பெட்ரோல் விலை மாதிரி நேரம் ஏறிக்கிட்டே போகுதே...’ என்ற கொதிப்பில் நீரை ஊற்றும் விதமாக விமானப் பணிப்பெண்களின்  வருகை. ‘தரமணி’ ஆண்ட்ரியாவின் இறுக்கிய பாவாடையின் அதே சாயல். கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தது போல இரத்தமும் சதையுமாய்  மேனியோடு ஒட்டிக் கொண்டபடியாய் படர்ந்திருந்தன அவர்களின் ஆடை.

இவர்களெல்லாம் பூமியில்தான் பிறக்கிறார்களா? அப்படியே பிறந்திருந்தாலும் ஏன் எங்கள் தெருப்பக்கங்களில் இவர்களைக் காண முடிவதில்லை?  வெளிநாட்டு விமானப் பணிப்பெண்களின் மொத்த வயதையும் கூட்டினால் வரும் மொத்த வயதுள்ள பணிப்பெண்களைக் கொண்டிருக்கும் இந்தியன்  ஏர்லைன்ஸ் ஏன் குப்பைத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் புரிகிறது. அவர்கள் உதட்டுச்சாயம் மிகவும் அளவானது. நம்மூர் பெண்கள்  அவர்களிடத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஒப்பனைகள் மற்றும் பஃர்பியூம் உட்பட. எந்த பெண்ணும் அதிக ஒப்பனையோ, தலை வலிக்கும்  அளவுக்கு அதிக பர்ஃபியூமோ போட்டுக் கொள்வதில்லை.

நம்மூர் பெண்களாவது பரவாயில்லை. இந்த மலேசியா, சிங்கப்பூர் தமிழச்சிகள் இன்னமும் மோசம். இங்கே ஒரு மாதத்தில் காலியாகும் அனைத்து  ஒப்பனைகளும் அங்கே ஒரே வாரத்தில் தீர்ந்துபோகும். அடுக்கு மேல் அடுக்காக அடுக்கிப் போடும் ஒப்பனைகள் “ப்பா...” என்று கத்திச் சொல்ல  வைத்துவிடும். அவர்கள் ஒருநாள் பூசும் லிப்ஸ்டிக்கை வழித்துப் பகிர்ந்தால் ஒரு தெருவுக்கே பூசலாம். இப்படியான சிந்தனை ஓட்டத்திற்கு நடுவில் ஏக்  மார் தோ துக்கடா ஸ்டைலில் ‘ஹமாப்கே ரெயின்கோட்’ ஃபேமிலி அருகில் வந்து நின்றது. சந்தன நிற சட்டை பிரவுன் நிற பேண்டுடன் அந்த மொழு  மொழு ஆசாமிக்கு அருகில் தலைக்கு மேல் சேலை சுற்றியிருந்த அந்த “மீரா” அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.

உச்சி நெற்றியில் இருக்கும் அவளின் குங்குமமும், சிடுசிடுவெனப் பார்க்கும் அவரின் பார்வையுமே சாட்சி. அடுத்தடுத்து வேறு நாட்டினரும் அவர்கள்  வந்த விமானத்தின் பணிப்பெண்களும் இரயில் பெட்டிகளைப்போல என்னைக் கடந்து கொண்டே இருந்தார்கள். அதீத வெறுப்பின் உச்சத்தில் தலை  குனியத் தொடங்கிய தருணத்தில் ‘8:30 துபாய் விமானம் தரையிறங்கியது’ என்று காதில் தேன் ஊற்றினாள் அந்த அறிவிப்பு தேவதை.  இந்தக்கூட்டத்தில் எங்கோ இளையராஜா எனக்காக பின்னணி வாசிப்பதாக உணர்ந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் கூட்டமாக கொஞ்சம் நபர்கள் வெளியேற அவர்களுக்கு இடையில் வந்து தொலைத்துவிட்டானோ என்ற தேடலில்  அவ்வப்போது குல்பிக்களையும், ஜாங்கிரிகளையும் பார்த்தவாறே தலை இடதுபுறமாகத் திரும்பும்போது உடனிருக்கும் ரசனை கெட்ட ஜென்மங்கள்  தலையைத் திருப்பி “டேய் அந்தப்பக்கமா பாருடா” என கடுப்பேத்துவது எனக்கு நரி ஊளையிடுவது போலக் கேட்கும். கிரிக்கெட்டில் ஃபீல்டிங்  மாற்றுவதைப் போல நாங்களும் வேறு வேறு பொசிஷனில் கண்களில் விளக்கெண்ணைய் ஊற்றி தேடிப்பார்த்துவிட்டோம். ம்ஹூம். அவன் வந்த  பாடில்லை. போனும் எடுக்கவில்லை. மணி வேறு ஒன்பதுக்கு மேல் ஆகிப்போனது.

எல்லோர் முகத்திலும் நம்பிக்கை தேய ஆரம்பித்தது. ஆர்வத்துடன் காத்திருந்த முகங்கள் எப்போடா வருவான் என்பதைத் தாண்டி, வரும்போது  வரட்டும் என்ற மனநிலையில் மாறிப்போய் அவரவர் செல்போனின் திரையினை சிணுங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியே வரும்  பணிப்பெண்களிடம் விசாரிக்கலாம் என்று பார்த்தால் அந்த பூம்பூம் மாட்டுக்குப் பிறந்த காக்கிச்சட்டை குரங்கு போக விடாமல் தடுத்துவிட்டது. மணி  இப்போது 9:30 கிட்டத்தட்ட ‘இவனையெல்லாம் எதுக்கு துபாய்க்கு போவ சொன்னான்’ என்னும் அளவுக்கு நண்பர்கள் கடுப்பாகி ‘‘நாம கிளம்புவோம்.

வந்ததும் நாயி அதுவே போன் பண்ணும்ல... அப்ப வச்சிக்குவோம்” என்ற புரட்சி போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில்  “அரே துபாய் ஃப்ளைட் ஆகயா” என்று பக்கத்தில் இருப்பவன் சொல்ல, “உங்க நண்பர் துபாய் ஃபிளைட்ல இருந்து வராரா” என்ற கேள்விக்கு ‘‘நண்பன்  இல்ல. என் தம்பி வரான்...” என்று பதில் வந்தது. கடகடவென அதிரும் விமானம் தரையைத் தொட்டதும் சாந்தமடைவது போல எங்கள் மனம்  அமைதியடைந்தது. “என்னங்க… டைமிங் கூட ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ண மாட்டேன்றாங்க. 8 மணி விமானத்துக்கு இவ்ளோ நேரமாக்கிட்டாங்க.  ச்சை...” என்றேன். அதற்கு அவர், “சார் என் தம்பி வந்தது 7 மணி விமானம்!” என்றார்.  

ஜி.ஏ.கெளதம்

சமத்துவ யூனிஃபார்ம்!

கென்யாவின் ஃப்ரெண்ட்ஸ் பள்ளியின் முதல்வர் அலெக்ஸ் மைனா கரியுகி, மாணவர்களின் யூனிஃபார்மை அணிந்து பள்ளிக்கு வருகிறார்.  ‘‘மாணவர்களின் சீருடையில் என்னைப் பார்ப்பவர்கள் ஜோக்கராக நினைத்தாலும் இவ்வுடை மாணவர்களுடன் என்னை இணைக்கிறது. முதல்வர்,  மாணவர் வித்தியாசம் தெரிவதில்லை. மேலும் உடையின் தரத்தையும் சரிபார்க்க முடிகிறது!’’ என புதுமை பதில் தருகிறார் அலெக்ஸ்.

பாம்புடன் ஒரு போர்!

தாய்லாந்தில் பாம்பிடம் சிக்கி உயிருக்குப் போராடும் நாய் வீடியோ ஃபேஸ்புக்கில் மாஸ் ஹிட். நாயை இரையாக்க அதன் உடலைச் சுற்றி வளைக்கும்  பாம்பை, சுற்றியுள்ள மனிதர்கள் அகற்றி நாயைக் காப்பாற்றும் திக் திக் காட்சிகளைக் கொண்ட வீடியோ அது. இறுதியில் பாம்பைக் கொன்று நாயை  உயிருடன் மீட்டுவிட்டார்கள்.

சிசிடிவி திருடர்!

சீனாவின் ஷாங்காயிலுள்ள ஜியான்சு பகுதியில் ஆபீசுக்கு திருட வந்தார் மர்ம மனிதர். உள்ளே இருந்த சிசிடிவி கேமரா ஈர்க்க, அதை திருடி  விற்காமல் தன் வீட்டில் பொருத்திவிட்டார். ஆனால், போலீஸ் திருடரை கேமராவும் காட்சியுமாக அரஸ்ட் செய்துவிட்டது. எப்படி? கேமராவின் ஐபி  அட்ரஸ் மாற்றாததால் திருடரின் ஆல் இன் ஆல் நடவடிக்கைகளும் கேமரா ஓனருக்கு டெலிகாஸ்ட் ஆனதுதான் காரணம்!

தவளைக்கு மேரேஜ்!

மத்தியப்பிரதேசத்தில் மழை பெய்யக்கோரி இரண்டு தவளைகளுக்கு கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்தது. விழாவை சிறப்பிக்க சீஃப் கெஸ்ட்டாக  அமைச்சர் லலிதா யாதவ் வந்திருந்தது ஹைலைட்! விவசாயிகளின் நலன்களுக்காக இக்கல்யாணத்தில் கலந்துகொண்டதாக பேட்டியளித்திருக்கிறார்  அமைச்சர்.