குயில்களும் கழுகுகளும்



ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களை நம்ம இசைக்குழுப் பாடகர்களும், பாடகிகளும் பாடிய நிகழ்ச்சியொன்று ரெண்டு நாளைக்கு முந்தி நடந்ததாக’ப்  பதிவில் கண்டிருந்தது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவாகியிருந்தன. எனக்குத் தெரியாமல் ஒரு எம்.எஸ்.வி. நிகழ்ச்சியா?

ஸ்ரீப்ரியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘போன வருஷம் முழுக்க நீங்க ஒரு புரோகிராமுக்கும் வரல, அதனால உங்கள இசைக்  குழுவுலயிருந்து சஸ்பெண்ட் பண்ணச் சொல்லி சேர்மனோட உத்தரவு...’’ என்று எகத்தாளமான பதில் வந்தது.‘‘எந்த சேர்மனோட உத்தரவு? இந்த வருஷத்து  சேர்மனா, இல்ல, போன வருஷத்து சேர்மனா?’’ ‘‘எப்படியும் வச்சிக்கலாம்!’’ என்று அலட்சியமான பதில் வந்தது.‘‘யார் சேர்மனா வந்தாலும் நான்தான்  செக்ரட்டரி. போன வருஷமும் இந்த வருஷமும் நான்தான் செக்ரட்டரி. எந்த சேர்மன் சொன்னாலும், அதைச் செய்ய வேண்டியது என் வேல...’’‘‘இதுக்கு  முன்னாடி எந்த ஸிங்கரையாவது இப்படி சஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்களா?’’‘‘இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம். ஞாபகமில்ல!’’‘‘மூணு வருஷத்துக்கு  முந்தி சுந்தர் சேர்மனாயிருந்தாரே... அந்த ஒரு வருஷமும் அவர் இசைத் துறைல தலையக் காட்டவே இல்ல. அவரையெல்லாம் யாரும் சஸ்பெண்ட்  பண்ணலியே?’’

‘‘அதப்பத்தி எனக்குத் தெரியாது...’’‘‘யாரக் கேட்டாத் தெரியும்?’’‘‘யோசிச்சு சொல்றேன். இப்ப ஃபோன வைச்சுடறேன்...’’ ‘‘கடைசிக் கேள்வி. இது  சஸ்பெண்ட் தானா, இல்ல டிஸ்மிஸ்ஸா?’’‘‘ அத ெபாறுத்திருந்துதான் பாக்கணும்!’’ பொறுத்திருந்தேன். மேலும் ஒரு வருடம் பொறுத்திருந்தேன். ‘ஆடிப்  பழகிய சரீரம், ஆடாதிருக்க இயலாது / பாடிப் பழகிய சாரீரம், பாடாதிருக்க முடியாது...’ என்று ‘வெள்ளி விழா’ படத்தில் வாணிஸ்ரீக்காக பி.சுசீலா  பாடியதற்கிணங்க, பாடிப் பழகிய சாரீரத்தைப் பாடாதிருக்கச் செய்ய ரொம்பப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. வீட்டில் யாரும் இல்லாத சமயம், தனிமையில்,  ஜன்னல் கதவுகளையெல்லாம் இறுகச் சாத்தி ரேடியோவோடும், டிவியோடும் உரக்கப் பாடுவது, சாலையில் காரோட்டிக் கொண்டு போகிறபோது ஸ்டீரி யோவோடு  சேர்ந்து பாடுவது, ஸ்கூட்டரில் போகிறபோது ஹெல்மெட்டுக்குள்ளே பாடிக் கொண்டே போவது... போன்ற சுய கச்சேரிகளால் சாரீரத்தைத் தேற்றவோ,  ஏமாற்றவோ முடியவில்லை.

ராஜசேகரனுடைய ஒரு வருட ஆட்சி முடிந்து இசைத் துறைக்குப் புதிய சேர்மன் நியமனம் பெற்ற பின்னும் என் ‘இடை நீக்கம்’ விலக்கிக் கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. நிரந்தரக் காரியதரிசியான ஸ்ரீப்ரியாவிடம் கேட்டுப் பார்ப்பதற்கும் வெறுப்பாயிருந்தது. சங்கத்தில்  அங்கத்தினராயிருந்த, ஸ்ரீப்ரியாவுடைய சிநேகிதி ஒருத்தியைத் தூது விட்டுப் பார்த்தேன். தூது சென்றவள் திரும்பி வந்தபோது கொச்சையான குற்றச்சாட்டைச்  சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தாள்.‘‘கானா க்ஹானாவுக்கு  நீங்க வருவீங்களாம், பாட்டுப் பாடுவீங்களாம், நல்லா சாப்புடுவீங்களாம், அப்புறம்  உங்க ஷேர் பணத்தைக் கொடுக்காம ஏமாத்திட்டு எஸ்கேப் ஆயிருவீங்களாம்...’’

இந்த அபாண்டத்தைக் கேட்டு ஷாக் ஆகிவிட்டேன் என்று சொன்னால், அது அண்டர் ஸ்டேட்மென்ட். நொறுங்கிப் போய்விட்டேன்.ஸ்ரீப்ரியா, தன் வாயிலிருந்து  உமிழ்ந்த நஞ்சல்ல இது என்பது புரிந்தது. அவளோடு சேர்ந்து, மூன்று வருட சேர்மன்களும், மற்ற மூத்த உறுப்பினர்களும் எனக்கெதிராகச் செய்த கூட்டுச்சதி இது  என்பது புரிந்தது. இவர்களுக்கெதிராக என்ன செய்தேன் என்றுதான் புரியவில்லை.இனிமையான இசைத்துறையில் அசிங்கமாக அரசியல் பண்ணுகிற இந்த  அபஸ்வர அஃரிணைகளோடு இணைந்தா இத்தனை வருடங்கள் ஒரு பாடகனாயிருந்திருக்கிறேன்? தூத்துக்குடியில் நானொரு மரியாதைக்குரிய மேடைப்  பாடகனாகக் கொடி கட்டிப்பறந்த வசந்த காலம் நினைவுக்கு வந்தது.ஜம்போ லைனர்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த அந்த இனிமையான நண்பர்களைப் பார்க்க  வேண்டும். Before it is too late, அந்த அருமையான இசைக் கலைஞர்களை உடனே போய் பார்த்தாக வேண்டும் என்கிற வேகம் பிறந்தது.

முத்துநகர் எக்ஸ்பிரஸில் உடனடியாக ஒரு டிக்கட் போட்டு, ரயிலேறி, தூத்துக்குடி ஸ்டேஷனில் போய் இறங்கியபோது ஸ்பிக் சிநேகிதன் கலைமணி என்னை  வரவேற்பதற்காக ஸ்டேஷனுக்கு வாகனத்தோடு வந்திருந்ததோடு தன் செலவிலேயே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எனக்காக அட்டகாசமான  அறையொன்றையும் முன்பதிவு செய்து வைத்திருந்ததைப் பார்த்தபோது, ஆரம்பமே அமோகமாகவும், அமர்க்களமாகவும் இருக்கிறது, நம்முடைய முயற்சி நிச்சயம்  வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை பிறந்தது.இசைத்துறை சிநேகிதர்களில், லிங்கம் ஒருவனுடைய ஃபோன் நம்பர் மட்டுந்தான் என்னிடம் இருந்தது. தூத்துக்குடிக்கு  நான் வருகிற தகவலை லிங்கத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தபடியால் அவன் என் ஹோட்டல் அறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்ந்து  விட்டான்.பல வருடங்கள் கழித்துப் பார்க்கிற லிங்கத்துடைய முகம் ரொம்ப மாறிவிட்டிருக்கிறது. மாறியிருந்தது முகம் மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணைக்  காதலித்து நிக்காஹ் செய்து கொண்டு மதம் மாறியும் விட்டான். இப்போது அவனுடைய பெயர் ஜெய்னுல் ஆபிதீன். இருபத்தாறாவது வயதில் கத்னா  பண்ணிக்கொண்ட கதையை வெட்கத்தோடும், சிரிப்போடும் சொன்னான்.

இந்த சிரிப்பு சங்கதியை என்னோடு பகிர்ந்து கொண்டவன், தொடர்ந்து ஒரு சோகச் செய்தியையும் இறக்கி வைத்தான். ஞானசேகரன் இப்போது  உயிரோடில்லையாம். டி.எம்.செளந்தரராஜனுடைய குரலாக வாழ்ந்தவன்.லிங்கத்திடம் துரையரசனுடைய மொபைல் எண் இருந்தது. அவனும் ஹோட்டல் அறைக்கு  வந்து சேர்ந்தான். துரையரசனிடம் காதர் பாட்சாவுடைய நம்பர் இருந்தது. காதர் பாட்சாவிடம் பார்த்திபனுடைய நம்பர் இருந்தது. பார்த்திபனிடம் ஜேம்ஸுடைய  நம்பர், ஜேம்ஸிடம் டெல்லஸுடைய நம்பர். இப்படியாய், மேலே குறிப்பிட்ட நண்பர்களோடு, எட்கர், செல்வின் என்று இசையாக இணைந்திருந்த சிநேகிதர்கள்  கணிசமாக வந்து குழுமிவிட்டார்கள், இருபது நிமிடத்துக்குள்ளே!

‘‘சின்னையா! எத்தன வருஷம் ஆச்சு...’’ என்று வந்த நண்பர்களெல்லாம் என்னைத் தழுவிக்கொண்டபோது, நெகிழ்ந்து போனேன். ரோஹித்தும், டிரம்மர் கிங்ஸ்லியும் சென்னையிலிருப்பதாகச் சொன்னார்கள். வில்ஃபர் எங்கேயிருக்கிறானென்று யாருக்குமே தெரியவில்லை. ஓசூரில்  குடியேறிவிட்ட வயலினிஸ்ட் திவாகரோடு மொபைலில் பேச முடிந்தது. விக்டர் தூத்துக்குடியில்தான் இருக்கிறான் என்றார்கள். மொபைலில் திரும்பத் திரும்ப  அழைத்தும், ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்றுதான் கம்ப்யூட்டர் குரல் வந்தது. சரி, நேரிலேயே போய்ப்பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று,  பார்த்திபனுடைய ஸ்கூட்டரில் தூவிபுரம் அஞ்சாவது தெருவுக்குப் போய், விக்டருடைய வீட்டையடைந்தால், அவன் வெளிநாட்டுக்குப் போயிருக்கிற தகவல்  கிடைத்தது.விக்டருடைய இந்த வீட்டுக்கு எத்தனைமுறை ஒத்திகைக்கு வந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தபோது மலரும் நினைவுகளில் மனசு லயித்து  வலித்தது. 

அதோடு, இன்னொரு அழகான நிகழ்வும் நினைவுக்கு வந்தது. கல்யாணமாகி புத்தம்புது மனைவியோடு இந்த விக்டருடைய வீட்டுக்கு வந்தபோது, அவன் அம்மா,  இந்த இஸ்லாமிய இளந்தம்பதிக்காக செய்த கிறிஸ்தவ ஜெபம் கூட என் விழிகளைப் பனிக்கச் செய்தது. அம்மாக்கள் எல்லோருமே கலப்படமில்லாத அன்பையும்,  பாசத்தையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட உத்தமிகளாய்த்தான் இருக்கிறார்கள். எங்கேயும், எப்போதும்! விக்டர் வெளிநாட்டுக்குப் போய்விட்டான். அந்த  அன்புத்தாய் இந்த உலகத்தை விட்டே போய்விட்டிருப்பார்கள்!ஹோட்டல் அறைக்கு நானும் பார்த்திபனும் திரும்பி வந்த பின்னால், எல்லோரும் கிளம்பிப்போய்,  தட்சிணமாற நாடார் மஹாஜன உணவு விடுதியில் மீன் குழம்பு சாப்பாட்டை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘‘காதர் பாட்சா, நீ ஒரு பாட்டுப் பாடுல. நீ  பாடினா, சாப்பாட்டு பில்லுக்குப் பணம் குடுக்க வேண்டாம்னு ஓனர் சொல்லிருவார்...’’ என்று ஒரு நேயர் விருப்பம் முன் வைக்கப்பட, ‘‘இப்ப நா பாடினா, ஓனர்  டபுள் பேமென்ட் கேட்டுப்புடுவார் மக்கா...’’ என்று காதர் பாட்சா திருப்பியடிக்க, அங்கே எழுந்த குபீர்ச் சிரிப்பில் பல பேருக்குப் புரையேறப் பார்த்தது.

பொடி நடையாய் எல்ேலாரும் ஃபோட்டோ பார்க் ஸ்டூடியோவுக்குப் போய் ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டபிறகு, திரும்பவும் ஹோட்டல் அறைக்கு வந்ததும்  டெல்லஸ், ஒரு கேள்வியை வைத்தான்.‘‘இத்தனை வருஷங்கழிச்சி தூத்துக்குடிக்கு வரணும், எங்களையெல்லாம் பார்க்கணும்னு திடீர்னு எப்படித்  தோணிச்சி ஒங்களுக்கு?’’‘‘ காரணமிருக்கு.  மெட்ராஸ்ல நா எங்க க்ளப் ஆர்க்கெஸ்ட்ரால பாடிட்டிருந்தேன்...’’‘‘அப்படியா! வெரிகுட் சின்னையா!’’‘‘பிரச்சன என்னன்னா, என் கொரல் சரியில்லன்னுட்டாங்க. ஆடிஷனுக்குப் போனா நா பாஸாக மாட்டேன்னு சக பாடகனொருத்தன் சாபம் குடுத்துட்டான்!’’‘‘அடப்பாவி மக்கா! சின்னையா, இப்ப நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க, நாங்க சொல்லுறோம் ஆடிஷன்ல நீங்க பாஸ் பண்ணுவீங்களா இல்லியான்னு...’’‘பாபி’ படத்தில் ஷைலேந்தர் சிங் பாடிய இந்திப் பாடலை அவர்களுக்காகப் பாடியபோது அறை நிசப்தமாயிருந்தது. பாடி முடித்த பின்னால், பல ஆதரவுக்  குரல்கள் எழுந்தன.

‘‘சின்னையா, அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் ஒங்க கொரல் கிண்ணுன்னு இருக்கு!’’‘‘ஒங்க மேல பொறாமைலதான் சின்னையா அவன் இப்டி  ஔறியிருக்கான்...’’‘‘இதுக்கே இப்படிக் கொதிக்கிறீங்களே, இதவிட மோசமான மேட்டர் ஒண்ணச் சொன்னேன்னா நீங்கல்லாம் துடிச்சிப் போயிருவீங்க..’’  என்கிற முன்னுரையோடு நான், கானா க்ஹானா கதையை அவர்களின் முன்னே அவிழ்த்து வைத்தவுடன், நான் எதிர்பார்த்திருந்த மாதிரியே, முன்னிலும்  அதிகமாக உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.‘‘சின்னையா, ஒங்களையா சொன்னாக...’’ ‘‘ஒங்கள கேவலமாப் பேசினவுக வாயில வசம்ப வச்சித்  தேக்க!’’‘‘நண்பர்களே, இந்தக் கேவலங்களையெல்லாம் பாக்கறப்ப ஒங்க ஞாபகம் வந்தது. மெட்ராஸ் மேட்டுக் குடியையும், மேன்மையான இந்தத்  தூத்துக்குடியையும் ஒப்பிட்டுப் பாத்தேன். நம்ம ஜம்போ லைனர்ஸ் ஆர்க்கெஸ்ட்ரால நீங்கல்லாம் என்ன ஒரு ராஜா மாதிரி வச்சிருந்தீங்க...’’ ‘‘தப்பு சின்னையா,  ராஜாவுக்கும் மேல, ஒங்கள நாங்க ஒரு இளவரசன் மாதிரி வச்சிருந்தோம். பிரின்ஸ்! நீங்கதான் சின்னையா எங்களுக்கெல்லாம் பிரின்ஸ் சார்மிங்!’’

‘‘ரொம்ப தாங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ். இப்ப நா மேட்டருக்கு வர்றேன். நா ஒரு பாடகன் மட்டுமல்ல, நா ஒரு எழுத்தாளன் கூடன்னு ஒங்களுக்குத் தெரியும். என்ன  கேவலப்படுத்தின மெட்ராஸ் இசைக்குழுவையும் என்ன இன்னும் கொண்டாடிட்டிருக்கிற தூத்துக்குடி இசை நண்பர்களையும் கம்ப்பேர் பண்ணி ஒரு  கதையெழுதணும், அதுக்காக  தூத்துக்குடிக்குப் போகணும், பழைய ஃப்ரெண்ட்ஸையெல்லாம் நேர்ல பாக்கணும்னு ஐடியா. இதோ தூத்துக்குடிக்கு வந்துட்டேன், ஒங்களயெல்லாரையும் பாத்துட்டேன். இனி கதையெழுத வேண்டியதுதான் பாக்கி!’’ ராத்திரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ்ஸில், பெர்த்தில் படுத்திருந்தபோது,  தூத்துக்குடி இசை நண்பர்கள் ஒவ்வொருவருடைய முகமும் மனத்திரையில் தோன்றிக் கொண்டிருந்தது. அவர்கள் எல்லோருடைய குரலும் காதுகளில் ரீங்கரித்துக்  கொண்டிருந்தது. பின்னணியில் கிட்டார், வயலின், அக்காடியன், பியானோ, தபேலா, ட்ரிப்பிள் காங்கோ, டிரம்ஸ், பேங்கோஸ் எல்லாம் ஆர்ப்பாட்டமாக இசைத்து,  ரயிலின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

ரயிலின் ஸைரன் ஒருமுறை ஓங்கி ஒலித்து ஓய்ந்தபோது, புதிதாக எனக்கொரு தெளிவு பிறந்திருந்தது. ஓ! இனி அடிக்கடி நான் தூத்துக்குடிக்கு வரலாம்.  இனிமையான இந்த இசை நண்பர்களைச் சந்திக்கலாம். மேடையில் பாடாவிட்டாலும்கூட, ஹோட்டல் அறைக்குள்ளே நாங்கள் பாடிக்கொள்ளலாம்.  பாடவேண்டுமென்பதுகூட இல்லை, பேசிக் கொண்டிருந்தாலே போதும்.இனிமையான ஓர் இசை சகாப்தம் முடிந்துபோனது என்று நினைத்திருந்தது தப்பு.  இனிமையான ஓர் இசை சகாப்தத்தின் இரண்டாம் அத்தியாயம், இன்றைக்கு ஆரம்பம்!

அன்புத்தொல்லை!


அரசியல் திறனாய்வாளரான பேராசிரியர் ஜெர்சி தர்கால்ஸ்கி தன் வீட்டில் போலந்தின் அரசியல் சீர்குலைவுகளை அடித்து உடைத்து டிவியில்  பேசிக்கொண்டிருந்தார். அனைவரும் சீரியசாக பார்த்த அந்த லைவ் ஷோவில் திடீரென பேராசிரியரின் பூனை லிசியோ அவரது தலைமீது குதித்து என்ட்ரி  கொடுக்க, உலகமே வயிறு குலுங்கச் சிரித்து ரிலாக்ஸானது.

டான்ஸுக்கு சிறை!


இரானைச் சேர்ந்த டீன்ஏஜ் பெண் மேடெஹ் ஹோஜப்ரி டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவுக்காக அரசு அவரைக் கைது செய்துள்ளது. மேலும்  அரசு டிவியில் அவரது குற்றத்தை ஹோஜப்ரி வாயாலே ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்தது.இதற்கு எதிராக உலகமெங்கும் திரண்ட நெட்டிசன்கள்,  டான்ஸ்  ஆடியதற்கு எதற்கு சிறை? என அரசைக் கண்டித்து பல்வேறு டான்ஸ் வீடியோக்களை அப்லோடு செய்து வருகின்றனர்.

காலை மீட்கும் போராட்டம்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் அவென்யூ ஸ்டேஷனின் மின் ரயிலிலிருந்து பெண் ஒருவர் இறங்கினார். ஆபீஸ் அவசரத்தில் ட்ரெயினுக்கும் பிளாட்பாரத்துக்கும்  இடையில் அவரது கால் மாட்டிக்கொண்டது. வலியில் அலறிய பெண்மணியை ட்ரெயினை ஐலசா சொல்லித் தள்ளி காப்பாற்றியுள்ளனர் சக பயணிகள்  என்பதுதான் நெகிழ்ச்சி. விரைவில் அப்பெண்மணிக்கு காலில் ஆபரேஷன் நடைபெறவிருக்கிறது.

பிரதமருக்கு கேக் ரெடி!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தன் தீமாக எடுத்த  துபாயைச் சேர்ந்த கதீஜா அம்மத், நவாஸ் சிறைக்குள் இருப்பதுபோல வரைந்து 3 கி.கி. கேக் ரெடி செய்து பிரபலமாகியுள்ளார். வெனிலா ஃப்ளேவரில் தயாரான  இந்த கேக்கின் விலை ரூ.5 ஆயிரத்து 616!