மண்ணில்லாமல் விவசாயம் செய்யலாம்!



ஹோம் அக்ரி -36

மன்னர் மன்னன்


ஆம். மண்ணில்லாமல் விவசாயம் செய்யலாம். இதை ஆங்கிலத்தில் Hydroponics, Aquaponics, Aeroponics என பல பெயர்களில்  வழிமுறைக்கு ஏற்றபடி குறிப்பிடுகிறார்கள்.நாம் Hydroponics மற்றும் Aqua ponics முறைகளைப் பற்றியும், இவைகளை எளிய முறையில்  வீட்டிலேயே எப்படிச் செய்யலாம், தோட்டத்தில் எப்படி சிறிய அளவில் செய்யமுடியும் என்பதைப் பற்றியும் பார்ப்போம். இந்த முறைகள் இயற்கைக்கு மாறானவையா, இதன் மூலம் விளையும் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா எனப் பலருக்கு  சந்தேகங்கள் இருக்கலாம். இதற்கான பதிலும், இந்த முறைகளை நம் விவசாயிகள் விரைவில் தெரிந்துகொண்டு அவற்றைச்  செயல்படுத்துவதற்கான அவசியத்தைப் பற்றியும் கீழேயுள்ள குறிப்புகள் உணர்த்தும்.

மண்ணை நம்பித்தான் இன்று எல்லாருமே விவசாயம் செய்கிறோம். மண்தான் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. விவசாயத்தின்  வெற்றி தோல்விக்கும் பெருமளவில் மண்ணின் வளம்தான் காரணமாக அமைகிறது. குறிப்பாக இயற்கை / அங்கக விவசாயமே  மண்வளத்தை மேம்படுத்துவதிலும், அதை காப்பதிலும்தான் இருக்கிறது. பயிர் வளர்ப்பில் மண்ணின் பங்கு என்ன? எந்தவிதத்தில், நிலம்  அல்லது மண் ஒரு தாவரத்தை ஆதரிக்கிறது? முதலாவதாக, தாவரத்தை தாங்குவதற்கான ஆதாரமாக மண் செயல்படுகிறது. வேர்கள்  தன்னுள் ஊடுருவி தாவரம் தன்னை ஸ்திரமாக நிறுத்திக் கொள்ள உதவுகிறது. இரண்டாவதாக, அதற்குத் தேவையான நீரை தன்னுள்  நிறுத்தி வேர்கள் உறிஞ்சிக்கொள்ள வழிவகுக்கிறது.

மூன்றாவதாக, பலவிதமான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் வாழ வழிவகுத்து தழைச்சத்தையும், மணிச்சத்தையும் தாவரம்  பெற்றுக்கொள்ள ஏதுவாகிறது. நான்காவதாக, தேவையான ஊட்டங்களையும், நுண்ணூட்டங்களையும் செடிகள் பெற்றுக்கொள்வதற்கான  ஆதாரமாக இருக்கிறது. இந்த ஊட்டங்கள் செடிகளின் மொத்த தேவையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கின்றன.இன்று விவசாயம்  வெற்றிகரமாக இல்லாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விவசாயியால் கட்டுப்படுத்தமுடியாத காரணிகள் பல  உற்பத்தியைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால்தான். நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய காரணி ஒன்று இருந்தால் கூட  தொழிற்சாலைகளில் நாம் எந்த உற்பத்தியையும் கையில் எடுப்பதில்லை. ஆனால், விவசாய உற்பத்தியில் கட்டுப்படுத்தும்  காரணிகளைவிட கட்டுப்படுத்தமுடியாத காரணிகளே அதிகம் இருக்கின்றன.

அவை:
* அதிகப்படியான அல்லது குறைவான மழை.
* அதிகப்படியான அல்லது குறைவான காற்று.
* ஒருசில வைரஸ் அல்லது பாக்டீரியாவால் வரும் நோய்கள்.
* கட்டுப்படுத்தமுடியாத பூச்சி
மற்றும் நோய் தாக்குதல்கள்.
* தட்ப வெப்பம்.
* இயற்கைச் சீற்றங்களால் மாறும் மண்வளம்.
* நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம்.
* சந்தை நிலவரங்கள்.

இந்த, காரணிகளில் மண் சார்ந்த காரணிகள் பல இருப்பதை நாம் பார்க்கிறோம். மண்ணில் பலவிதமான சத்துகள் நிறைந்திருந்தாலும் பல  சமயங்களில் தாவரத்தால் அந்த ஊட்டங்களை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. மண்ணில் கார அமிலத்தன்மையும், மண்ணில்  தேவையான நுண்ணுயிரிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த வேதியியல் மாற்றங்கள் நாம் இடும்  இராசயன உரங்கள் மற்றும் பெருமழை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.தாவரங்களின் வேர்கள், மண்ணுள் நீரைத்தேடி சென்று  அதனுள் கரைந்திருக்கும் ஊட்டங்களோடு உறிஞ்சி உட்கொள்கின்றன. மண் இல்லாவிட்டாலும் கூட இந்த ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ள  அவைகளால் முடியும்.

ஆக, தாவரங்களுக்குத் தேவையான ஊட்டங்களை துல்லியமான அளவில் நம்மால் நீரில் கரைத்துத் தரமுடியும் என்றால் மண்ணில்லாமல்  தாவரங்கள் வளர வாய்ப்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்!இப்படிச் செய்வதுதான் hydroponics மற்றும் aquaponics முறை. நீரானது  தாவரங்கள் தங்களை நிலையாக நிறுத்திக்கொள்ள உதவமுடியாது என்பதால் நாம் செடியின் கீழ்ப்பக்க தண்டுப் பகுதியை வேறு  ஆதாரங்கள் கொண்டு ஸ்திரமாக நிற்குமாறு பிடித்துவைக்கலாம்.சில ஆண்டுகளுக்குமுன் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்த இந்த முறை  இன்று வணிக ரீதியில் பல நாடுகளிலும் காய்கறி உற்பத்தி செய்வதற்கு பயன்படுகிறது. இந்தியாவிலும் சில நிறுவனங்களும் முற்போக்கு  விவசாயிகளும் ஏற்கனவே பல ஆண்டுகளாக இதை வணிக ரீதியில் காய்கறி உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். மிகவும் சிக்கலாக  இருந்த ஊட்டக்கரைசல் மற்றும் மின்னணு சார்ந்த ஒருசில கட்டுப்பாட்டு முறைகளால்தான் சிறிய விவசாயிகள் இதைச் செயல்படுத்த  முடிவதில்லை.

ஆனால், பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லாமல் எப்படி வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றலாம். பொதுவாக தேவைப்படும் பொருட்கள்:
*     பிளாஸ்டிக் தொட்டி.
*     தெர்மகோல் (Thermocol sheets).
*    வெர்மிகுலைட் (Vermiculite).
*     பெர்லைட் (Perlite).
*     தென்னை நார் கழிவு (Coir pith).
*     நிறைய துளையுடன் கூடிய சிறிய பிளாஸ்டிக் கப் (Net pot).
*     பிளாஸ்டிக் பைப்.
*     அக்வாரியம் பம்ப்.
*     அக்வாரியம் காற்றேற்றும் கருவி.
*     செடிகளுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மின் விளக்குகள்.
*     கார அமிலத்தன்மை கண்டுபிடிக்கும் மானி அல்லது பேப்பர் (pH paper or pH meter).
*     TDS மானி (TDS meter).
*     ஸ்பாஞ்ஜ்
*     நீளமான திரிகள்.
*     கட்டு கம்பி.
*     கயிறு

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லாப் பொருட்களும் எல்லா முறைகளுக்கும் தேவைப்படுவதில்லை. ஆனால், இவை hydroponic  முறைக்கு பொதுவாக தேவைப்படுபவை. இதுதவிர சில அடிப்படை கருவிகள் அறுக்க,  துளையிட, ஸ்க்ரூ பொருத்துதல் போன்ற  வேலைகளுக்குத் தேவைப்படும்.மிகக்குறைந்த தேவைகளோடு வீட்டில் ஆரம்பிக்கக்கூடிய எளிய முறையை முதலில் பார்க்கலாம். இது திரி  கொண்டு தானாகவே ஊட்டக்கரைசலை செடி உறிஞ்சிக்கொள்ளுமாறு அமைக்கும் முறை. இந்த முறையில் ஒரே அளவிலான இரண்டு  பிளாஸ்டிக் கலன்களை எடுத்துக் கொள்ளவும். இரண்டு ஒரு லிட்டர் பெயிண்ட் டப்பாவோ, சாப்பாடு பார்சல் வரும் டப்பாவோ, அல்லது  மளிகை சாமான் போட நாம் வாங்கும் டப்பாவாகவோ இருக்கலாம்.

ஒரு லிட்டர் அல்லது 2 லிட்டர் கலனாக எடுத்துக் கொள்ளவும். ஒரு கலனில் sterilise செய்யப்பட்ட தென்னை நார் கழிவை  நிரப்பிக்கொள்ளவும். மற்றொரு கலனின் மேல்மூடியில் 3 - 4 துளைகள் செய்து அதன் வழியே நன்றாக நீர் உறிஞ்சும் திரிகளை விடவும்.இந்த திரி கலனின் அடி வரை இருக்க வேண்டும். இந்த திரி தென்னை நார் கழிவு நிரப்பப்பட்ட கலனில் அடிப் பாகத்தின் வழியாக மேல்  வரை செல்லும் படி அமைக்க வேண்டும். பின்னர் கீழுள்ள கலனில் hydroponic ஊட்டக்கரைசலை ஊற்ற வேண்டும். இந்த நீர் நிரப்பிய  கலன் மேல் தென்னை நார் கலன் அமையும் படி வைக்க வேண்டும்.

இப்போது திரிகள் வழியாக நீர் மேலெழும்பி தென்னை நார் கழிவு ஈரமாகும். கீழே நீர் இருக்கும் வரை இது ஈரமாகமே இருக்கும். இந்த அமைப்பில் நம் கவனம் குறைவாக இருந்தாலே போதும். மேலேயுள்ள தென்னை நார் கழிவு கலனில் ஏதாவது ஒரு நாற்றை  வைக்கவும். இது தானாகவே எந்த உதவியுமின்றி வளர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் கீரை வகைகளை வளர்க்க முயலலாம். பின்னர்  காய்கறி பயிர்களை முயற்சி செய்யலாம். இந்தச் செடிகளுக்கு வெளிச்சம் அவசியம். அதனால் தெற்குப்புற ஜன்னல் அருகிலோ,  பால்கனியிலோ வைப்பது நல்லது.

(வளரும்)

Q & A Q & A Q & A Q & A Q & A Q & A Q & A

நித்தியகல்யாணி புற்று நோய்க்கு சிறந்த மருந்து என்று படித்தேன். அது உண்மையா?
- சோனா கீர்த்தி, மதுரவாயல்.

உண்மைதான். ஆனால், நேரடியாக இதை நாம் உபயோகப்படுத்த முடியாது. இந்தச் செடியின் இலை மற்றும் பூக்களிலிருக்கும்  ‘வின்பிளாஸ்டின்’ என்கிற ஒரு மூலப்பொருள் இரத்தப்புற்றுநோயைக் கட்டுப்படுத்த மருந்தாகப் பயன்படுகிறது. இதற்காக விருதுநகர்  மாவட்டத்தில் ஏராளமானோர் இதை மானாவாரியாக பயிரிடுகிறார்கள். இதன் தண்டும், வேரும் விஷத்தன்மை கொண்டவை. அதனால் ஆடு  மாடுகள் இதை தின்பதில்லை. இதன் இலை மற்றும்  பூவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.