அதிகாலை 2 மணிக்குப் பின்...



* சென்னை Pubs-6

அதிகாலை மணி இரண்டைத் தாண்டியதும், போதையும் தலைக்கேற, வெட்கமும் விட்டுப்போக, பெண்கள் ராஜ்ஜியம் ஆரம்பிப்பதை பார்க்க விசித்திரமாக இருக்கும். தன் காதலன் / கணவனுடன் வந்த பெண்கள்... அதுவரை வெட்கத்துடன் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த பெண்கள்... இப்போது அவனை இழுத்து உடலுடன் ஒட்டி உரசிக் கொண்டு ரொமான்ஸ் செய்வார்கள். அவன் ஏனோதானோ என்று கம்பனி கொடுத்துக் கொண்டு இருப்பான். அவள் ரசனையுடன் அவனை இழுத்து வைத்து ஆடுவாள். அவனுக்கு ஏனோ அது பிடிக்காது. கடமைக்கு ஆடுவான்.  ஆண்களுக்கு புதுப் பெண்கள்தான் இலக்கு! ஏற்கனவே இருக்கும் காதலி / மனைவி பெரிய த்ரில் அல்ல என்று அந்தத்  தருணம் உணர்த்தும்.இதற்கு நடுவில் அவ்வப்போது சில செலிபிரிட்டிகள் உள்ளே வந்து சீன் காட்டி விட்டு செல்வார்கள்.

பப் ஹாப்பிங்என்று சொல்லுவார்கள். நள்ளிரவுக்கு மேல் ஒவ்வொரு பப்பாகச் சென்று ஒரு ரவுண்ட் அடித்து விட்டு, சிலருக்கு ஹாய் சொல்லிவிட்டு, சில முத்தங்களைத் தெறிக்கவிட்டு, கடைசியில் போதையோடு யாருடனோ செட்டில் ஆவார்கள் இந்த செலிபிரிட்டிகள். கூட்டத்தின் மூடைப் பார்த்து, பப்பின் கடைசிப் பாடலைப் போடுவார்கள். அது பல பாடல்கள் கலந்து கட்டியதாக இருக்கும். இப்போது பேய் வந்தது போல ஆடுவார்கள். கடைசி வரை நிலைத்து நின்றதற்காக சிலருக்கு சில பெண்களின் கட்டிப்பிடித்தல்கள் கிடைக்கலாம். சில முத்தங்களும் கிடைக்கலாம். போதையின் கருணையில் கிடைக்கும் கடைசி லக்கி பிரைஸ் இவை!

இவ்வளவு செலவழித்த இவர்கள், பப்பை விட்டு வெளியேறி ஆட்டோக்காரரிடம் 20 ரூபாய்க்கு, அந்த போதையிலும் பேரம் பேசிக்கொண்டு இருப்பது அவர்கள் வாழ்வின் யதார்த்தத்திற்குள் ஒரு செகண்டில் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்த்தும்!மொத்தத்தில் பப்பில் யாருக்கும் எந்த எதிர்பாரா அதிசயமும் நடந்துவிடாது. பெரும்பாலானோர்க்கு அது ஒரு பெயின்தான். மறுநாள் காலை எரிச்சலுடன்தான் விடியும். பப்பை கொண்டாட வேண்டுமெனில் ஏற்கனவே இருக்கும் தன் இணையுடன் செல்ல வேண்டும்.

நல்ல மது, நல்ல இசை, நல்ல நடனம் என அளவுடன் கொண்டாடிவிட்டு, கூடு திரும்பினால் இன்பமாக இருக்கும். வேட்டை நாயைப்போல பப் ஹண்டிங் என்று சென்றால் வாதைதான் மிஞ்சும். இன்னொன்று, பெண்கள், ஆண்களைப்போல கடையில் சரக்கு வாங்கிக் குடிக்க முடியாமல்தான் பப்புக்கு வருகிறார்கள். அவர்கள் ரிலாக்ஸாக இருக்கவும், மது போதைக்காகவும்தான் பப்புக்கு வருகிறார்கள். அதனால் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விடுவதுதான் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி.பப்புக்கு வரும் பெண்ணை முறைத்துப் பார்ப்பது, உரசுவது, அவள் செக்ஸுக்காக பப்புக்கு வந்திருக்கிறாள் என்ற எண்ணத்துடன் அவளை அணுகுவது எல்லாம் அவர்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது.

இந்த தொந்தரவுகளை எல்லாம் தாண்டித்தான் பெண்கள் சரக்கு அடிக்க வேண்டி இருக்கிறது நம் சென்னையில் என்பதே கேவலமாக இருக்கிறது. சென்னை பப்பின் இரவு வாழ்க்கை முடிந்து அனைவரும் வீட்டுக்குப் போய் கட்டிலில் விழும்போது இந்தத் தொடரை முடித்து விடலாம். ஆனால், அதற்கு முன்னால் ஒரே ஒரு விஷயம்.சென்னை பப்கள் காலை 11 மணி முதலே திறந்து இருக்கும். வயது 18க்கு மேற்பட்டவர்கள்தான் பப்புக்குள் லீகலாக நுழைய முடியும். பள்ளி மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.மேட்டுக்குடி மக்கள் படிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சில பப்களில் பகல் நேரங்களில் சென்னையில் காணலாம்.பள்ளிகளில் இதற்கென்று கேங் இருக்கின்றன. அந்த கேங் லீடர் பப்பின் மேனேஜரைப் பிடித்து சரிக்கட்டி, பிரைவேட் பார்ட்டி என்ற பெயரில் பப்பை மொத்தமாக புக் செய்து ரகசிய ஆன்லைன் குரூப்களில் பள்ளிக்குள் டிக்கட் விற்று பகலில் பப்களில் பார்ட்டி செய்கிறார்கள்.

இவர்களுக்குள் அடிதடி தகராறு எல்லாம் உண்டு. அதாவது வியாபார அடிதடி. கேங்குக்குள் நடக்கும் தகராறு. ஆனால், எதுவும் வெளிவருவதில்லை.
பகலில் குடித்து விட்டு ஜாலி செய்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்குச் சென்று தலைவலி என்று படுக்கையறைக்குள் சென்று தூங்கி விடுவார்கள். இதில் எக்கச்சக்க பணம் விளையாடுகிறது. இந்த பிரைவேட் பார்ட்டியின்போது, முத்தம், கட்டிப்பிடித்தல் எனத் தொடங்கி உடல் உறவு வரை போகின்றன. மாணவர்களுக்கு போதையேறினால்..? இளம் கன்று அல்லவா?ஆனால், ஏழை மாணவர்கள் போல இவர்கள் வீணாவதில்லை. நல்ல காலேஜில் சேர்ந்து, வெளிநாடு, அது இது என்று செட்டில் ஆகி, ஐநா சபை தூதுவர் அளவுக்கு போய்விடுகிறார்கள்!

அராத்து