அழிந்து வரும் சுறா



சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிற டைனோசர்களை இப்போது திரைப்படங்களில் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. இதே மாதிரியான ஒரு நிலை சுறாவுக்கும் வரலாம்.
இன்னும் 100 வருடங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள் சுறாமீனைப் புகைப்படம் அல்லது திரைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும். ஆம். அப்படியான ஒரு அவல நிலையில் இருக்கின்றன சுறாக்கள்.

உணவு, எண்ணெய், மருத்துவம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக வருடந்தோறும் 10 கோடி சுறாக்கள் வேட்டையாடப்படுகின்றன. முக்கியமாக துடுப்புகளுக்காக மட்டுமே அதிகளவில் சுறாக்கள் கொல்லப்படுகின்றன. காரணம், ஆசிய நாடுகளில் சுறா துடுப்பு சூப் ரொம்பவே பிரபலம்.

துடுப்பை மட்டும் எடுத்துவிட்டு, இறந்த சுறா மீனின் உடலைக் கடலில் போடும் அவலமும் அவ்வப்போது அரங்கேறுகிறது. ஒரு சுறா குட்டி போட்டு அது வளர கொஞ்ச காலம் பிடிக்கும். அப்படி ஒரு சுறா வளர்வதற்குள் 100 வளர்ந்த சுறாக்கள் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன.

த.சக்திவேல்