கொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..?! ஸ்ரேயாவை கேட்கும் இளசுகள்!



இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஷ்ய டென்னிஸ் வீரர் மற்றும் தொழில் அதிபர் ஆந்த்ரே கோஸ்சீவை ரகசியமாக திருமணம் செய்து, ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தார் நடிகை ஸ்ரேயா. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தன் கணவரைப் பற்றியோ, திருமண வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாக அவர் வாய் திறக்கவில்லை. அவ்வப்போது கவர்ச்சி ஸ்டில்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, இணையவாசிகளைக் குஷிபடுத்தி வந்ததோடு சரி. மற்றபடி கப்சிப்.

இந்நிலையில் நாடே கொரோனா பீதியில் மூழ்கியிருக்கும் சமயத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் இப்போது தெறிக்க விட ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரேயா. அதுவும் பரஸ்பரம் முத்தமிடும் புகைப்படங்களுடன் தன் கணவருடனான முதல் சந்திப்பு, காதல் மலர்ந்த தருணங்கள்... என சூடேற்றி ஹார்டின்களை அள்ளி வருகிறார். ‘‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருப்பது அவ்வளவு சௌகர்யமாக தெரியவில்லை. ஆனால், எனக்கும் ஆந்த்ரேவுக்கும் இடையேயான காதல் ரொம்பவே அழகானது; மேஜிக்கைப் போன்றது.

மாலத்தீவில் நான் டைவிங்கில் லயித்துக் கொண்டிருந்த போது ஆந்த்ரேவை முதன்முதலாக சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை. பிறகுதான் நான் ஒரு நடிகை என்பது அவருக்குத் தெரியவந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவரை மறுபடியும் சந்தித்த போது ‘நீங்க நடித்த படங்கள் ஆன்லைனில் கிடைக்குமா...’ என்று கேட்டார். நான் ‘ஆமாம்...’ என்றேன்.

உடனே அவர் அந்தப் படங்களைப் பார்த்து என்னிடம் பேசினார். ரொம்பவே இனிமையான தருணம் அது...’’ என்று மேஜிக் காதல் தருணங்களைப்
பகிர்கிறார் ஸ்ரேயா.‘அர்ஜுன்’ (2004) தெலுங்குப் படத்துக்காக ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அழகான இடங்களில் மகேஷ் பாபுவுடன் டூயட் பாடலில் ஆடியிருந்தார் ஸ்ரேயா.

அந்தப் பாடலைப் பார்த்திருக்கிறார் ஆந்த்ரே. ஒரு நாள் ஸ்ரேயாவை காரில் அந்தப் பாடலில் வரும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றுள்ளார். 14 வருடங்கள் கழித்து சென்றதால் அந்த இடங்கள் எதுவும் ஸ்ரேயாவுக்கு ஞாபகம் வரவில்லை. அப்போது அந்தப் பாடலை நினைவுபடுத்தி ஸ்ரேயாவை ஆனந்தத்தில் மிதக்கவிட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை ஆந்த்ரே தனக்கு செய்த மிக அழகான விஷயமாக நினைவு கூர்கிறார் ஸ்ரேயா.
எல்லாம் சரி... இப்போது ஏன் ஸ்ரேயா இதையெல்லாம் சொல்ல வேண்டும்..?

ரொமான்ஸ், செக்ஸ் வழியே கொரோனா பரவாது என மருத்துவர்கள் உத்திரவாதம் அளித்திருப்பதால்... ஓர்க் ஃப்ரம் ஹோம் என தங்கள் பணியாளர்களிடம் பல நிறுவனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதால்... இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஸ்ரேயா இறங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.அப்படிப்போடு அருவாள!

த.சக்திவேல்