அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலேயே கோயில்கள் இருக்க வேண்டும்!



திலகவதி ஐபிஎஸ் (முன்னாள் காவல்துறை அதிகாரி)

கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை. தமது ஆன்மிக மரபு குறித்த மெளனமான பெருமித உணர்வு தமிழர்களுக்கு எப்போதும் உண்டு.
அந்நியப் படையெடுப்புகள் நடந்தபோது கோயில்களுக்கும், விக்ரகங்களுக்கும் எந்த ஆபத்தும் நேரா வண்ணம் விக்ரகங்களை மண்ணில் புதைத்து வைத்தும், அதி உயரமான மதில் சுவர் எழுப்பியும் காத்தவர்கள் நம் முன்னோர்கள்! ‘‘கோயில் சிலைகள் களவு போகின்றன. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த  கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் என்ற பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்...’’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த வாதம் நியாயமானதுதானா..?  

சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத் துறை பொறுப்பில் இருக்கும்போதுதான். பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்.

பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்தபோதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே! கோயில்கள் ‘பக்தர்கள்’ என்று சொல்லப்படும் தனியார் வசம் இருந்தபோதும் சிலைத் திருட்டுகளும், கோயில் நிலங்களில் முறைகேடுகளும் நடைபெற்றன. அப்போதுதான் அதிகளவில் நடைபெற்றன என்ற வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

இந்து திருக்கோயில்களை அரசு நிர்வகிப்பதற்கான தமிழ்நாடு இந்து சமய சட்டம் ஏதோ கலைஞர் கருணாநிதி கொண்டு வந்ததோ, திமுக ஆட்சியின்போது அறிமுகப்படுத்திய சட்டமோ அல்ல.

இந்து சமயக் கோயில்களுக்குக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஊழல் மிகுந்து காணப்படுவதாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே புகார்கள் வரத் தொடங்கின. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், பிரிட்டிஷ் நிர்வாகத்திடமும் இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்தன.

இந் நிலையில் 1817ம் ஆண்டு முதல்முறையாக மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் திருக்கோயில் களுக்கு வழங்கப்படும் நிதி முதலான அறக் கொடைகள் முறையாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது.

இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தொடங்கி 1849ம் ஆண்டுக்குள் 21 மாவட்டங்களில் இருந்த 8,292 கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தர்மகர்த்தாக்கள், ஜமீன்தார்களின் வீடுகளிலிருந்த ஏராளமான கோயில் நகைகள் மீட்கப்பட்டன. மூடிக் கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன.

1858ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து விக்டோரியா மகாராணியிடம் நேரடியாகச் சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை விக்டோரியா மகாராணிக்கு இருந்தது. இதனால் அவர், ‘மத விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது’ என கவர்ச்சி வாக்குறுதி அளித்தார். இது விக்டோரியா மகாராணி யின் செப்பு சாசனம் எனப் புகழ் பெற்றது.

இதையடுத்து, கோயில்களும் அவற்றின் சொத்துகளும் முன்பு யார் யார் வசம் இருந்தனவோ அதே ஊழல் பெருச்சாளிகள் வசம் சென்றன. அவர்கள் பழையபடி அவற்றைத் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினர். கோயில்களின் உள்ளே இருந்த விலை உயர்ந்த தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், சொத்துகளில் ஊழல் மலிந்து விட்டதாகவும் மீண்டும் பொதுமக்களின் புகார்கள் குவிந்தன.

தர்மகர்த்தாக்கள் கோயில் நிலங்களை நிர்வகிப்பதன் வழியே கிடைக்கும் பெரும் வருவாயை அரசு கஜானாவுக்குக் கொண்டு சேர்க்காமல் முறைகேடு செய்தனர். இதன் மூலம் கோயில் நிலங்கள் ஏலத்துக்கு வந்தன. அப்படி ஏலத்துக்கு வரும்போது குறைந்த விலைக்கு அவர்களே வேறு நபர்களின் பெயரில் வாங்கிக் கொண்டார்கள். 1919ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது. அதே ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் விளைவாக இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. 1920ம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துத் திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தார். இதற்காக 1922ம் ஆண்டு இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் உயர் சாதி அமைப்பு களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி 1925ம் ஆண்டு இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தினார்.சில எதிர்ப்புகள் மற்றும் முயற்சிகளை அடுத்து 1927ம் ஆண்டு ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. திருக்கோயில்களின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1947லிருந்து 1949 வரையிலான இரண்டு ஆண்டு காலம் ஓமந்தூர் ராமசாமி, சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகக் கோயில்களில் நடந்த எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார். வைணவ நெறிகளைப் பின்பற்றிய முழுமையான ஆத்திகவாதியான ஓமந்தூரார், கோயில்களும் மடங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதால்தான் நாட்டில் நாத்திகம் வளர்கிறது என்று கூறினார். எனவே அறநிலையத் துறை சட்டங்களில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

கோயில் சொத்துகளைக் குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திய ஓமந்தூரார் மடங்களில் உள்ள நகைகள், பதிவேட்டில் பதிக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்க ஆணை பிறப்பித்தார். 1959ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அறநிலையத் துறையின் சட்டங்களில் உள்ள குறைகள் களையப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு இன்று வரை தொடரும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது.

வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை. அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றி ருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.

ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே தவிர, கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும்.