கணிதப் பூங்கா! பலே ஆசிரியரின் அசத்தல் ஆன்சர்



ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக பிள்ளைகள் அச்சப்படுவது எந்தப் பாடத்துக்கு..?

யோசிக்காமல் சட்டென கணக்கு என பெற்றோர்கள் விடையளிப்பார்கள். ‘‘ஓ மை காட்... மேக்ஸா..?’’ என எனர்ஜி வடிந்து பிள்ளைகளும் சோர்வடைவது கணக்குப் பாடத்துக்குத்தான்.

அந்தளவுக்கு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக கணக்குப் பாடமே வில்லனாக உள்ளது.
அதுவும் மதிய வேளைகளில் சாப்பாட்டுக்குப் பிறகு கணக்கு பாடப்பிரிவு இருந்தால் சொல்லவே வேண்டாம்... பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரைத் தூக்கத்தில் மிதக்க ஆரம்பித்து விடுவார்கள்.என்னதான் ஆசிரியர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும்... ஆடிப்பாடி சொல்லிக்கொடுத்தாலும் கணக்கு ஒரு சுவாரஸ்யமான பாடமாக மாணவர்கள் மத்தியில் இடம் பிடிக்கவேயில்லை.

ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கணக்கை பிள்ளைகளுக்கு பிடித்த சப்ஜெக்ட்டாக மாற்ற புதுமையான வழியைக் கடைப்பிடித்துள்ளார்.யெஸ். புதுமையாகத்தான்.ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பைக்மால் பிளாக் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான சுபாஷ் சந்திர சாஹு, தனது பள்ளிக் குழந்தைகளின் மனதில் இருந்து கணிதம் குறித்த அச்சத்தைப் போக்கவும், அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் ‘கணிதப் பூங்கா’ ஒன்றை 435.6 சதுர அடி பரப்பளவில் உருவாக்கியுள்ளார்.புஜாரிபாலியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள இந்த கணிதப் பூங்காவில் விளையாடிக்கொண்டே மாணவர்கள் எளிமையாக கணிதம் கற்கின்றனர்.

வர்ணம் பூசப்பட்ட பாறைகள் முதல் விதானம் மற்றும் பெஞ்சுகள் வரை பூங்காவில் உள்ள ஒவ்வொரு அம்சமும் வடிவியல் வடிவங்கள், கணித சின்னங்கள் அல்லது எண்களைக் குறிக்கின்றன.

இப்படி கணிதத்தின் அடிப்படைகள் மற்றும் கொள்கைகளை மாணவர்கள் நடைமுறையில் புரிந்து கொள்ளக்கூடிய பல விஷயங்களை அவர் கணிதப் பூங்காவில் செய்துள்ளார்.பல்வேறு கணிதவியலாளர்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை சித்தரிக்கும் சுவர் ஓவியங்கள் மற்றும் ஸ்டாண்டுகளும் உள்ளன. ஐந்து மாதங்களுக்கு முன் செயல்படத் தொடங்கிய இந்தப் பூங்கா, குழந்தைகளைக் கவரும் மையமாக மாறியுள்ளது.

இதற்கான செலவுகளை ஆசிரியர் சுபாஷும், கிராமத்தைச் சேர்ந்த உதவும் குணம் கொண்ட சில நபர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.“இங்குள்ள எங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெறுவதற்கான திறமை இல்லை. குழந்தைகளுக்கு எப்போதுமே கணிதம் பயமுறுத்தும் பாடமாக உள்ளது. கணிதத்தை எளிதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவதன் மூலம் அவர்களிடையே பயத்தை நீக்கி ஆர்வத்தைத் தூண்ட விரும்பியே இந்தப் பூங்காவை உருவாக்கியுள்ளோம்...’’ என்கிறார் சுபாஷ் சந்திர சாஹு.  உண்மையில், சாஹுவின் கற்றலுக்கான இந்த புதிய அணுகுமுறை, புஜாரிபாலி கிராமத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கான ஆரம்பப் புள்ளி கோவிட் - 19 தொற்றுக் காலம்தான்.2020ம் ஆண்டில் கோவிட் - 19 பரவியதைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதும், பாடங்களைப் படிப்பதும் கேள்விக்குறியானது.அப்போது, ​​​​சாஹுவின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. உடனடியாக அதற்கு செயல் வடிவம் கொடுத்தார்.அதாவது எழுத்துக்களையும், எண்களையும் வரைபடங்களாகத் தீட்டி அதை கிராமத்திலுள்ள மரங்களில் தொங்கவிட்டார். குழந்தைகளை அழைத்து ஒவ்வொரு மரத்துக்குக் கீழும் அவர்களை ஒருங்கிணைத்து நிற்க வைத்து பாடம் கற்பித்துள்ளார்.இதற்கு கிடைத்த வரவேற்புதான் இப்போது அவர் அமைத்திருக்கும் கணிதப் பூங்காவுக்கான அடித்தளம்.

இப்போது புஜாரிபாலி ஆரம்பப் பள்ளியின் குழந்தைகள் மட்டுமின்றி, அண்மைப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களும், பக்கத்து மாநிலமான சத்தீஸ்கர் பள்ளி மாணவர்களும் இந்தப் பூங்காவைத் தேடி ஆர்வத்துடன் வருகின்றனர். உற்சாகத்துடன் கணக்குப் பாடத்தைக் கற்கின்றனர்.‘‘இந்தப் பூங்கா அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும், அவர்கள் விளையாடும்போது கற்றுக்கொள்வதற்கும் ஏற்றபடியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆனால், பூங்காவில், வகுப்பு நேரத்தைத் தாண்டியும் ஆர்வத்துடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்...” கண்கள் மின்ன சொல்கிறார் சாஹு.

இன்று பூங்காவைத் தவிர சாஹு, தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் வெவ்வேறு விளக்கப்படங்களை வைத்துள்ளார். இதனால் வீட்டை விட்டு பிள்ளைகள் எப்போது எதற்காக வெளியே வந்தாலும் அவர்கள் பார்வையில் பாடங்கள் தொடர்பான விளக்கப்படம் கண்டிப்பாக தட்டுப்படும். நிச்சயம் அவர்கள் மனதிலும் பாடங்கள் பதியும்.
அதுபோலவே கிராமச் சாலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களையும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சார்ட்களையும் வைத்துள்ளார்!

ஜான்சி