அரண்மனை குடும்பம்-32
குலசேகர ராஜா துளியும் தயக்கமோ, தடுமாற்றமோ இன்றி பேசிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டார். சுந்தரவல்லிக்கோ அது எப்படி நடக்க முடியும் என்கிற கேள்வி மரங்கொத்திபோல் அவளுக்குள் கொத்தத் தொடங்கி விட்டது. அப்போது தியாவைத் தூக்கிக்கொண்டு மஞ்சுளா அந்த அறைக்குள் வந்தாள்.தியா, மஞ்சுவின் பிடியில் அமைதியாக இருந்தாள். இருவரையும் பார்க்கவும் சுந்தரவல்லியின் எண்ணமும் மாறியது. மஞ்சுளா சுந்தவல்லியை ஒருமாதிரி பார்த்தாள்.
 “அடடே... குட்டி உன்கிட்ட வந்துட்டாளா... இவ நம்ம யார் கிட்டயும் வரமாட்டாளே..?” “அதெல்லாம் நேத்து வரை... நீ இப்ப கூப்பிட்டுப் பார்... வருவா...” “அப்படியா... தியா குட்டி எங்க அத்தைகிட்ட வா பாப்போம்...” “கைய நீட்டி கூப்புடும்மா...” “ஓ... எங்க... வா... வா...” சுந்தரவல்லி கைநீட்ட மெல்ல தியா அவளிடமும் சென்றாள்.
 “என்னடி இது அதிசயம்... நம்பள பார்த்தாலே அம்மா முந்தானைக்குள்ள பதுங்கறவ இப்ப சகஜமா வந்துட்டாளே..?” “அதான் என் சாமர்த்யம்... போ... இப்படியே போய் கணேஷ் அத்தான் முன்னால ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வா...” “ஓ... நீ அப்படி வரியா... புரியுதுடி...” என்றபடியே அறையை விட்டு தியாவோடு வெளியேறினாள் சுந்தரவல்லி.
கச்சிதமாய் பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு வந்தார் குலசேகர ராஜா. இடுப்பில் டவல். மேனிமேல் நீர்த்துளிகள்! “என்னப்பா இப்பபோய் குளிச்சிருக்கீங்க?” என்று வியப்போடு மஞ்சுளாவும் கேட்க, நேராக வாட்ரோப் அருகே சென்று கீழ் அடுக்கில் இருந்து அகலக் கரை வேட்டியையும், மேல் அடுக்கில் இருந்து வெள்ளை நிறத்தில் ஜிப்பாவையும் எடுத்து அணிந்தபடியே மஞ்சுவுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.
“சுடுகாட்டுக்குப் போய்ட்டு வந்தேன்மா... அப்ப குளிக்கணுமில்ல?” “ஓ... அந்த சதீஷ் க்ரிமேஷனுக்கா?” “ஆமா... எங்க உங்கம்மா... இங்க இருந்தாளே?” “தியாவோட கணேஷ் அத்தானைப் பாக்க போயிருக்காங்க...” “யாரு... அந்த குட்டிப்பிசாசா..? அது நம்மகிட்டல்லாம் வராதே?” “நீங்கதானே சொன்னீங்க... இனி நாம எல்லா விஷயத்துலயும் மாறி நடந்துக்கணும்னு...” “ஓ... அதை நீ ஸ்டார்ட் பண்ணிட்டியா?”
“பண்ணிட்டேன்... ஆனா, எவ்வளவு தூரம் ஒர்க் அவுட் ஆகும்கறது உங்க கைலதான் இருக்கு...” -மஞ்சுளா சற்று சந்தேகத்தோடும், பயத்தோடும் சொன்னதைக் கேட்டு அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார் குலசேகர ராஜா. பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் சென்று தலையை வாரிக் கொள்ளத் தொடங்கினார். “என்னப்பா... எதுவுமே சொல்லாம மௌனமாயிட்டீங்க..?”
“இனி பேச்சே கிடையாது மஞ்சு... செயல்தான்! எது எப்ப எப்படி நடக்கணுமோ அது அப்ப அப்படியே நடக்கும். நீயும் பார்ப்பே...” “நடந்தா சந்தோஷம்... ஆனா, ரத்தி முன்னவிட இப்ப தெளிவா இருக்கா. தெம்பாவும் இருக்கா. ஏற்காடு போய்ட்டு வந்ததுல இருந்தே அவகிட்ட பெரிய மாற்றம் தெரியுது. யாரோ ஒரு சாமியார் கொடுத்திருக்கற கருங்காலி மாலையையும் கழுத்துல போட்டிருக்கா. நான் அதைத் தொட்டுப் பார்க்க போனப்போ என்ன தொடவே விடலை...” “அதுக்கென்னம்மா..?”
“சொன்னேம்ப்பா... கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிடக் கூடாது... இப்ப கூட நீங்க கணேஷ் அத்தான் சந்தேகத்துல இருந்து முழுசா வெளிய வந்துட்டதா என்னால நினைக்க முடியல...” மஞ்சுளா அழுத்தம் திருத்தமாகப் பேசினாள். குலசேகர ராஜாவும் அவளை ஊன்றி வெகு ஆழமாகப் பார்த்தார். பல வினாடிகள் பேச்சே இல்லை. “என்னப்பா... எனக்கு பதில் சொல்லாம அப்படி பாக்கறீங்க?” “ஒண்ணுமில்ல... இதை அப்படியே விட்டுடுவோமா?” “என்னப்பா சொல்றீங்க... எதை விடச் சொல்றீங்க..?”
“ரத்தியையும் அந்த குட்டியையும்தான்... நீயும் சரின்னு சொல்லு... நான் உனக்கேத்த நல்ல மாப்பிளையை இப்பவே பாக்கறேன். என்ன சொல்றே?” பவுடர் டப்பாவை எடுத்து மூட்டம் பொங்க அதை கையில் கொட்டி, பின் கழுத்து, மார்பில் அதை படபட வென தட்டிப் பூசியபடியே அவர் கேட்ட கேள்வி மஞ்சுளாவை காளி போல் ஆக்கத் தொடங்கியது.
கண்கள் அகண்டு விரிய அவளது மூக்கும் பெரிதாய் விரிந்து, அவள் நாசியிலும் துருத்தி போல காற்று முட்டத் தொடங்கியது.அற்ப சொற்ப வினாடியில் அவளிடம் ஒரு அசுர மாற்றம். அதேவேகத்தில் அவர் பயன்படுத்திய சோப்பு டப்பாவை எடுத்து ஆளுயர நிலைக் கண்ணாடி மேல் ஆவேசமாக வீசி எறிந்தாள். அது 360 கோணங்களிலும் விரிசல் விட்டு சில துண்டுகள் உதிர்ந்தும் கீழே விழுந்தன.
அடுத்ததாய் கியோகார்பின் ஹேர் ஆயில் பாட்டிலை எடுத்து எறியப்போகவும் பாய்ந்து தடுத்தவர், மிக இறுக்கமாய் அவளைப் பிடித்து பக்கத்து படுக்கை மேல் தள்ளி விட்டார்.
அதன் மேல் போய் விழுந்தவள் அங்கே இருந்த தலையணைகளை எடுத்து அவர்மேல் எறியத் தொடங்கினாள்.
அதைத் தடுத்தபடியே ஓடிப்போய் அறைக் கதவைத் தாழிட்டு விட்டு திரும்பவும் எழுந்து வந்து அவர் முன்னே விரிந்த கூந்தலோடு சித்தம் கலங்கியவள் போல நின்று வெறித்தாள். அவர் அப்படி அவளை அப்படிப் பார்க்கவுமே, மிக வேகமாக அங்கிருந்த ஒரு டிஸ்ப்ளே ஷெல்ஃவில் இருந்து ஒரு ஸ்ப்ரேயரை எடுத்து அவள் முகத்துக்கு நேரே தன் முகத்தை மூடிக் கொண்டு அடித்தார். அவளும் கண்கள் செருக மயங்கி விழப்போனாள். அப்படியே தாங்கிப் பிடித்து படுக்கையில் கிடத்தியவர் அவள் ஆடைகளை இழுத்து சரிசெய்து, போர்வை எடுத்து போர்த்தியும் விட்டார். பின் அவரிடம் ஒரு ஆழமான பெருமூச்சு. அப்போது கதவு தட்டப்படவும் எழுந்து சென்று திறந்தார். புறத்தில் சுந்தரவல்லி. வேகமாய் அவளை உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டார். படுக்கையில் மஞ்சுளா கிடப்பதையும், அறைக்குள் ஸ்ப்ரே வாசம் அடிப்பதையும் நொடியில் உணர்ந்த சுந்தரவல்லியிடம் அடுத்த நொடியே பெரும் பதற்றம்.
அப்படியே டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி உடைந்து கிடப்பதையும் பார்த்தவள், ‘‘ஐயோ... திரும்ப ஆரம்பிச்சிட்டிங்களா?” என்றுதான் முதலில் கேட்டாள்.“ஆமாம் சுந்தரம்... தனக்கு இனி கணேசன் கிடைக்க மாட்டாங்கற மாதிரி நினைச்சுட்டா. நானும் ‘சரிம்மா விட்றுவோமா... உனக்கு நல்ல மாப்ளை பாக்கட்டுமா’ன்னு ஒரு கோபத்துல கேட்டுட்டேன்.
அது அவளை ரொம்பவே குத்திடிச்சு. அந்த ஹிஸ்டீரியா சனியன் எட்டியும் பாத்திடிச்சு. அதான் டாக்டர் கொடுத்திருந்த அனெஸ்தடிக் ஸ்ப்ரேயை எடுக்க வேண்டியதாப் போச்சு...”
“என்கிட்ட நல்லாதானே பேசினா..? நீங்க சொன்னபடி அந்த ரத்திகிட்ட கூட சுமுகமா போகத் தொடங்கிட்டாளே. அந்த தியாகுட்டி கூட இவகிட்ட வந்துச்சு.
நானும் தூக்கிக்கிட்டு கணேசன் ரூமுக்கு போய் சந்தோசமா பேசிட்டுதானே வந்திருக்கேன். எல்லாம் சரியாதானே போய்க்கிட்டிருக்கு..?”“இல்ல சுந்தரம்... மஞ்சு அந்த வடநாட்டுக்காரியைப் பாத்து பயப்பட ஆரம்பிச்சிட்டா... அவ கழுத்துல அந்த ஏற்காட்டு சாமியார் கொடுத்த கருங்காலி மாலை இருக்காமே..?”
“ஆமாம்... அதுக்கென்னங்க..?”
“பயப்பட்றாங்கறேன்... அதுக்கென்னங்கறே..?” “அப்ப அதுதான் அவளுக்கு எதுவும் ஆகாம பண்ணி... நீங்க அனுப்பினவங்க செத்துப் போனாங்களா?” “தெரியல... அதையெல்லாம் இனிதான் தெரிஞ்சிக்கணும்...”“ஆனா, கணேசன் சாதாரணமாதாங்க இருக்கான். என்கிட்ட குழந்தை இருக்கறத பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா?” “அப்ப உனக்கு நாம சிக்குவோம்கற பயமெல்லாம் இல்லையா..?” “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?”
“கேட்டதுக்கு பதில் சொல்... என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குதானே?”“அந்த சந்தேகமே உங்களுக்கு வேண்டாங்க...” “அப்ப உன் பொண்ணுகிட்டயும் அதை சொல்லு. இனி என் ஒவ்வொரு அடியும் ரொம்பவே கவனமா இருக்கும்...” “அது சரிங்க... முதல்ல கல்யாணம் நடக்கும்னு எதை வெச்சு சொன்னீங்க... அது எப்படிங்க?”
“முன்ன சொன்ன அதே பதில்தான்... அமைதியா இருந்து பாரு. இனி பேச்சு கிடையாது... செயல்தான்!” குலசேகர ராஜா பேச்சோடு பேச்சாக மஞ்சுளா அருகே சென்று அவள் தலையை வருடிக்கொடுத்துவிட்டு மெல்ல அறையை விட்டு நீங்கத் தொடங்கினார். சேர்வராயன் மலையின் மண்டப்பாறை! குகையின் உள்ளே மாரப்ப வாத்தியார் என்கிற அந்த வினோதமான மனிதன் ‘சொக்குத்தூள்’ என்னும் மயக்க வசியப் பொடியைத் தயாரித்துக் கொண்டிருந்தான்.
அருகிலேயே ஜல்லியும் போதிமுத்துவும் அதையே பார்த்தபடி இருந்தனர்.அங்கே ஒரு மரத் தட்டின் மேல் ‘களிப்பாக்கு, அப்பைகிழங்கு, நிலப் பனங்கிழங்கு, தாளிவேர், பேயத்திவேர், குப்பைமேனி வேர், வேளைவேர், கழற்சிவேர், ஊமத்தை வித்து, தூரமான பெண் கட்டியிருந்த புடவை, மயான பிணச்சாம்பல், மண்டை ஓட்டு துண்டு, எருக்கம் பால்...’ என்று என்னவெல்லாமோ இருந்தன.
ஒரு திருவோட்டுக் காயிலிருந்து செய்யப்பட்ட பண்டாரத் திருவோட்டுக்குள் அவைகளை எல்லாம் போட்டு எருக்கம்பாலை விட்டு பிரட்டி எடுத்து, பின் அதை அப்படியே கவிழ்த்து வைத்து திருவோட்டின்மேல் தீபகற்ப ஜோதி மரத்தின் காய்ந்த இலைகளைப் போட்டு தீ வைக்கவும் குப்பென்று முழங்கால் உயரத்திற்கு தீயானது எரியத் தொடங்கியது.
அது எரிந்து முடியட்டும் என்பது போல் மாரப்ப வாத்தியாரும் போதிமுத்து, ஜல்லி பக்கம் திரும்பினான்.“ஆசானே... எதுக்கு எல்லாத்தையும் போட்டு எரிய வெச்சிருக்கீங்க..? என்னன்னு எங்களுக்கு சொல்லக் கூடாதா..?” என்று பணிவாகக் கேட்டான் ஜல்லி.“சொக்குத்தூள் தயாராயிட்டிருக்குடா... இதுதான் செப்படி வித்தைக்காரன் கையில எப்பவும் இருக்க வேண்டியது. நமக்குதான் இப்ப ஒரு பெரிய ஜோலி மாட்டியிருக்குதே..? அதான் தயார் பண்ணிகிட்டிருக்கேன்...”“ஓ... அதை இப்படித்தான் தயார் பண்ணுவீங்களா..?” “ஆமாம்...”
“இது மட்டும் போதுமா ஆசானே..?”“இப்போதைக்கு இது போதும்...” “அந்த பணக்காரக் கொலைகாரனை எப்படி ஆசானே நம்ம வழிக்கு கொண்டு வரப்போறோம்?”“நாம அவனைப் பாக்க நினைக்கற மாதிரியே அவனும் நம்மளப் பாக்க நினைக்கறாண்டா... அது தெரியுமா உனக்கு?”“அப்படியா..?”“நாம அவனைத் தேடிப் போகவே வேண்டாண்டா... அவனே கூப்புடப் போறான் பாரு...” மாரப்ப வாத்தியார் சொன்ன மறுநொடி போதிமுத்துவின் செல்போனில் சிணுங்கல்!
(தொடரும்)
மணிமொழியனாரின் விளக்கம் விதிர்ப்பை அளித்ததோடு அசோகமித்திரனை அது சற்று வெட்கப்படவும் வைத்தது. அதனால் ஒரு மௌனமும் உருவாகி அடுத்து என்ன பேசுவது என்பதில் குழப்பமும் மேலிட்டது.“என்ன அசோகமித்திரன்... நான் இப்படி ஒரு பதிலைச் சொல்வேன்னு நீங்க எதிர்பார்க்கலியா..?”“ஆமாங்கய்யா... என்னப் போலவே நீங்களும் ‘இந்த சாமியார்களே இப்படித்தான்’னு சலிச்சிப்பீங்கன்னுதான் நினைச்சேன்...’’“அப்படி நம்மை சலிச்சிக்க வெச்சிக்கற சாமியார்களும் உண்டு.
ஆனா, நீங்க குறிப்பிட்ட இவரை என்னால அப்படி கருத முடியல. காலடில குப்பையா கிடந்த ஒரு சோப் கவரை வெச்சு ஒரு பெரிய தத்துவத்தை இவரால சொல்ல முடிஞ்சிருக்குன்னா, இவர் போலியான, இல்லேன்னா அரைகுறையா வெந்த ஒருத்தர் கிடையாதுன்னுதான் நான் நினைக்கறேன்...”“எனக்கும் இப்ப அதே கருத்துதான்... போகட்டும்யா... ஒரு சித்தர்தான் பாம்பு வடிவத்துல வந்து பூஜை செய்யறார்ங்கற மாதிரி அவர் சொன்ன கருத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க... கூடுவிட்டு கூடு பாயறதுன்னு சொல்வாங்களே அப்படியா..?” “ம்... அப்படியும் இருக்கலாம்...”“இதை உங்களால நம்ப முடியுதா..?”
“நான் தொடக்கத்துலயே சொன்ன மாதிரி, இந்த மாதிரி சித்தர்கள் சமாச்சாரங்களை நான் கட்டுக்கதையாவும், இல்லேன்னா ஒரு இல்லூஷனாவும்தான் கருதியிருந்தேன். ஆனா, எப்ப விஞ்ஞானத்துக்கு இணையாவோ இல்ல அதைவிட மேலாகவோ ஒண்ணு இருக்கக் கூடும்கற ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதோ அப்பவே என்கிட்ட பல விஷயங்கள்ள கருத்து மாற்றங்கள் ஏற்பட்டாச்சு. அந்த அடிப்படைல சொல்றதா இருந்தா இதை ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வருவதுதான் சரி...”‘‘இப்ப நானும் அதைத்தானேய்யா செய்துகிட்டிருக்கேன்... ஆனா, எதுவும் பிடிபடமாட்டேங்குதே..?”
“ஆராயறது இரண்டு விதம்... நம்பி ஆராயறது ஒரு விதம்... நம்பாம ஆராயறது இன்னொரு விதம். நீங்க நம்பி ஆராயப் பாருங்க. உங்களுக்கு எல்லாமே போகப் போக பிடிபடலாம்...” “நீங்களே இப்படிச் சொல்றது எனக்கு வியப்பாவும் இருக்கு... அதே சமயம் கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருக்குய்யா...”“அசோகமித்திரன்... உங்களையும் என்னையும் போல பலகோடிப் பேரை இந்த உலகம் பார்த்திடுச்சு. இனியும் பார்க்கும். இதுக்கு முன்னால நாம தூசுங்கற ஒரு தெளிவு ரொம்ப முக்கியம். இந்த தெளிவுதான் நாம பாக்கற விதத்தை தீர்மானிக்கும்.
நமக்கு நிறைய லிமிட்ஸ் இருக்கு... இவ்வளவு தூரம்தான் பாக்கமுடியும்... இவ்வளவு டெசிபல் சப்தத்தைதான் கேட்கமுடியும்... இவ்வளவுதான் சாப்பிட முடியும்... இப்படி நமக்கு நிறைய லிமிட்ஸ்.
இப்படி ஒரு லிமிட்டுக்குள்ள இருக்கற நாம, இந்த லிமிட்டை கடந்த விஷயங்களைப் பாக்கறப்போ இல்ல கேட்கறப்போ நிச்சயம் தடுமாறவும், குழம்பவும்தான் செய்வோம். நம்ம லிமிட்டுகளை மையமா வெச்சே யோசிப்போம். நீங்களும் இப்ப அப்படிதான் யோசிக்கிறீங்க. இதுலதான் மாற்றம் வேணுங்கறேன்.
ஒரு கிணறோட ஆழம் தெரியணும்னா ஒண்ணு அதுல இறங்கிப் பார்க்கணும். இல்லேன்னா இறங்கினவங்க சொன்னதை ஏத்துக்கணும். நீங்க இறங்கினவங்கள சந்தேகப்பட்டா வேலைக்காகாது. நீங்களே இறங்கிடுங்க...’’“இறங்கிட்டேன்யா... ஆனா, தொடர முடியல!”“முடியும்... சோர்ந்துடாதீங்க. உங்கள ஒரு தூசா நினைச்சுக்க சொன்னது அகங்காரம் கூடாதுங்கறதுக்காக... தன்னம்பிக்கை கூடாதுங்கறதுக்காக அல்ல.
அதுல நீங்க தெளிவா இருக்கணும்...”“புரியுதுய்யா...”“எப்ப ஒரு அதிசயக் கனவு உங்களுக்கு வந்துடிச்சோ அப்பவே நீங்க அமானுஷ்ய உலகத்துக்குள்ள போய்ட்டீங்கன்னுதான் அர்த்தம். உங்க சலனம் ரொம்ப தற்காலிகமானது! எனக்கென்னவோ இன்னும் பல அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படப் போறதாதான் நான் நினைக்கறேன்.
இன்னிக்கு அந்த கோயில்ல என்ன நடக்குதுன்னு பாருங்க. அப்படியே கோயில் குருக்கள் 10.30க்கெல்லாம் இறந்துடறாரான்றும் பாருங்க. அந்த வைத்யர் தந்த மருந்து உங்கள பூரணமா குணப்படுத்தறதையும் உறுதி செய்யுங்க. அப்புறமா அந்த நாடி ஜோசியம்... உங்க உயிருக்கு ஒரு ஆபத்து வரும்... அதாவது நீங்க செத்துப் பிழைப்பீங்கன்னு சொன்னாரில்லையா? அதெல்லாம் நடக்குதான்னு பாருங்க.
ரொம்ப இயல்பா இருங்க. திறந்த மனசோட இருங்க... உங்களை சுத்தி நடக்கப்போற சம்பவங்களுக்கு ஆதரவாகவும் இருக்காதீங்க. எதிராவும் இருக்காதீங்க...” “நல்லதுய்யா... அப்படியே இருக்கேன்...”“எப்பவும் போல போன்ல பேசுங்க. பேசற விஷயத்துக்கேற்ப நானும் என் கருத்துக்கள பகிர்ந்துக்கறேன்...” “சரிங்கய்யா...”
“இப்ப புறப்படுங்க. மணி இப்பவே எட்டாகப் போகுது பாருங்க. இன்னிக்கு இனி கழியப்போற ஒவ்வொரு நிமிடங்களுமே உங்களுக்கு ரொம்ப முக்கியம்...”மணிமொழியனார் சொல்லி முடிக்க, அந்த தென்னந்தோப்பை விட்டு அசோகமித்திரனும் புறப்பட்டார்.
வயல் வரப்புகளில் நடந்து கண்மாய் மேட்டின் மேல் ஏறி, தளும்பும் கண்மாய் நீரைப் பார்த்தபடியே நடந்து படித்துறை வரவும் இறங்கினார். ஒரு பதினைந்து நிமிடங்கள் நன்றாக அமுங்கியும், நீந்தியும் உமிழ்ந்தும் குளித்து முடித்து, ஆடையையும் அலசிப் பிழிந்து பின் அதையே உடுத்திக்கொண்டு கனபாடிகள் வீட்டிற்கு வந்தபோது கனபாடிகள் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்.
அவரைக் கலைக்காமல், அறைக்குள் சென்று தன் சூட்கேஸைத் திறந்து ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டவர் அறையை விட்டு வரவும் கனபாடிகளும் சந்தி முடித்து நிமிர்ந்திருந்தார். பேசவும் தொடங்கினர்.“என்ன சார்... ரெண்டு மணி நேரமா எங்க போய்ட்டீங்க?” கனபாடிகள் கேள்விக்கு நடந்ததை எல்லாம் அப்படியே சொல்லி முடித்தார் அசோகமித்திரன்.
“ஓ... நீங்க அப்ப பார்த்தது மண்ணாங்கட்டிச் சித்தரைன்னு நினைக்கறேன். அந்த அடையாளங்கல்லாம் அவரைத்தான் குறிக்கறது. அவர் போட்டோ இருக்கு. காட்றேன் பாத்துட்டு சொல்லுங்கோ...”என்ற கனபாடிகள் உள்ளே சுவரில் தொங்கியபடி இருந்த 21.4.1950 என்கிற தேதியிடப்பட்ட ஒரு குரூப் போட்டோவை எடுத்து வந்து அதில் ஒருவரைக் காட்டவும், அசோகமித்திரனும் “இவரேதான்!” என்றார்.
“பரவால்லியே... நீங்க பெருசா நம்பிக்கை இல்லாதவரா இருந்தாலும் உங்களுக்கு மண்ணாங்கட்டி சித்தர் தரிசனம் தந்திருக்காரே! அவரை நாங்கல்லாம் பார்த்தே பலப்பல வருஷமிருக்கும்...” என்றார் கனபாடிகள்.“பலப்பல வருஷங்களா..?”“ஆமாம்... அவர் முக்தியடைஞ்சே எழுபது வருஷமாச்சே!”கனபாடிகளின் பதில் அசோகமித்திரனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
- இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|