நியூஸ் வே



அண்ணனை டைரக்ட் செய்த கையோடு லிங்குசாமி கார்த்தியை மறுபடியும் இயக்குகிறார். ‘அஞ்சான்’ நன்றாக வந்ததும் தம்பியை எடுத்துக்கொள்ளச் சொல்லி சூர்யாவே செய்த சிபாரிசு இது. ‘அட்டகத்தி’ ரஞ்சித்தின் படம் கிட்டத்தட்ட முடியப் போவதால், லிங்குவை சந்தித்து அடிக்கடி படம் பற்றியே பேசுகிறார் கார்த்தி.

‘கோச்சடையான்’ படம் ரிலீஸ் ஆகிற அறிவிக்கப்பட்ட தேதியை இந்த தடவை தவற விடக்கூடாது என்பதில் ரஜினி ரொம்பவும் குறியாக இருக்கிறார். இனிமேல் படம் டைரக்டர் செய்கிற வேலையில் இளைய மகள் இறங்குவதை ரஜினி விரும்பவில்லையாம்.

சரியான நேரத்தில் கௌதம் மேனனை அஜித் காப்பாற்றிக் கரை சேர்த்து விட்டதால் நெகிழ்ந்து போய் இருக்கிறார் மேனன். பார்க்கிறவர்களிடம் எல்லாம் அஜித்தின் பரந்த மனசை பாராட்டித் தள்ளுகிறார். ‘‘என் வாழ்க்கையில் அஜித்தை மறக்க முடியாது’’ என கண்ணீர் விடுகிறார். இது யாருக்கான செய்தி?

தம்பி கார்த்தியைத் தொடர்ந்து அண்ணன் சூர்யாவை இயக்குகிறார் வெங்கட்பிரபு. ‘அஞ்சான்’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு பூஜை போட்டாயிற்று. ஜூனில் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

கே.எஸ்.ரவிகுமார் ரொம்ப நாட்களுக்குப் பிறகு பிஸியாகி விட்டார். ரஜினி வெள்ளைக் கொடி காட்டிவிட்ட தால் பட வேலைகளில் மூழ்கிவிட்டார். சோனாக்ஷி, அனுஷ்காவை ‘புக்’ செய்துவிட்டார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு ரஜினிக்கு டபுள் ரோல். ஒரே படத்தில் இரண்டு ட்ரீட்டா!

உலகநாயகனுக்கு திடீரென பார்வதிகளின் மேல் என்ன ப்ரியமோ தெரியவில்லை. ‘உத்தம வில்லன்’ படத்தில் இரண்டு பார்வதிகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் கமல். ஒருவர், ‘பூ’ பார்வதி. இன்னொருவர், மாடல் பார்வதி நாயர். விளம்பரப் படங்களில் சதம் அடித்துள்ள பார்வதி நாயர் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அடிப்படையில் மலையாளி என்றாலும் பிறந்தது படித்தது எல்லாம் அபுதாபி. ஆளைப் பார்த்தால் அரபுக் குதிரை போல்தான் தெரிகிறார்.

‘வேட்டை மன்னன்’ முப்பது சதவீதம் முடிந்துவிட்டது. சிம்பு, ஜெய்யை மீண்டும் சேர்ந்து நடிக்க வைப்பது கஷ்டம் என்ப தாலும், ஹன்சிகா ‘வாலு’வில் நான்கு பாடல்களுக்கே இழுத்தடிப்பதாலும், ‘வேட்டை மன்னன்’ மறுபடியும் தொடர்வது சந்தேகம்தான். இந்த நஷ்டத்தோடு போகட்டும் என்பதுதான் புரொடியூசரின் நிலைப்பாடு.

தமிழில் சில படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்து இருப்பதால் அனுஷ்கா சென்னையில் ஒரு வீடு வாங்கிப் போட திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான தேடுதலில் அவரது இண்டஸ்ட்ரி நண்பர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆர்யாகிட்டே சொன்னால் அண்ணா நகரில்தான் பார்ப்பார்.

பைக் மீது அஜித்திற்கு காதல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதிரடியான சைஸ்களில் இறக்குமதியான நான்கு பைக்குகளை வாசலிலேயே வரிசையாக நிறுத்தி வைத்திருக்கிறார். கூடவே ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரிட்ரிவர் நாய்களும் வீடெங்கும் சுதந்திரமாக உலவுகின்றன. நன்றியுள்ளவைகள் அங்கேயே இருக்கட்டும்.

‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ மாதிரி அடுத்து ‘பூஜை’ படத்திற்கும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் விஷால். இந்த புது டிரெண்டை முன்பு தேவர்தான் அறிமுகப்படுத்தினார். இந்தியில் ராஜ்கபூர் பூஜை போட்டால் ரிலீஸ் தேதி சொல்லிவிடுவார். இந்த ஏற்பாட்டால் விஷாலை விட படத்தை வாங்குபவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். மடியில் நெருப்பை
கட்டிக்கிட்டு இருக்காமல் இருக்க முடியுதே!

‘ஐ’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. குழந்தைகளுக்கும் லீவு விட்டாச்சு. குடும்பத்தோடு ஃபாரீன் டிரிப் போய், களைப்பை உதறி வரப்போகிறார் விக்ரம். ‘ஐ’ ரிலீஸ், மே அல்லது ஜூன்.

ஆச்சரியம்... ஆனால், உண்மை. டைரக்டர் ஹரியின் அடுத்த படத்தில் சூர்யாவின் மனைவியாகவே ஜோதிகா நடிக்கிறார். ஆனால், படம் முழுவதற்குமான கேரக்டர் இல்லை. கொஞ்ச நேரம் வருவது மாதிரிதான் இருக்குமாம். அடடா, எப்படியிருக்கும்? இதைப் பார்த்திட்டு ஷாலினியும் வருவாரா!

ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்த கையோடு, பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். ‘நான் ஈ’ புகழ் சுதீப்தான் விஜய்யுடன் மோதப்போகும் வில்லனாம். ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ படங்களைத் தொடர்ந்து இளைய தளபதியின் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறாராம்.

சமீபத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் மிதந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பால்கி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்திப் படத்திற்காக இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் ஸ்ருதி. இந்தப் படத்தின் ஹீரோயின், ஸ்ருதியின் உடன்பிறப்பு அக்ஷரா. ‘‘ராஜா இசையில் தங்கையின் அறிமுகப் படத்தில் அவருக்குக் குரல் கொடுக்க கிடைத்த சந்தர்ப்பம் சாமி கொடுத்த வரம்’’ என நெகிழ்கிறார்.

முகநூலில் தனது பெயரில் போலியாக வட்டமடித்து வந்த அத்தனை கணக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஜய். சமீபத்தில் விஜய்யின் அதிகாரப்பூர்வமான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

‘எங்கேயும் எப்போதும்’ சரவணனுடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் ஜெய். டாப் லிஸ்ட் நடிகைகளுடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் கிடைத்த ஜெய், சரவணன் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியாவுடன் காதல் ரசம் சொட்டப்போகிறாராம்.