ஆல்பம்



நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்திருந்த தன் பெற்றோருக்கு, தடபுடலாய் விருந்து வைத்தாள் கௌரி. அவள் கணவன் பிரகாஷும்தான். சாப்பிட்டு முடித்து குதூகலமாய் பேசிக்கொண்டிருந்த கௌரியின் தந்தை, ‘‘உங்க கல்யாண ஆல்பத்தைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சேம்மா! எடுத்துட்டு வர்றியா’’ எனக் கேட்டார்.

‘‘நான் எடுத்துட்டு வர்றேன் மாமா!’’ என உள்ளே சென்ற பிரகாஷ், ஆல்பத்தை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு வந்து... ‘‘ஸாரி மாமா! போன வாரம்தான் என் அக்கா ஆல்பத்தை எடுத்துட்டுப் போனாங்க!’’ என பொய் சொன்னான்.இரவு...

‘‘எங்க அப்பா, அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா? அந்த ஆல்பத்தைக் காட்டுறதுல என்ன பிரச்னை உங்களுக்கு?’’ - கொதிப்பாகக் கேட்டாள் கௌரி. ‘‘நம்ம கல்யாணத்துல உன் தங்கச்சி தான் நிறைய போட்டோல இருக்கா!

 அவ கல்யாணத்தையும் ஊர் மெச்ச பண்ணணும்னு உங்கப்பா நினைச்சார். ஆனா, அதுக்குள்ள அவ யாரோடவோ ஓடிப் போயிட்டா. அதனால ஹார்ட் அட்டாக் வந்து, இப்பதான் உங்கப்பா தேறி வர்றார். இந்த நேரத்துல ஆல்பத்தைப் பார்த்தா, அவர் மனசுக்கு பாரமா இருக்குமேன்னுதான்...’’ - பிரகாஷின் விளக்கம், கௌரியின் இதயத்தைக் குளிர்வித்தது.   

நா.கி.பிரசாத்