நியூஸ் வே



இந்தியில் பால்கியின் டைரக்ஷனில், தனுஷ் நடிக்கும் ‘சமிதாப்’ படத்தில் அவருக்கு ஜோடி, கமல் மகள் அக்ஷரா. கேமரா பி.சி.ஸ்ரீராம். பால்கிக்கும் தமிழ் தெரியும் என்பதால், ஏதோ தமிழ்நாட்டில் இருப்பது போல உணர்கிறார் அக்ஷரா. பாடல் காட்சிகளில் அக்ஷராவின் டான்ஸ் இயக்குநருக்கு திருப்தி தராததால், அவசரமாக அக்ஷரா டான்ஸ் கிளாஸ் போகிறார்.

‘வாலு’ படத்திற்காக இப்போது நாலு நாள் கால்ஷீட் கொடுத்தார் ஹன்சிகா. அதையும் அந்த யூனிட் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ‘‘இனி என் இஷ்டப்படிதான், டைம் கிடைக்கும் போதுதான் கால்ஷீட் தருவேன்’’ என அறிவித்துவிட்டார் ஹன்ஸ். ‘வாலு’விற்கு சோதனைதான்.

ஷங்கர் ‘ஐ’படத்திற்கு முதலில் வைக்க ஆசைப்பட்ட பெயர் ‘அழகன்’ அல்லது ‘பேரழகன்’. ஆனால், இரண்டுமே அதே தலைப்புகளில் மம்முட்டி, சூர்யா நடித்து வெளியாகிவிட்டன. எனவே அழகன் என்ற பொருள் கொண்ட ‘ஐ’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

கருணாஸ் இனி படமெடுப்பதில்லை என சத்தியம் செய்துவிட்டார். காமெடியனாக முழுதாக இறங்கிவிட்டார். இப்போது சூர்யா, கார்த்தி, நயன்தாரா படங்களில் முழு வேகத்தில் நடித்து வருகிறார். கருணாஸ் பக்கம் ஹீரோக்கள் திரும்புகிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இளம் ஹீரோக்கள் ஆசைப்பட்டு தூது விட, அவர் சிம்ஹாவையே மறுபடியும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விட்டார். பலருக்கு இதில் ஏமாற்றம். ஒபாமா ஹேர்கட்டோடு, சற்றே முறுக்கிய மீசையில் உலா வருகிறார் சிம்ஹா.

யுவன்ஷங்கர் ராஜா தனது சகோதரர் வெங்கட் பிரபு டைரக்ட் செய்யும் ‘மாஸ்’ படத்திலிருந்து தன் பெயரை டைட்டிலில் மாற்றிக் கொள்ள இருக்கிறார். இஸ்லாம் மதத்திற்கு யுவன் மாறியது அறிந்ததே.

சூர்யா தனது ‘வாட்ஸ் அப்’ போஸ்டரில்‘ஐ’ படத்தை வைத்திருக்கிறார். தனது படத்தையே வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சூர்யாவின் இந்தச் செய்கை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

வெளிநாடுகளுக்கு டூர் போனாலும் சரி, நம்மூரில் லேட்டஸ்டாக அறிமுகப்படுத்தினாலும் சரி, விதவிதமான ஹேண்ட் பேக்குகளை வாங்கி வருகிறார் சுஹாசினி. வீட்டில் கிட்டத்தட்ட ஒரு பீரோ முழுக்க ஹேண்ட் பேக் கலெக்ஷனை வைத்திருக்கிறார் சுஹாசினி.

படங்களைத் தேர்வு செய்வதில் இப்போது வித்தியாசப்படுத்துகிறார் கார்த்தி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் ஒரு ஃபேன்டஸி கதையை அவரிடம் சொல்ல, ஓகே சொல்லிவிட்டார் கார்த்தி. படத்துக்கு ‘காஷ்மோரா’ என பெயர் வைக்க திட்ட மிட்டு இருக்கிறார்கள்.

‘ஜில்லா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’ என இரண்டு படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தாலும், சரியான பிரேக் கிடைக்காமல் வருத்தத்தில் இருக்கிறார் ஜீத்து ஜோஸப். இப்போது ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடிப்பது ஜீத்துவுக்கு பெரிய சந்தோஷம். கதையில் திருப்பம் தருகிற கேரக்டரே தன்னுடையது என்பதால், ‘‘இந்தப் படத்துக்கு அப்புறம் தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும்’’ என்கிறார்.

நடிகையிலிருந்து புரொட்யூசராக புரொமோஷன் ஆகிவிட்டார் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. ‘ஜெய்ஹிந்த் 2’ படத்திற்கு ஐஸ்வர்யா இணை தயாரிப்பாளர். படத்தின் இசை வெளியீட்டுக்கு மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரை வரவழைத்து கௌரவப்படுத்தியது அர்ஜுன் ஃபேமிலி.

‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மூன்று ரஜினி ‘டூப்’கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓடுவது, க்ளோசப்பில் கால்களை இயக்குவது, படிகளில் வேகமாக நடப்பது என எல்லா செயல்களையும் அவர்களே செய்கிறார்கள். ரஜினியை களைப்பில் ஆழ்த்த விடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

‘ஜீவா’வை முடித்துவிட்டு, அடுத்து விஷாலை இயக்குகிறார் சுசீந்திரன். விஷாலுக்கு யாரை ஜோடி சேர்க்கலாம் என யோசித்தபோது, இதுவரை அவருடன் ஜோடி சேராத ஹீரோயின்கள் யார் யாரென லிஸ்ட் எடுத்த சுசீந்திரன், தமன்னாவை செலக்ட் செய்ய, உடனே டிக் அடித்து விட்டார் விஷால்.

ஐபோன் வைத்திருக்கிறார் இசைஞானி. அவரது செல்லுக்கு யார் எஸ்.எம்.எஸ் அனுப்பினாலும், ரெக்கார்டிங்கில் இல்லாத சமயங்களில்இசைஞானியின் பதிலும் அவர்களை சென்றடையும் அதே ஸ்பீடில்!

அஜித்திடம் வரிசையாக நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தாலும், இது ரொம்ப முக்கியமான ஒன்று. லேட்டஸ்ட் மாடலில் எந்த எலெக்ட்ரானிக் பொருளை வாங்கினாலும், அதன் யூசர்ஸ் கைடையும் வாரன்டி விபரங்களையும் வரி விடாமல் படித்த பிறகே அதைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்.

விஜய் சேதுபதி கொஞ்சம் கொஞ்சமாக சிவகார்த்திகேயனின் சம்பளத்தை நெருங்குகிறார். அதோடு அவர் நடிக்கும் நாலு படங்களின் ரிலீஸ் தேதி வரிசையாக வருகிறது.

காமெடி நடிகர் சென்ட்ராயனின் திருமண வரவேற்பு, விஜய்யின் ஷோபா கல்யாண மண்டபத்தில் நடந்தது. ‘‘ஒரு காலத்தில் இதே மண்டபத்தில் காய்கறி நறுக்கும் வேலை செஞ்சிருக்கேன். இன்னிக்கு இங்க என்னோட திருமண வரவேற்பு நடக்குது’’ என்று நெகிழும் சென்ட்ராயன், நடிக்க வருவதற்கு முன்பு சினிமாவில் டச்சப் பாயாகவும் வேலை செய்திருக்கிறார்.

விஜய்யை ஹீரோவாக்கி ஒரு படம் தயாரித்து விடும் முடிவில் இருக்கிறார் தனுஷ். அதற்காக நல்ல இயக்குநர், கதையைத் தேடி வருகிறார்.

தெலுங்கில் ‘ராணி ருத்ரமாதேவி’, ‘பாகுபாலி’ படங்களின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, ஓய்விற்காக ஆஸ்திரியா சென்றுள்ளார் அனுஷ்கா. வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு ஹாலிடே ட்ரிப் அடிக்கும் அனுஷ்கா, இம்முறை ரகசியமாக பாய் ஃப்ரெண்டுடன் சென்றுள்ளதாக ஆந்திர பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. அடுத்த வாரம் சென்னை திரும்பும் அவர், கௌதம் மேனன் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.