ராணாவும் த்ரிஷா வீடும்!



கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில். ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்.

* நார்வேயில் நடந்த ‘டாணா’ ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு விட்டு வந்திருந்தார்கள் சிவகார்த்திகேயனும் ஸ்ரீதிவ்யாவும். ‘விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வந்திருந்தால் என்ன பேசியிருப்பார்’ என சிவகார்த்திகேயன் மிமிக்ரி பண்ண, கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது.

* சில ஹீரோயின்களுக்கு முதல் வரிசையில் உட்கார நிறைய போட்டி. அதுவும் சிரஞ்சீவி, சிம்பு, ராணா, சிவகார்த்திகேயன் அருகில் உட்கார்வதற்கு அதிக டிமாண்ட்.

* விழாவில் எல்லோரையும் ஈர்த்தது டைரக்டர் விஜய் - அமலா பால் ஜோடி. இவர்களுக்கு சிறந்த இளம் ஜோடி விருதை பூர்ணிமா பாக்யராஜ் கொடுத்தார்.

* சிம்பு, லட்சுமி மேனன், தமன்னா, ஸ்ரேயா, பிரனீதா, கிரித்தி கர்பாந்தனா, தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் மிக்ஸ் பாடல்களுக்கு ஆடினர். ‘லூஸுப் பெண்ணே லூஸுப் பெண்ணே’, ‘எவன்டி உன்னப் பெத்தான்’ பாடல்களுக்கு சிம்பு ஸ்டெப்ஸ் போட, பறந்து அதிர்ந்தது விசில்.

* தமன் இசையில் தெலுங்கில் பாடிய பாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடகர் விருதைக் கொடுத்தார்கள். தனுஷுக்கான சிறந்த நடிகர் விருதை அவர் வராததால் சிம்பு வாங்கிக்கொண்டார்.

* அசினுடன் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டம் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

* நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிவா, தெலுங்கு நடிகர் ராணாவிடம், ‘‘உங்களுக்கு தமிழ் தெரியுமா?’’ என்று கேட்க, ‘‘சென்னையிலதான் பிறந்து வளர்ந்தேன்’’ என்றார் ராணா. ‘‘சரி, சென்னையில எங்க விட்டாலும் கரெக்டா போயிடுவீங்களா?’’ என்று சிவா கேட்டார். ‘‘ஆமா. எங்க விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்’’ என்று ராணா சொல்ல, நட்சத்திர வரிசையில் ‘குபுக்’ ஒலி.

- ஏக்ஜி