காலையில் கடற்கரையில் வாக்கிங் போகும்போது அவனை அடிக்கடி பார்ப்பேன். முப்பது வயது இருக்கும். எண்ணெய் படாத பரட்டைத் தலை, சீர் செய்யப்படாத தாடி, ஒரு பழைய சட்டை - பேன்ட். அவனைப் பார்த்ததும் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் தெரு நாய்கள் அனைத்தும் சூழ்ந்துகொள்ளும். அவன் பாக்கெட்டிலிருந்து பிஸ்கட்டுகளை எடுத்து அவற்றிற்குப் போடுவான். ஆளுக்கு ஒன்றாக கவ்விக் கொண்டு கலைந்து சென்றுவிடும்.

இந்தத் தெருவில்... பக்கத்துத் தெருவில்... வேறொரு ஏரியாவில் என அவனை அடிக்கடி பார்க்க நேர்ந்தது. எப்போதும் அவனைச் சுற்றி நாய்கள், அவன் கையில் பிஸ்கட், அவற்றின் வாலில் நன்றி.
ஒருநாள் காபி ஹவுசில் அவனைப் பார்த்தேன். ஓரமான மேஜையில் தனியாக காபி குடித்துக்கொண்டிருந் தான். ஆவல் தாங்காமல், நேராகச் சென்று அவனுக்கு எதிரில் உட்கார்ந்தேன். அவன் என்னை அடிக்கடி பார்த்திருப்பதால் பரிச்சயமாக நோக்கினான். காபிக்கு ஆர்டர் பண்ணிவிட்டு அவனோடு பேச்சுக்கொடுத்தேன். அவன் பெயர் நமச்சிவாயம்... படிப்பு பி.காம் பாதியில் விட்டாச்சு... ஊதாரித்தனமான வாழ்க்கை...
‘‘அதென்ன உனக்கு நாய்கள் மீது அவ்வளவு பிரியம்..?’’‘‘நமக்கு பொழைப்பு ராத்திரியிலதான்! முன்னெல்லாம் என்னைப் பார்க்கும்போது பயங்கரமா குலைச்சுதுங்க. இப்பல்லாம் நண்பர்களாயிடுச்சுங்க!’’‘‘என்ன வேலை செய்றே?’’‘‘திருடன் சார்!’’