தமிழ் ஸ்டுடியோ அருண் 34
அனுபவங்களின் வாயிலாக...
‘‘நாம் மீண்டும் சந்திப்போம், ஒருவேளை சந்திக்க முடியாமலும் போகலாம். இடைப்பட்ட காலங்களில் எதுவும் நடக்கலாம் !’’- உலகப் புகழ்பெற்ற ‘Make Way for Tomorrow’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், வயதான தம்பதிகளுக்கு இடையே நிகழும் உரையாடல்தான் இது. வயதான பெற்றோர்களை பிள்ளைகள் எப்படி அலைக்கழிக்கிறார்கள், அவர்களை எப்படி அக்கறையற்று நடத்துகிறார்கள் என்பதை குறுக்கு விசாரணை செய்கிறது இந்தத் திரைப்படம். ஆனாலும், வயதான தம்பதிகள் இருவரின் நம்பிக்கை மிகுந்த பயணம்தான் படத்தின் பிரதானம்.
ஒரு குறிப்பிட்ட தேசத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும், எல்லாவிதமான கலாசாரச் சூழலிலும் வயதானவர்கள் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அதில் வெகு சிலர் மட்டுமே தங்களுக்கான பாதையை சிறப்பாகத் தெரிவு செய்து, வயோதிகத்தைக்கூட வரமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
‘உங்களுக்கு வயதாகி விட்டது, வாழ்க்கை முடியப் போகிறது, அந்திமத்தை நோக்கி நீங்கள் பயணிக்கலாம்’ என்கிற வகையில்தான் பொதுப் புத்தி சமூகம் அவர்களை நடத்தி வருகிறது. அதிலிருந்து மீண்டெழுந்து, ‘வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விடலாம்’ என்கிற உந்துதல் பெற்ற வயோதிகர்களை பதிவு செய்வதன் வாயிலாக, மற்ற புறந்தள்ளப்பட்ட முதியவர்களுக்கும் நம்பிக்கை அளிக்க முடியும். அதைத்தான் செய்கிறது ‘ஆயா’ குறும்படம்.
ஒரு அனுபவத்தை பார்வையாளனுக்குள் கடத்தும் சினிமாக்கள் தமிழில் மிகக் குறைவு. காரணம், நாம் கதைசொல்லிகளின் மரபில் வந்தவர்கள். நமக்கு தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என கதைசொல்லலின் வடிவ நேர்த்தி தேவைப்படுகிறது. ஆனால் ‘சினிமா என்பது வெறுமனே கதை சொல்லும் ஊடகம் அல்ல’ என்கிற ஐசன்ஸ்டீன் கூற்றை நாம் புறந்தள்ளி விட முடியாது. அதனை அவ்வப்போது ஆயா போன்ற குறும்படங்கள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.
கணவனை இழந்து, பிள்ளையின் அரவணைப்பு கூட இன்றி, தானே சுயமாக சம்பாதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆயா. நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் எல்லாம் நியாய விலைக் கடைகளில் அரிசியைத் தவிர்த்து மற்ற பொருட்களை மட்டுமே வாங்கிச் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் ரேஷன் அட்டைக்குரிய அரிசியை தனக்குக் கேட்டு வாங்குவார் ஆயா.
பின்னர் அந்த அரிசியை, வட நாட்டு இளைஞர்கள், அக்கம் பக்கத்தினருக்கு கொஞ்சம் கூடுதல் விலை வைத்து விற்பார். இதுதான் ஆயாவின் பிரதான தொழில். இடையில் வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.
ஆயாவுக்கு நாள் முழுக்க எதையாவது கொறித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக பல கடைகளுக்குச் செல்கிறார். புதிதாக பீட்சா வாங்கிச் சாப்பிட ஆசைப்படுகிறார். ஆனால் அதன் சுவை பிடிக்கவில்லை.
பள்ளிக்கூடத்திற்கு ஃபீஸ் கட்ட வேண்டும் என்று அவரது மகன் ஐந்நூறு ரூபாய் கேட்டு பேரனை அனுப்புகிறான். ‘‘உங்க அப்பன் என்ன என்கிட்ட குடுத்தா வச்சிருக்கான், ஆயாகிட்ட காசு இல்லன்னு சொல்லு போ’’ என்று பேரனை விரட்டி விடுகிறார். ஆனால் மறுநாள் பள்ளியில் பேரனுக்கான ஃபீஸ் தொகையைக் கட்டுகிறார்.
அப்போது தனது பேரனை பள்ளியில் கொண்டுவந்து விடும் இன்னொரு ஆயாவிடம், ‘‘இதை எல்லாம் நீ ஏன் செய்ற?’’ என்று கேட்கிறார். ‘‘இதைக்கூட செய்யலைன்னா பையன் சோறு போட மாட்டான்’’ என்று பதில் வருகிறது. ‘‘நாமளே உழைச்சி, சொந்தக் கால்ல நிக்கணும். அப்பதான் சுதந்திரமா வாழ முடியும்’’ என்று சொல்லிக்கொண்டே அருகில் உள்ள நியாய விலைக் கடைக்கு நகர்கிறார் ஆயா.
மிகச் சாதாரண கதைதான். ஆனால் ஆயாவின் அனுபவங்களைக் காட்சிகளாகப் பார்க்கும்போது, நமக்குள் ஒரு புத்துணர்ச்சி கலந்த நம்பிக்கை உருவாகிறது. நியாய விலைக் கடைக்கு வரும் கொஞ்சம் வசதியான இளைஞனைப் பார்த்து, ‘‘தம்பி! உன் கார்டு பச்சை கார்டா, வெள்ளைக் கார்டா?’’ என்று விசாரிக்கத் தொடங்கி, அந்த இளைஞனையே தன்னுடைய வீடு வரை அரிசி மூட்டையைத் தூக்கி வரச் செய்கிறார்.
‘‘டீ சாப்டறியா?’’ என்று கேட்டு, அடுத்த நொடியே அவனது பதிலை எதிர்பார்க்காமல் ‘‘சாப்டாட்டி போ’’ என்று நையாண்டி செய்கிறார். ஒவ்வொரு நொடியையும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவராக வலம் வருகிறார் ஆயா.
பீட்சாவுக்கு ஆசைப்பட்டு, பீட்சா கடையில் ஆயா நடத்தும் ரகளையும், பின்னர் ஆசையாக பீட்சாவை சுவைத்து, ‘‘பீட்சாவாம் பீட்சா... இதுக்கு பேசாம ‘...’னு பேர் வச்சிருக்கலாம்’’ என்று கோபம் கொள்வதும் யதார்த்தமான நிகழ்வு. பீட்சாவை விமர்சனம் செய்வது ஒருவகையில் இயக்குனரின் கலாசாரக் கோபமாகவே வெளிப்பட்டிருக்கிறது.
பீட்சாவை ஆயா குப்பையில் போட்டதும், ஒரு நாய் வந்து அதைத் தின்கிறது. ஆயா குப்பையில் கொட்டுவதோடு முடித்திருந்தால், அது கதாபாத்திரத்தின் நோக்கமாக இருந்திருக்கும். ஆனால், காட்சியை விசாலப்படுத்தி, இயக்குனர் தன்னுடைய அரசியலையும் முன்வைக்கிறார்.
‘ஆயா’ என்கிற பெயரிலும் கூட அரசியல் இருக்கிறது. ‘ஆயா’ என்றால் என்ன சாதி, ‘பாட்டி’ என்றால் என்ன சாதி என்பதைக் கூட பலர் கணித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட தேசத்தில், நம்முடைய படங்களும், ஏதோ ஒரு வகையில் எதிர் அரசியலைப் பேசித்தான் ஆகவேண்டும்.
சாதாரணமான ஒரு ஆயாவின் அனுபவம், ஒரு நல்ல சினிமாவாக இப்படித்தான் மாறுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், காட்சியமைப்புகளும் எடுத்துக்கொண்ட சம்பவங்களும். முதல் காட்சியிலேயே ஆயா சில நிமிடங்கள் நடந்து செல்வதைக் காட்டுகிறார்கள்.
காட்சிகள் மெதுவாகவே நகர்கின்றன. இடையிடையே தெருவின் லேண்ட்ஸ்கேப் ஷாட்களைக் காட்டுகிறார்கள். ஆயாவின் நொறுக்குத் தீனி ஆசைகளை காட்சிகள் மூலம் விவரிக்கிறார்கள். எல்லாக் காட்சிகளும் தேவையான நிதானத்தோடுதான் நகர்கின்றன. தமிழ் சினிமா எப்போதும் வேகமாகவே கதை சொல்லி, பார்வையாளனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் வேகமாக நகரும் காட்சிகள், அதே வேகத்தில் நம் மனதிலிருந்து வெளியேறி விடுகின்றன. நிதானமாக நகரும் காட்சிகளே மனதுக்குள் ஆழப் பதியும்.
அதனால்தான் பல வெளிநாட்டுத் திரைப்படங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் சிலரால், சில நாட்களுக்கு முன்னர் பார்த்த தமிழ்த் திரைப்படத்தின் கதையை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
இறுதிக் காட்சியில் எவ்வித முடிவும் இல்லாமல், ஆயா தன்னுடைய அடுத்த வேலையை நோக்கி நகர்வது மிகச் சிறந்த ஆக்கம். ஒரு அனுபவத்தை காட்சிகளாகப் பதிவு செய்யும்போது, அதில் ஒரு முடிவோ, தொடக்கமோ எதற்கு? எல்லா விஷயங்களுக்கும் தொடக்கமும் முடிவும் அவசியமில்லையே!
தனது பேரனை பள்ளியில் கொண்டுவந்து விடும் இன்னொரு ஆயாவிடம், ‘‘இதை எல்லாம் நீ ஏன் செய்ற?’’ என்று கேட்கிறார். ‘‘இதைக்கூட செய்யலைன்னா பையன் சோறு
போட மாட்டான்’’ என்று பதில் வருகிறது.
படம்: ஆயா இயக்கம்: மகாவிதுரன்
நேரம்: 17.02 நிமிடங்கள் ஒளிப்பதிவு: சுதர்சன் ஜெயராஜ்
இசை: தினகர் உதய சங்கீதன் பார்க்க: http://youtu.be/OULWc53V250
பொறியியல் படித்துவிட்டு, மூன்று ஆண்டுகளாக திரைப்படம் பற்றிய கனவோடு சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், ‘ஆயா’ குறும்படத்தின் இயக்குனர் மகாவிதுரன். ‘‘என் ஆயா எப்போதும் எதையாவது சாப்பிட்டபடி இருப்பார். 65 வயதிலும் அவரது நொறுக்குத் தீனிப் பழக்கம் குறையவே இல்லை.
ஆனால் அவருக்கு பீட்சா பிடிக்காது. எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருப்பவர். குதூகலமானவர். அவரை அருகிலிருந்து பார்த்ததால், அந்த அனுபவங்களை ஒரு சினிமாவாகப் பதிவு செய்ய ஆசைப்பட்டேன். அதன் காட்சி வடிவம்தான் இந்தக் குறும்படம்’’ என்கிறார் மகாவிதுரன்.
‘‘குறும்படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றியிருந்தேன். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள், ‘இதைப் பெரிய படமாக எடுக்கலாமே’ என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால், நானே எனக்கான சினிமா பற்றிய புரிதலை உரசிப் பார்க்க விரும்புகிறேன். சினிமாவை குறைந்தபட்சம், அதன் அழகியலோடு அணுகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே பெரிய படம் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்’’ என்கிறார் இவர்.
(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி