எனக்கு எல்லாமும் ஆனவர் கௌதமி!



கமல் ஸ்பெஷல் பேட்டி

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘‘உங்களின் அடுத்த வாரிசு என சொல்லும்படியாக இங்கே யாரையாவது குறிப்பிட விரும்புவீர்களா? அல்லது அதற்கான முன்முனைப்புகளை யாரிடம் காண்கிறீர்கள்?’’‘‘நான் என்ன குறிப்பிட... அதான் சுத்தி இருக்காங்களே!

அடுத்த வாரிசுதான் இருக்கணுமா? நடிகையா இருக்கக் கூடாதா? ஸ்ருதி, அக்ஷரா சொல்லக் கூடாதா... சுப்பு கூட நினைச்சா வந்திடுவாங்க. எல்லோரும் என் பிள்ளைகளா இருக்கலாம். நானே சிவாஜி பிள்ளைதான். ஆனா, அவங்க வீட்டுலயா நான் பிறந்தேன்? நான் சின்னையா மன்றாடி யார் பேரன் கிடையாது.

ஆனா, சிவாஜியின் மகன். இது எப்படி நிகழ்ந்தது?! அது மாதிரி நிகழ வாய்ப்பு உண்டு. சிவாஜிக்கே நான் வரப்போறேன்னு தெரியாது. எனக்கு முப்பது வயசாகும் வரை அவரோட மகன்னு அவருக்குத் தெரியாது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவர் உணர்ந்தார். நானும் பார்த்தேன். ‘அண்ணலும் நோக்கினார்; நானும் நோக்கினேன்;’

 அவ்வளவுதான்... கண்கள் கலந்தன. காலைத் தொட்டுக் கும்பிட்டேன். ‘என் மகன்தான்’னு சொல்லிட்டார். இதுவும் நிகழ்ந்ததுதான். பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தினார். ஒரு மூணு பேரையாவது நான் அறிமுகப்படுத்தாமல் போனால் நான் நன்றி கெட்டவன் ஆவேன். நான் செய்ய வேண்டிய கடமை இது!’’

‘‘சினிமாவில் அறிவுக்கும் திறமைக்கும் முதலிடம் கிடைக்கிறதில்லை... உங்க கருத்து என்ன இதிலே?’’

‘‘கண்டிப்பா கிடைக்கும். என்.எஸ்.கேக்கு யார் இடைஞ்சல் செய்தாங்க? சிவாஜிக்கு பண்ண முடிஞ்சதா? சிவாஜி இடத்தை எம்.ஜி.ஆர் தட்டிவிட்டார்னு யார் சொல்றது? சிவாஜி இடம் தனி; எம்.ஜி.ஆர் இடம் தனி! கணித மேதை ராமானுஜத்திற்கு கிடைச்சது தனி இடம். ஜி.யூ.போப், வீரமாமுனி வருக்கும் அவர்கள் செய்த சாதனைகளுக்கும் கவனம் இருந்தது. யாரையும் கம்பேர் பண்ணக் கூடாது. சாதனைகளுக்கான இடம் கொடுக்கப்பட்டே தீரும். இரண்டு சாதனைகளையும் போட்டுக் குழப்பாதீங்க.

 நடிப்புன்னா எம்.ஜி.ஆரே ஏத்துக்கிட்ட பெரிய நடிகர் சிவாஜிதான். எம்.ஜி.ஆர், தான் நல்ல நடிகர்னு பேச மாட்டார். நட்சத்திர அந்தஸ்து, வியாபார முடிவு, வியாபார வெற்றியால கிடைக்கறது தான் முதலிடம்னு நினைச்சால் அந்த மாதிரி ஒரு ஏமாளி கிடையாது. புத்தன் தோற்றான், பரதன் தோற்றான், காந்தி தோற்றார், ஹிட்லர் பணக்காரனா செத்தான். எது பெருமைன்னு நீங்க சொல்வீங்க? கிடைக்க வேண்டிய புகழை அவரவர்களுக்குக் கிடைக்காமல் விடாது இந்தச் சமூகம்.

அரசியலில் சிவாஜியின் உழைப்பு எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லை. இதுதான் உண்மை. மக்களோடு இருக்க அவருக்கு டயமே இல்லை. அத்தனை படம் பண்ணியிருக்கார். காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருச்சா அவருக்கு வீட்டு ஞாபகமே இருக்காது. ஸ்டூடியோதான். எம்.ஜி.ஆர். அப்படியில்லை;

எம்.எல்.ஏ ஆனதும் படம் ரெண்டாம் பட்சம்தான். என்னை எடுத்துக்கிட்டீங்கன்னா, சம்பளத்தைக் கூட யாரும் குறைச்சுக் கொடுக்கிறதில்லை. ரஜினியையும் சரி, என்னையும் சரி, உதாசீனப்படுத்தலை. நாங்க இரண்டு பேரும் எங்களைப் புரிஞ்சுக்கிட்ட அளவு, எங்க விமர்சகர்கள் புரிஞ்சுக்கிட்டா போதும்!’’

‘‘ஐந்து வயது பெண்ணைக் கூட பாழ்படுத்துகிற வரைக்கும் காலம் கெட்டுப் போச்சு. என்னதான் இங்கே பிரச்னை?’’

‘‘முன்னாடி ‘தேவடியாள் தெரு’ன்னு தனியா இருந்தது. வேர்ச்சொல்லைப் பார்த்தால் அது கெட்ட வார்த்தை கிடையாது. தேவருக்கு அடியாள்தான். எல்லா கெட்ட வார்த்தையும் அடையாளத்தை மட்டுமே குறிக்கும். பின்னாடி அது கெட்ட வார்த்தை ஆகிடும். அந்தத் தெருவே தவறுன்னு கற்புக்கு புது இலக்கணம் சொல்லி நீக்கிட்டோம். இப்ப தேவடியாள் இல்லாத தெருவும் கிடையாது. என் சகோதரியும் என் தாயாரும், என் மகளும் அதே தெருவில் வசிக்க வேண்டிய நிலைதான். பெருசா மாறலை. அது ‘வேணுமா, வேண்டாமா’ன்னு சொல்லலை.

செக்ஸ், வாழ்க்கையின் ஒரு பகுதின்னு புரிஞ்சுக்கலைன்னா என்னாகும்? பிரஷர் குக்கருக்கு இறுக்கி மூடி போட்டால் விசில் அடிக்கும். பிரஷர் வெளியேறலைன்னா வெடிக்கும். பஸ்ஸில் கற்பழிக்கிறவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எல்லாம் சரியாகிடும்னு நினைப்பது தப்பு. கல்யாணம் பண்ணினால் எல்லாம் சரியாகப் போயிடும்னா, ராமாயணம் கிடையாது. ராவணன் இங்கே வந்திருக்கவே மாட்டான். முன்னாடி வசந்த விழா நடந்ததெல்லாம் அர்த்தம் இல்லாமல் செய்யலை.

பெண்ணைக் கூட ‘இது நடக்கவே கூடாத விஷயம்’னு சொல்லித்தான் தயார்படுத்துறோம். பூப்புனித நீராட்டு விழாவில் ஆரம்பிச்சு எல்லாமே இதற்குத்தான் சொல்லிக்கிட்டே இருக்கோம். முதலிரவுக்கு ஏற்பாடு செய்து எல்லோரும், ‘கெக்கே பிக்கே’னு சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க... சின்னப்பிள்ளையாக இருந்தப்போ எனக்கு அது அசிங்கமாத் தெரிஞ்சது. என்னை மட்டும் ‘கெட்ட வார்த்தை பேசக்கூடாது’ன்னு சொல்லிட்டு, மொத்தமே கெட்ட வார்த்தையா இருக்கேன்னு ஆச்சரியமா இருக்கும்.

எல்லோரும் ஒரு பொய்யை வச்சுக்கிட்டு விளையாடியபடி இருக்கோம். கொக்கோகம், காமசூத்ரா எழுதினது நாமதான். எப்படி இதை எழுதினோம்னு யோசித்தால் அதற்காக பதற்றப்பட வேண்டியதில்லை. பொம்பளைகளை அடக்குறதுக்கு ஆண்கள் பயன்படுத்தினதுதான் கற்பு.

பெரியாரை இதில் வழிமொழிதலைத் தவிர, வேறு வழியில்லை. பெரும் காவியம் எதிலும் சரியான அப்பா, அம்மாவிற்கு பொறந்தவங்க யாருமே கிடையாது. அங்கேயும் பெண்கள் மதிக்கப்படலை. மகாபாரதத்தைக் காட்டினால், அது பெண்டாட்டியை வச்சு சூதாடின கதை. அந்த வம்சாவளி பஸ்ஸில் வச்சு ‘ரேப்’ பண்ணினா ஆச்சரியப்பட என்ன இருக்கு?’’

‘‘காதல், பிரிவு... எல்லாம் உங்க வாழ்க்கையில் தொடர்ந்து நடந்துக்கிட்டே வந்திருக்கு. இந்த வயதில் அதையெல்லாம் எப்படி பார்க்கத் தோணுது?’’

‘‘எனக்கு இது சௌகரியமா இருக்கு. பொய் என்றால் ஞாபகம் வச்சுக்கணும். இப்ப மறந்து போயிட்டா மத்தவங்க ஞாபகப்படுத்துறாங்க. இந்த நேர்மைதான் சௌகரியம். என் பிழைகளைத் திருத்திக்கொள்வதுதான் என் கேரியரே. ஒரு படத்தில் சரியா நடிக்கலைன்னா ‘அடடா, நல்ல கதை.

நாமதான் தப்புப் பண்ணிட்டோம்... இனி மெருகேத்துவோம்’னு நினைப்பேன். என் வாழ்க்கையும் அப்படித்தான் நடந்துக்கிட்டு வருது. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அது நீடிக்கணும் என்பதுதான் எனக்கும் ஆசை... என் துணைவியாருக்கும் ஆசை!’’‘‘கமல்-கௌதமி உறவு தொடங்கியது, இந்த இடத்தில் வந்து நிற்பது... எப்படி இருக்கு? உறுத்தல் இல்லாத இந்த உறவைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!’’

‘‘அதுதான் கரெக்ட். எங்க ரெண்டு பேர் பெயரைச் சொன்னீங்க இல்லையா... அதுதான் சரி. ரெண்டு உருவங்களும் பெயர்களும் சொல்லப்படுகின்றன. நீங்களும் உங்க மனைவியும்னு சொல்லலை. அதில் ஒரு உருவம் அழிஞ்சு போயிடுது. எங்க ரெண்டு பேருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை.

‘இப்படியெல்லாம் பேசிட்டிருந்தா... உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்’னு நாங்கள் ஜோக்கடிச்சு மிரட்டுவோம். எங்களை நண்பர்கள்னு சொன்னால் பிழையா இருக்காது. காதலர்கள்னு சொன்னால் தப்பில்லை. உறவுன்னு அழைக்கலாம். எல்லாமும் ஆனவர் கௌதமி!’’‘‘ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்ன நினைச்சீங்க?’’

‘‘ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அதற்கு விபத்தோ மற்ற எதுவுமோ காரணமில்லை; ரஜினிதான் காரணம். அவர் நல்லா ஆனதற்கும் அவர்தான் காரணம். நல்ல நேரத்தில் புரிஞ்சுக்கிட்டு சரி செய்துட்டார்.

இப்ப ஒரு நாள், ‘தெரியுமா உங்களுக்கு, எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீங்க’ன்னு சொன்னேன். ‘எது... எது... எதைச் சொல்றீங்க’ன்னு கேட்டார். ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்தி சொல்லலை. அதுதான் அதிர்ஷ்டம்னு நீங்க நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க. இப்ப நீங்க என்கிட்டே பேசிக்கிட்டு இருக்கிறது, அதைவிட அதிர்ஷ்டம்.

நீங்க இரண்டுக்கும் உழைச்சி இருக்கீங்க’ன்னு சொன்னேன். ‘கரெக்ட், கரெக்ட், கரெக்ட்’னு கை கொடுத்தார். இப்பதான் ரஜினிக்கு அறிவுரை சொல்ல வாய்ப்பு கெடைச்சது. இல்லாட்டா, எனக்குத்தான் அவர் சொல்லிக்கிட்டே இருப்பார்.

வழக்கமா சில விஷயங்களில் வீம்பு பிடிப்பார். அவர் நலன் பேணி, அவருக்காகவும், அவர் ரசிகர்களுக்காகவும் கவனமா இருந்து மீண்டும் படம் செய்கிறார் என்பது தனி சாதனை. நான் வாழ்த்து மட்டும் சொல்லலை. வாழ்த்தைத் தாண்டி அவர் அப்ளாஸ்க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்!’’

‘‘எழுத்தாளர்கள் நேரடியா சினிமாவுக்கு வந்துட முடியுமா?’’

‘‘இப்ப ஷேக்ஸ்பியர் வந்தாலும், கம்பன் வந்தாலும் கொஞ்சம் ஸ்கிரீன் ப்ளே படிச்சிட்டுத்தான் வரணும். ‘பிரிதிவிராஜ னுக்கு குதிரை ஓட்டத் தெரியும். சைக்கிள் ஓட்டத் தெரியுமா’ன்னு இங்கே கேப்பாங்க. இதை அவமானமா சொல்லலை. குதிரையே ஓட்டியவர்க்கு சைக்கிள் ஓட்டுறது கஷ்டம் கிடையாது. அட்லீஸ்ட் இரண்டு நாள் பழகணும். பழகாமல் நேரா வந்திடுவேன்னு சொன்னால் அசிங்கப்பட்டு போகணும்.

 இது எல்லோருக்கும் பொருந்தும். சுஜாதா இதைப் புரிஞ்சுக்கிட்டார். ஜெயகாந்தனுக்கு புரிஞ்சது. பாலகுமாரனுக்குத் தெரிஞ்சது. சில பேர் ‘எழுதறது எல்லாம் எழுத்துதானே’ன்னு சொல்றாங்க. அப்படியில்லை!’’

‘‘மோடியின் தூய்மை பிரசாரத்தில் உங்கள் பெயரை அறிவித்தாரே...’’

‘‘அது பதவி அல்ல... பொறுப்பு. சான்றிதழ் மாதிரித்தான் நினைக்கிறேன். இதை முப்பது வருஷமா எங்க நற்பணி இயக்கத்தில் செய்துக்கிட்டு இருக்கோம். நாங்கள் எண்ணெயா இருக்கிறோம். இப்பத்தான் அவங்க எள்ளுன்னு சொல்றாங்க. இங்கே எங்கள் இயக்கப்பணி செய்தவர்களின் வியர்வை மழை அங்கேயும் பெய்திருக்கு.

 ‘ஐயா, நம்மளை பிற நடிகர்களும் காப்பி அடிக்கிறாங்களே’ன்னு சொன்னாங்க. ‘ஒண்ணும் தப்பில்லை, நல்லது நடந்தா நீங்களும் அதில் கலந்துக்கங்க’ன்னு சொல்லியிருக்கேன்.’’‘‘ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அதற்கு விபத்தோ மற்ற எதுவுமோ காரணமில்லை; ரஜினிதான் காரணம். அவர் நல்லா ஆனதற்கும் அவர்தான் காரணம்.’’

நா.கதிர்வேலன்