‘‘நிச்சயமா சூழ்நிலை ஒருத்தனை மாத்தும். அப்படி ஒருத்தனை மாத்தி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ படம். பிரபலமான வாக்கியம் என்பதால் மட்டும் அல்ல, கதைக்கும் பொருத்தமானது என்பதாலேயே இந்தத் தலைப்பு!
இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருத்தனை ஆழமாப் பார்த்தீங்கன்னா கதை... அவனோட வீடு வரைக்கும் தேடிப் போனா களம்!’’ - யதார்த்தமாகப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் அபிநிந்திரன். விளம்பர உலகில் முக்கியமானவர்.‘‘எப்படியிருக்கும் படம்?’’
‘‘இதில் வாழ்க்கையின் சில பாடங்கள் இருக்கு. ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்குது. நாம் ஒண்ணு நினைச்சா வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேர்கிற இடம் வேறயா இருக்கு. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.
தேடுதல்ங்கிற பேர்ல யதார்த்தத்தைத் தொலைக்கிற ஆள் நான் இல்லை. எனக்கு ஒரு படம்னா அது ஏதாவது செய்யணும். அதைப் பார்க்குற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரணும். சக மனுஷங்க மேல இன்னும் அன்பு கூடணும். அப்படி வாழ்க்கையில் நடக்கிறதை, நடந்ததைத்தான் எடுத்திருக்கேன். நேர்மை ஜெயிக்குமான்னு தெரியாது. ஆனா, நியாயம் கண்டிப்பா உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடக்கிறதை ஒரு படமா எடுத்திருக்கேன். இந்தப் படத்தை வழங்குகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!’’‘‘எல்லோருமே புதுமுகங்கள்...’’
‘‘அதுதான் எனக்குத் தேவைப்பட்டது. சினிமாவுக்குப் பழக்கமான முகமாக இருந்தாலும் எனக்கு சரியாகப்படணும் அந்த முகம். அந்த முறையில் ஜேபி, நரேன், கார்த்திக்குமார்னு நிறைய பேர் இருக்காங்க. ஒரு நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகா இருக்கும்.
ஆனால், வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டா எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துகொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதைன்னு சொல்லலாம். நல்லா ஒண்ணு கவனிங்க, முன்னாடியெல்லாம் நல்லவனா கெட்டவனான்னு வித்தியாசம் தெரியும். நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையே இப்போ வித்தியாசமே இல்லை. இவனுக்குள் அவன் இருக்கான்; அவனுக்குள் இவன் இருக்கான்.
இதில் ஹீரோ அதிரடியாக சண்டை பிடிக்கிறவன் கிடையாது. உங்களையும் என்னையும் போல சாமான்ய மனிதன்தான். அந்த வகையில் புதுமுகம் பிரவீன்குமார் மிகவும் பொருந்தினார். சனம் ஷெட்டி, ஷாலினி இருவரும் தங்களின் இயல்பான தோற்றத்தில் நின்று நடித்தார்கள். பாலசரவணன் வித்தியாசமான நடிப்பில் ஈர்ப்பார். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவர்களை மட்டுமே நான் இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
உண்மையில் யதார்த்த சினிமா பக்கம் தமிழ் சினிமா திரும்பி இருப்பது ஆரோக்கியமான மாறுதல். என் படத்தைப் பார்த்தால் வாழ்க்கையின் போக்குகள் புரியும். ஒரு சந்தோஷத்தின் கதவு மூடினால் இன்னொரு சந்தோஷத்தின் கதவு திறக்குது. அது தெரியாமல் நாம் எப்போதும் மூடிய கதவையே முறைச்சுப் பார்த்துக்கொண்டு நிற்கிறோம். இதில் இருப்பது பல சம்பவங்களின் சங்கிலித் தொடர்ச்சி. அதில் நிறைய சுவாரஸ்யமும், வாழ்க்கையில் தென்படுகிற அரிதான நகைச்சுவையும் உண்டு!’’‘‘பாடல்கள் எப்படியிருக்கும்?’’
‘‘பாடல்கள் அவசியமான இடங்களில் மட்டும்தான். கபிலன் வைரமுத்துவும், புகழேந்தியும் அர்த்தமான வரிகளைத் தந்திருக்கிறார்கள். ஜோஸ்வா ஸ்ரீதர் ‘காதல்’ படத்திலிருந்து மறக்க முடியாதவர். அவர்தான் இதில் மியூசிக். தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த கு.அழகிரிசாமியின் மகன் சாரங்கராஜன்தான் ஒளிப்பதிவு. வெகு அரிதாகப் படங்களை ஒப்புக்கொள்பவர்!’’‘‘நெடிய ஓவிய மரபு கொண்ட கே.எம்.ஆதிமூலத்தின் மகன் நீங்கள். தமிழ் சினிமா எப்படி ஈர்த்தது?’’
‘‘ராஜீவ் மேனனிடம் ஆரம்பித்த பயிற்சி இது. இந்தக் கதையை நிறைய பேரிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். கேட்டுவிட்டு ஹீரோவிற்கான அம்சங்கள் இல்லையே எனக் குறைப்பட்டிருக்கிறார்கள். இது ஹீரோவிற்கான படம் மட்டுமே இல்லைதான். இதில் வருகிற எல்லோருமே தவிர்க்க முடியாதவர்கள். விளம்பர உலகில் இருந்தது எனக்கு படத்தைக் குறித்த காலத்தில் முடிப்பதற்கும், சொல்ல வந்ததை சரியாகச் சொல்வதற்கும், காட்சி அழகுக்கும் உதவுகிறது. ஆனால், இவை எல்லாவற்றிலிருந்தும் சினிமா மாறுபட்டது. அதையும் உணர்ந்திருக்கிறேன்!’’
- நா.கதிர்வேலன்