கிச்சன் to கிளினிக்



உணவு விழிப்புணர்வுத் தொடர்

உணவுகள் உண்பதற்கானவை. உணவுகளை உணவுகளாகவே பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை எளிமையாகப் பெற முடியும். அப்படிப் பயன்படுத்தும்போது, உணவு பற்றி பெரிதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பசித் தேவையையும், ருசித் தேவையையும் அறிந்து அளவோடு சாப்பிட்டுவது மட்டுமே போதுமானது.ஆனால் உணவுகளை மருந்துகளாகப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது.

அதுகுறித்த முழுமையான புரிதலும், அதைப் பயன்படுத் தும் விதமும், அளவும் முக்கியத்துவம் பெறுகிறது. உணவு பற்றி முழுமையாக அறிந்த ஒரு உணவு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருத்துவமாக அதனைப் பின்பற்றுவதில் சிக்கல் இல்லை. ஆனால், போவோர் வருவோர் தரும் செய்தித் துணுக்குகளைக் கேட்டுக்கொண்டு பின்பற்றும்போது, உடல்ரீதியான பலவிதமான சிக்கல்கள் தோன்றுகின்றன என்பதைப் பார்த்தோம்.

‘உணவு’ என்ற சொல் ஆரோக்கியத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய சொல். இதை நாம் இப்படிப் புரிந்து கொள்வதே சரியானது. ஆனால், உணவை நோய்களோடு தொடர்புப்படுத்தி யோசிப்பது நம்முடைய வேலை அல்ல; மருத்துவர்களின் வேலை. நாம் சாப்பிடும் உணவுகளை எப்படி, எவ்வளவு, எப்போது பயன்படுத்தலாம் என்பதையும், அதன் பின்னால் இருக்கும் வணிக தந்திரங்கள், அரசியல், கலப்படங்கள் ஆகியவற்றையும் பற்றி நாம் யோசிப்பதற்கும் பேசுவதற்கும் நிறைய இருக்கின்றன. அவசியமான இந்த விஷயங்களை விட்டு விட்டு, ‘இந்த உணவை இதற்கு மருந்தாகப் பயன்படுத்தலாமா’ என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் அளவிற்கு நமக்கு நேரமில்லை; அது நம்முடைய வேலையும் இல்லை.

நவீன உணவுகள் தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் இரண்டு விஷயங்கள் குறித்துப் பேசி விடலாம்.முதல் விஷயம், ‘நவீன’ என்ற சொல்லைக் கேட்டவுடன் ‘அது முற்றிலும் தவறானது. நம் பாரம்பரியத்தில் இல்லாத விஷயமா’ என்ற வாதத்தை உடனே எடுக்கத் தேவையில்லை. புதியன எல்லாமே தேவையற்றவை என்ற அடிப்படையில் நம் ஆய்வைத் தொடரவேண்டியதில்லை. இன்னொன்று, உணவுகளில் இருபெரும் பிரிவுகளாக நாம் புரிந்து கொண்டிருக்கும் சைவம், அசைவம் குறித்து அறிந்து கொள்வது.

நவீனத்துக்கு உதாரணமாக, இன்று நாம் வீடுகளில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ்ஜை சொல்லலாம். இயற்கை மருத்துவர்கள் ‘ஃப்ரிட்ஜ்’ என்ற குளிர்சாதனப் பெட்டியின் பெயரைக் கேட்டவுடன் கோபமாகி விடுவார்கள். உணவுகளின் உயிர்ச்சத்தைக் கெடுக்கிறது என்பதும், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் ஆற்றல் சிதைந்து விடுகிறது என்பதும் அவர்கள் கருத்து.இதில் உண்மையும், கற்பனையும் கலந்து இருக்கிறது.

ஒரு ஃப்ரிட்ஜை நாம் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் நம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் ஃப்ரிட்ஜ் அதிகப் பயன்பாட்டில் இருக்கும்போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்களால் பாதிப்பும் அதிகம்தான்.நம் வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது என்றால், அதில் நாம் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பைக் கணக்கிடுங்கள். பீரோவுக்குள் நாம் வைக்கும் பொருட்களின் மதிப்பைக் கூட்டிப் பார்த்தால், அது பீரோவின் மதிப்பை விட கூடுதலாக இருக்கும்... சரிதானே? பீரோவின் விலை ஆறாயிரம் என்றால், அதனுள் நாம் வைக்கும் உடைகள், நகைகள், முக்கியப் பொருட்களின் விலை பீரோவின் மதிப்பை விட உயர்ந்ததாகத்தான் இருக்கும்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே இப்படித்தான். ஆனால் இதே கணக்கை ஃப்ரிட்ஜிற்கு போட்டுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஃப்ரிட்ஜில் நாம் வைத்திருக்கும் இட்லி மாவின் விலை, பழங்களின் மதிப்பு, தண்ணீர் பாட்டிலின் மதிப்பு இவற்றைக் கூட்டினால் ஃப்ரிட்ஜின் விலையைத் தொடவே முடியாது.இதுகூட பரவாயில்லை... ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தும்போது அதற்காக நாம் செலவளிக்கும் மின்சாரக் கட்டணத்தைக் கணக்குப் பார்த்தால், அதுவே உள்ளே இருக்கும் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும். மிக அவசியமான தேவை இருந்தால்
ஃப்ரிட்ஜைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்தக் கணக்குகளில்... செலவு அதிகமாவதும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் ஃப்ரிட்ஜின் மிக முக்கிய வேலைகளில் ஒன்று.

அதே நேரம், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்களின் ஆற்றல் அழிந்து விடும் என்பது உண்மையில்லை. இதை எப்படிப் புரிந்து கொள்வது? இயற்கையின் மூலம்தான் எந்த ஒன்றையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, கோழி முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறோம். இங்கு கோழி முட்டை என்பது நாம் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதற்கான முட்டை இல்லை. வீட்டில் கோழி வளர்க்கும்போது, அவை போடும் உயிருள்ள முட்டைகள்.

இந்த முட்டைகளை அடை வைத்தால் அதிலிருந்து குஞ்சுகள் பொறிக்கும். ஒரு கோழி தினசரி ஒரு முட்டை வீதம் இருபத்தோரு முட்டைகள் இடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கோழி இருபத்தோரு முட்டைகள் இடுகிற வரைக்கும் காத்திருந்து அதன் பிறகு அடை வைக்கிறோம். கோழியின் முதல் முட்டை சுமார் இருபத்தோரு நாட்கள் வரை வீட்டில் இருக்கிறது. இரண்டாவது முட்டை இருபது நாட்கள் இருக்கிறது. இப்படி அதிகபட்சமாக இருபத்தோரு நாட்கள் முட்டை கெடாமல் அதன் உயிர்த்தன்மையோடு இருக்கிறது.

இவற்றை அடை வைக்கும் போது ஒன்றிரண்டு முட்டைகள் உயிர்த்தன்மை கெட்டுப்போய் குஞ்சு பொறிப்பதில்லை. இவற்றை ‘கூமுட்டை’ என்று சொல்வார்கள். ‘உள்ளே விஷயம் இல்லாதவர்களை’ கூமுட்டை என்று திட்டுவது வழக்கம்தானே? சாதாரண சூழலில் இருபத்தோரு நாட்கள் கெடாமல் இருக்கும் முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதிக நாட்கள் முட்டைகளின் உயிர்த்தன்மை நீடிக்கிறது. அதே போல, வெளியில் சாதாரண சூழலில் வைக்கப்பட்ட முட்டைகளை விட ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டைகள் அதிக குஞ்சுகளைப் பொறிக்கிறது. அதாவது, ‘கூமுட்டைகள்’ குறைகிறது. ஃப்ரிட்ஜில் வைக்கப்படுகிற முட்டைகளின் உயிர்ச்சக்தி அழிந்திருந்தால் அவற்றிலிருந்து குஞ்சுகள் பொறிக்குமா?

இன்னொரு உதாரணமும் சொல்லலாம்... கறிவேப்பிலை செடியின் விதைகளை சாதாரண சூழலில் ஒரு வாரம்தான் வைத்திருக்க முடியும். ஒரு வாரத்திற்குப் பின் விதையின் உயிர்த்தன்மை தானாகவே குறைந்து, அதன் முளைப்புத்திறன் அழிந்து விடுகிறது. ஆனால், கறிவேப்பிலை விதைகளை பிரத்யேகமான குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாப்பதன் மூலம் அதன் ஆயுள் கூடுகிறது. இவை ‘ப்ரிசர்வ் விதைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த விதைகளின் ஆயுள் எவ்வளவு தெரியுமா? பன்னிரண்டு ஆண்டுகள். ஒரு வாரத்தில் இயற்கையாக அழிந்து விடும் ஆற்றலை செயற்கைக் குளிர்ச்சி அழிக்கிறதா? நீட்டிக்கிறதா?

இயற்கையான அல்லது செயற்கையான குளிர்ச்சி உயிர்த்தன்மையை நீட்டிக்கிறது. விதைகளின் உள்ளே நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை வேகம் குறைக்கிறது. அதனால் விதையின் ஆற்றல் நீள்கிறது, ஃப்ரிட்ஜில் வைப்பதால் உணவுப் பொருட்களின் ஆற்றல் குறைவதோ, அழிவதோ இல்லை என்பதுதான் உண்மை.அப்படியென்றால், தோசை மாவிலிருந்து ஆரம்பித்து எல்லா உணவுகளையுமே ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாமா? அப்படி வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜை எந்த உணவுகளுக்குப் பயன்படுத்தலாம்?

பீரோவுக்குள் நாம் வைக்கும் பொருட்களின் மதிப்பைக் கூட்டிப் பார்த்தால், அது பீரோவின் மதிப்பை விட கூடுதலாக இருக்கும்... இதே கணக்கை ஃப்ரிட்ஜிற்கு போட்டுப் பார்த்தால் ஏமாற்றமே
மிஞ்சும்.

வெளியில் சாதாரண சூழலில் வைக்கப்பட்ட முட்டைகளை விட ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டைகள் அதிக குஞ்சுகளைப் பொறிக்கிறது. அதாவது, ‘கூமுட்டைகள்’ குறைகிறது.

(தொடர்ந்து பேசுவோம்...)
மாடல்: ஸ்வேதா
படங்கள்: புதூர் சரவணன்

அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்