ஸ்ரீ அரவிந்த அன்னை
அன்பு என்பது ஆண் - பெண் உறவு அல்ல.
அன்பு பிராணமய கவர்ச்சியும் கொடுக்கல் வாங்கலும் அல்ல.
அன்பு பிறரது பிரியத்தை நாடும் இதய தாபமும் அல்ல.
அன்பு ஒன்றே பரம்பொருளிடமிருந்து நேரே வருகின்ற மகா வலிமை கொண்ட ஓர் அதிர்வு.
மிகுந்த தூய்மையும் பெரும் வலிமையும் உள்ளவராலேயே அதை கிரகிக்கவும் வெளிப்படுத்தவும் முடியும்.
- அன்னை
பால் ரிச்சர்ட், அரவிந்தரைப் பற்றியும் அவரது ஆன்மிக யோகம் பற்றியும் மிராவிடம் பகிர்ந்துகொண்ட தருணத்திலிருந்து அரவிந்தரை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் மிராவுக்குள் அதிகமானது. ஆனாலும் எதற்கும் காலம் கனிந்து வர வேண்டுமே!
காத்திருந்தார் மிரா.
அதே சமயம் தனக்கும் காஸ்மிக் குழுவினருக்கும் எழும் சந்தேகங்களை கடிதமாக எழுதி அரவிந்தருக்கு அனுப்பி வைத்து அவரிடமிருந்து ஆன்மிக விளக்கம் கேட்கும் வழக்கம் உருவானது.அரவிந்தரும் மிராவின் கேள்விகளுக்கு மிக அழகாக சிரத்தையுடன் பதில் அனுப்பினார். அரவிந்தர் தரும் எளிய பதிலில் நிறைந்திருக்கும் ஆழமான ஆன்மிக நுட்பங்கள் மிராவை வெகுவாகக் கவர்ந்தன.
மிராவுக்கும் அரவிந்தருக்கும் நிகழ்ந்த ஆன்மிக கடித பரிவர்த்தனைகள் அத்தனையும் ஆன்மிக உலகின் அரிய பொக்கிஷங்கள். ஒரு சோறு பதமாக சிலதை ருசிக்கும்போதே நம்முள் பேரானந்தம் பரவுவதைத் தவிர்க்க முடியாது. * ஓர் உயந்த லட்சியத்தை நோக்கி முன்னேறும் சாதகனின் மனம் எப்படி இருக்க வேண்டும்? அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் என்ன?
`சுயநலமற்ற ஒரு லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நீ உன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, சாதாரண மக்கள் உன்னைப் பாராட்டவோ, உனக்கு ஆதரவு அளிக்கவோ செய்வார்களென எதிர்பார்க்காதே. மாறாக அவர்கள் உன்னை எதிர்ப்பார்கள், பகைப்பார்கள், சபிப்பார்கள்.ஆனால் இறைவன் உன்னோடிருப்பான்.
- இப்படி சாதகர்களின், காஸ்மிக் குழு நண்பர்களின் பல கேள்விகளுக்கு அரவிந்தர் பதில் எழுதிக் குவித்தார். மிராவுக்கு அரவிந்தரை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தவமானது. அந்த நாளும் வந்தது.பால் ரிச்சர்டிற்கு பாண்டிச்சேரி தேர்தலில் நிற்கும் வாய்ப்பு வந்தது. மனைவி என்கிற வகையில் மிராவும் பாண்டிச்சேரிக்குப் பயணமானார்.
அரவிந்தரை சந்திக்கப் போகிறோம் என்கிற நினைவே மிராவுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.பிரான்ஸிலிருந்து ஜெனிவா வழியாக வந்த அவர்கள், காமகாரு என்ற கப்பலில் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தனுஷ்கோடியை அடைந்தார்கள். தனுஷ்கோடியிலிருந்து ரயில் பயணம்.மிரா ரயிலில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி நகரும் மரங்களை வேடிக்கை பார்த்து வந்தார்.
மிராவின் மனம் ஒரு அடர்த்தியான மௌனத்தை நோக்கி நகர்ந்தது. ஆரவாரமில்லாத ஒரு குதியலும் அதில் இருந்தது. கண்கள் இலக்கில்லாமல் தூரத்தை உள்வாங்கிக் கொண்டிருக்க, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஒரு ஒளித்தூண் அவர் முன் உருவானது. பொன்னிறமான அந்த ஒளி ஸ்தம்பத்தை ஊடுருவிப் பார்த்தார் மிரா.
என்ன காட்சி இது?
இந்த ஒளித்தூணின் குறியீடு என்ன?
இது சொல்ல வரும் விஷயம் யாது?
கேள்விகள் அலையடித்தன.அட, மண்ணில் சொர்க்கம்.
தெய்வலோகத்தை பூமிக்குக் கொண்டுவருவது என்பது இதுதானா?
ஒளித்தூணில் ஏதோ ஒரு உருவம் தெரிகிறதே! யாரது..?
கவனமாய்ப் பார்க்கிறார், மிரா.
ஆஹா... கிருஷ்ணன். எனக்கு அடிக்கடி தரிசனம் தரும் கிருஷ்ணன். அந்த உருவத்தை அப்படியே ஒளித்தூணோடு சேர்த்து மனதுள் கொண்டு சென்று நிறுத்தி தியானத்தில் கரைந்தார் மிரா.நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் பால் ரிச்சர்ட். மிராவின் ஆன்மிக உன்னதம் அவருக்கு அத்துபடி என்பதால் வியப்பேதும் அவருக்குள் ஏற்படவில்லை.
ரயில் பாண்டிச்சேரியை அடைந்தது.மிராவின் கால்கள் பாண்டிச்சேரி மண்ணை ஸ்பரிசித்தன.அந்த நொடியில் அந்த மண் சிலிர்த்துக்கொண்டது. நீண்ட காலமாக காணத் தவித்த மகளை ஆரத் தழுவிக் கொண்ட தாயைப் போல உணர்ந்தது பாண்டிச்சேரி.
மிராவுக்கும் அப்படித்தான் இருந்தது.
உடல் சிலிர்த்தார். உள்ளம் குளிர்ந்தார். ரிச்சர்டுடன் அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று மாலை அரவிந்தரை சந்திக்கப் போகிறார். அந்தக் கணத்துக்காக உள்ளம் தவம் கிடந்தது.அந்த மாலையும் வந்தது.29.3.1914மாலை 3:30மிராவும் ரிச்சர்டும் பிரான்சிஸ் மார்ட்டின் தெருவில் நடக்கிறார்கள்.
எண் 37 இலக்கம் உள்ள வீட்டில் அரவிந்தர் வசிப்பதாகத் தகவல். மிரா அந்த தெருவில் நடந்தபோது ஒரு ரிக்ஷாக்காரரிடம் வழி கேட்கிறார். அவரும் கை நீட்டி வழி சொல்கிறார். நன்றி என்று புன்னகை உதிர்த்து அந்த வீட்டினுள் நுழைகிறார்கள் மிராவும் ரிச்சர்டும்.வீட்டினுள் சென்ற மிரா, அங்கிருந்த ஒரு அறையுள் தாமாகப் பிரவேசிக்கிறார்.
அங்கு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அரவிந்தரை தரிசிக்கிறார்.மிராவின் மனம் மெல்ல ஒரு ஆனந்தப் பரவசத்தில் திளைக்கிறது.அரவிந்தரின் அழகிய பாதங்களைப் பார்க்கிறார்.இதுதான் நான் தொழ வேண்டிய திருவடி... இவர்தான் காண காத்திருந்த கிருஷ்ணன் என அவரது ஆன்மா சொல்ல மிராவின் கண்களில் கண்ணீர் அரும்பி வழிகிறது. அதில் பக்தி தளும்ப அப்படியே அரவிந்தரின் காலடியில் அமர்கிறார்.
மிராவின் கண்கள் தாமாக மூடிக்கொள்ள, தியானத்தில் கரையத் தொடங்கினார். அரவிந்தர் தமது தாமரைக் கண்களால் மிராவை கனிவு பொங்க பார்க்கிறார். ‘உனக்காகத்தான் காத்திருக்கிறேன் மிரா. உன் வருகைக்கு வந்தனம்’ என்கிறார். அரவிந்தரின் மன ஓசை மிராவின் ஆன்மாவில் எதிரொளித்தது.
அப்புறம்?
அன்னையின் அற்புதம்
‘‘சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் உள்ள என் உறவினர் வீட்டு கிரகப் பிரவேசத்திற்காக கணவருடன் சென்றிருந்தேன். இரவு பத்து மணி இருக்கும். எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. விழா சூழலைக் கெடுக்கக் கூடாது என நானும் பொறுத்துக்கொள்ள முயன்றேன். முடியவில்லை. ஓர் அறையில் போய் படுத்துக்கொண்டேன்.
அரவிந்த அன்னையை மனதில் நிறுத்தி ‘என் வலியை குணமாக்கு’ என வேண்டிக்கொண்டேன். அப்போது எட்டு வயது சிறுமி என் அருகே வந்து, அலமாரியில் எதையோ எடுத்தாள். அப்போது ஒரு பேப்பர் என் வயிற்றின் மீது விழுந்தது. எடுத்துப் பார்த்தேன். அது அன்னையின் போட்டோ. ‘நான் இருக்கேன்’ என்று சொல்வது போலிருந்தது. அதை வயிற்றின் மீது வைத்தபடியே தூங்கிவிட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் வலி மறைந்தது. அது மட்டுமல்ல. அதன் பிறகு எனக்கு வயிற்று வலியே வரவில்லை!’’ என்கிறார் லட்சுமி தனவேலு என்னும் திருச்சி வாசகி!
வயிற்றுவலி பறந்தது
சுபிட்சம் தரும் சுத்தம்
உஷா பாஸ்கரன் என்கிற அன்னையின் பக்தை 13.4.2015 இதழில் அரவிந்த அன்னை தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அன்னை அடிகள் அறிவுறுத்தியபடி அரவிந்த அன்னை சொன்ன முறைப்படி வீட்டை சுத்தம் செய்ததாகவும் அதன் பிறகு குடும்பத்தில் அபரிமிதமான வளம் குவிந்ததாகவும் குறிப்பிட்டார். அதைப் படித்த ஏராளமான வாசகர்கள் ‘அன்னையின் முறைப்படி வீட்டை சுத்தம் செய்வது எப்படி’ என்று கேட்டு வருகிறார்கள். அன்னை அடிகளிடம் அதைக் கேட்டோம்.
``அன்னை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். வரவேற்புக்குப் பிறகு அங்கிருந்த அலுவலகத்திற்குள் நுழைகிறார். அங்கு மிக நுட்பமான அழுகுரல் அன்னையின் காதில் விழுகிறது. ஆனால் அங்கு யாரும் இல்லை. அன்னை அங்கிருந்தவரிடம் ஒரு அலமாரியைச் சுட்டிக்காட்டி அதைத் திறக்கும்படி சொல்கிறார். அந்த பணியாளரும் திறக்கிறார். உள்ளே ஏராளமான கோப்புகள் அடுக்கி வைக்கப்படாமல் திணித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதை ஒழுங்காக அடுக்கச் சொல்கிறார். அதை அழகாக அடுக்கி வைத்த பிறகு அந்த அழுகுரல் மகிழ்ச்சியாக மாறி ஒலித்தது.
‘ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட இந்த அலமாரி கோப்புகளின் மகிழ்ச்சி, நேர்மறை சக்திகளை அறையில் பரப்பும். அதனால் ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள்!’ என்கிறார் அன்னை. இது உண்மை. அழுக்கான வீட்டில் செல்வம் சேராது. வீட்டை சுபிட்சமாக்க வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழா போல வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் இருக்கும் பாத்திரங்களை எல்லாம் கழுவி, துடைத்து வைக்க வேண்டும். நாற்காலிகளின் அடிப்புறம், கட்டிலின் கீழே, அலமாரிகளின் பின்புறம் எல்லாம் ஒட்டடை இருக்கும். அதை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோக்களில் புழுதி இருக்கும். அதை சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
ஜன்னல், கதவு என வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் ஆயிரம் சதவீதம் சுத்தம் என்கிற இலக்கோடு செய்ய வேண்டும். தேவை இல்லாத பொருட்கள், உடைந்த பொருட்கள் ஆகியவற்றை வீட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும்.
உடைந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் விபத்து ஏற்படும். ஆரோக்கியக் குறைவு உண்டாகும். ரிப்பேரான பொருட்களை சரி செய்து வைக்க வேண்டும். சுவர்களில் ஒட்டடை படிய விடக் கூடாது. ஒரு முறை கஷ்டப்பட்டு சுத்தம் செய்து சாம்பிராணி புகை போட்டு வீட்டை தெய்வீகமாக்கி விட்டால் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள். அதனால் செல்வம் பெருகும்.
தடைபடும் திருமணம் விரைவில் நடக்கும். குடும்பத்தில் அன்பு, அமைதி அதிகமாகும். கெட்ட கனவுகள் வராது. நாணயமானவர் என்கிற நல்ல பெயர் கிடைக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அந்த வீட்டை இதுபோன்று சுத்தமாக வைத்துக் கொண்டால் விரைவில் சொந்த வீடு வாங்குவார்கள். கோர்ட், வழக்குகள் சாதகமாகும். நிறுவனங்கள், கடைகளில் இப்படி சுத்தம் செய்ய லாபம் குவியும் என்று அன்னை சொல்கிறார்’’ என்கிறார்.
வரம் தரும் மலர்
பணம் தரும் பூசணிப் பூ!
கடன் பிரச்னையால் வாடுபவர்கள் பூசணிப்பூவை அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள அபரிமிதமான பணம் வரும். செல்வம் சேர்ந்து, கடன் தொலையும்!
(பூ மலரும்...)
எஸ்.ஆா்.செந்தில்குமார்
ஓவியம்: மணியம் செல்வன்