பொம்மலாட்டம் மூலம் கல்வி...



அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

அந்தப் பள்ளியின் சூழலே வித்தியாசமாக இருக்கிறது. அத்தனை உற்சாகமாக பள்ளிக்கு வருகிறார்கள் குழந்தைகள். புத்தகம், வகுப்பறை, ஆசிரியர்கள் என எதைப் பற்றிய இருண்மையும் முகத்தில் இல்லை. ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் குழந்தைகளின் உற்சாகமும், குதூகலமும் கூடுகிறது. மாலையில் பிரிவுத்துயரோடு பள்ளியில் இருந்து விடைபெறுகிறார்கள்.

ஈரோட்டை ஒட்டியிருக்கும் நாதகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான் இந்த அதிசயம். தனியார் பள்ளி மோகத்தில் இருந்து பெற்றோரின் மனத்தை மீட்டு, பெரும் மாற்றத்தை விதைத்திருக்கிறார் இப்பள்ளி யின் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி. குழந்தைகள் ‘பொம்மலாட்ட சார்’ என்று இவரை அன்பொழுக அழைக்கிறார்கள்.

‘க்ளவ் பப்பட்’ எனப்படும் பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்துகிறார் தாமஸ். பேசுவது போல பொம்மையை இயக்கி வாயசையாமல் குரல் கொடுக்கும் கலையே ‘க்ளவ் பப்பட்’. கதைகளும் பாடல்களுமாக தாமஸ் பாடம் நடத்துகிற விதம் குழந்தைகளை ஒன்றச் செய்கிறது. ஒரே ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை 50%க்கு மேல் உயர்த்தி நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

தாமஸ், ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர். முதல் தலைமுறை ஆசிரியர். ‘‘வாங்குற சம்பளத்துக்கு நியாயமா வேலை செய்னு அப்பா சொல்வார். அது மனசுக்குள்ள வேதமா பதிஞ்சிடுச்சு. தொடக்கத்துல பள்ளிக்கு வந்தோமா, நமக்குத் தெரிஞ்சதை வச்சு பாடம் நடத்தினோமான்னுதான் இருந்தேன். பிள்ளைகளுக்கு புரிஞ்சுச்சா, புரியலையான்னு கூட கவலைப்பட்டதில்லை.

செயல்வழிக் கற்றல் வந்தபிறகு வகுப்பறையோட சூழலே மாறிடுச்சு. ஆசிரியர் ஆதிக்கத்துல இருந்து குழந்தைகளோட கைக்கு வகுப்பறை போயிடுச்சு. அது உண்மையிலேயே மனநிறைவான மாற்றம். சேர்ல உக்காந்து ஆதிக்கம் செலுத்துற மனநிலையில இருந்து இறங்கி, பிள்ளைகளோட சரிக்குச் சமமா உக்காந்து, உதாரணங்கள் மூலமா பயிற்றுவிக்கிற அந்த அணுகுமுறை குழந்தைகளை ஈர்த்துச்சு.

பள்ளியில குழந்தைகளை தக்க வைக்கவும், கற்றல் தன்மையை சுவாரஸ்யமாக்கவும் அரசு நிறைய முயற்சிகளை செஞ்சுக்கிட்டிருக்கு. அட்டைவழிக் கற்றல், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, கதை, பாடல்கள், நாடகங்கள், செய்யுள்கள் மூலம் கற்பித்தல்னு ஆசிரியர்களுக்கு நிறைய பயிற்சிகளும் கொடுக்கிறாங்க. நான் இதுமாதிரியான பயிற்சி முகாம்களுக்கு ஆர்வமா போறதுண்டு. ஆனா எதையும் நிறைவா செயல்படுத்த முடியலே. 

2009ல இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். தலைமை ஆசிரியை புவனா மேடமும் பிற ஆசிரியர்களும் என் கருத்தொத்த ஆசிரியர்களா இருந்தாங்க. ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் அடிப்படைச் செலவுகளுக்காக வருஷத்துக்கு 24 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குது.

அந்தத் தொகையை வச்சு பள்ளிக் கட்டுமானங்களை சரி பண்ணி குழந்தைகளை ஈர்க்கிற விதமா சூழ்நிலையை மாத்தினோம். எங்க ஈடுபாட்டைப் பார்த்த ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளிக்கு முன்னால ஒரு விளையாட்டு மைதானத்தை அமைச்சுத் தந்தார். புரவலர் நிதித்திட்டத்தைத் தொடங்கினோம். அதன்மூலம் பெற்றோர்கள்கிட்ட நிதி வசூலிச்சு, கணித அறை, கணினி அறை, அறிவியல் ஆய்வகம்னு பல ஏற்பாடுகளைச் செஞ்சோம். பள்ளிச்சூழல் மாறிடுச்சு.

எனக்கு ரெண்டு குழந்தைகள். மூத்தவள் பிரணிதா ரோஸ் 2வது படிக்கிறா. இளையவ ஜெசிகா நிலோபருக்கு 4 வயது. நான் என் குழந்தைகளோட இயல்பையும் செயல்பாட்டையும் வச்சே பிற குழந்தைகளோட இயல்பை புரிஞ்சுக்குவேன். பிரணிதா எப்போ பார்த்தாலும் கார்ட்டூன் சேனலையே பார்த்துக்கிட்டிருப்பா. ஒருநாள், ‘நியூஸ் பாக்கணும், ரிமோட்டைக் கொடும்மா’ன்னு கேட்டேன். ‘ப்ளீஸ்பா, இந்த புரோகிராம் முடிஞ்சவுடனே தர்றேன்’னு கெஞ்சினா. அவ அவ்வளவு விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி, ‘பப்பட் ஷோ’. எனக்கு பளீர்னு யோசனை உதிச்சுச்சு.

பள்ளிக்கூடத்துக்கு இதைக் கொண்டு போனா என்ன? உடனே அது சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன். பொம்மலாட்டத்துல ஆறேழு வகை இருக்கு. சில வகைகளைச் செய்ய பாரம்பரிய அறிவு வேணும். க்ளவ் பப்பட்டை முயற்சியும் பயிற்சியும் இருந்தா கத்துக்கலாம். சென்னைக்குப் போய் ஏழெட்டு பொம்மைகள் வாங்கினேன். இயல்பாவே எனக்கு மிமிக்ரி நல்லா வரும். 9 விதமான குரல்கள்ல பேசுவேன். சுயமா, அந்த பொம்மைகளை இயக்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன். 6 மாதப் பயிற்சியிலேயே எனக்கு அந்தக் கலை கைவந்திடுச்சு.

அந்த பொம்மைகளைக் கொண்டு வந்தபோதே குழந்தைகள் முகம் மலரத் தொடங்கிடுச்சு. ஆசிரியர்ங்கிற அச்சம் போய், ஃப்ரண்டைப் போல என் கையைப் பிடிச்சு தொட்டு விளையாட ஆரம்பிச்சாங்க. எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு. இதோ இந்த ‘தீனு’ மங்கி பொம்மையும், இந்த ‘ஃபேமிலி’ பொம்மைகளும் அவங்க இதயத்துக்கு நெருக்கமான நண்பர்களா ஆகிட்டாங்க. குழந்தைகளோட கற்பனைத் திறனும், ஞாபகத்திறனும், புரிதல் திறனும் பல மடங்கு அதிகமாயிருக்கு...” என்கிறார் தாமஸ்.

ஒவ்வொரு வகுப்புக்கும் பல மணி நேரம் ஹோம் ஒர்க் செய்கிறார் தாமஸ். ஒரு பாடத்தை வைத்து, ஒரு கதையை உருவாக்கி, அதற்கு வசனங்கள் எழுதி, இரு பொம்மைகளுக்கு இடையில் நடக்கும் உரையாடலாக அதை மாற்றி, நாடகக் களமாக்குகிறார் வகுப்பறையை! அதில் குழந்தைகளும் பாத்திரமாகிறார்கள். கேள்விகள் கேட்கிறார்கள். பாடத்தோடு சேர்த்து பெண்கல்வி, சுகாதாரம் என சமூக விஷயங்களையும் உள்ளீடாக இணைக்கிறார்.

“இப்போ இங்கிருந்து தனியார் பள்ளிகளுக்குப் போற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு. போன வருஷம் 46 பிள்ளைகள் படிச்ச நிலையில் இப்போ 78 பிள்ளைங்க படிக்கிறாங்க. இங்கே படிக்கிற 70 சதவீத பிள்ளைகள், பெற்றோரை இழந்தவங்க. அவங்களுக்கு வெறும் ஆசிரியரா மட்டுமில்லாம, பெற்றோராகவும் இருக்க வேண்டியது அவசியம். எல்லா ஆசிரியர்களுமே அந்த பொறுப்பை உணர்ந்திருக்கோம்.  

கணக்கு தவிர மற்ற அனைத்து பாடங்களையும் பப்பட் ஷோ மூலமாத்தான் நடத்துறேன். வாரத்துல ரெண்டு நாள் பப்பட் ஷோ கிளாஸ். இப்போ குழந்தைகள் சந்தோஷமா பள்ளிக்கூடம் வர்றாங்க. அவங்களே காட்சிகளை வடிவமைக்கிற அளவுக்கு கற்பனைத் திறன் மேம்பட்டிருக்கு...’’ - பெருமிதத்தோடு சொல்கிறார் தாமஸ்.

பொம்மலாட்டக் கற்பித்தல் முறை ஏற்படுத்திய நல்விளைவுகளை அடுத்து நிறைய ஆசிரியர்கள் அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறார் தாமஸ். சில ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்கள்.அரசுப்பள்ளிகள் இப்படியான அக்கறையுள்ள ஆசிரியர்களுக்காகத்தான் தவம் கிடக்கின்றன.

ஒரு பாடத்தை கதையாக  மாற்றி, அதற்கு வசனங்கள் எழுதி, இரு பொம்மைகளுக்கு இடையில் நடக்கும்  உரையாடலாக அதை நாடக பாணியில் பிள்ளைகள் மனதுக்குக் கொண்டுசெல்கிறார் தாமஸ்!

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆரோக்கிய
இன்பராஜா