மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

இந்த உலகம் மிகவும் ஆபத்தானது என்பது உண்மைதான். இங்கு பொய்மை இன்னமும் முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அரவிந்தர் சொல்கிறார், ‘இறைவனை தங்கள் இதயத்தில் வைத்திருப்பவர்கள் மட்டுமே பாதுகாப்போடு இருந்து கொண்டிருக்கிறார்கள்.’ பயப்படாதே... நீ சரியான பக்கத்தில்தான் இருக்கிறாய்.
-  அன்னை

கோடைக் காலம். அந்த அறையில் ஜன்னல்கள் இருந்தாலும் போதுமான காற்றோட்டம் இல்லை என  அன்னை நினைத்தார். தீவிரமான யோகத்தில் இருக்கும் அரவிந்தரின் உடல் எப்பொழுதும் யோக அக்னியால் தீயாய் கொதிக்கும். ஆகவே, அதை ஓரளவாவது சமன் செய்ய நல்ல காற்றோட்டம் அவசியம் என்பது அன்னையின் எண்ணம்.

அதற்காக அரவிந்தர் தங்கியிருந்த அறையில் கூடுதலாக ஒரு மின்விசிறி போடலாம்  என்பது அவரது யோசனை.அதைக் கேட்ட சாதகர்கள் அறை விதானத்தில் ஒரு சீலிங் ஃபேன் பொருத்த ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பணி நடக்கும்போது அன்னை அங்கு வந்தார்.விதானத்தில் அமைக்க தயாராக இருந்த ஃபேனைப் பார்த்தார். ‘‘இது வேண்டாம். மேசையில் வைக்கும் விதமாக டேபிள் ஃபேன் போதும்!’’ என்றார்.

’’ஏன் மதர்? இதில் காற்று நன்றாக வருமே...’’ என்று தயக்கத்துடன் சாதகர்கள் கேட்டார்கள். ‘‘உண்மைதான். காற்று நன்றாக வரும். ஆனால் தீய சக்திகளும் பகை சக்திகளும் இந்த மின் விசிறியைப் பயன்படுத்திக் கொண்டு இதன் வாயிலாக நம் குரு அரவிந்தருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் அதிகம்!’’ என்று மறுப்புக்கான காரணத்தைச் சொன்னார்.

அன்னையின் விருப்பப்படியே சீலிங் ஃபேன் போடும் முயற்சி கைவிடப்பட்டு டேபிள் ஃபேன் வைத்தார்கள். தனது குருவின் நலனில் அவ்வளவு கவனமாக இருந்தார் அன்னை. ‘‘அரவிந்தர் நடக்கும் பாதைகளில் தேவையில்லாத பொருட்கள் எதுவும் வைக்கக் கூடாது. தீய சக்திகள் அவரைத் தடுக்கி விழ வைக்கும் அபாயம் இருக்கிறது!’’ என்று சொல்வார்.

இறை சக்திக்கு எதிராக தீய சக்திகளின் செயல்பாடு எப்பொழுதும் தீவிரமாக இருக்கும். நாம்தான் கவனமாக அதைத் தவிர்க்க வேண்டும் என்பது அன்னையின் எச்சரிக்கை உணர்வு.அதே போன்று அன்னை நன்றி சொல்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். நன்றி  சொல்வது மிகவும் அவசியம் என்று சொல்வார். ‘தேங்க் யூ’ என்கிற வார்த்தைகள் உதவியவருக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும் என்பது அன்னையின் கருத்து. இறைவனிடம் நீங்கள் பெற்ற மகத்தான உதவிக்காக அவருக்கு எப்பொழுதும் நன்றி சொல்ல மறக்கக் கூடாது. அப்படி நாம் நன்றி சொல்லும்போது இறைவனின் அன்பு நமக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்பார்.
அதெல்லாம் ஏன்?

அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு முதன்முதலாக அன்னை வந்தபோது, அரவிந்தர் எங்கே தங்கி இருக்கிறார் என்பதை கை நீட்டி வழிகாட்டிய ரிக்‌ஷாக்காரருக்கு அவர் உயிரோடு இருக்கும் வரை மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நன்றிக் காணிக்கையாக அளித்து வந்தார் அன்னை.ஒரு மகத்தான மகானின் இருப்பிடத்தை தனக்கு காட்டிய அந்த எளிய மனிதனுக்கு அன்னை இந்த சிறு தொகையை அளித்ததன் மூலமாக தனது  நன்றியைத் தெரிவித்தார்.

இன்றும் அன்னையின் அன்பர்கள் தனது வேண்டுதலுக்காக, பிரார்த்தனை பலித்ததற்காக அன்னை ஆஸ்ரமத்துக்கு காணிக்கை அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஒருமுறை சாதகர் ஒருவர் பணத்தின் மதிப்பு குறித்தும் அதன் தேவை, பயன்பாடு குறித்தும் அன்னையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அன்னை, ‘‘ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவன் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக்குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும்.

நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்; எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒரு வகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்பத்தனமான ஒரு பற்று. நான் உறுதியாகக் கூறுவேன். அது ஒரு சாபம்.ஆகவே உன்னிடம் பணம் இருந்தால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம், அதைக் கொடுத்து விடுவதே.

ஆனால், விவேகமில்லாமல் கொடுக்கக் கூடாது. தான் பெரிய பரோபகாரி என்ற எண்ணத்துடன் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிக் கொடுப்பவர்கள் உள்ளத்தில் ‘நான் மிகவும் நல்லவன், ஈகைக் குணமுடையவன், முக்கியமானவன்’ என்கிற உணர்வு நிரம்பிவிடுகிறது.நீ சாத்வீக முறையில் செயல்பட வேண்டும். அதாவது, பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே ஒவ்வொருவனும் தன்னுடைய மிக உயர்ந்த உணர்வு நிலையிலிருந்து தன்னிடமுள்ள பணத்தை மிகப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் பணத்திற்கு மதிப்பு உண்டு என்பது முற்றிலும் உண்மை. பணத்தைச் செலவு செய்யும்போதுதான் அதனால் பயன் உண்டாகிறது. எல்லோருடைய விஷயத்திலும் அப்படித்தான்.

செல்வம் ஒரு சக்தி - முன்பே ஒரு தடவை நான் உங்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன் - அது இயற்கையின் ஒரு சக்தி; அது புழக்கத்திற்கு ஒரு சாதனமாக,
ஓர் இயங்கு சக்தியாக இருக்க வேண்டும். ஓடும் நீர் ஓர் இயங்கு சக்தியாக இருப்பதைப் போல! அது பொருட்களை உற்பத்தி செய்ய, இணைத்து உருவாக்க உதவும். பணம் ஒரு வசதியான சாதனம்; உண்மையில் அது பொருள்கள் முழு அளவிலும் தாராளமாகவும் புழக்கத்தில் இருக்கச் செய்யப் பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே.

இந்த சக்தி, யார் அதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவார்களோ அவர்கள் கையில் இருக்க வேண்டும். அதாவது, நான் தொடக்கத்தில் சொன்னது போல், ஏதோவொரு வகையில் சொந்த ஆசையையும், எல்லாவிதப் பற்றுகளையும் அறுத்துவிட்டவர்கள் கையில் இருக்க வேண்டும்.

 இதோடு அவர்கள் இப்பூவுலகின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த அறிவு விளக்கம் உடையவர்களாகவும் இந்தத் தேவைகளையெல்லாம் இணைத்து உருவாக்குவது எப்படி என்கிற பூரண ஞானமும், இந்த சாதனங்களைக் கொண்டு பண சக்தியைப் பயன்படுத்தும் திறமையும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.இத்துடன் இந்த ஜீவர்களிடம் உயர்ந்த ஆன்மிக ஞானமும் இருந்தால் அவர்களால் இந்த சக்தியைப் பயன்படுத்தி தெய்வ ஆற்றல், சக்தி, அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனுடைய ஒன்றை புவி மீது படிப்படியாக உருவாக்க முடியும்!’’ என்றார்.

மற்றொரு சாதகர் அன்னையிடம், ‘‘சித்து சக்தி பெற்றவர்கள் அதை நல்லவர்கள் மீது பிரயோகிப்பார்களா? மகான் அரவிந்தருக்கு தீய சக்தியால் ஆபத்து என்று கவனமாக இருக்கும்படி எல்லாம் சொல்கிறீர்களே மதர்?’’ என்று கேட்டார். உண்மையான சித்து சக்தி (Occult Power) உடைய ஒருவனிடம், சித்து சக்திகள் பற்றிய ஞானத்தின் காரணமாய், எல்லா வகையான தீய மந்திர சக்திகளிலிருந்தும்  காத்துக்கொள்ளும் வல்லமை இருக்கும். அந்த ஞானத்தில் ஒரு துளி போதும் இந்த தீய மந்திர சக்திகளை அழிப்பதற்கு.

உண்மையான சித்து ஞானத்தை எந்த சக்தியும் எதிர்க்க முடியாது. தீய மந்திர சாதனைகள் பயில்வோருக்கெல்லாம் இது நன்கு தெரியும். ஆகவே அவர்கள் எல்லா நாடுகளிலும், விசேஷமாக இந்தியாவில் தங்கள் மந்திர சக்திகளை ஒரு யோகியின் மீதோ, பக்தன் மீதோ பிரயோகிக்க மாட்டார்கள்.ஏனெனில், அவர்கள் தங்களுடைய மேற்போக்கான அற்ப மந்திர சக்தியை அவ்வாறு அனுப்பினால் அது சுவரில் எறிந்த பந்தைப் போல் தங்களையே திருப்பியடிக்கும். உண்மையான ஆன்மிக வாழ்வு வாழ்வோருக்கு சுவர் போன்ற வலுவான பாதுகாப்பு உண்டு.

யோகியோ, பக்தனோ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று விரும்பக்கூடத் தேவையில்லை. அது தானாகவே நடக்கும்.
அரவிந்தருக்கு எதிரான தீய சக்தி என்பது சாதாரணமானது அல்ல. உலகத்தை இருளில் தள்ள விரும்பும் அந்த தீய சக்தி  கடவுளுக்கு இணையான எதிர் சக்தி. அதனால் அதனிடத்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.அன்னை ஆடம்பரமாக உடை அணிவது குறித்து சர்ச்சை வந்தது. அது....

அன்னையின் அற்புதம் கருவைக் காத்தருளிய அன்னை!

‘‘எனக்கு திருமணமாகி இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தேன். ‘நச்சுக்கொடியில் ஏதோ பிரச்னை. கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பம் கலைந்துவிடும் அபாயம் இருக்கிறது’ என்றார்கள். என் தந்தை கலைமாமணி விக்ரமன், அன்னையின் தீவிர பக்தர். அவர் அன்னையின் படத்தை

என்னிடம் கொடுத்து, ‘அன்னையை வேண்டிக்கொள் அம்மா. எல்லாம் நல்லபடியாக நடக்கும்!’ என்றார். நான் ‘நீயே துணை’ என  அன்னையைச் சரணடைந்தேன். 8வது மாதமே குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். கருவிலேயே கலைந்துவிடும் என்று மருத்துவம் எச்சரித்த குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தது அன்னையின் அருள்தான். இன்று அவள் பல் மருத்துவம் படிக்கிறாள். மகன் விமான பைலட். வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியோடு போகிறது.

சென்னையின் மாடம்பாக்கத்தில், ரமணா நகரில் நான் விரும்பியது போலவே வீடு கிடைத்தது.  அந்த வீட்டில் பிரமிடு தியான மையமும் அமைத்திருந்தார்கள். 2004ல் வீட்டை வாங்கி குடியேறினேன். எங்கள் வீட்டுக்கு வருகை தந்த  அன்னையடிகள், ‘நீங்கள் மட்டும் இந்த பிரமிடு சக்தியைப் பயன்படுத்தினால் போதுமா? பொதுமக்களும் இங்கே தியானம் செய்ய அனுமதியுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

கடந்த மூன்றாண்டு காலமாக அந்த தியான மண்டபத்தில் அன்னையின் திருவுருவப்படத்தை வைத்து ‘அரோ மிரா பிரமிடு தியான மையம்’  எனப் பெயர் சூட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளித்துவிட்டேன். நிம்மதியான, வசதியான வாழ்க்கையைத் தந்த அன்னையின் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்!’’ என்கிறார் குடும்பத்தலைவி ஹேமாமாலினி சங்கரன்.

வரம் தரும் பழம் இனிய இல்லறம் தரும் எலுமிச்சை

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு நடுவே பிரச்னை தோன்றக் காரணம், சந்தேகம். சந்தேகத்திற்கு பரஸ்பரம் ஒழுக்கமின்மையே அடிப்படைக் காரணமாகிறது. இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவாகும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகவும் இருவரும் நம்பிக்கையோடும் ஒழுக்கத்தோடும் வாழவும் அரவிந்த அன்னைக்கு எலுமிச்சம்பழம் சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள அன்னையின் அருளால் இனிய இல்லறம் அமையும்!

(பூ மலரும்...)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்