கிரகங்கள் தரும் யோகங்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
குங்குமம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தத் தொடரின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கு சிறு நினைவூட்டலோடு இந்தத் தொடருக்கான முன்னுரையைத் தொடங்குவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இதற்கு முன்பு ‘குங்குமம்’ வார இதழில் நாம் பார்த்த மூன்று தொடர்களிலுமே ஒருவரது பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பார்த்தோம். ஒவ்வொரு நாளில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் எப்படி யிருக்கும்? அவர்களுக்கான பலன்களைத் தரும் இறைவன் யார்? ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் என்னென்ன? தசாபுக்தி என்றால் என்ன? ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் என்னென்ன தசாபுக்திகள் நடக்கும்? ஒவ்வொரு ராசிக்கும் எந்தெந்த கிரகங்கள் நன்மைகளைச் செய்வார்கள்? யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது? என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்திருப்போம்.
திருமணத்திற்கான பொருத்தம் முதல், மழலைப்பேறு, வீடு, உறவுகள், பிள்ளைகளின் கல்வி, தொழில், வேலை என்று வாழ்வின் அனைத்து நிலைகளையும், உறவுகள் குறித்த விவரணைகளையும், அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த வினாக்களையும் முன்னெடுத்து ஜோதிடரீதியாக அதைத் தீர்க்கும் பரிகாரங்களையும் பார்த்தோம். இப்போது இந்தத் தொடரில் இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பயணிக்கப் போகிறோம். இதுவரை சொன்ன விஷயங்களைக் கொண்டு, உங்களின் எதிர்காலம் குறித்த வரைபடம் தெளிவாகியிருக்கும். அதை வைத்து உங்கள் வாழ்க்கைப் பயணத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்ற திட்டமிடலை இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
இதில் உங்கள் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் சேர்க்கைகளையும், அவை தரும் யோகங்களையும் குறித்துப் பேசலாம். ராசிகளைக் கொண்டு ஜோதிடம் கூறலாம் என்றாலும், தனி மனித ஜாதகத்தை வைத்து இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து பலன்களைச் சொல்லலாம். ஏனெனில், அதில்தான் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து உயிரின் விளையாட்டைத் தொடங்குகின்றன. தனியாக இருக்கும்போது சிமென்ட் வெறும் பவுடர்தான். நீர், செங்கல், மணல் என்று பல பொருட்களும் அதனுடன் ஒன்றாகக் கூடும்போது அழகிய வீடாகிறது. பால் தனியாக ருசித்தாலும் வேதியியல் வினையால் தயிராக மாறுவதும், பாலோடு தேன் சேர்ந்து தனித்த ருசியைத் தருவதும், ஐஸ்க்ரீமாகக் குழைவதும் நடக்கிறதல்லவா? காரணம், பாலோடு மற்ற பொருட்களின் சேர்க்கையே ஆகும்.
உதிக்கும்போது விதிக்கப்பட்டதற்கு பிராப்தம் என்று பெயர். அதாவது ‘அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியது’ என்று பொருள். என்ன அனுபவிக்க இருக்கிறது என்பதையே ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்து கூறுகிறார். இந்த விஷயத்தையே கிரகங்கள் ஜாதகம் என்கிற கட்டத்தில் ஆங்காங்கு உட்கார்ந்து உணர்த்துகின்றன. அது உட்காரும் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நன்மை தருமா, தீமை தருமா என்று கணிக்கப்படுகின்றன. இதை ஒருபுறம் ஞாபகம் கொள்ளுங்கள். அதாவது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இந்த பலன்களைக் கொடுக்கும் என்பது இருக்கட்டும்.
இப்போது கோச்சார ரீதியாக கிரகங்கள் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்கிறோம். அதாவது, சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி, இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை நிகழும் சந்திரப் பெயர்ச்சி, மாதம் ஒருமுறை நிகழும் சூரியப் பெயர்ச்சி, இதுபோல முறையே குறிப்பிட்ட காலத்திற்குள் சுக்கிரன், புதன், செவ்வாய் என்று கிரகங்கள் அனைத்துமே தங்களுக்கான பாதைகளில் பெயர்ந்து பெயர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றன. இதில் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சியை மட்டுமே முக்கியமாக அறிந்திருப்போம்.
நிலையாக ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கிரகங்கள், அவற்றின் தன்மைக்கு ஏற்றபடி அவரை பலப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ செய்கின்றன. இவற்றின் உச்ச, நீச பாவங்களோடு, பெயர்ச்சி அடைந்து வரும் கிரகங்களின் தன்மையும் மோதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஏழரைச் சனி கெடுதல் செய்வதில்லை. பொதுவாக நல்ல விஷயமாகப் பார்க்கப்படும் குருப் பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மையைத் தருவதில்லை. ஒருவரின் சொந்த ஜாதகத்தில் கிரகங்கள் எப்படியிருக்கின்றன? யாருடன் சேர்க்கை பெற்றிருக்கின்றன? இதையெல்லாம் பார்த்துத்தான் எவ்விதமான பாதிப்பு என்று தீர்மானிக்க வேண்டும். ஜாதகத்தின் தன்மையோடு வெளியே ஏற்படும் பெயர்ச்சிகளும் கலந்து கட்டித்தான் பலன்களைக் கொடுக்கின்றன.
எல்லாவற்றையும் தாண்டி, ஒருவரின் ஜாதகத்தில் ஒரு கிரகம் தனித்தோ அல்லது சேர்க்கை பெற்றோ இருக்கும்போதுதான் அதனுடைய தாக்கம் எப்படிப்பட்டது என்று சொல்ல முடியும். அதோடு அந்த சேர்க்கை எவ்விதத்தில் அந்த ஜாதகரைப் பாதிக்கிறது என்பது பற்றியும் சொல்ல முடியும். ஒருவருக்கு ஜாதகத்தில் குரு சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் வெளியே வரும் குருப் பெயர்ச்சியில் சாதகமான கட்டங்களில் வரும்போது ஓரளவு நல்ல பலன் வந்து சேரும். அப்படி சாதகமான கட்டங்களில் வராது போனால், உள்ளதும் போனது போல ஆகிவிடும். கிரகங்கள் ஜாதகத்தில் சேரும்போது ரசவாதம் தொடங்கி விடுகிறது. சிலரைப் பார்த்தாலே நமக்குள் உற்சாகம் பிறக்கும். மனதில் பரவசம் தோன்றும். ஜில்லென்று மாறும். அவர் ‘‘கிளம்புகிறேன்’’ என்றால்கூட, ‘இன்னும் கொஞ்ச நேரம் நம்மோடு பேசிக்கொண்டிருக்க மாட்டாரா’ என்று தோன்றும். சிலரைப் பார்த்தால் வெறுப்பும் கோபமும் வரும். காரணம், சேர்க்கைதான். பிடித்தவர்களோடு சேரும்போது சந்தோஷமும், அல்லாதவரோடு சேரும்போது வெறுப்பும் எழுவது போல கிரகங்களுக்கும் உண்டு. அதைத்தான் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.
‘‘இந்த டைரக்டரோடு அந்த மியூசிக் டைரக்டர் சேர்ந்தா எல்லா பாட்டும் ஹிட்டாகும். இந்த நடிகரும் அந்த நடிகையும் சேர்ந்து நடிச்சா பெரிய ஹிட்டுதான். என்னமோ ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது இல்லையா’’ என்றெல்லாம் சொல்வதற்குப் பின்னாலுள்ள சேர்க்கை போல, கிரகங்களுக்குள்ளும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் அமைப்பெல்லாம் உண்டு. கிரகச் சேர்க்கை என்பது ஜாதகத்தைப் பார்த்தும், லக்னங்களை அடிப்படையாக வைத்தும் சொல்லப்பட வேண்டியதாகும். சில லக்னங்களுக்கு சில கிரகச் சேர்க்கைகள் யோக பலன்களையும், சில சேர்க்கைகள் சோக பலன்களையும் கொடுக்கும். அப்படி எதிர்மறை பலன்தான் கிடைக்கும் என்றால், ‘நமக்குச் சாதகமான பலன்கள் ஏற்படுவதற்கு எந்தெந்த கிரகங்களை நேர்மறைச் சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதையும் நாம் பார்த்து சரி செய்துகொள்ளப் போகிறோம். ஒரு கூட்டணி ஒரு இடத்தில் சரியாக இருக்காது; இன்னொரு இடத்தில் அச்சு அசலாகப் பொருந்திப் போகும். உதாரணமாக, சென்னையில் ஒன்றாக வேலை பார்த்த மேலதிகாரியோடு ஒரே மோதலாக இருக்கும். ஆனால், அதே அதிகாரியோடு திருச்சிக்கு செல்லும்போது அப்படியொரு நட்புணர்வு பெருகியிருக்கும். காரணம், ஒவ்வொரு ஊருக்கும் அட்ச ரேகை, தீர்க்க ரேகை போல அட்சாம்சம் உண்டு. அது ஜாதகருக்கு பொருந்தி வரும்போது நற்பலன்களும் கிடைக்கின்றன. சென்னை எனில் 13.05 என்று கணக்கு. திருச்சிக்கு 10.49, தஞ்சாவூருக்கு 10.48, மதுரைக்கு 9.56 என்றெல்லாம் ஊருக்கு ஊர் மாறும் அட்சாம்சத்தால் ஜாதகருக்குள் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜாதகத்தை ஊடுருவிப் பார்க்கும்போது சிலருக்கு சில ஊர்களால் பெரும் வளர்ச்சியும், சிலருக்குத் தோல்வியே தோரணங்களாகவும் இருப்பது உண்டு.
சுக்கு, மிளகு, திப்பிலி என்று சித்த வைத்தியத்தில் மூன்று உண்டு. இந்த மூன்றோடு ஒவ்வொரு மாதிரியான மூலிகைகள் சேரும்போது மருந்தின் வீரியம் கூடுவதும், குறைவதும் நிகழும். அதுபோல எத்தனை வலிமையான கிரகமாக இருந்தாலும், சேர்க்கையினாலேயே நன்மை மற்றும் தீய பலன்கள் ஏற்படுகின்றன. ‘நேற்று வரை காரில் சென்றவர் இன்று சைக்கிள்கூட சொந்தமாக வைத்துக் கொள்ள முடியவில்லை’ என்பது போன்ற ஜாதகரின் ஜாதகத்தில் தேடிப் பார்த்தால், சேர்க்கைகள் அவரைச் சின்னாபின்னம் ஆக்கியிருப்பதை உணர முடியும். சந்திரனும் சுக்கிரனும் சங்கீதத்திற்கு உரியவர்கள். நாட்டியக் கலைக்கும் அதிபதிகள். இந்த இரண்டோடும் புதன் சேரும்போது கீர்த்தனைகளை தானே இயற்றிப் பாடும் திறமையும், நாட்டியத்தில் புதுமை புரியும் சாதுர்யமும் கைகூடும். அவர்களைத் தனித்துவம் பெற்ற கலைஞராக கிரகச் சேர்க்கை மாற்றிக் காட்டுகிறது.
நல்ல கிரகங்கள் சேர்க்கை இருந்தால் ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரோடி, பூமி முழுதும் பாவிப் பரவும் புற்களைப் போல சகல இடங்களிலும் வெற்றிக் கொடி பதித்திருப்பார்கள். கிரகங்களின் சேர்க்கை சரியில்லாதபோது எல்லோராலும் கைவிட்ட வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும். எனவே, ஜாதகத்தைப் பொறுத்தவரையிலும் கிரகங்களின் சேர்க்கைகளும், அவை இருக்கும் இடத்தையும் பொறுத்தே பெரும்பாலும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு லக்னத்திற்கும் உள்ள யோகாதிபதிகள் ஒன்று சேர்ந்து தான் ஜாதகரின் அடிப்படை வசதி வாய்ப்புகள் இறுதி வரையில் குறையாமலும், முன்னோர்கள், மூதாதையர்கள் சொத்தை பராமரிக்கச் செய்தும், முன்னேற்றமான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றனர். வரும் இதழிலிருந்து ஜாதகத்தை மையப்படுத்தி ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் யார் யோகாதிபதிகள்? எந்தெந்த கிரகங்கள் சேர்ந்தால் என்னென்ன யோகங்கள்? பலவீனமான சேர்க்கைகள் என்னென்ன? அவற்றை நிவர்த்தி செய்யும் வழிகள் என்ன என விளக்கமாகப் பார்க்கலாம். (சுழலும்...)
கே.பி.வித்யாதரன்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எம்.புதூர் கிராமத்தில் பிறந்த கே.பி.வித்யாதரன், தமிழகத்தின் முன்னணி ஜோதிடர்களில் ஒருவர். நான்கு தலைமுறைகளாக ஜோதிடத்தில் ஊறிய குடும்பம் இவருடையது. ஜோதிட நூல்களில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், ‘தமிழர் வாழ்வில் ஜோதிடம்’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியல் துறைத் தலைவராக இருக்கிறார். இவரது வழிகாட்டுதலில் 13 பேர் ஜோதிடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். ‘குங்குமம்’ இதழில் வெளிவந்த இவரது ‘பிறந்தநாள் கோயில்கள்’, ‘ராசிக் கோயில்கள்’, ‘பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்’ ஆகிய தொடர்கள் லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. ‘சூரியன் பதிப்பகம்’ வெளியீடாக வந்தும் விற்பனையில் சாதனை படைக்கின்றன. அந்த வரிசையில், ஒருவரின் ஜாதகப்படி அவருக்கு கிரகங்கள் தரும் யோகங்கள் பற்றி இந்தத் தொடரில் விவரிக்க இருக்கிறார்.
|