போலி



அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. யங் மெகா ஸ்டார் அஜய் ஹீரோவாக நடிக்கும் ‘தொட்டா கெட்டே’ படத்தின் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இன்றைக்கு டாப்பில் இருக்கும் நவனிகாதான் ஹீரோயின்.தன்னுடைய ஃபேவரைட் ஹீரோயின் என்பதால் பேட்டா கூட வேண்டாம் என்று ஷூட்டிங்கிற்கு வந்திருந்தான் டூப் நடிகன் காளி.

அருவிக்கு மேலே அந்தரத்தில் தொங்கும் ஹீரோயினை ஹீரோ காப்பாற்றுவதுதான் இன்றைக்கு சீன். டைரக்டருக்கு என்ன கோபமோ... டூப்புக்கு பதிலாக ஹீரோயினையே தொங்க விட்டுவிட்டார்.ஷூட்டிங்கில் திடீர் பரபரப்பு. கட்டியிருந்த கயிறு தளர்ந்து தண்ணீரில் விழுந்தார் நவனிகா.மற்றவர்கள் சுதாரிக்கும் முன்பே தன்னைப் பற்றி கவலைப்படாமல் தொபீரென நீரில் குதித்தான் காளி. இரண்டே நிமிடங்களில் நவனிகா காப்பாற்றப்பட்டார். ஹீரோ கை கொடுத்தார்.

‘‘சூப்பர்டா! நீ ஹீரோயினை மட்டும் காப்பாத்தலை. பணம் போட்ட புரொடியூசர்ல இருந்து இந்தப் படத்தை நம்பி இருக்கிற ஆயிரம் பேரையும் மறைமுகமா காப்பாத்தி இருக்கே!’’ என்றபடி மெள்ளத் திரும்பி, ‘‘யோவ் பி.ஆர்.ஓ! பிரஸ்ைஸ கூப்பிடுய்யா!’’ என்றார் டைரக்டர்.மறுநாள் காலை...‘‘ஷூட்டிங்கின்போது அருவியில் தவறி விழுந்த ஹீரோயினை தண்ணீரில் குதித்து காப்பாற்றினார் பிரபல நடிகர் அஜய்!’’ என்று பத்திரிகைகள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.     
            

எஸ்கா