கவிதைக்காரர்கள் வீதி




ரசித்துப் பெய்கிறது மழை
தவளையின்
பாடல் கேட்டு!
- பெ.பாண்டியன்,கீழசிவல்பட்டி.

சில நொடித்துளிகள்
விழுந்த தூறலில்
அம்மைத்தழும்பு வாங்கிய
அலுமினியப் பாத்திரமானது
தரை.
- பாரியன்பன், குடியாத்தம்.

அணை கடந்த நீர்
அழுதுகொண்டே வருகிறது
வழியெங்கும் ஆக்கிரமிப்பு!
- ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.

மண்ணைத் தொட்டதும்
சாக்கடையாகிவிடும்
சாபம் பெற்றுள்ளது
நகரத்து மழை
- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.

ஒற்றை உதறலில்
அடைமழையை விரட்டியது
அச்சிறு பறவை!
- வ.முருகன்,
பாப்பனப்பட்டு.

அந்த பிரதான
சாலையின் ஓரம்
தத்ரூபமாய் தரையில்
மழையை வரைந்து
யாசித்தவனிடம்
சில்லறையிட்டு
கடந்து செல்கையில்
திடீரென கொட்டிய மழை
சாலையெங்கும்
ரசிக்க வைத்தது
ஓவியத்தை!
- சங்கீதா, மோகனூர்.