மத்திய அரசில் 1877 வேலை!



யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் நேரம் இது!

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்பிட மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கின்றன. அந்த வகையில் யு.பி.எஸ்.சி. என்று சொல்லப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணிகளுக்கும் பொறியாளர் பணிகளுக்கும் பொருத்தமான நபர்களைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

மருத்துவப் பணிகளுக்கான தேர்வு மருத்துவம் சார்ந்த பணிகள் என்று பார்த்தால் தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதேபோல், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical  Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, டெல்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.

கல்வித் தகுதி:
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ். படிப்பு. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை உண்டு.

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் மருத்துவ அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 கேள்விகள், பொது மருத்துவம் தொடர்பாக 70 கேள்விகள், குழந்தை மருத்துவத்தில் 20 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 கேள்விகள், மகப்பேறு மருத்துவத்தில் 40 கேள்விகள், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 கேள்விகள் இடம்பெறும்.  பொதுவான பட்டப் படிப்பு தகுதி கொண்ட அகில இந்தியத் தேர்வாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னையிலும், மதுரையிலும் தேர்வு எழுதலாம்.

ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

விண்ணப்பிக்க:
தேர்வுக்கு ஆன்லைனில் (www.upsconline.nic.in) ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான விவரங்கள், பாடத்திட்டம் உள்ளிட்ட தகவல்களை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில்(www.upsc.gov.in) காணலாம்.பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வுமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணிகளுக்கு அறிவித்துள்ளதைப் போன்றே பொறியாளர் பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் எஞ்சினியரிங் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் டெல்லி மாநகராட்சிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அந்தந்த துறை சார்ந்த பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜனவரி 1, 2015ம் தேதியன்று 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கடைசித் தேதி: 10.4.2015ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.