பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி!



வாய்ப்பு

பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ரயில்வே துறையைப் போலவே வங்கித்துறையும் மாறியுள்ளது. அதற்குக் காரணம், அரசு வங்கிகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாகப் பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளதுதான். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் செய்துவருகிறது.

இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபீசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் ஐந்து தேர்வுகளை நடத்திவருகிறது. இந்தாண்டு இதுவரை நான்கு தேர்வுகளுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது.

கடைசியாகச் சிறப்பு அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 1,315 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விவரம் : ஐ.டி., ஆபீசரில் 120, அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசரில் 875, ராஜ்பாஷா அதிகாரியில் 30, சட்டம் அதிகாரியில் 60, எச்.ஆர்., / பெர்சனல் ஆபீசரில் 35, மார்க்கெட்டிங் ஆபீசரில் 195ம் சேர்த்து இதன்மூலம் மொத்தம் 1,315 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி : ஐ.டி., ஆபீசர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக். படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், ஐ.டி. எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்ரிகல்ச்சர் ஆபீசர் பதவிக்கு அக்ரிகல்ச்சர்/ஹார்டிகல்ச்சர் பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ராஜ்பாஷா அதிகாரிக்கு இந்தியில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சட்ட அதிகாரி பதவிக்கு எல்.எல்.பி. படிப்புடன் பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

எச்.ஆர்./பெர்சனல் ஆபீசர் மற்றும் மார்க்கெட்டிங் ஆபீசர் பதவிகளுக்கு முதுநிலை டிப்ளமோ படிப்பு அல்லது எம்.பி.ஏ. தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.வயது வரம்பு: 1.11. 2017 ம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவர். பிரிலிமினரி எழுத்துத் தேர்வு 30.12.2017, 31.12.2017 ஆகிய தேதிகளில் நடைபெறும். மெயின் தேர்வு 28.1.2018-ல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி/எஸ்.டி. ரூ.100 இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய இரு வழிகளில் செலுத்தலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2017.
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.