எஞ்சினியரிங் படிக்க ஆர்வம் குறைந்துவிட்டதா?



பின்னடைவு

மாணவர் சேர்க்கை உணர்த்தும் உண்மை!

கடந்த கால மாணவர் சேர்க்கை விவரங்களைப் பார்க்கும்போது மாணவர்கள் மத்தியில் எஞ்சினியரிங் படிப்பு மீதான ஆசை தற்போது குறைந்துவந்துள்ளதாகவே தோன்றுகிறது. இந்நிலையில் ஏ.ஐ.சி.டி.இ. புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 1.86 லட்சம் இடங்கள் குறைந்துள்ளன. 200 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.

இந்தக் கல்லூரிகள் புதிய மாணவர்களின் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளன. எனினும் தற்போது கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் அக்கல்லூரியிலேயே அவர்களது படிப்பைத் தொடரலாம்‘ என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஐ.ஐ.டி. அல்லது இந்திய தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை அதிகம் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் கல்வியாண்டிற்குள், தொழில்நுட்ப கல்விநிறுவனங்கள் அதன் கல்லூரி களில் உள்ள 50 சதவிகிதம் படிப்புகளுக்குத் தேசிய அங்கீகார வாரியத்திடம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், தற்போது 10 சதவிகித படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஐ.சி.டி.இ. சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் 2016ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகள் தொடர்ந்து குறைந்துவருகின்றன. அதாவது,2016-17ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 75,000 இடங்கள் குறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. புள்ளிவிவரப்படி, 2016 -17ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 15,71,220 இடங்களில் 50.1 சதவிகிதம், அதாவது 7,87,127இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன. அதுபோன்று 2015-16 ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 16,47,155 இடங்களில் 52.2 சதவிகிதம், அதாவது 8,60,357இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில்தான் 200  கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன. இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தனது அறிவிப்பில், ‘விண்ணப்பித்த கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது. தற்போது பயின்று வரும் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடரலாம். அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இக்கல்லூரிகள் மூடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

2012-13 ஆம் ஆண்டில் 9.73 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை 2016-17 ஆம் ஆண்டில் 7.87 லட்சமாகக் குறைந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ. தரவுப்படி, இந்தியாவில் 3,415 கட்டடக்கலை மற்றும் பொறியியல் கல்விநிறுவனங்கள் செயல்பட்டுவந்தன தற்போது இதில் சுமார் 50 நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக 2018-19 ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்றும் தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்துள்ளது உயர்கல்வியின் பின்னடைவு நிலவரத்தை காட்டுவதாக உள்ளது.

- முத்து